17 டிசம்பர் 2018


அசோகமித்திரனின்




 “அப்பாவின் சிநேகிதர்“                             வாசிப்பனுபவம்                                                                  


தையின் முதல் வரியிலேயே ஆத்மார்த்தமான நெருக்கத்தையும் உறவையும் உண்ர்த்தி விடுகிறார். சக மனிதர்களை, இயற்கையை, பிற உயிர்களை என்று எல்லாவற்றையும்  நேசிக்கும் மனப் பக்குவம் கொண்டவர்களாலேயே இது சாத்தியம்
ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தது. ஒரு காலத்தில்….வார்த்தையைக் கவனித்தீர்களா?  இப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. இன்று மக்களிடையே, ஒரே தெருக்காரர்களிடையேயும், பக்கத்து வீட்டுக்காரரிடமும் என்று ஏன் இந்தப் பிரிவு மனப்பான்மை, பொறாமை, துவேஷம் வந்தது என்று யோசித்து, வேதனை கொள்ள வைக்கிறது. கதையின் முதல் வரி இப்படிப் பல எண்ணங்களைத் தூண்டி விடுகிறது. படைப்பின் ஆன்ம பலம் அது. இலக்கிய அனுபவங்களைத் தருவது என்பது வேறு. நான் தருவது ஆழ்ந்த ரசனையின்பாற்பட்ட உள்ளுணர்வின் வியாபகங்களை. எழுத்தாளன் அதை உள்வாங்கித்தானே முதலில் பேனா பிடிக்கத் துணிகிறான்.
மூத்த தலைமுறை அப்படித்தான் இருந்தது. இன்றும் மீதமிருப்பவர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் கதையின் முதல் வரி.
சங்கரனோட பிள்ளையா? இங்கே மெட்ராசுக்கு எப்போ வந்தே?
சையது மாமா….. –
ஜாதியோ, மதமோ எதுவும் குறுக்கே நிற்கவில்லை. சங்கரனுக்கு சையது…..என்பவர் மாமா. மனசு விட்டுப் பழகியாச்சு என்றால் அப்படித்தான். வீட்டிற்கு வந்து மாமி எப்டியிருக்கீங்க…என்று கேட்டு ஒரு வாய் தண்ணீர் குடித்தால், கையை நனைத்தால்….உறவாய் மனதுக்குள் நிலைத்துப் போவதுதான். நேசிப்பது, அன்பு செலுத்துவது, கஷ்ட நஷ்டங்களில் பங்கேற்பது, காலத்துக்கும் கூட நிற்பது  எல்லாமும் அங்கே ஸ்தாபிதம்.
இன்று இந்த மாமா என்ற வார்த்தைக்கு எத்தனையோ அர்த்தங்கள். எதிர்ப்படும் வயதில் பெரியவரெல்லாம் “அங்கிள்“.   உதட்டோடு நின்று விடும் வெறும் வார்த்தை. தமிழில் சொன்னால் மதிப்பில்லை. மாமா என்கிற மதிப்பு மிகுந்த உறவுமுறை கிடையாது. காலம் அப்படித்தான் ஆகிப்போய்க் கிடக்கிறது.
“அங்கிள்“ – வந்தவன் போனவனெல்லாம் இன்று அங்கிள்தான். கேட்பவன் சந்தோஷிக்கிறானா, மதிப்பாய் உணர்கிறானா என்பது பொருட்டில்லை. அப்படிச் சொல்லிச்  சொல்லியே ஒதுங்கி, ஒதுக்கி நிற்க வைத்து விடும் நடைமுறை. பாழாய்ப் போன பலவற்றுள் இதுவும் ஒன்று.
சையது மாமா…..!  -  இந்தப் பெயரும், அந்தக்  கனிவும் ஆச்சரியமும் கொண்ட கேட்பும் நமக்கு எவ்வளவு விஷயங்களை உணர்த்துகின்றன? அந்தப் படைப்பாளி எவ்வளவு மன முதிர்ச்சியடைந்த, பரிபக்குவமான மனிதராக இருக்க வேண்டும்? அப்படியான ஒருவரிடமிருந்துதானே இந்த வரிகள் வெளிப்படும்? மனிதர்கள் தெய்வ நிலையில் நின்றால் மட்டுமே இது சாத்தியம். மிகை அல்ல…சத்தியம்.
      அது அசோகமித்திரன்…இப்போது யோசியுங்கள். நான் மேற்சொன்னவை அவருக்கு அப்படியே பொருந்துகிறதா என்று.
      என்ன ஒரு எழுத்து?
      சங்கரன் நான்கு மாதங்களுக்கு முன்பு சையது மாமாவிடம் பேசியபேச்சு :-                  ”நீங்க எங்களை மோசம் பண்ணிட்டீங்க மாமா….நாங்க வீட்டைக் காலி செய்ய உங்க பேச்சைக் கேட்டு உங்களையே நம்பி வேறே எங்கேயும் தேடலை….இப்போ தெரிஞ்சிடுத்து…நீங்க பொய்யா அளந்திருக்கீங்கன்னு…நீங்க நன்னா இருக்க மாட்டீங்க மாமா…..”
      மோசம் பண்ணிட்டீங்க…. – என்ற இந்த வார்த்தைக்குரிய நிகழ்வு என்பது மிகச் சாதாரணமானதுதான். ஆனால் இந்தக் கதை எழுதப்பட்ட காலகட்டத்தை எண்ண வேண்டும். அந்தக் காலகட்டத்தில் அதற்கு முந்தைய எந்தக் காலகட்டத்தைச் சுட்டி அசோகமித்திரன் கதை சொல்கிறார் என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். 1990-கள். அப்போதும் அதற்கு முந்தைய கால வெளிகளிலும் மக்களிடையே நேர்மையும், நாணயமும், ஒழுக்கமும், பண்பும் பெருவாரியாகப் படிந்துக் கிடந்தது. அந்தக் குறிப்பிட்ட காலத்திய ஒரு நிகழ்வினைச் சொல்கையில் அப்போதைய மக்களின் பண்பாட்டு வெளி எந்நிலையில் வியாபித்திருந்தது என்பதை மனதில் வைத்து படைப்பாளி ஒரு படைப்பினைத் தர வேண்டும். அப்படித்தான் தர முடியும்.
      அப்பா செத்த ஊரே வேண்டாம் என்று ஐந்நூறு மைல் தள்ளியிருந்த இந்த இடத்தில் (மெட்ராஸ்) மீண்டும் அப்பாவின் ஒரு சிநேகிதர் சையது மாமா.       
      சொன்னவன் சின்னப் பையன்.  கேட்டவர் பெரிய மனிதன். வயதிலும், முதிர்ச்சியிலும். .நாராயணனை அப்படியே வாரிக் கட்டிக் கொள்கிறார் சையது. நீ அன்னைக்கு என்னை மோசக்காரன்னு சொல்லிட்டுப் போனப்புறம் எவ்வளவு தடவை உன்னை நினைச்சுண்டு அழுதேன் தெரியுமா? நான் ஏண்டா இந்த வயசிலே உன்னை மோசம் பண்ணப் போறேன்…? நானும் உங்கப்பனும் பள்ளிக்கூடத்திலே வெறும் சிநேகிதங்களாகவாடா இருந்தோம்? எங்களுக்கு உடம்புதான் ரெண்டே தவிர உயிரு ஒண்ணுதாண்டா….அவன் பெண்டாட்டி பிள்ளைகளுக்கு ஏதும் செய்ய முடியலையேன்னு எவ்வளவு தவிச்சிருப்பேன் தெரியுமா?
      வயது முதிர்ந்த இந்தப் பெரியவரின் சொற்கள் எனக்கு “புண் உமிழ் குருதி”யில் வரும் அந்தக் கிழவரையும் நினைவுபடுத்துகிறது. பஸ்ல அன்னைக்கு உன்னோட பேசினப்புறம் எவ்வளவு தடவை உன்னை நினைச்சுப் பார்த்திருக்கேன் தெரியுமா? உன்னையே நினைச்சிண்டிருந்த என்னை இப்படித் திருடன்னு சொல்லிக் கேவலப்படுத்திட்டியே….நான் உன் பணத்தை எடுக்கலைப்பா…. என்று சொல்லி வந்தவழியே  திரும்பியிருப்பார் அந்தப் பெரியவர். பண்பில் சிறந்த பெரியோர்கள்…எந்த நிலையிலும் அதிலிருந்து தவறுவதில்லை என்பதை அந்தக் காட்சி நமக்குப் புரிய வைக்கும்.
      ஆருயிர் நட்பாக இருந்த ஒருவர் துரோகம் செய்ய மாட்டார் என்பதற்கு இங்கே சையது மாமா சொல்லும் பதில்களே சான்று. சின்னப் பையன் என்னவோ பேசிட்டான் என்றுதான் நினைக்கிறார். அந்த வாஞ்சையிலேதான் சங்கரனோட பிள்ளையா…? என்ற அந்த முதல் கேள்வி. எவ்வளவு மன நெருக்கம் பாருங்கள். வளவளவென்று வார்த்தைகளைக் கோர்க்காமல், நறுக்குத் தெறித்தாற்போல் கேட்பதில் அத்தனை உள்ளர்த்தங்களும் படிந்து விடுகின்றனதானே…!
      “அம்மா, தம்பி, தங்கையெல்லாம் சௌக்கியமா? எங்கேடா இருக்கீங்க இப்போ? வாடா…என்னை உடனே வீட்டுக்கு அழைச்சிண்டு போடா….”
      இல்லே மாமா…நான் உங்களைப்பத்தி ரொம்ப மோசமா அம்மாகிட்டே சொல்லியிருக்கேன் மாமா….இப்போ வேணாம்…
      நீ சொன்னா என்னடா…நீ நேத்திப் பையன்…உனக்கு நல்லது எது, மோசம் எதுன்னு என்ன தெரியும்? சரி, போடா…உனக்கு இந்த சையது இனிமே எதுக்கு? எல்லாம் உங்க அப்பாவோட போச்சு…-திடீரென்று நடுரோடில் சையது தன் மார்பில் அடித்துக் கொள்கிறார். நான் அவ்வளவு இளப்பமாயிட்டேண்டா….நான் அவ்வளவு கிள்ளுக் கீரையாயிட்டேண்டா….
      அவருக்கு அந்தக் குடும்பத்துடனான மனநெருக்கம் இந்தச் செயலில் வெளிப்படுகிறது. நாராயணன் அவர் கைகளைப் பிடித்துக் கொள்கிறான்.
      வாங்க மாமா…வீட்டுக்குப் போவோம்…. – நாராயணன்.
      எதற்கு அவர்களுக்கு இத்தனை கோபம்?. ரொம்பச் சாதாரண விஷயம்தான். எங்கோ இருந்த ஒரு வீட்டைக் காண்பித்து, இது காலியாகப் போறதுடா… இந்த வீட்டையெல்லாம் பார்த்துக்கிற முன்ஷிகிட்டே சொல்லியிருக்கேன்…நீங்க கவலையே படவேண்டாம். அடுத்த மாசம் இங்கேயே வந்திடலாம்… என்று சொல்கிறார் சையது மாமா. அவர்கள் இருந்த வீட்டைக் காலி பண்ணும் நெருக்கடியால் இந்தத் தேவை. ஆனால் சையது மாமா சொன்ன மேற்சொன்னது நடக்காமல் போகிறது.
அப்படியெல்லாம் வீடு ஒண்ணும் காலியாகலை…தவறான தகவல்…சையது யாருன்னே தெரியாது என்கிறான் முன்ஷி. அவரையே நம்பியிருந்த இவர்களுக்கு அது அதிர்ச்சியாகிவிடுகிறது. வெட்டியாய் வாயளந்து கெடுத்து விட்டார் என்பதாய் நினைக்க வைத்து விடுகிறது. இதுதான் மோசம் பண்ணியதாகச் சொல்வது. அந்தக் கால கட்டத்தில் இம்மாதிரி ஒரு தவறுதலே மோசம் பண்ணியதாக நினைக்க வைக்கும் பண்பாட்டுச் சூழல். காரணம் மனிதர்கள் அத்தனைக்கத்தனை நேர்மையாளர்களாக, நம்பிக்கைக்குரியவர்களாக வாழ்ந்து கழித்த நாட்கள் அவை.
      நாராயணன் சையது மாமாவை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறானேயொழிய, அவன் மனதில் கேள்வி இருந்து கொண்டேயிருக்கிறது. ஏன் இந்த மனிதன் கண்ணில் விழுந்தோம்? நாம் போகும் ஊரிலெல்லாம் இந்த மனிதனுக்கு என்ன வேலை? எல்லாவற்றையும் விட்டொழித்துவிட்டு நிம்மதியாக இருக்கும்போது திடீரென்று இவன் எங்கே முளைத்தான்?
நாராயணனின் வயதையொத்த சிந்தனையை அங்கே படர விடுகிறார் அசோகமித்திரன். அம்மாவும் ஏமாற்றம் தாங்காமல் சையதை நிறைய வைதவள்தான். ஆனால் அன்று…..
      நம் குடும்பங்களில் ஆண்களுக்கு மத்தியில் ஏற்படும் உரசல்களை, அதன்  வெப்பத்தைத் தணித்து, ஒற்றுமையை மேம்படச் செய்பவர்கள் பெண்கள்தான். அதனால்தான் குடும்ப அமைப்புகள் சீரழியாமல் இன்னும் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.     
அம்மா சமையலறையிலே இருக்கா போலிருக்கு….என்கிறான் நாராயணன்.
நான் உள்ளே வரலாமாடா? என்று தழைந்த குரலில் கேட்கிறார் சையது.
ஆபீசுக்குப் போகாமல் திரும்பியிருக்கும் மகனைப் பார்த்து “இன்னிலேருந்தே வேலையிலிருந்து நின்னுட்டியா? என்று அம்மா கேட்கிறாள். சையது நின்ற இடம் பகலிலும் இருட்டாக இருக்கிறது. யாரு? அம்மா கேட்க…
நான்தாம்மா….சையதும்மா…. – சையதே பேசுகிறார்.
அம்மா ஒரு கணம் திகைத்து நிற்கிறாள். அவள் வையப் போகிறாள் என்று நாராயணன் பதறிக் காத்திருக்க…..வருகிறது அந்தக் கேள்வி.
“உங்களையெல்லாம் விட்டுட்டு இவ்வளவு சீக்கிரம் போக உங்க சிநேகிதருக்கு எப்படி மனசு வந்தது?” – காலம் காயங்களை எப்படி ஆற்றி விடுகிறது பாருங்கள்.
துளியும் பகை என்று காட்டிக் கொள்ளாத இந்தக் கேள்வியைக் கவனித்தீர்களா? பக்குவப்பட்ட பெரியவர்கள்…என்றும் பெரியவர்கள்தான்….அதிலும் பெண்களின் முதிர்ச்சி சொல்லில் அடங்காதது.
நீ நேத்திப் பையன்…உனக்கு நல்லது எது, மோசம் எதுன்னு எப்படித் தெரியும்? என்று கொஞ்சம் முன்னால் நாராயணனிடம் சையது சொன்னாரே…அதைச் சற்று இங்கே நினைத்துப் பாருங்கள்.   அப்பாவின் சிநேகிதம் பற்றியும், சிநேகிதரைப் பற்றியும் அதனை மதிக்கத் தெரிந்த நாராயணன் அம்மாவின் மேற்கண்ட கேள்விபற்றியும் நாம் புரிந்து கொள்ள முடியுமே?.
முதிர்ந்த, பக்குவமான எழுத்து என்பது அசோகமித்திரனைப்போல் வேறு எவரிடமிருந்தேனும் இத்தனை துல்லியமாய் வெளிப்பட்டிருக்கிறதா? என் வாசிப்பு அனுபவத்தில்  எழுத்தாளர் ஆர்.சூடாமணியை நான் அவ்வாறு உணர்ந்திருக்கிறேன்.
                  ----------------------------------------------------------------------
     

                      


13 டிசம்பர் 2018

இரவும் இருளும் (இரவு நாவல் வாசிப்பனுபவம்)


இரவும் இருளும்  (இரவு நாவல் வாசிப்பனுபவம்)      உஷாதீபன்                --

 இரவு நாவல் இப்பொழுதுதான் முடித்தேன். யட்சினி என்ற தலைப்பும் பொருந்தும் என்று தோன்றியது.இரவில் விழித்திருப்பவர்கள் என்ற காரெக்டர்களே புதிதாய்த் தோன்றி விடாமல் படிக்க வைத்து விட்டது.


இருட்டில் நடக்கும் எல்லாமும் தவறுகளாய்த்தான் இருக்கும் என்று மகாத்மா சொல்லிப் படித்ததாக நினைவு. கடைசி இரண்டு அத்தியாயங்களில் மனசு அதிர்ந்து போனது. மேனன் கமலாவோடு வாழ்ந்த நாட்களை சிலிர்ப்போடு நினைவு கூறுவதும், அது நானில்லை வேறு என்று கனவில் இருவருக்கும் வந்து சொல்வதும், அங்கே இன்னொரு கதாபாத்திரமாய் நானும் நின்று கொண்டிருந்தேன்.

நீலிமாவைத் திருமணம் செய்து கொள்ளாமல் திரும்பியதில் மனது திருப்தி கொண்டது. ஆனாலும் அவர்களின் காதல் வகைமாதிரியை அந்த ரீதியில் கொள்ள வேண்டியதில்லை என்று உணரவைத்திருப்பது ஆறுதல்.

யட்சினி என்ற வகைப் பெண்ணை நானும் சந்தித்திருக்கிறேன். செய்வினை, செயப்பாட்டுவினை என்ற தலைப்பில் ஒரு சிறுகதையும் எழுதியிருக்கிறேன். எனது ஆப்த நண்பர் ஒருவரையும் இழந்திருக்கிறேன். அந்தக் கதை அவரின் சாவோடு ஆரம்பிக்கும். எனக்கு அது நினைவுக்கு வந்து விட்டது.

இரவு படித்து முடித்ததில் மனசு நிறைந்தது.
 திரு. ஜெயமோகன் : -
யட்சி, யட்சிணி என்பவை இரவின் மீதான அச்சத்தின் பருவடிவங்கள் அல்லவா? யட்சி என்றால் கண்ணுடையவள் என்று பொருள் என்பார்கள். இரவில் நம் கண்கள் அழியும்போது தான் கண்பெறும் தெய்வ வடிவங்கள். இரவில் நம் கண்கள் அழிகின்றன என்பதனாலேயே கண்கள் உருவாக்கும் உலகமும் மறைந்துவிடுகிறது. நாம் வாழும் புழக்க உலகம் என்பது கண்களால் உருவாக்கப்படுவது அல்லவா? ஆகவேதான் துயத்தில் கண்களை மூடிக்கொள்கிறோம். பிரார்த்திக்கையிலும் தியானிக்கையிலும் கண்களை மூடிக்கொள்கிறோம். அப்படி மூடிக்கொண்டபின் உருவாகும் உலகமே அகம். அதுவே நம் ஆழம். அந்த ஆழமே இரவாகவும் உள்ளது. இரவில் வாழ்வதென்பது அந்த ஆழத்தில் வாழ்வது மட்டுமே. அது அபாயகரமான ஓர் விளையாட்டு. அதைவிளையாடி நிறைவுடன் மீள்வது எளியதல்ல.
யோகி இரவில் விழித்திருக்கிறான் என்று சொல்லப்படுவதுண்டு. யோகியின் இரவு என்று சொல்லப்படுவது நாம் நம் உலகியல் தேவைகளுக்காக உருவாக்கியிருக்கும் அனைத்தும் மறைந்து போய் எஞ்சும் இருள்வெளியைத்தான் என்பார்கள். அந்த இரவை நோக்கித்தான் இரவில் விழித்திருக்கும் ஒவ்வொருவரும் சென்றுசேர்கிறார்கள். கமலா பலியாகிறார். மேனன் தப்பி ஓடுகிறார். கதாநாயகனைப்போல சிலர் அதை உதறமுடியாது மேலும் நீந்துகிறார்கள்

------------------