25 ஆகஸ்ட் 2020

 

நாடகம்                                                                  ”விவஸ்தை”         

     ----------------------         

 

கதாபாத்திரங்கள் – 1) நாராயணன் – கணவர்  (2) சௌம்யா – மனைவி

இடம்            வீடு.

 

 

 

சௌம்யா –       பல்லைக் கடித்தவாறே ள்ளே வாங்க, சட்னு…” –.

நாராயணன் -    என்ன? என்ன? எதுக்கு ப்டி அவசரமாக் கூப்பிட்டே?

சௌம்யா   -    (கோபமாக) ம்ம்ம், பொங்கல் திங்கறதுக்கு.

நாராயணன் -    போச்சு, அதுக்குள்ளே கோபம் வந்திருச்சா…? விஷயத்தைச்                      சொல்லு

சௌம்யா -      நீங்க என்னா, பக்கத்து வீட்டுத் துணியையெல்லாம் தொட்டு              எடுத்திட்டிருக்கீங்க…? அசடு மாதிரி…?

நாராயணன் -    மாடில உலர்த்தப் போட்டிருக்காங்க…அது பறந்து நம்ம                    வீட்டுப் பக்கம் விழுந்திருக்கு…எடுத்துப்                                  போட்டேன்…இதிலென்ன தப்பு? இதுக்கு ஒரு அசடு                       சொல்லணுமா?

சௌம்யா -      மாடில அப்டி கல்லைப் பாரமா வச்சு உலர்த்தாதீங்க…இந்தப்               பக்கம் பெருக்கி சுத்தம் செய்ய வர்றப்போ காத்தடிச்சு                     தலைல விழுந்திடுச்சின்னா சங்கடம்னு                                    எத்தனையோவாட்டி அவுங்ககிட்டே சொல்லிட்டேன்…                        கேட்குறாப்புல இல்லை….கொடில உலர்த்துற துணிகளுக்குக்             கிளிப்பும் போட மாட்டேங்குறாங்க…இதுல நீங்க வேறே                  வசதியா துணிகளை  எடுத்துப் போடுறீங்க…ரொம்ப                          நல்லதாப் போச்சுன்னு விட்ருவாங்க….வேணும்னா வந்து                  எடுத்துக்கட்டுமே…

நாராயணன் -    வந்து எடுக்கணும்னா, ரோட்டுப் பக்கமா வந்து, நம்ம வீட்டு               கேட்டைத் திறந்து, பர்மிஷன் கேட்டு, உள்ளே வந்து                           எடுக்கணும்…எதுக்கு இவ்வளவு சிரமம்…போகுது விடு….

சௌம்யா -      அப்போ தினமும் எடுத்துப் போடறேங்கிறீங்களா?

நாராயணன் -    போட்டா போச்சு….ஒரு உதவிதானே…கல்லு வைக்காத                    துணிக காத்துல பறந்து விழுகுது…அப்டி                                 விழுந்திருக்கோன்னு அவுங்க தெரிஞ்சிக்கிறதுக்கு                        முன்னாடி நாம       எடுத்துப் போட்டுட்டா பிரச்னை                   முடிஞ்சிது பாரு…

சௌம்யா -      ரொம்ப சமத்து…உங்களுக்குக் கொஞ்சங் கூட விவஸ்தையே              கிடையாது…அவ்வளவுதான்…

நாராயணன்-     இதிலென்ன விவஸ்தை கெட்டுப் போச்சு…? உதவி செய்றது               தப்பா?

சௌம்யா -      உதவிங்கிறது கேட்டு செய்றது…இது நல்லால்லியே….

நாராயணன் -    உனக்கு நல்லால்லே…எனக்கு அப்டி ஒண்ணும்                                 தோணலை…அவுங்கவுங்க மனசைப் பொறுத்த விஷயம்…

சௌம்யா -      அந்தம்மா பாவாடை, ரவிக்கைன்னு வித்தியாசம் பார்க்காம               எடுத்துப் போடுவீங்களாக்கும்….போதாக்குறைக்கு நம்ம                    வீட்டுக்கு வர்ற கேபிள் வயர்லயும் உலர்த்துறாங்க…மாடில                    கைக்கு வாகா எதெது தெரியுதோ அங்கெல்லாம்                       துணிகளைப்போட்டுடுவாங்க                                                 போலிருக்கு…உள்ளாடைகளெல்லாம் வீட்டுக்குள்ளே                        உலர்த்தணும்னு தெரிய வேண்டாம்? இப்டியா ஊர்                       பார்க்கிறமாதிரிப் போடுறது? அவுங்க மனசுக்கு அசிங்கமாத்                      தெரிலன்னு அர்த்தம்…

நாராயணன் -    நீயே நா சமீபத்துல சொன்ன பின்னாடிதானே அப்டிச்                           செய்ய ஆரம்பிச்சே…? ராத்திரி பாரா போகுற போலீஸ்                    லட்டியால கேட்டுக்கு மேலே  கொடியைத் தூக்கிப்                      பார்த்திட்டுப் போறான்னு அவன் சந்தேகத்தைச் சொன்ன                 பின்னாடிதானே உனக்கே பயம் வந்தது?

சௌம்யா -      அவன் செய்திட்டா? அது சரியா? வீட்டுக்குள்ளதானே                           காம்பவுன்ட் உட்பக்கமா உலர்த்தப் போட்டிருக்கோம்?                          தெருவுலயா துணி உலருது சந்தேகப்படுறதுக்கு?

நாராயணன் -    போலீஸ்காரங்களே அப்டித்தான். அவனுக்கு சந்தேகமாத்                 தோணினா நோண்டாம விடமாட்டான்….

சௌம்யா -      போதும் அபத்தப் பேச்சு…இனிமே துணி எடுத்துப்                         போடுறதெல்லாம் நீங்க செய்யாதீங்க…பக்கத்து வீடு, எதிர்                 வீடுன்னு பார்த்தாங்கன்னா அசிங்கம்…என்னமாவது தப்பா                     தோணும்…இந்தாளுக்கு வேறே வேலையே இல்லையான்னு               நினைப்பாங்க…சிவனேன்னு வீட்டுக்குள்ள கிடக்க                         மாட்டீங்களா?

நாராயணன் -    சிவனேன்னு நான் எங்க கெடக்குறது…அந்த செவன்தான                  நம்மள இந்தப் பாடுபடுத்திறான்….

சௌம்யா      போச்சு…சினிமா வசனம் பேச ஆரம்பிச்சாச்சா….அதான்                           உங்களுக்கு எதுக்கும் விவஸ்தையே கிடையாதுன்னு                    முதல்லவே சொன்னேன்…யாரு என்ன நினைச்சா                        உங்களுக்கென்ன? பொழுது போகணும் உங்களுக்கு…அதுக்கு               எதையாச்சும் செய்திட்டே                                              இருக்கணும்…அவ்வளவுதான்…எதைச் செய்யணும், எதைச்                  செய்யக் கூடாதுங்கிறதெல்லாம்தான் கிடையாதே….

நாராயணன்      யாரு என்ன நினைச்சா என்ன? அடுத்தவன் இதை                       நினைப்பானோ, அதை நினைப்பானோன்னு எல்லாம் நாம                      தயங்கிட்டேயிருந்தா இந்த உலகத்துல எதையுமே செய்ய                      முடியாது…எதுத்தாப்ல அப்டி நினைக்கிறதா நீ                            சொல்றவங்களுக்குக் கூடத்தான் நான்                                  உதவுறேன்…வித்தியாசமா பார்க்கிறேன்…எதோ என்னாலான                     உபகாரம்…அவ்வளவுதான்…

 

                           காட்சி – 2

இடம் – வீடு     கதா பாத்திரங்கள் – நாராயணன் மற்றும் சௌம்யா

    

 

சௌம்யா -      உபகாரம் செய்றதையும் சந்தேகப்படுறமாதிரி செய்யக்                    கூடாது….தெளிவாச் செய்யணுமாக்கும்…

நாராயணன் -    கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நா சொன்னதை இன்னும் நீ               மறக்கலியா? என்ன சொல்ல வர்றே? புரியல எனக்கு…

சௌம்யா -      எதிர் வீட்டுல அவர் ஊர்லர்ந்து வந்தவுடனே தபால்களைக்                      கொண்டு கொடுத்தீங்களே….அப்போ நா சொன்ன மாதிரிச்                  செய்தீங்களா? செய்யலியே?

நாராயணன் -    இதிலென்னடி இருக்கு…அவர் என்ன நம்மளைச் சந்தேகமா                      படப்போறார்? அதான் தபாலோட தபாலாக் கொடுத்திட்டு                 வந்திட்டனே…!

சௌம்யா -      கொடுத்திட்டீங்க சரி, அதுல அந்த ஒரு கவரை அட்ரசைப்                      பார்க்காமக் கட் பண்ணிட்டேன்னு சொல்லி ஸாரி                        கேட்டீங்களா? இல்லியே…? நான் சொல்லித் தந்தேன்ல…ஏன்                    கேட்கலை?

நாராயணன் -    ஸாரி சொல்லாட்டி என்ன? அவர்தான் ஒண்ணும்                        கேட்கலியே…அது சாதா தபால்தாண்டி….எங்கயோ                         மியூச்சுவல் ஃபன்ட் போட்டிருப்பார் போலிருக்கு…அதுக்கு                                                                                  அக்கவுன்ட்ஸ்டேட்மென்ட்வந்திருக்கு…அவ்வளவுதான்…நமக்கு              வந்த      தபால்களோட அது இருந்ததுனால வரிசையா                 நுனியைக் கட்      பண்ணும்போது, அதையும் சேர்த்துக் கட்                     பண்ணிட்டேன்…இதிலென்ன தப்பிருக்கு…

சௌம்யா -       தப்புக்கு நா சொல்லலை…அந்த விபரத்தை அவர்ட்டச்                     சொல்லியிருக்கலாமே…வேணும்னே அவங்க தபாலைப்                  பிரிச்சுப்      படிச்சதா ஆகாதா?

நாராயணன் -    அம்மா தாயே…ஆள விடு….கொடுத்தாச்சு…முடிஞ்சு                         போச்சு….ஒரு மாசம் ஓடிப்போச்சு…இப்பப் போய் இத நீ                    நோண்டாத…அவரே ஒண்ணும் கேட்கலை…நீ இப்பப்                       பேசறதப் பார்த்தா, அவர் ஊர்லருந்து வந்தவுடனே போயி,                    அந்தப் பழைய விஷயத்தைச் சொல்லி ஸாரி கேட்டுட்டு                     வாங்கன்னுவ போலிருக்கு…நல்லாருக்கு உன் கத…

சௌம்யா -      இதத்தான் நான் அப்பவே சொன்னேன்….எதுக்கும்                         உங்களுக்கு விவஸ்தையே                                            கிடையாதுன்னு….விவஸ்தைன்னா என்னன்னு முதல்ல                   புரிஞ்சிக்குங்க…தோணினபடியெல்லாம் இருக்கிறதுங்கிறது                      அழகில்ல…

நாராயணன் -    ஆரம்பிச்சிட்டியா பழையபடி….இல்லாட்டிப் போகட்டும்…நீ                  நிறைய விவஸ்தையோட இருக்கேல்ல…அது போதும்….

    

சொல்லிவிட்டு தன் அறைக்குள் புகுந்து கொண்டு தனக்குள் முனகுகிறார் நாராயணன்.

    

நாராயணன் –    அப்பாடீ, என்ன வாங்கு வாங்குகிறா? ஈரைப் பேனாக்கி,                   பேனைப் பெருமாளாக்குற கதையால்ல இருக்கு?                         ஸ்ஸ்ஸ்….அப்பாடா…இவளோட பேசி டயர்ட் ஆயிப்                       போச்சு….கண்ணை மூடிட்டு அப்டியே கொஞ்ச நேரம்                           இருக்கலாம் போலிருக்கு… அடி ஆத்தி…இந்தோ இது                      அத்தனையும் எதிர் வீட்டு ராஜாராமுக்கு வந்த தபால்தான்.                     எத்தனை பத்திரமா  ரப்பர் பேன்ட் போட்டு பாதுகாப்பா                   வச்சிருக்கேன்…இவ என்னடான்னா என்னென்னமோ                      சொல்றாளே….குறை சொல்றதே இவளுக்கு வேலையாப்                  போச்சுய்யா..மனுஷன நிம்மதியா இருக்க விடமாட்டா                    போலிருக்கு…   

சௌம்யா -      அங்க என்ன சத்தம்? என்ன நீங்களாப் பேசிக்கிறீங்க?

நாராயணன் -    ஒண்ணுமில்ல தாயி…என்னவோ புலம்புறேன்…விடுவியா?

                           காட்சி – 3 . (Flash Back – பின்னோக்கு உத்தி)                             ----------------------   

(கடந்த வாரம் நடந்தது இங்கே காட்சியாக மலர்கிறது. )     

கடந்த வாரம் ஒரு நாள்….. ( அறிவிப்பாக…)         

கதாபாத்திரங்கள் – (1) நாராயணன்  (2) எதிர் வீட்டு ராஜாராம்

ஒரு வாரம் முன்பு நடந்ததை நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார் நாராயணன். 

 

    

ராஜாராம் -           ஸார்…நாராயணன் ஸார்….

நாராயணன்      யாரு, ஓ…ராஜாராமா…வாங்க…வாங்க…..உள்ளே வாங்க….

ராஜாராம் -           இல்ல இருக்கட்டும்…ஊருக்குப் போயிட்டிருக்கேன்…இப்ப                    ஆட்டோ வந்திடும்…கொஞ்சம் வீட்டைப்                                 பார்த்துக்குங்க…சாயங்காலம் மட்டும் வாசல் லைட்டைப்                  போட்டு, பத்து மணிக்கு அணைச்சிடுங்க….

நாராயணன் -    ஓயெஸ்…வழக்கமாச் செய்றதுதானே…நான்                               பார்த்துக்கிறேன்…நீங்க கவலைப்படாமப் போயிட்டு                       வாங்க….பாருங்க…இந்த டார்ச் லைட்டை…நாலு                            பேட்டரியாக்கும்…ராத்திரி உங்க வீட்டுப் பக்கம் மொட்டை                 மாடிக்குப் போயி ஒரு சுத்து சுத்திட்டுத்தான்                             வருவேன்…நீங்க கிளம்புங்க….

ராஜாராம் -           அப்டியே தபாலும்….

நாராயணன்      அதான் வாங்கி வச்சிடுவேனே…நா போஸ்ட்மேன்கிட்டயே                       சொல்லிடுவேன்….எதுத்த வீட்டுத் தபாலை எங்கிட்டக்                          கொடுத்திடுங்கன்னு…பத்திரமா வச்சிருக்கேன்….

ராஜாராம் -           அதுக்கில்லேசார்…பையனோட  பாஸ்போர்ட் வரும்…அதை                 உங்ககிட்டே     தரமாட்டேன்னுவான்..அதுக்காகத்தான் இந்த                  ஆதரிசேஷன் லெட்டர் (சொல்லிக் கொண்டே தயக்கத்தோடு              நீட்டுகிறார்.

நாராயணன் -   அதுக்கென்ன வாங்கி வச்சிட்டாப் போச்சு…லெட்டர் கொடுத்தா              மாட்டேன்னா சொல்லப் போறான் போஸ்ட்மேன்….யூ                           டோன்ட் ஒர்ரி….சந்தோஷமா ஊருக்குப் போயிட்டு                        வாங்கோ….

 

நினைவுக்கு வருகிறார் நாராயணன். நடப்புலகம்.

 

நாராயணன் தனக்குத்தானே பேசிக் கொள்கிறார் – லெட்டர நீட்டினவுடனே கொடுத்துட்டானா என்ன?.

           போஸ்ட் மாஸ்டர் என்ன சொல்லுவாரோ, தெரிலயே ஸார்…கொடுத்துப் பார்க்கிறேன்…..நாங்க பாஸ்போர்ட்டையெல்லாம் வேறே யார்ட்டயும் கொடுக்கிறதில்லை…ஆதரிசேஷன் இருந்தாலும்….எங்களுக்கு உத்தரவு அப்டி…!

     படுபாவிப்பய….. சங்கடப்பட்டுட்டேதான கொடுத்தான்.

     ராஜாராமுக்கு வந்திருந்த தபால்களை மீண்டும் ஒருமுறை நன்றாக அடுக்கி வைக்கிறார்.

 

                           காட்சி – 4  

                              -------------------

கதா பாத்திரங்கள் – நாராயணன் மற்றும் மனைவி சௌம்யா. மற்றும்                               ராஜாராம்

    

 

சௌம்யா -      உங்களை மாதிரி ஒருத்தர் அவருக்கு கிடைக்கணுமே?

நாராயணன் -    உதவி செய்றதுன்னு ஏத்துண்டுட்டோம்னா பர்ஃபெக்டா                    செய்துடணும்…இல்லன்னா ஏத்துக்கப்படாது….

சௌம்யா -      நல்லா செய்யுங்கோ…யார் வேண்டான்னா? அகஸ்மாத்தா                 ஏற்பட்ட அந்தத் தவறைச் சொல்லிட்டுக்                                      கொடுத்துடலாமேன்னுதான் சொன்னேன்…-

     சொல்லிவிட்டு வேலையைக் கவனிக்கப் போய்விடுவாகிறாள்சௌம்யா.

 

     நாராயணன் தனக்குள் பேசிக் கொள்கிறார்.   

 

நாராயணன் -    போஸ்ட் மேன் இரண்டு வீட்டுத் தபாலையும் ஒண்ணா                   வச்சுக் கொடுத்திட்டுப் போறான். அவனுக்குக்                            கையைவிட்டுப் போனாச் சரி. நமக்கு அப்டியா…எத்தனை கவனமா இருக்க வேண்டிர்க்கு…அவன்பாட்டுக்குக் கொடுத்திட்டுப் போக, நானாவது நிதானிச்சனா? எனக்கு அவசரம்? வழக்கம்பால சிசர வச்சுக் கவரைக் கட் பண்ணைல, அவரோட ஒரு தபாலும்  சேர்ந்து கட் ஆயிடுச்சி…இந்தப் பழிக்கு என்ன பண்றது? உதவி செய்றதுல இவ்வளவு பிரச்னையா? இதுக்கு ஒரே வழி அதுதான். பேசாம சொல்லிக் கொடுத்திர வேண்டிதான். தெரியாமக் கட் ஆயிடுச்சின்னு…பிரச்னை அப்பவே முடிஞ்சி போகும்…அதுதான் நிம்மதி... அட மணி ஒன்பதாச்சு போலிருக்கு…எதிர் வீட்டு வாசக் கதவு திறக்குற சத்தம் வேறே கேட்குது… வந்திருப்பாரோ  வாசல்ல போய் பார்ப்போம்…. 

சௌம்யா -      அவர் வந்துட்டார் போலிருக்கு. போங்கோ…போய்                         தபால்களைக் கொடுத்திட்டு        வந்திடுங்கோ…. –    

 

நாராயணன் –    இப்பத்தானே வந்திருக்கார்…கொஞ்சம் பொறு…மூக்குல                           வியர்க்குமா உனக்கு…இப்டி ஓடி வர்றே?      …இதோ                         போறேன்…

 

நாராயணன் -    இப்பத்தான் வந்தீங்க போலிருக்கு…இருங்க…இருங்க…டயர்டா                     இருப்பீங்க….- சொல்லிக்கொண்டே கையிலிருந்த                          தபால்களை நீட்டுகிறார்.

ராஜாராம் -           அதெல்லாம் ஒண்ணுமில்ல…ஏ.ஸி.கோச்லதான் வந்தேன்.                  இந்த வெயில்ல எங்க செகன்ட் ஸ்லீப்பர்ல வர்றது…?                          வெந்து போகும்…..

நாராயணன் -    ஆமாமா…சரி…பாருங்க…நா வர்றேன்….

ராஜாராம் -           ஒண்ணுமில்ல, சும்மா வாங்க ஸார்…நீங்க என்ன…?                       வந்தவுடனே கிளம்புறீங்க?  உட்கார்ந்திட்டுப் போங்க…..

                தவிர்க்கமுடியாமல் உள்ளே நுழைந்து அமர்கிறார்.

நாராயணன் -     ஸ்ஸ்ஸ்…அப்பாடா…வர வர உட்கார்ந்து எழுந்திரிக்கிறதே                 பெரிய சிரமமாப் போச்சு…

-               என்ன, போன காரியமெல்லாம் முடிஞ்சிதா?

ராஜாராம் -      முடிஞ்ச மாதிரித்தான். அஸ்தினாபுரத்துல ஒரு                                அபார்ட்மென்ட்….அட்வான்ஸ்                                            பண்ணியிருக்கு…..அவ்வளவுதான்….

நாராயணன்      அஸ்தினாபுரமா? பெயரே வித்தியாசமாயிருக்கு? புராணப்                 பெயர் போல… அது எங்க இருக்கு மெட்ராசுல?

ராஜாராம் -           குரோம்பேட்டைக்குப் பின்னால வருது ஸார்…எனக்கே                     இப்பத்தான் தெரியும்….என் பையன் அங்கதான்                                 வாங்கணும்னுட்டான்….நமக்கென்ன…அவன்தான                                இருக்கப்போறான்னுட்டு நானும் ஓ.கே. ன்னுட்டேன்.                           ஆபீசுக்கு வசதியா, கிட்டக்க இருக்கட்டும்ங்கிறதாச்                       சொல்றான்…

நாராயணன் -    அது சரி….அவனோட வசதிதானே முக்கியம். நாம இங்கே                       இருக்கப் போறோம். எப்பவாச்சும் போயிட்டு வரப்                        போறோம்…அவ்வளவுதானே…சரி…ரெஸ்ட் எடுங்கோ…நான்                  போயிட்டு வர்றேன்…. .

     ராஜாராம் - இருங்க ஸார்…பால் காயுது…ஒரு வாய் காபி சாப்டுட்டுப்                   போங்க….எனக்கு வந்தவுடனே ஒரு காபி                                      சாப்பிடணும்…அப்பத்தான் மத்த காரியமே ஓடும்….என்                          ஒய்ஃப் இன்னும் பத்து நாள் கழிச்சிதான் வருவா…பாருங்க                      டிபன் வாங்கிட்டு வந்திட்டேன்….பத்து மணிக்கு மேலேதான்                    சாப்பிடுவேன்…..

நாராயணன் -    ஓ.கே…ஓ.கே….நா இப்பக் காபியெல்லாம் சாப்பிடுறதில்லே.                       சாயங்காலம் ஒரு காபி. அத்தோட                                           சரி….வரட்டா…பார்க்கலாம்…

    

(கிளம்பி வாசல் வரை வந்தவர் நினைவு வந்தவராக…).

 

நாராயணன் -    அடடே….எதுக்கு வந்தனோ அதைச் சொல்ல மறந்திட்டேன்                      பாருங்கோ…அந்தத் தபால்ல ஒண்ணை, தெரியாம என்                    தபால்களோட சேர்த்துக் கட் பண்ணிட்டேன்….பிறகுதான்                  தெரிஞ்சிது…ஒட்டிண்டிருந்திருக்கு…கட் ஆனவுடனே பிரிஞ்சி                     விழறது….ஸாரி…கொஞ்சம் பார்த்துக்குங்கோ….நான் வரேன்…

ராஜாராம் -      (நாராயணன் சொன்ன அந்தக் குறிப்பிட்ட தபாலை உருவி                      எடுத்தவராக…)

               ஓ…! இதத்தான் சொல்றேளா……..!!

நாராயணன் -                                                               அதான்…அதேதான்…கவனிக்கலை….பார்த்துக்கறேளா….(.இவரையறியாமல் வாய் குழறுவது போல் பிரமை.)

     (வாசலை எட்டி கேட்டைத் திறக்கும் சத்தம்). (ராஜாராம் குரல்சற்றுச் சன்னமாக)

ராஜாராம் -           போனவாட்டி கூட இதே போல ஒரு தபால் திறந்துதான்                  இருந்திச்சி…..

     நாராயணனுக்கு காலில் எதுவோ சுறுக்கென்று குத்தியது போலிருக்கிறது.(நெஞ்சுக்குள்ளும்தான்)ஸ்ஸ்ஸ்…..யப்பாஆஆஆஆஆஆஆ…..சௌம்யா சொன்ன விவஸ்தைக்குப் பலன் இதுதான் போலிருக்கு…. – தனக்குத்தானே சங்கடத்தோடு முனகிக் கொள்கிறார்.

                           ----------------------------------

                               

                                                                                   

 

 

                                                                                    

 இப்படி ஒரு ஜோடி இனி கண் குளிர, மனசு குளிர வரப்போகுதா என்ன?


   என் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு. மூன்று அக்ரஉறாரங்கள் உண்டு அங்கே. நடுத்தெரு, ஒற்றைத் தெரு,கோயில்தெரு என்று. இந்தக் கோயில் தெருவில் “பெரிய அகம்“ என்று ஒரு வீடு. இன்றும் இருக்கிறது. அதற்கு எதிர் வீடுதான் சி.சு.செ.யின் நினைவகம்..                                      

இந்தத் திண்ணையில் தனியாக அமர்ந்துகொண்டுதான் எழுத்து இதழுக்குப் பின் அடித்துக் கொண்டிருப்பார் சி.சு.செ.   .  சுத்தியலை வைத்துக் கொண்டு மடக்கி மடக்கி அக்கறையாய் பின் போடும் அழகு எழுத்தில் அவர் எதிர்பார்த்த நேர்த்தியை நமக்கு அடையாளப்படுத்தும்.                                  

இதழ்களையும் வேறு சில புத்தகங்களையும் ஒரு பழைய வேட்டியில் வைத்துக் கட்டி தோளில் சுமந்து கொண்டு செல்லும் காட்சியை நாங்கள் பார்த்திருக்கிறோம். மதுரை காமராசர் பல்கலைக்கு அந்த சுமையோடு அவர் போனதை நாங்கள் அறிவோம்.                                           

வாசலில் சரக் சரக் சரக்கென்று டயர் தேய ஒரு சத்தம் வருகிறதென்றால் வீட்டுக்குள்ளிருந்தே சொல்லிவிட முடியும் அது அவர்தான் என்று. நீர்க்காவி ஏறிய ஒரு நாலுமுழ வேட்டி...கை வைக்காத காடா பனியன்...தோளில் ஒரு துண்டு.....இதுதான் அவரது தோற்றம்.                                                                                                                                           திரு சி.சு.செல்லப்பா அவர்களின் தலையாய பணி என்று எப்படி வாடி வாசலும், சுதந்திர தாகம் நாவலும் சொல்லப்படுகிறதோ அது போல் அவர் கமலாம்பாள் சரித்திரம் எழுதிய  திரு பி.ஆர்.இராஜம் அய்யர் அவர்களின் நூற்றாண்டு விழாவினைப் பெருமுயற்சி எடுத்து வத்தலக்குண்டில் கொண்டாடியதுதான் அவரது மாஸ்டர் பீஸ்.  இன்றும் ஒற்றைத் தெருவில் இவரது நினைவு இல்லம் இருக்கிறது. வாசல் சுவற்றில் ஒரு சிறிய கல் பதித்த நிலையோடு.        சென்னையிலிருந்து தனி பஸ் அமர்த்தி  பிரபல எழுத்தாளர்கள் பலரையும் கொண்டுவந்து இறக்கினார். எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் நாடகக் குழு தேரோட்டி மகன் நாடகம்தான் அப்பொழுது அரங்கேறியது. சிறுகதை மன்னன் திரு பி.எஸ்.ராமையா அவர்கள் ரிஉறர்சலில் நடிப்பு சொல்லிக் கொடுக்கும் அழகை நேரே கண்ட பாக்கியம் எங்களுக்கு. இன்று சி.சு.செ. நினைவகமாக இருக்கும் வீட்டில்தான் அந்த நாடகத்தில் நடித்த எஸ்.வி.சகஸ்ரநாமம், நடிகர் முத்துராமன் மற்றும் பலர் தங்கியிருந்தார்கள்.                                                                            

மாலையில் மேல மந்தை ராஜாஜி மேடையில் கூட்டம் துவக்கப்பட்டு, ஊர்வலம் கிளம்பி  நாதஸ்வரக் கச்சேரியோடு மேளதாளத்துடன் அவரது நினைவகம் நோக்கிச் சென்ற ஊர்வலம் இன்றும் எங்கள் கண் முன்னே. நா.பா.வோடு அவரின் அழகையும்  கம்பீரத்தையும்  பார்த்து ரசித்துக் கொண்டே அவர் அருகே நடப்பதே பெரிய பெருமை என்று (அப்படித்தானே...!) அவர் கூடவே அந்த ஊர்வலத்தில் ஒட்டி ஒட்டி நடந்து பெருமை கொண்டோம் எதுவொன்றில் இறங்கினாலும் உயிரைக் கொடுத்து அதில் ஒரு perfectness ஐக் கொண்டு வரும் திரு சி.சு.செல்லப்பா அவர்களை வாழ்நாள் முழுவதும் எங்களால், எங்கள் ஊரான அந்த வத்தலக்குண்டு இளைஞர்களால் மறக்கவே முடியாது.                                                                                                   

எங்களூர் பல பெருமை பெற்றது. சுதந்திரப்போராட்டத் தியாகி திரு.சுப்ரமணியசிவா பிறந்தது இங்குதான். சிறுகதை மன்னன் திரு பி.எஸ்.ராமையா ஊர் இதுதான். பிரபல பெண் எழுத்தாளர் மேடம் ஜோதிர்லதா கிரிஜா    ஊர் இந்த வத்தலக்குண்டுதான். அந்த வாசனையில்தான் இன்று நானும் கொஞ்சம் கொஞ்சம் எழுதக் கற்றிருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ள எனக்கு முழுத் தகுதி உண்டுதான்.

                           ------------------------------------------------


 

16 ஆகஸ்ட் 2020

“மரபு சார்ந்த கதாபாத்திரங்கள்“-தி.ஜானகிராமனின் மூன்று சிறுகதைகள்-ஒரு பார்வை ---------------------------------------------------------------------------------------------------------------------

கட்டுரை         உஷாதீபன்

“மரபு சார்ந்த கதாபாத்திரங்கள்“-தி.ஜானகிராமனின் மூன்று சிறுகதைகள்-ஒரு பார்வை                                                                        ---------------------------------------------------------------------------------------------------------------------


      ரு கதையின் கதா பாத்திரங்கள் மௌனமாக-குறைவாக-மிகச் குறைவாகப் பேசி நகரும்போது – எதற்காக இப்படி  என்கிற புதிரோடேயே நாமும் தொடர்கிறோம். எப்பொழுதாவது பேசும்போது-என்ன சூட்சுமம் அதில் என்று தேட ஆரம்பிக்கிறோம். படைப்பாளியை நினைத்து வியந்து போகிறோம். வாசிப்பை விரிவு செய்கிறோம்.

       தன் செயல்களை வெகு அமைதியாக, நிதானமாக மேற்கொள்ளும் ஒருவர், எதை எதிர்நோக்கி, எதை நிறைவேற்ற இப்படி செயல்படுகிறார் என்று யோசனையோடேயே வாசிப்பைத் தொடர்கிறோம். விளைவு என்னவாகப் போகிறது என்பதில் நமக்கொரு ஆர்வம்.      நன்மையோ-தீமையோ அல்லது அந்தப் பாத்திரத்தின் நியாயமோ அதை உணர்கையில் ஆஉறா என்று வியந்தோ அடடா…! என்று பரிதாபம் கொண்டோ கடந்து போகிறோம்.

       வரிக்கு வரி ரசனையை மிதக்க விடும் அழகு தி.ஜா..வினுடையது. அங்கொன்றும் இங்கொன்றுமாக தொட்டுச் சென்று கதையை ஓட்டுவதில்லை.  எதுவும் ரொம்ப நுணுக்கமாய் இருக்கணும். ஒரு மனிதனின் இயல்புகள், செயல்கள், தனித்தன்மை என்று உணரப்பட வேண்டும்.அதன் மூலம் படைப்பு ஆழம் பெற வேண்டும். அதை ஒரு எளிய வாசகனும் ரசிப்பது போல் சிக்கனமான, பொருத்தமான வார்த்தைகளில் வழங்கும் திறன் வேண்டும்.

       தி.ஜா..வின் “ஸ்ரீராமஜெயம்“ கதையைப் படிக்கும்போது இப்படிப் பலவும் தோன்றுகின்றன. இப்படியொரு தலைப்பை வைத்து, ஒரு காரெக்டரையும், அதன் மன உணர்வுகளையும், ஒழுக்க சீலத்தையும், மறைபொருளாக-பாத்திர அமைதியாக உணர்த்திக்கொண்டே வாசகனை ஊடுருவி அறியச்செய்து கொண்டே செல்லும் ஆழமான பயணம் இக்கதையில் சீராக இயங்குகிறது.

       அந்த அச்சாபீஸில் காவல்காரராக இருக்கும் வேலுமாரார் இருபது வருஷம் சர்வீஸ் போட்டவர். இவர் பார்வையிலேயே முழுக்கதையும் சொல்லப்படுகிறது. அவருக்கு மூத்த மூதாதை ராகவாச்சாரி இருபத்தாறு வருஷம் சர்வீஸ் போட்ட ப்ரூப் ரீடர். வேலுமாரார் ராகவாச்சாரிக்கென்று இதயத்தில் ஒரு இடம் ஒதுக்கியிருந்தார். அவர் மீது மிகுந்த மதிப்புக் கொண்டிருக்கும் வேலுமாராருக்கு அவரின் ஒரு குறிப்பிட்ட நாளைய செய்கைகள் வியப்பையும் சந்தேகத்தையும் ஊட்டுகின்றன. சந்தேகப்படுவதுதானே அவர் வேலையே! பாவம்...ராகவாச்சாரி...என்னய்யா இது அசட்டுப் பிசட்டு வேலை...என்கிற முதலாளியின் வார்த்தைகளிலேயே விஷயம் முடிந்து போகிறது. அத்தோடு விடுவதே அவருக்கான ஸ்தானம். அவர் கௌரவம் காப்பாற்றப்படுகிறது. ரொம்ப நல்லவர்கள் வாழ்க்கையின் அபூர்வ சந்தர்ப்பங்களில் ரொம்பவும் பாவமாகி விடுவதுண்டு. அத விடுங்க...என்பதுபோலான நிகழ்வுதான் இது. தலைப்புதான் தவறைப் புரிய வைக்கிறது. இதற்காகவா....? என்று நம்மையும் துணுக்குறச் செய்கிறது.                                                               ராகவாச்சாரி எதற்காக அந்த ஐநூறு பக்க பைன்ட் நோட்டை எடுத்தார்….? நாமும் அவர் சார்பாகவே நிற்கத் தலைப்படுகிறோம். அதுவே மனிதாபிமானம்.       பரந்த வாழ்க்கையின் ஒரு சிறு கீறலை துல்லியப்படுத்த என்ன மாதிரியான உழைப்பு? வியந்து நிற்கிறோம். ;தி.ஜா.வின் உரையாடல்கள் பாத்திரங்களின் குணாதிசயத்தை வெளிப்படுத்துபவையாகத் துல்லியமாய் அமைகின்றன. அதன் போக்கு சொல்லும் கதையின் ஆழத்தைத் தெரிவிப்பவையாக அமைகின்றன.

       வித்தியாசமான கூறு முறைகளி்னால் தி.ஜா.வின் கதைகள் திரும்பத் திரும்ப நம்மை வாசிக்கத் தள்ளுகின்றன.. அப்படியான முயற்சிகள் அவரின் மொத்தக் கதைகளில் குறைவுதான் என்றாலும், அந்தக் குறிப்பிட்ட  சில படைப்புக்களே தொடர்ந்து நம் சிந்தையில் பயணம் செய்து மலைக்க வைக்கின்றன.

       .ஆரஞ்சுப் பழத்தைக் பிழிந்து எடுத்தது போல் இருக்க வேண்டும் தலைப்பு என்பார் எழுத்துச் சித்தர் ஜெயகாந்தன். அப்படி அர்த்தப்படுகிறது ஒரு படைப்பின் தலைப்பு. வலியத் திணித்ததல்ல. தானே வந்து பாந்தமாய் உட்கார்ந்து கொண்டது. கதை கூடி வரும்போது அந்தத் தலைப்புக்கு அப்படி ஒரு அர்த்தம் வெளிப்படுகிறது.                              “வேண்டாம் பூசணி“ - தலைப்பைப் பார்த்தவுடனேயே உள்ளே போகத் தோன்றுகிறதல்லவா?

       யசானால் சின்னச் சின்ன  வேலைகள் கூட மனதுக்கு மாச்சலாய்த் தெரியும். உட்காருவதும், எழுவதும் கூட சிரமம்தான். அதிலும் போஷிக்க ஆள் இல்லையானால் ஏன் வாழ்கிறோம் என்றிருக்கும். உயிர் போகாதா? என்று மனம் வெறுக்கும். வயதானவர்களுடைய பாடுகளை, சிரமங்களை உணர்ந்திருக்கிறீர்களா? அதை தி.ஜா. சொல்லிக் கேட்க வேண்டும்

       தான் தன் மாமியாருக்கு செய்த சிஸ்ருஷைகளை நினைத்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டே, உனக்கு ஒரு குறையும் வராதடி அம்மா என்று  அவள் வாழ்த்தியிருந்தும் அந்த உத்தமி வாக்குக் கூடப் பலிக்கவில்லையே என்று மூன்று பிள்ளைகளையும், இரண்டு பெண்களையும் கல்லுக் கல்லாகப் பெற்றுவிட்டு இந்தக் காடு அழைக்கிற வயசில் தனியாய்க் கிடந்து அல்லாட வீங்கின காலும் வீங்கின கையுமாக….ராதைப்பாட்டி.

       சாயங்காலம் திண்ணையில் காலை நீட்டி உட்கார்ந்து கொண்டுவிட்டால் பொழுது போவதே தெரியாது. இயந்திரம் மாதிரி கை ருத்ராட்சக் காய்களை எண்ணும். வாய் ராமாயணத்தைச் சொல்லும். ஆனால் மனம் மட்டும் பழைய முகங்கள் ஆசைகள் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கும்.

மூத்த பிள்ளையைப் பார்த்து ரெண்டு வருஷம் ஆகி விட்டது. எப்போதாவது நான்கு வருஷத்திற்கு ஒரு தடவை வருவான். வந்தால் தாயாரைப் பார்க்கத் தோன்றாது. அவனுக்கு தாயார், தகப்பனார் இருவர் மீதும் கோபம். சின்னப் பிள்ளைக்கு  அதிகமாகச் செய்து விட்டார்கள் என்பது அவன் எண்ணம். இந்த மாதிரி அசட்டு எண்ணங்கள் தோன்றிவிட்டால் படைத்தவன் கூடத் திருத்த முடியாது. அதுவும் அவனுக்காகப் படாமல், பொண்டாட்டி சொல்லி ஏற்பட்டு விட்டால், அது கல்லில் செதுக்கினாற் போலத்தான்….

தகப்பனார் செத்தபோது வந்தான். ஈமக் கடன் செய்ய முடியாது என்று ஒற்றைக் காலில் நின்றான். கடைசியில் நடுப்பிள்ளை அவனுக்குப் பணத்தைக் கொடுத்து செய்யச் சொன்னான். ஸ்வீகாரம் போய்விட்டோமே என்று நினைக்காமல். மூத்த நாட்டுப் பெண் வந்து எட்டிக் கூடப் பார்க்கவில்லை. யாருமே அப்படித் துவேஷம் பாராட்ட மாட்டார்கள். பரம அசடுதான் அப்படிச் செய்யும். இல்லைன்னா மனுஷ ஜென்மமா இருக்காது அது…

-இதெல்லாம் பாட்டி தனக்குத்தானே அசைபோட்டுக் கொண்டு சமாதானம் செய்து கொள்ளும் மன ஆதங்கங்கள். பாட்டி அறுபது வருஷமாய்க் குடியிருந்த வீட்டில் பிதுரார்ஜிதமாய் இருக்கிறான் கடைசிப் பிள்ளை. அவன் பெண்டாட்டி சொன்ன வார்த்தை அத்தனை லேசில் மறந்து போகுமா?

சிவராத்திரியன்று பாட்டி நடுப்பிள்ளை வீட்டுக்குப் புறப்பட்டு விட்டாள். வண்டி கைலாசத்தை நோக்கிப் போவதுபோல் தோன்றுகிறது அவளுக்கு. ஈசனே…என்னை ஏமாற்றித் திருப்பியனுப்பி விடாதே…!  வேண்டாத பூசணிக்காயை நீதான் எடுத்துக் கொள்ளணும்… இவ்வளவு வயசாகி மனுஷா உயிரோட இருக்கலாமா? ஈசனே உனக்கா தெரியாது…? மனம் உருகி வேண்டுகிறது பாட்டிக்கு.

வேண்டாத பூசணியை இறைவன் எடுத்துக் கொள்கிறார். மொத்த வாழ்க்கையில் பாட்டியின் வேண்டுதல் இப்போதுதான் முதல்முறையாய் நிறைவேறுகிறது

ஒரு இடம் என்று இல்லாமல் யாரும் அல்லல்படுதல் கூடாது. ராதுப் பாட்டியின் கதை நாம் அதிக வயது இருக்கக் கூடாது. இருக்க நேர்ந்தால் நிரந்தரமாய், அன்பாய் வைத்துப் போஷிக்க ஆள் வேணும். இதை வலியுறுத்தி இக்கதை மனதை உருக்கி நெகிழ வைத்து விடுகிறது.

தி.ஜானகிராமனின் கதைகளின்      தனித்துவம் அதில் வரும் உரையாடல்கள். கதாபாத்திரங்களின் வழி உண்டாகும் சம்பாஷனைகள். சம்பவங்களின் வீர்யத்தோடு, கதையின் உருவத்தையும் அவர் கொண்டு வந்து விளக்கி நிறுத்தும் அழகு.

தி.ஜா.வின் உன்னதமான பாத்திரங்கள் பெண்கள்தான் என்று அசோகமித்திரன் சொல்கிறார். அது ராதுப்பாட்டியாய் இருந்தாலும் நம்மால் ரசிக்க முடியும். நடைமுறை உலகின் எல்லாவிதமான மனிதர்களும், அனைத்து மனித நடவடிக்கைகளும்  அவரது படைப்புக்களில் இடம் பெறுகின்றன.    

        ம்ம எம்.கே.ஆர்.கிட்டப் போய்ப் புலம்பினேன். நம்ம பையனுக்கு ஒரு ஒரு வழி பண்ணப்படாதா செட்டியார்வாள்...இப்டி உதவாக்கரையாத் திரியறானே....என்று புலம்பப் போக...அன்பும் ஆதரவும் செழித்திருந்த அந்த நாட்களில்....அக்கணாக்குட்டிக்கும் ஒரு இடம் கிடைக்கிறது. உதவி செய்வதற்கும் ஒரு மனம் வேண்டுமே...! தெரிந்தவர்கள், நமக்கு வேண்டியவர்கள் என்று எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் தர்மம் ஓங்கியிருந்த காலம். ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி மதிக்கப்பட்ட காலம்.

        ஒரு பெரிய மனுஷன் வீட்டுல கூடமாட ஒத்தாசையா இருக்கணுமாம்...அனுப்புறீரா...? புள்ளைங்கள பள்ளிக்கூடத்துல கொண்டு விட, கூட்டிவர, கடை கண்ணிக்குப் போக...ன்னு...சாப்பாடு போட்டு நல்லாப் பார்த்துப்பாங்க....சம்மதமா...? – அப்படிப்போனவன்தான் அக்கணாக்குட்டி. தன் அசட்டுப் பிள்ளைக்கும் ஒரு காலம் வந்து விட்டதே...! அவனாலும் நாலு துட்டு சம்பாதிக்க முடியும் என்று உலகம் காட்டிவிட்டதே...! எல்லாம் பகவான் செயல்...!

        அதுசரி....அதென்ன...வர வர மோசமாகிக் கொண்டே போகிறதே...! ஏன் பணம் அனுப்ப இவ்வளவு தாமதம்? போய் ஒரு பார்வை பார்த்து வந்துவிட்டால்தான் என்ன? என்னதான் அப்படி வேலை செய்கிறான் என்று அறிந்து கொள்ளக் கூடாதா? மனம் பரபரக்க, சமையலுக்கு உதவ என்று கிளம்பிவிடுகிறார் வக்கீல் அண்ணாவையரோடு. இந்தச் சாக்கில்  பட்டணம் போனால்தான் உண்டு. அப்படியே அக்கணாக்குட்டியையும் பார்த்து விடலாமே!.

        நீங்கதான் அக்கணாக்குட்டியோட தோப்பனாரா...வாங்கோ...உட்காருங்கோ.....-கறுப்புக் கண்ணாடி. உதடு அறுந்து தொங்குகிறது. துவண்ட சரீரம். பெரியவர் கன்னத்தைச் சொரிந்து கொள்கிறார். மடங்கிய விரல்கள். அத்தனை பெரிய பங்களாவின் இருண்ட சூழலில் பாதி இருட்டும், பாதி வெளிச்சமுமாய் அந்த உருவம் முழுமையின்றி.

        எல்லோரும் நகத்தால்தான் முகத்தைச் சொரிவார்கள். இவரென்ன...மடங்கிய விரல்களின் பின் பக்க நடுப்பகுதி கொண்டு.....? – அதிர்ந்து போகிறது மனசு. முத்துவுக்கு உட்கார முடியவில்லை. மேலெல்லாம் அரிப்பது போலிருக்கிறது. புரிந்து கொள்கிறார். போயும் போயும் இந்தவேலைக்கா பையனை அனுப்பினேன். மனம் அதிர்கிறது. வக்கற்றவனுக்கு இப்படியா வந்து அமைய வேண்டும்?

        அதெல்லாம் இல்லேப்பா....அது ஒண்ணும்  தொத்து வியாதி இல்லையாம். இந்தோ போட்டிருக்கா பாரு பேப்பர்லே.... – ஒரு புத்தகத்தைப் பிரித்து அதிலிருந்து ஒரு தினசரித்தாள் ஒன்றை எடுத்து...அதில் ஒரு வெள்ளைக்காரப் பெண்....யாரோ ஒரு ஆணின் கையைப் பிடித்துத் தடவிக் கொண்டு நிற்கிறாள்..

        இது யாரு தெரியுமா...ராணி...மகாராணி....வெள்ளைக்கார தேசத்துலே... ஒரு கிராமத்துக்குப் போயி அங்க இதமாதிரி இருக்கிறவாளை கவனிக்கிறாளாம். மருந்து சாப்பிட வைக்கிறாளாம். அவாள் எல்லாரையும் பார்த்து கையைத் தடவிக் கொடுக்கிறா வெள்ளைக்கார ராணி.....ஒட்டிக்கும்னா செய்வாளா....பேத்தியம் மாதிரிப் பேசிறியே...! –

        பேத்யம்...மாதிரி நானா...?

        படத்தை மட்டும் பார்க்கிறியே....கீழே என்ன எழுதியிருக்கு பாரு....அக்கணாக்குட்டி காண்பிக்கிறான்.

        பாலாம்பிகே வைத்யோ...-சுலோகம் வாயில் முணுமுணுக்க மூக்குக் கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டு இடது காதுக்கு தொங்கும் நூலைச் சுற்றிக்கொண்டு அந்தச் செய்தியைப் படிக்கத் தலைப்படுகிறார் முத்துவைய்யர். சூழ்நிலையும் உணர்வும் மனிதர்களை ஆட்டுவிக்கும் தன்மை இங்கே வெளிப்படுகிறது.                                                                               மனிதர்களின் களிப்பு, துயரம், வீழ்ச்சி, தடுமாற்றம், பிறழ்வு  ஆகிய பல்வேறு நிலைகளைத் துல்லியமாக வெளிப்படுத்தும் தி.ஜா. வின் படைப்புக்கள்  நம்மைக் கட்டிப் போட்டு விடுகின்றன.

        கதை முழுக்க ஒருவருக்கொருவர் செய்யும் உதவியும், அதில் ஒட்டி உறவாடும் மனிதாபிமானமும், அன்பும் இருக்கும் குறைபாடுகளை மீறி நல்லதே  என்று நம்மை உணர வைக்கிறது. சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய் - கதையின் தலைப்பே நம்மைச் சங்கடப்படுத்தி உள்ளே ஆழமாய்ப் பயணித்து மனமுருக வைத்து விடுகிறது.

        சொற்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, உணர்வுகளை அப்பட்டமாய் உணர வைக்கும் தி.ஜா.வின் எழுத்து வன்மை நம்மை வியக்க வைக்கிறது. சின்னச் சின்னக் கதா பாத்திரங்கள்தான். ஆனால் அத்தனையும் நம் மனதில் நிலைத்திருப்பதுபோல், அவை பேசும் பாங்கும், எடுத்து வைக்கும் வியாக்கியானங்களும் அதிரச் செய்கின்றன. அப்படியென்ன....எளிய உரையாடல்கள்தானே....என்று ஒரு புதிய வாசகனுக்குக் கூடத் தோன்றக் கூடும். ஆனால் மிகுந்த சொற்சிக்கனத்தோடு அதை எழுதிப் பார்த்தால்தான் தெரியும்....ஏழ்மையிலும், இயலாமையிலும், அடுத்தவரை நாடி நிற்கும் நிச்சயமற்ற இயங்குதள வாழ்க்கை நிலையிலும்....மனம் தடுமாறி...நிலையற்ற குழப்பமான சூழலில் சாதாரண மனிதனின் மனோ நிலை எவ்வகையிலெல்லாம் தடுமாறி அலைபாயக் கூடும் என்பதை இப்படைப்பில் மிகுந்த ஆழத்தோடு நமக்குச் சொல்கிறார். இந்த வாழ்க்கையின் அனுபவம், தன் அசட்டுப் பையனைக் கூட  எப்படி மாற்றியிருக்கிறது, என்ன மாதிரி ஒரு பக்குவம் கொள்ள வைத்திருக்கிறது  என்று வியக்கும் தந்தையின் மன நிலையை வெகு அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் தி.ஜானகிராமன்.

        தி.ஜா.வின் படைப்புக்கள், அவரது மனப்பாங்கு, மரபு சார்ந்து அழுத்தமாகப் பயணிக்கின்றது. அவைகளைக் மீற வேண்டும் என்று வலிய யோசிப்பதில்லை.. மனிதனின் இயல்பான வாழ்க்கை சார்ந்த சுதந்திரம் பாதிக்கப்படும்போது, ஒரு கட்டாயத்தின் பேரில் அங்கங்கே சில மீறல்கள் அவரது படைப்பினில் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன.   காலத்தின் வாழ்வியல் கருதி படைப்பினில்  அவைகளை வாசகன் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகி, அந்த நியாயத்தை உணர்ந்து அதிசயிக்கிறான். சரளமான கதையோட்டம், கதா பாத்திரங்களின் நுட்பமான, சாதுர்யமான உரையாடல்கள்...இப்போது படிக்கும்போதும் புத்துயிர் பெற்று நிற்கி்ன்றன. அந்த மனிதர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுவே நிஜம்.  இவை எழுதப் புகுந்தவர்கள், எழுதிக் கொண்டிருப்பவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்….!       

                  --------------------------------------------------------------------------