30 செப்டம்பர் 2018

106வது இதழ் நவீன விருட்சம் செப்டம்பரில் வந்துவிட்டது....
அழகியசிங்கர்
ஒவ்வொரு காலாண்டு போதும் விருட்சம் குறிப்பிட்ட காலத்திற்குள் வந்துவிட வேண்டுமென்ற உறுதியாக இருப்பேன். ஆனால் என் முயற்சியில் பெரிய தோல்வியே ஏற்படும். 
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நான் விருட்சம் என்ற பத்திரிகையைக் கொண்டு வருகிறேன். அதன் பக்கங்கள் 80 ஆகவும், விலை ரூ.20தான் வைத்திருக்கிறேன்.
இந்த 30 ஆண்டுகளில் நான் 120 இதழ்கள் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் என்னால் 106 இதழ்கள் மட்டும்தான் கொண்டு வர முடிந்தது.
இதுவே பெரிய விஷயமாக எனக்குத் தோன்றுகிறது. இதழ் கொண்டு வருவதோடல்லாமல் இந்தப் பத்திரிகையை அனுப்புவதற்கு நான் பெரும் முயற்சி செய்ய வேண்டும். அவ்வளவு லேசில் அனுப்பி விட முடியாது.
இந்தப் பத்திரிகை விற்று எனக்குப் பணம் கிடைக்கப் போவதில்லை. அதனால் பணத்தைத் தயார் செய்துகொண்டு பத்திரிகையைக் கொண்டு வந்துள்ளேன்.
அதிகப் படைப்பாளிகளை இதில் ஈடுபட வைக்கவேண்டுமென்ற நோக்கத்துடன் சில முடிவுகளை எடுத்திருக்கிறேன்.
கவிதைகள் எழுதுபவர்கள் ஒரு கவிதை மட்டும் அனுப்ப வேண்டும். கதை, கட்டுரை எழுதுபவர்கள் நாலைந்து பக்கங்களுக்குள் அனுப்ப வேண்டும்.
புத்தக மதிப்புரையும் வெளியிடப்படும். ஆனால் ஒன்று அல்லது ஒன்றரைப் பக்கங்களுக்குள் முடித்து விடவேண்டும். வாசகர்களைப் படிக்கத் தூண்டும்படி புத்தக மதிப்புரை இருக்க வேண்டும்.
கீழ்க்கண்ட படைப்பாளிகளின் படைப்புகள் நவீன விருட்சம் 106வது இதழில் இடம் பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
1. விஸ்வநாத் கவிதை 
2. கணக்குத் தீர்த்தல் - வளவ துரையன் 
3. வசப்படா விடை பெறுதலின் மௌனத் துளிகள் - தேனு-கவிதை
4. கடிதம் - வண்ணதாசன் 5. ஒரே ஒரு நிலக்கரித்துண்டு - கல்யாண்ஜி 
6. புத்தக விமர்சனம் - வைதீஸ்வரன் 
7. செப்டம்பர் மூன்றாம் தேதி - அழகியசிங்கர் 
8. பெண்கள் - சிறுகதை - தாஜ் 
9. முகநூல் மூலம் வெளிவந்த புத்தகங்கள் 
10. ஆற்றாமை - சிறுகதை - உஷாதீபன் 
11. புத்தக விமர்சனம் 
12. மிரட்டல் கதை - அழகியசிங்கர் 
13. வாழ்க்கையெனும் ஓடம் - டாக்டர் பாஸ்கரன் 
14. இவர்களும் அவர்களும் - கவிதை - உமா பாலு 
15. டோரியன் சீமாட்டி - சிறுகதை - பிரேமா பிரபா 
16. தமிழ் மணவாளன் கவிதை 
17. பைரவம் - கவிதை - அன்பாதவன் 
18. பனித்துளி - அடல் பிஹாரி வாஜ்பேயி 
19. விரக்தி - கவிதை - டோரத்தி பார்க்கர் 
20. ஸிந்துஜா கவிதை 
21. புத்தகம் விமர்சனம் - டாக்டர் ஜெ பாஸ்கரன் 
21. புத்தக விமர்சனம் - மணிகண்டன் 
22. புத்தக அறிவிப்பு 
22. உரையாடல்

29 செப்டம்பர் 2018

“கரிஷ்மா நடிகர்”


                                                                ------------------------------------
      வீட்டில் அடுப்பில் உலை ஏற்றிவிட்டு, இன்று நிச்சயம் சாப்பிட்டு வயிறாருவோம் என்ற நம்பிக்கையோடு ஒரு இடத்திற்குச் சென்று உதவிக்கு நிற்க முடியுமானால் அது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் வீடாகத்தான் இருக்க முடியும் என்று ஒரு முறை பத்திரிகையாளரும், நடிகருமான திரு சோ..ராமசாமி அவர்கள் கூறியிருந்தார்.
     அதுதான் நாம் அவரைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் மனதில் தோன்றும் செய்தியாக இன்றுவரை உள்ளது. மக்கள் அவரைப்பற்றி அப்படித்தான் அறிந்திருந்தார்கள். எப்படியான பாத்திரங்களை ஏற்று அவர் தன் திரைப்படங்களில் நடித்தாரோ, தன் திரைப்படங்களின் காட்சிகளை அமைத்தாரோ,பாடல்களை என்ன கருத்தோட்டங்களில் எழுத வைத்துப் பாடினாரோ, அப்படியாகவே நிஜ வாழ்விலும் இருந்தார் என்பதுதான் உண்மை.
     நீ பத்து ரூபாய் சம்பாதித்தாயானால் அதில் இரண்டு ரூபாயையாவது தர்மத்திற்கு ஒதுக்கு என்பதான நீதி நாம் கேள்விப்பட்டதும், படித்து அறிந்ததும் ஆகும். அதை நடைமுறை வாழ்க்கையில் விடாமல் கடைப்பிடித்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். அம்மாதிரியான மனநிலை அந்தக் கால கட்டத்தில் திரைப்படங்களில் கோலோச்சிய பிற நடிகர்களுக்கு இருந்ததா என்றால், இருந்தது…. ஆனால் இவரைப் போல் அது தாராளமாய், அள்ளிக் கொடுக்கும் வள்ளல் என்கின்ற மெய்ப்பாட்டில் நின்று மேன்மை எய்தவில்லை என்றுதான் சொல்லமுடியும்.  அதனால்தான் “பொன் மனச் செம்மல்” என்கின்ற பட்டத்தை இவரின் தர்ம சிந்தனைக்கு ஆதாரமாய் மகுடம் சூட்டியதுபோல் வழங்கி ஆசீர்வதித்தார் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமி அவர்கள்.
     அந்தந்தக் கால கட்டங்களில் தமிழ்த் திரையுலகில் இருவேறு விதமான நடிகர்கள் புகழின் உச்சியில் நின்று கோலோச்சியிருக்கிறார்கள். எம்.கே.. தியாகராஜ பாகவதர், பி.யு. சின்னப்பா…… பிறகு வந்தவர்களில் திரு எம்.ஜி.ராமச்சந்திரன், நடிகர்திலகம் சிவாஜிகணேசன்…அதன் பிறகு திரு ரஜினிகாந்த், திரு கமல்உறாசன்….பிறகு இப்போதிருக்கும் இளைய தலைமுறை நடிகர்கள்…..
     இருவேறு நடிகர்களையும் அடையாளப் படுத்திய வெவ்வேறு நிலைகளில்தான் அவர்களின் திரையுலகப் பயணங்கள் கடந்திருக்கின்றன. ஒருவர் மக்களின் ஏகோபித்த செல்வாக்கைப் பெற்ற Charisma நடிகர் மற்றொருவர் திறமைசாலி.  அப்படியென்றால் அந்த வார்த்தைக்கு அப்படியே நேரடியாகப் பொருள் கொண்டு, “அப்டீன்னா எங்காளு திறமைசாலி இல்லேங்கிறீங்களா ?” என்று கேட்கக் கூடாது… ஒருவர் charisma நடிகராக…அதாவது மக்களின் அதீத, அன்பும், பாசமும் மிக்க செல்வாக்குப் பெற்ற நடிகராக இருந்தாரென்றால்,  அதற்கு நேரிடையான இன்னொருவர், தான்  ஏற்றுக் கொண்டிருக்கும் தொழிலுக்கு மிகவும் நியாயம் செய்பவராக, தன் திறமை முழுவதையும் படத்துக்குப் படம் வித்தியாசமாகக்  காண்பித்து, கடுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு நடிப்பில் தன்னை முன்னிறுத்திக் கொண்டு அதன் மூலம் மக்களின் செல்வாக்கை, அன்பைப் பெற்றவரானார்  என்றே பொருள் கொள்ளலாம். பொருள் கொள்ள வேண்டும் என்பதே சரி.
     ராஜா ராணி கதைக் காலத் திரைப்படங்களிலிருந்து, பிறகு சமூகக் கதைகளை உள்ளடக்கிய திரைப்படங்களாக வர ஆரம்பித்துத் தொடர்ந்தது வரை படிப்படியாக எம்.ஜி.ஆர் அவர்களின் திரைப்படங்களை நாம் கண்ணுற்றோமானால் அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கான கதையம்சங்கள் அவரை ஏழைப் பங்காளனாகவே காட்டி வந்திருக்கிறது. திரையுலகில் படிப்படியாகப் புகழ் பெற்றுக் கொண்டு வந்த காலங்களிலும் கூட ஆரம்ப கால சரித்திரப் பின்னணி கொண்ட புனைவுத் திரைப்படங்களில், அல்லது ராஜா ராணி கதைத் திரைப்படங்களில்  அவருக்கு அமைந்த கதா பாத்திரங்கள் நியாயத்தின் பக்கமும், நேர்மையான செயல்களை லட்சியமாகக் கொண்டதாகவும், பாட்டாளி மக்களின் பக்கம் நின்று குரல் உயர்த்திப் பேசுபவனாகவும், அவர்களின் உரிமைகளுக்காகப் பாடுபடும், போராடும் ஒருவனான கீழ்நிலைத்  தொண்டனாகவும், அவர்களால் மனமார ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவனாகவும் திரு.எம்.ஜி.ஆர்.. அவர்களை முன்னிறுத்தி வந்திருக்கிறது. இது அவராகவே விரும்பி ஏற்றுக் கொண்டதாகவும் இருக்கலாம், அல்லது அவருக்குத் தானாகவே அமைந்ததாகவும் கூட இருந்திருக்கலாம். தேசத்தின் மீது பற்றுக் கொண்ட இளைஞனாய், நாட்டைக் காக்கும் படைத் தலைவனாய், மக்களின் துயர் துடைக்கும் மன்னனாய் ஆன கதாபாத்திரங்கள் அவர் மீது மதிப்பையும், மரியாதையையும்,  நம்பிக்கையையும் படிப்படியாக மக்களின் மனதில் ஏற்றி வந்திருக்கிறது. அநீதியைக் கண்டு கொதித்தெழுந்து அவற்றை வேரோடு அழித்தொழிக்கும் பலம் கொண்ட உரம்பெற்ற கதாநாயகனாய் படத்துக்குப் படம் அவர் வந்து நின்ற போது மக்கள் சலிக்காமல் பார்த்தார்கள். சந்தோஷமடைந்தார்கள்….பாசமும், பற்றும், அன்பும் கொண்டு…தங்களையே தனது ஆத்மார்த்த நடிகருக்காக அர்ப்பணம் செய்பவர்களாக மாற ஆரம்பித்தார்கள்.
     படத்துக்குப் படம் ஏற்றுக் கொள்ளும் கதாபாத்திரங்கள் மக்களை எப்படிப் போய்ச் சேருகிறது, அவர்களின் மனங்களை எப்படி ஆட்டிப் படைக்கிறது என்பதை தனது திரைப்படங்களுக்கான அபரிமிதமான வரவேற்பையும், கூட்டத்தையும், வசூலையும் கண்டு….இந்தத் தொழிலில் தன் கால் பலமாக ஊன்றப்பட வேண்டுமானால், நீண்ட காலத்திற்கு இந்தத் திரையுலக பிம்பத்தின் கீழ் நின்று கோலோச்ச வேண்டுமானால் இம்மாதிரியான சாதாரண, பாமர, நடுநிலை மக்களுக்குப் பிடித்த கதா பாத்திரங்களையே தான் ஏற்க வேண்டும்….அதிலேயே நிலைக்க வேண்டும் என்கின்ற தீர்மானம் அவருக்கு அவரின் ஆரம்ப காலங்களிலேயே மனதளவில் ஆழமாக விழுந்திருக்க வேண்டும் என்பதே அவரை ஊன்றிக் கவனித்தவர்களின் கணிப்பாகச் சொல்ல முடியும்.
     கதை, வசனம், பாடல்கள், இசை, காட்சியமைப்பு, கதாபாத்திரங்களின் வார்ப்பு என்று ஒவ்வொன்றிலும் கவனத்தை ஊன்றிச் செலுத்தவில்லையானால் இந்த வெற்றி சாத்தியமில்லை என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தை அடையும் வரை வேண்டுமானால் வரும் வாய்ப்புக்களை மதித்து, தொழில் பக்தியோடு சீரிய முறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு முன்னேறியிருக்கலாம். ஆனால் அதன்பின், தன் கால் பலமாக இந்தத் திரையுலகில் ஊன்றப்பட்டு விட்டது என்கின்ற தீர்மானம் வந்த வேளையில், அது தன்னை இந்த இடத்திற்கு உயர்த்திய ரசிகப் பெருமக்களின் ஏகோபித்த ஆதரவின்பாற்பட்டதே என்கின்ற நன்றியுணர்ச்சியில், என் திரையுலக வாழ்க்கை எப்படி இந்த மக்களின் மனங்களை, எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிப்பதாக இருந்ததோ அது போலவே என் பொது வாழ்க்கையும் இந்த அன்பான மக்களுக்காகவே என்று தன்னை மேலும் நிலைப்படுத்திக் கொண்டு முன்னேறினாரே அங்கேதான் பொன் மனச் செம்மலின்  பொன்னான இதயம் இந்த நாட்டுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு முன்னேறியதின் வரலாறு தன்னைப் பற்றிப் பெருமை கொள்கிறது.
     ஐம்பதுகளிலிருந்து கருப்பு வெள்ளைப் படங்கள் சமூகப்படங்களாக மாற ஆரம்பித்த கால கட்டங்களில் அந்தந்தக் கதாநாயக நடிகர்களுக்கென அமைந்த பொருத்தமான திரைக்கதைகள், அதனை வடிவமைத்த காட்சியமைப்புகள் எமஃ.ஜி.ஆர்., சிவாஜி போன்ற நடிகர்களை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன. என் தங்கை, தாய்க்குப் பின் தாரம், தாய் மகளுக்குக் கட்டிய தாலி போன்ற ஆரம்ப கால சமூகப் படங்களிலேயே அவருக்கான கதாநாயக பிம்பம் அழுத்தமாக விழுந்து விட்டது எனலாம். அநியாயம் நடக்கும் இடத்தில் திடீரென்று தோன்றி அதனை எதிர்த்து நிற்றல், அதனிலும் எதிர்ப்பு வந்தால் அந்த ஆபத்தையும் எதிர் கொள்ளல், போன்ற காட்சியமைப்புகள் இவருக்குக் கனப் பொருத்தமாய் இருக்கின்றதே, சிறப்பான வரவேற்பைப் பெறுகின்றதே என்று ஆழமாய் உணர்ந்து, அப்படியான வீர தீரமிக்க காட்சிகளை அமைத்தே திரைக்கதையைப் பின்னி ஸ்வாரஸ்யப்படுத்தி எம்.ஜி.ஆர் நடிக்கும் படத்தை வெற்றிப் படமாக்கினார்கள் இயக்குநர்கள். தீமையைத் தடுக்கும், எதிர்க்கும், வஞ்சகத்தை முறியடிக்கும், வெற்றிவாகை சூடும் கதாநாயக பிம்பத்தை உயர்த்திப் பிடிக்கும் சிறப்பான காட்சியமைப்புகள் மக்கள் திலகத்திற்கு கன ஜோராகப் பொருந்துவதை உணர்ந்த தயாரிப்பாளர்கள் அவரை வைத்துத் தொடர்ந்து படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார்கள். தனக்கான வெற்றிச் சித்திரம் மக்களால் நிர்ணயிக்கப்பட்டுவிட்டதைக் கண்கூடாக உணர்ந்து கொண்ட எம்.ஜி.ஆர் அவர்கள் அந்த மக்களின் நல்வாழ்வுக்கான கொள்கைகளை, கோட்பாடுகளைத் தன் படங்களில் தனது ஆளுமைக்கு உட்படுத்தி வெளிக் கொண்டுவர ஆரம்பித்தார். அவர் என்ன சொன்னாலும் சரி, எது செய்தாலும் சரி எல்லாமுமே இந்த மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் என்கின்ற தீர்மானம் கிடைத்தபோது, அவரின் இஷ்டப்படியே அவரது ஒவ்வொரு திரைப்படங்களும் உருப்பெற ஆரம்பித்தன. அதுவே அவரது தொடர்ந்த வெற்றிக்கான காலம் கடந்த சரித்திரமாகத் திகழ ஆரம்பித்தது.
           Charisma நடிகர், திறமைசாலி என்ற இருவகை நடிகர்கள் தமிழ்த் திரையுலகில் என்றும் போட்டியுடனோ, பொறாமையுடனோ இருந்ததில்லை என்பதுதான் உண்மை.  காரணம் ஒருவருக்குப் பொருந்தும் வேஷங்கள், கதாபாத்திரங்கள் இன்னொருவருக்குப் பொருந்தாது என்பதும், கதையமைப்புகளே வித்தியாசங்கள் கொண்டவை என்பதும், இவருக்காக எழுதுவது ஒருவகை, அவருக்காக அமைக்கும் குடும்பக் கதைகள் இன்னொருவகை என்பதாகவே வெவ்வேறு வகையிலான திரைக்கதையமைப்புக் கொண்ட திரைப்படங்களை நம் மக்கள் எந்த வித்தியாசமுமின்றி சந்தோஷமாகத் துய்க்கும், அனுபவிக்கும் பழக்கத்தைக் கைக்கொண்டிருந்தனர். ஒரு ஷோவுக்கு மக்கள்திலகத்தின் திரைப்படங்களை ஓடிச் சென்று ஆர்வமாய்ப் பார்த்தார்களென்றால், அடுத்த மாலை நேரப்படத்திற்கு நடிகர்திலகத்தின் படத்திற்கு சந்தோஷமாய்ப் போய் நின்றார்கள் என்பதுதான் உண்மை. இருவருமே கொடிகட்டிப் பறந்தார்கள்தான். ஆனால் மக்கள் மனங்களில் எது நின்றது என்று பார்த்தால் மக்கள் திலகத்தின் கொடைவள்ளல் தன்மைதான் நின்றது. அந்த நடிப்பும் நின்றது. ஆனால் படத்தோடு முடிந்தது. என்றானாலும் அவர் தங்களுக்கானவர், தங்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் மனப்பாங்கு கொண்டவர், தங்களின் வாழ்வை உய்விக்க, உயர்த்தேந்த வந்த மகான் என்பதான நம்பிக்கை நம் ஏழை எளிய மக்களிடம் இருந்தது. அதுவே அவரைத் இந்த தமிழ்நாட்டின் முதல்வர் ஆக்கி அழகு பார்த்தது.சரித்திரத்தின் மாற்ற முடியா உண்மைகள் இவைகள்.  அவரின் புகழ் என்றென்றும் அழியாப்புகழ்.
                                -------------------------------   


    

எனது புத்தகங்கள்



இ.புக் - உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் - நாவல்




சமகாலக் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் சத்தியாவேசக் கதைகள்



வீனத் தமிழ் இலக்கிய உலகில் அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட படைப்பாளிகளை விட,  கண்டு கொள்ளப்படாத தரமான படைப்பாளிகள் பலர் உண்டு. கண்டு கொள்ளப்பட்டவர்கள் அவர்கள் சார்ந்துள்ள அமைப்பின் சார்பாக அடிக்கடி பேசப்படுபவர்களாக ஆகிறார்கள்..
காலத்திற்கேற்றமாதிரி மாறிக் கொள்ளத்தான் வேண்டும் என்று கொள்பவர்கள் இருந்தாலும், அதெல்லாம் நம்மளால முடியாதுங்க….என்று ஓரமாய் ஓதுங்கி தங்கள் இலக்கிய வாசிப்பு ரசனைக்குத் தாங்களே தீனி போட்டுக் கொள்பவர்களாய் எழுத்துப் பணியில் தீவிரமாய் ஈடுபட்டிருப்பவர்கள், மிகத் தரமான படைப்புக்களைத் தருபவர்களாகத் தங்களை நிலை நிறுத்திக் கொண்டு, தாங்கள் மதிக்கும் ஒரு சிலரிடமிருந்து வரும் பாராட்டுரைகளை மனமுவந்து ஏற்று, உற்சாகமடைந்து மேலும் மேலும் நல்ல படைப்புக்களைத் தர முயன்று கொண்டிருக்கிறார்கள்.
அப்படித் தன்னைத் தரமான இலக்கிய பீடத்தில் நிலை நிறுத்திக் கொண்டவர்தான் எழுத்தாளர் செய்யாறு தி.தா.நாராயணன். உலகம் எவ்வளவுதான் வேகமாய்ப் போய்க் கொண்டிருந்தாலும், என் எழுத்து வகை இது….இதில்  எத்தனை அழுத்தம் செய்ய முடியுமோ, எந்தவகையான உள்ளடக்கத்தோடு காத்திரமாய்த் தர முடியுமோ அப்படித் தொடர்ந்து தருவேன், தர முயல்வேன்  என்று அமைதியாய்த் தன் இலக்கியப் பணியை, பாணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் அவர்.
அவர் எழுத்தில் இப்போது புதிதாய் வந்திருக்கும் சிறுகதைத் தொகுதிதான்  சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் “அம்மணம்” என்ற தலைப்பிலான புத்தகம்.
“வலி” என்ற தலைப்பிலான முதல் கதையைப் படித்ததுமே நம் மனதில் ஆழமாய், அசாத்தியமாய்  ஒரு வலி வந்து சம்மணமிட்டு  உட்கார்ந்து கொள்கிறது. அந்த ஊர்த் திருவிழாவை நடத்துபவர்களின் வலியாய், அங்கே பலி கொள்ளப்படும் ஆடு, கோழி, பன்றி ஆகிய இனங்களின் வலியாய், அதைப் பார்த்து சகிக்கவொண்ணா மனதுடையவர்களான தாய்மார்களின் வலியாய், எந்தச் சாமிய்யா இப்டி பலி கேட்டுச்சி என்று முற்போக்கு மனம் கொண்டவர்களின் வேதனை வலியாய் கதை முழுக்கப் பயணிக்கிறது. கடவுளுக்கு நேர்ந்து விட்டு அக்கறையாய் வளர்க்கப்படும் பன்றி கூட சாமீ….சாமி….என்று பக்தியோடும் மரியாதையோடும், மதிப்போடும் அழைக்கப்படும் மனநிலையில் கடைசியில் அதே சாமி பெயரைச் சொல்லி அதனைப் பலி கொள்ளும் பொழுது, ஒரே பாய்ச்சலில் அதன் உயிர் போகாமல அலமந்து குற்றுயிரும் குலையுயிருமாய் அது சித்ரவதையோடு ஓடிப் புகுந்து வளர்த்தவன் காலடியிலேயே போய் அடைக்கலம் கேட்பதுபோல்  தன்னை இறுத்திக் கொள்ளும் அந்தக் காட்சி பார்ப்போர் மனதைக் கலங்கடிப்பதைவிட படிக்கும் நம்மை பெரும் வதைக்குள்ளாக்குகிறது.
இம்மாதிரிக் கோயில் பலித் திருவிழாக் காட்சிகளை விவரித்து எத்தனையோ கதைகள் வந்திருக்கின்றனவென்றாலும், அந்தந்தப் பகுதி மக்களின் வழக்கு மொழிகளில், வாழ்க்கை இயல்புகளில் அந்த நிகழ்வுகள் நுணுக்கமாய்ச் சித்தரிக்கப்படும்பொழுது, அந்தப் படைப்பு மேன்மையுறுவதும், படைப்பாளியின் தன்னம்பிக்கையான எழுத்துக்கு அடையாளமாய் நின்று அவரை உயர்த்திப் பிடிப்பதும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. எனக்குத் தெரிய வருடத்திற்கொருமுறையாவது இம்மாதிரிக் கதைகள் விடாது வந்து கொண்டேதான் இருக்கின்றன என்று உணரப்படும் நிலையில், ஒவ்வொன்றும் அந்தந்தப் பிராந்தியத்தின் மக்களின் பேச்சு மொழியை, வாழ்வியலை, நம்பிக்கைகளை வளம் சேர்க்கும் விதமாய்த்தான் அமைந்து சிறந்து நிற்கின்றன.
படைப்பாளி இதற்காகப் படும் சிரமம் நினைவு கூறத் தக்கது என்றுதான் தோன்றுகிறது எனக்கு. பெர்தனம், வென்னிச்சி, சூராண்டி வகையறா, வென்னிக்க, மெரளு, ஏற்வையா. ஒம்பாதுய்யா….போன்ற வார்த்தைகளின் பிரயோகம்…அந்தத் திருவிழாவிலேயே நாள் முழுக்க இருந்து அறிந்திருந்தாலொழிய  அல்லது அந்த மக்களோடு கொஞ்ச நாளேனும் வாழ்ந்து கழித்திருந்தாலொழிய, அல்லது சொல்லாராய்ச்சி பண்ணியிருந்தாலொழிய  படைப்பில் கொண்டு வர சாத்தியமேயில்லை என்கிற யதார்த்தத்தில் படைப்பாளியின் உண்மையான முயற்சிகள் நிச்சயம் பாராட்டத்தக்கவையாய் அமைகின்றன.
புத்தகத்தின் தலைப்பாக அமைந்துள்ள இரண்டாவது கதை ”அம்மணம்”. இச்சிறுகதையும் கடுமையான வட்டார வழக்கினை உள்ளடக்கியது. பொதுவாக வட்டார வழக்குகளை விவரித்துக் கொடுக்கப்படும் படைப்புக்கள் அவை புரிபடாத நிலையிலும், படிப்பதற்குக் கஷ்டமாக உணரப்படும் தன்மையிலும் விறு விறுப்பான வாசிப்பனுபவத்திற்குத் தடையாக இருப்பதாலும் ஒரு சாதாரண வாசகனை என்றில்லாமல், தீவிர வாசிப்பாளனைக் கூடக் கடந்து செல்ல வைத்துவிடும் அபாயம் உண்டு. ஆனாலும் எப்படித்தான் சொல்லப்படுகிறது என்று அறியும் ஆவலில் அந்தந்த வட்டார வழக்குகள் என்னென்ன பொருளில் உச்சரிக்கப்படுகின்றன என ஆழமாகத் தேடிச் செல்லும், வாசிப்பை உழைப்பாய்க் கருதிப் படிக்கும் வாசக அன்பர்களும் உண்டுதான். அப்படியான வாசகர்களுக்கு இந்தக் கதை செம தீனியாக இருக்கும் என்று சொல்லலாம்.
கதை என்று பார்த்தால், பெண்ணடிமைத் தனத்தில் இருக்கும் சமுதாயம் விடாமல் பெண்களுக்கான அநீதிகளை இழைத்துக் கொண்டே அது கூடாது என்று சொல்லிக் கொண்டும், தவறுகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று முழக்கமிட்டுக் கொண்டும் அதிகாரத் தடத்தில் நின்று  வீர்யமிடுகையில், ஊர்ல எல்லாப் பயலுவளும் அம்மணந்தான்…எவனுக்கு நீதி சொல்ல வக்கிருக்கு என்று ஊர்ப்பொதுப் பஞ்சாயத்தையே புறந்தள்ளிவிட்டு ஒரு பெண்ணுக்கு  இழைக்கப்படும் அநீதி அத்தனை பேருக்கும்தான் என்று நீதி சொல்லும் கருத்தை உள்ளடக்கியது இந்தப் படைப்பு.
ச்சீய்…வாங்கடீ…போக்கத்தவங்களே….இந்தக் கல்லெடுப்பு ஊர்ல ஓட்றவனும் அம்மணம், தொறத்துறவனும் அம்மணந்தாண்டீ…. என்று ஊர்ப் பொதுச் சபையில் துச்சாதனன் துகிலுரித்த மாதிரி கேலிகளாலும், கேள்விகளாலும் துளைக்கப்படும் பெண்ணை அழைத்துக் கொண்டு வெளியேறும் பெண்கள் கூட்டம் கதைக்கருவின் சிகரமாய் நின்று ஒளிர்கிறது.
எந்தத் தொழில் செய்தாலும் அந்தத் தொழிலார்ந்த அறிவும், விஷய ஞானமும், கடுமையான உழைப்பும்தான் ஒருவனைப் பெருமைப் படுத்தும். கிராமங்களில், பட்டி தொட்டிகளில் அவரவர்க்கு அமைந்ததான வாழ்வியல் முறையில்  இருக்கும் அர்ப்பணிப்பும் அதீதப் பிரயாசையும் அவரவர் தொழிலை, செயலை உயரத்தில் கொண்டு நிறுத்துகிறது. எந்தத் தொழில் செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அதில்  எந்தளவுக்குக் கருத்தும் கரிசனமுமாக விளங்குகிறோம்,அர்ப்பணிப்போடு திகழ்கிறோம் என்பதைப் பொறுத்தே எதுவும் சிறப்புப் பெறுகிறது. பாமரனுக்கும் இது உகந்ததுதான் என்பதை யாரும். எவரும் எங்கும் மறுத்து நிற்க முடியாது.
ஆட்டுக்காரன் என்ற தலைப்பிட்ட மூன்றாவது சிறுகதை அந்தத் தலைப்பிற்கேற்றாற்போல் சார்ந்த பணியின்பாலான விஷய ஞானத்தை உள்ளடக்கி தன்னைத் தானே பாதுகாத்துக் கொண்டு நிமிர்ந்து நிற்கிறது. ஆனால் காலங் காலமாய் நம் கலாச்சாரத்தின் ஆழமாய் வேரூன்றிப் போய்க் கிடக்கும் நன்னம்பிக்கைகள், ஒழுக்கம், பண்பாடு இவற்றின் மொத்த அடையாளமாய்த் திகழும் இறையுணர்வு மக்கள் சமூகத்தின் மெய்ப்பாடாகத் திகழ்ந்து அவர்களை வாழ்வித்துக் கொண்டிருக்கிறது.
குத்தனூரான் ராகவன் மந்தையில் புகுந்துள்ளது தனது கெரிச்சல் கெடாக் குட்டி என்பதை அறிந்த வரதனை…அப்படியெல்லாம் இல்லை என்று பெருசு உருப்படி 101, குட்டிங்க 11 என்று பொய் சொல்லி மறுக்கிறான். நேற்று 10 என்று சொன்ன வாய் இன்று 11 என்று பொய்யுரைக்கிறதே என்று வரதன் மறுதலிக்க, வேணும்னா அதுங்க ஆத்தா கிட்ட ஓட்டிப் பாரு , குட்டிய அண்ட விட்டதுன்னா  ஒத்துக்கிறேன் என்று ராகவன் வம்புக்கிழுக்க, பெரும்பாலும் குட்டி எந்த ஆத்தா கிட்டயும் ஒட்டிக்கும். ஆனா ஆத்தா ஆடு அம்மாம் கலுவுல ஆனாலும் வேத்துக் குட்டிய அண்ட விடாது என்ற உண்மை மேய்ச்சல் முடிந்தபோது திடீரென்று வெளிப்படுகிறது. தன் கெரிச்சல் குட்டியைக் கண்ட தாய் ஆடு ஓங்கிக் குரல் கொடுக்க, தாயைக் கண்டு ஓட்டமெடுத்து  வந்து ஒட்டிக் கொள்கிறது கெரிச்சல் குட்டி.. ராகவன் மறுப்பேதுமின்றி தன் இடம் சேர்ந்த குட்டியை விட்டு விட்டு வெளியேறுகிறான்.
ராகவா…இதுங்களுக்கு நம்மள மாரி பொய், புரட்டு தெரியாதுடா… என்று கிளம்பிப் போய்க் கொண்டிருப்பவனிடம் சொல்லி விட்டு குட்டியை அலேக்காகத் தூக்கிக் கொஞ்சுகிறான்.வரதன். அடீ…ராசாத்தி….பிரிஞ்சி ஒரு மாசமானாலும் ஒன் ஆத்தாவ தெரிஞ்சிப் போச்சாடீ  ஒனுக்கு? ன்னு அணைத்துக் கொள்கிறான். இதே வரதன் இடம் மாறிப் போய்விட்ட தன் வேறொரு மூன்று ஆடுகளை அவைகளுக்குப் பழக்கப்படுத்திய தன் குரல்  ஒலியினை எழுப்பி அடையாளம் கண்டு வரவழைத்து விடுகிறான். ஆடு மேய்ப்பவர்களிடையே இப்படியாக மந்தை ஆடுகள் இடம் விட்டு இன்னொன்றில்  கலந்து போவதும் இதைப் பயன்படுத்தி ஆடுகளைத் திருடுவதும், தங்களுடையதுதான் என்று வாதிடுவதும், அது பிரச்னையாவதும்,  பஞ்சாயத்து போவதும், பொதுச் சபையில் பேசப்பட்டு வெற்றி கொள்வதும், தங்கள் மந்தையை இனம் வாரியான எண்ணிக்கை குறையாமல், அடையாளம் மாறாமல் தக்க வைத்துக் கொள்வதும் அந்தப் பிரிவினரிடையேயான கௌரவமாகக் கருதப்படும் நடைமுறை படிக்கும் நம்மை உற்சாகம் கொள்ள வைக்கிறது.
ஒரு படைப்பினைப் படிப்பதன் நிமித்தம் புதிய விஷயங்கள் நம் அறிவுக்குச் செல்லுமானால், தகவல் தளம் விரிவடையும் சந்தோஷத்தில் படைப்பாளியை நாம் வாய்விட்டு, மனம் விட்டுப் பாராட்டுகிறோம். எந்த மெனக்கெடலும் இல்லாமல் புனைவில் ஒரு படைப்பை எழுதுவது என்பது படைப்பாளியின் எழுத்துத் திறனுக்கான அடையாளமாய் இருக்கும்தான். ஆனால், அதனை வலுமிக்கதாக ஆக்குவதற்கும், ஆழமான, அழுத்தமான இலக்கியப் படைப்பின்பாற்பட்ட தனது அக்கறையை, உழைப்பினை ஒரு படைப்பாளி வெகு சூட்சுமத்தோடு வெளிப்படுத்தும்போது, வெறும் புனைவு மட்டுமல்ல இலக்கியம்…இம்மாதிரியான அர்ப்பணிப்பும் கலந்து வெளிப்படுவதுதான் அதன் வெற்றி என்பதை நமக்குத் துல்லியமாய் உணர்த்துகிறது.  
மேற்கண்ட இருகதைகளிலும் ஆசிரியர் பயன்படுத்தும் வட்டார வழக்குகள் ரொம்பவும் கருத்தூன்றி எழுதப்பட்டிருப்பதாலும், முழுக்க முழுக்க அவர்களின் வாழ்வியல் மொழியிலேயே சொல்லப்பட்டிருப்பதாலும், அவை இத்தனை அக்கறையெடுத்து எழுதப்பட்டிருந்தாலும், படிப்பதற்கும் வரிகளைக் கடந்து செல்வதற்கும் ரொம்பவுமே சிரமப்படத்தான் வேண்டியிருக்கிறது. அதுவே இம்மாதிரியான படைப்பினைக் கொடுத்த படைப்பாளிக்கான வெற்றி என்றும் சொல்லலாம்.
அறிவியல் புனை கதைகள் எழுதுவதில் எப்போதுமே இந்தப் படைப்பாளிக்கு விருப்பம் அதிகம். அதில் ஒரு நாவலே எழுதிப் பரிசு பெற்றிருக்கிறார். பூமி நெருப்புக் கோளமாகும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து அவற்றைத் தடுப்பதற்கான முயற்சிகளை இன்னும் மேற்கொள்ள வேண்டிய அவசியங்களை வலியுறுத்தி, விவாதித்து அம்முயற்சிகளில் வெற்றி அடையவில்லையானால் அழிவைத்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற கருத்தை வலியுறுத்தி ”ஊழ்” என்ற தலைப்பிலான சிறுகதை ஒன்றையும் இத்தொகுதியில் அழகாகத் தந்திருக்கிறார்.
“சங்கமம் என்ற தலைப்பில் உறவுகளின் சங்கமம் திருமணம் போன்ற வைபவங்களின் போது பற்பல நன்மைகளுக்கு வழி வகுக்கின்றது என்பதை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட படைப்பு. கல்யாணத்தில் நடக்கிற ஒவ்வொரு சடங்குகளும், நிகழ்ச்சிகளும் வெறும் பெருமைக்காக நடைபெறுவதல்ல…உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ளுதலும், புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளுதலும், ஏற்கனவே உறவுகளுக்கிடையே இருந்த கோப தாபங்களை மறந்து ஒன்று சேர்தலும் ஆகிய பல நன்மைகளையும் உள்ளடக்கியது என்கிற கருத்தை வலியுறுத்தி நிற்கிறது.
காசு உள்ளவன் எல்லோருக்கும் ஒரே புத்தி இருக்குமா? ஏதேனும்  ஒரு சிலர் பணம் படைத்த  தங்கள்  கௌரவத்தினை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கும் தன்மை படைத்தவர்களாக இருப்பதில்லையா? அந்தத் தன்மை சின்னச் சின்ன விஷயங்களில் கூட  தீவிரமாய் முன்னிறுத்தப் படுவதில்லையா? அப்படியான ஒரு கனவான் செய்யும் பொது இடத்திலான ஒரு சில்லரை விஷயம் மூலம் இந்த சமூகத்தின் எளிய மக்களின் பாடுகள் முன் வைக்கப்பட்டு, எல்லோரும் கலந்ததுதான், எல்லாவிதமான வகைகளிலும் சிறு சிறு உழைப்பின் வழி பிழைப்பைக் கொண்டதுதான் இந்த உலகம் என்பதை வலியுறுத்திக் கூறும் படைப்பு இது. தேனாம்பேட்டை சிக்னலில் நடப்பதாகக் காட்சிப்படுத்தப்படும் இச்சிறுகதை  அந்த எளிய மக்களின் பாடுகள் என்பது அவர்களின் ரோசத்திற்கும், அவர்களுக்கென்று உள்ள ஒருவகைக் கௌரவத்தின்பாற்பட்டதுமாகும் என்பதைக் கடைசியாக வலியுறுத்தி முடிகிறது. பணம் படைத்தவனின் கௌரவத்தை விட, உழைத்துப் பிழைக்கும் எளிய மக்களின் கௌரவம் என்பது ரொம்பவும் மதிக்கத் தக்கது என்ற உள்ளடங்கிய கருத்து இச்சிறுகதையை உயர்த்திப் பிடிக்கிறது.
“பட்டாசுக் கூளங்கள்”- என்ற தலைப்பிலான இக்கதையில், முடிவில் அந்த இரண்டு சிறுவர்களும் செய்யும் செயலை என்னவோ மனசு ஏற்க மறுக்கிறது. இந்தக் காலத்துக்கு குழந்தைகள் புத்திசாலிகள்தான் என்பதை ஏற்றுக் கொண்டாலும், அதீதமான இந்தச் செயலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தாய் தந்தையரின் அறிவுரைக்கேற்றபடி தீபாவளி நாளன்று பட்டாசு வெடிப்பதற்குப் பதிலாக, காசைக் கரியாக்கும் அந்தச் செயலைத் தவிர்த்து, அந்தப் பணத்தை ஏழைப் பசங்களின் சாப்பாட்டுச் செலவுக்குப் பயன்படுத்தலாம் என்பதாய் பேரக் குழந்தைகளே சொல்வதைக் கேட்டு தாத்தா வாயடைத்துப் போகிறார். நல்ல பழக்கங்களை ஏற்படுத்துவது அவசியம்தான் எனினும், வருடத்திற்கொரு முறை வரும் ஒரு நாள் பண்டிகையான தீபாவளியன்று அந்தச் சின்னஞ் சிறிசுகள் பட்டாசு வெடிக்கத் தேவையில்லை என்கிற அளவுக்கு எந்தப் பெற்றோர்களும் பழக்கியிருப்பார்களா என்பதைச்  சற்றே ஜீரணிக்க முடியவில்லைதான். அப்டித்தான் தாத்தா…எங்களுக்குப் பட்டாசு வேண்டாம் என்று சொன்ன அந்தச் சிறிசுகள், பதிலாக தீபாவளியைச் சந்தோஷமாய் வெடி வெடித்து, பட்டாசு கொளுத்திக் கொண்டாடியாயிற்று என்பதற்கடையாளமாய்ப் பக்கத்து வீட்டு வாசலில் சிதறிக் கிடக்கும் வெடித்த பட்டாசுக் குப்பைகளை அள்ளிக் கொண்டு வந்து தங்கள் வீட்டு வாசலில் போடுவதாய் வரும் முடிவும் ஏற்றுக் கொள்ள முடியவில்லைதான்.  அப்படிச் செய்வதன் மூலமே அந்த ஒரு நாளில் பட்டாசு கொளுத்துவதுதான் மகிழ்ச்சி என்பதை அந்தப் பிள்ளைகள் சொல்லாமல் சொல்லுவதும், அந்த ஒரு சந்தோஷத்தை எந்தப் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு இல்லாமல் பண்ணி விட மாட்டார்கள் என்கிற யதார்த்தமும் நம்மை இந்தக் கதையின் செயற்கையான முடிவை மறுத்தொதுக்கச் சொல்கிறது. அதை பேரப் பிள்ளைகளின் தாத்தா இப்படிச் சொல்கிறார். இதுதான் உன் பிள்ளைகளோட அசலான மனசும்மா….. – குழந்தைப் பருவத்திலேயே படிப்பு என்கிற சுமையை மிக அதிகமாய்ச் சிறிசுகளின் முதுகில் ஏற்றியுள்ள நாம், அவைகளின் சந்தோஷங்களைத் தொலைத்து விட்டோம்….என்கிற கருத்தை அழுத்தமாய்ச் சொல்லும் இச்சிறுகதை பாராட்டத்தக்கது.
போண்டா மணி என்கிற உள்ளூர் ரவுடியிடம் அடங்கிக் கிடக்கும் நல்ல தன்மையைத் தூண்டி விடும் செயலை வலியுறுத்தும் கதை அங்குசம். ஒரு கிழவியிடம் இரக்கமில்லாமல் நடந்து கொண்டான் என்று டிரைவரை இழுத்துப் போட்டு அடித்தலும், பணம் வசூலித்து மோசடி செய்தார் என்று வி.ஏ.ஓ.வைப் புரட்டி எடுத்தலும் பொது விஷயம்தான் என்றாலும், நியாயத்தைக் கண்டித்துக்  கேட்பதில் வன்முறையைக் கைக்கொள்வது என்பது எப்படிச் சரியாகும்? அது எப்படிப் போராளி என்று அடையாளப்படுத்தப்படும்?. எடுத்த எடுப்பிலேயே அடிதடியை மேற்கொள்தலும், கையில் ஆயுதங்களை எடுத்தலும் பயங்கரவாதிகளாய்த்தான் சித்தரிக்கும். போராளிகள் நியாயங்களுக்காய்ப் போராடுகையில் அப்படியான வன்முறையைக் எடுத்த எடுப்பில் கைக்கொள்வதில்லை என்பதே சரியான கருத்தாக இருக்க முடியும். ஆனாலும் பெண்ணைப் பொது வெளியில் கேவலப்படுத்துதல் என்கிற அநியாயத்தைத் தடுக்க  தைரியமாய் முன்னிற்கும் கருணாவின் நடவடிக்கை பாராட்டத்தக்கது என்று கொள்ளலாம். அந்த வகையில் அங்குசம் என்ற இச்சிறுகதை பாராட்டத்தக்கதுதான்.
எந்தவொரு பிரச்னையையும் தீர்க்க நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஜாதிப் பிரச்னையை லேசாகத் தூண்டி விட்டால் போதும் அது தானாகவே பற்றிக் கொண்டு வெவ்வேறு வடிவங்களில் கிளம்பி நியாயத்தின் பக்கமாகவோ அல்லது அநியாயத்தின் பக்கமாகவோ பரவித் தன் திசையைத் தானே தேடிக் கொள்ளும் என்கிற சூட்சுமத்தைக் கதையின் முடிவாகக் கொண்டு வளர்ந்து நிற்கிறது இந்த “வக்காலத்து” என்கிற சிறுகதை.  “கடைசியாக வக்காலத்தாக நிற்கும் விஷயமே அதுதான் என்பதை உணர முடிகிறது. நியாயத்தை அநியாயக்காரர்களிடமிருந்து பிடுங்கி ஜெயிக்க வேண்டுமானால் அவர்களை எதில் சாய்த்தால் வெற்றி கிட்டும் என்பதைப் படு நுணுக்கமாகச் சிந்தித்த படைப்பு.
அரசியல்வாதியின் அராஜகங்கள் போலீசுக்குப் போனாலும் ஆகாது, ஆட்சியாளர்களிடம் போய் நின்றாலும் எடுபடாது, பயந்த ஜனங்கள் மத்தியில் அது விலையற்றுப் போகும்.... இப்படியானா சூழ்நிலையில் ஒரு சராசரி மனிதன் எப்படித்தான் தன்பாலான நியாயத்துக்காகப் போராடி ஜெயிப்பது? என்று சோர்வடைந்து நிற்கையில், ஊடகங்கள் இம்மாதிரி விஷயங்களில் ஏதோவொரு வழியில் உதவியாய்த்தான் இருக்கின்றன சமயங்களில் என்பதை எடுத்தியம்பும் இச்சிறுகதை இன்றைய அரசியல் உலகின் அராஜகங்களை வெட்ட வெளிச்சமாக்கி வெற்றி கொள்கிறது. அதனால்தான் இக்கதை கல்கி சிறுகதைப்போட்டியில் தேர்வு பெற்றிருக்கிறது என்று பெருமிதம் கொள்ளலாம். 
அதிகாரிகள் அதிகாரம் படைத்தவர்கள். காரணம் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட  அதிகாரிகள் அவர்கள். விதிமுறைப்படி எல்லாவற்றையும் செய்ய முயலுபவர்கள். மக்களின் குறைகளைத் தீர்க்கத்தான் நாம் என்று உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்க சீராகத் திட்டமிடுபவர்கள். ஆனால் அந்தத் திட்டங்களை நிறைவேற்ற பொது மக்களின் ஒத்துழைப்பும் வேண்டுமல்லவா? தண்ணீர் வேண்டும்…தண்ணீர் வேண்டும் என்று கோஷமிட்டு சாலை மறியலில் அமரும் மக்கள் கூட்டம் அவர்கள் அறிய சில சமூக முரணாளர்களால் நடத்தப்படும் அராஜகத்தையும் எதிர்த்து நிற்கும் தைரியம் கொண்டவர்களாய் இருக்க வேண்டுமில்லையா? பெரிய இடத்து விஷயம்…எதற்கு பொல்லாப்பு? என்று ஒதுங்குபவர்களாய் இருந்தால்?
 நகராட்சியின் குடிநீர் குழாய் இணைப்பில் மோட்டார் பொருத்தி உறிஞ்சிடும் சுயநலமிக்க அரசியல்வாதிகளுக்கு பொது நலத்தை உணர்த்தி நன்மை உண்டாக்கிட எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது? அதற்குத் துணை போகும் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனங்களை எப்படித் தடை செய்வது? பொதுவான பயன்பாட்டிற்குத் தயாரிக்கும் கருவிகளை அவர்கள் திருட்டுத் தனத்திற்குப் பயன்படுத்தினால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? என்று வியாபார நிறுவனங்கள் தன் பகுதி நியாயம் பேசி நிற்பதில்லையா? அப்படியானால் என்னதான் செய்வது? இந்த ஜனநாயக நாட்டில் நடக்கும் தவறுகளுக்குத் தீர்வுதான் என்ன? திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று காலம் பூராவும் சொல்லிக்கொண்டே திரிய வேண்டியதுதானா? அதுதான் இன்றுவரை நடந்து கொண்டிருக்கிறது. இல்லையென்றால் நன்மை செய்யத் தீவிரக் கடமையாற்றும் சப்-கலெக்டருக்கு மாறுதல் வருமா? வாய் பொத்தி மௌனியாய் எதையும் கண்டு கொள்ளாமல் நாளை ஓய்வு பெறப்போகும் ஒருவரை அங்கு கொண்டுவந்து பணியமர்த்த முடியுமா? அதுதான் இந்தக் கதையில் நடக்கிறது. தண்ணீர் விட்டோம்….என்ற பொருத்தமான தலைப்பிலான இக்கதை தண்ணீர் விட்டோம்… வளர்த்தோம்….சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம்…கருகத் திருவுளமோ….என்று நம்மை வேதனை கொள்ள வைக்கிறது. இந்த தேசத்தின் மீது பக்தியுள்ள ஒவ்வொரு சாமான்யனும் இந்த நாட்டில் நடக்கும் எல்லா அநீதிகளுக்காகவும் அமைதியாகக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறான்…..வாழ்க ஜனநாயகம்…..!!
ஏழைக் குடும்பத்தில், பற்றாக் குறையுள்ள இடங்களில் கோபம், தாபம், குரோதம், எரிச்சல், அடி…தடி….என்று எல்லாமும் இருக்கத்தான் செய்யும்…ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலே அங்கே விஞ்சி நிற்பது அன்பும், பாசமும் என்பதை அழகாய் வடித்துக் காட்டும் படைப்பு இந்த மீன் குழம்பு சிறுகதை. குடித்து விட்டு வந்து அடித்து உதைக்கும் தாயார்க் கிழவி படும் கொடுமையைப் பார்த்துவிட்டுத் தாங்காமல்  அவளை அழைத்துக் கொண்டு போய் வெளியூரில் உறவினர் வீட்டில் வேலைக்குச் சேர்த்து,  வசதியான சாப்பாட்டுக்கும் சம்பளத்துக்கும் ஏற்பாடு செய்து விட்டு வரும் எதிர்வீட்டுப் பெண்மணியும், அவள் கணவனும் அவர்கள் கண்காண அந்தக் கிழவி அங்கிருந்து திரும்பித் தன் வீட்டுக்கே மீண்டும் வந்து விடுவதையும், இப்டிப் புத்தி கெட்டுப் போயி போயிட்டனே என்று அடித்து உதைக்கும் மகனிடமும், மருமகளிடமும் வந்து நின்று அழுவதும்…..மனதை உருக வைக்கும் இடமாகி நமக்கு ஒரு உண்மையை உணர்த்துகிறது.  
அன்னைக்கு சொத்தை எங்க மூணு பேருக்கும் சரி சமமாப் பிரிக்கலைன்னு கோர்ட்டுக்குப் போனனே….நான் தாசில்தாரா வசதி வாய்ப்போட இருக்கக் கண்டுதானே ரெண்டு அண்ணன்மார்கள்டேருந்து சித்த கொறச்சலா எங்கம்மா எனக்குப் பிரிச்சாங்க…நோஞ்சான் பிள்ளைகளுக்கு அக்கறையா சோத்த ஊட்டி விடுறது ஒரு தாயோட இயல்புதானே..இது புரியாம நடந்துக்கிட்டேன் நானு…இப்போ இவுங்க வாழ்க்கைங்கிற பரிமாணத்தோட சரியான கோணத்தை எனக்குக் காண்பிச்சிட்டாங்கதானே….எந்தக் குரோதமும் நிரந்தரம் இல்லே…பாசத்துக்கு முன்னாலேன்னு அடியோ…மிதியோ….என்புள்ளட்ட இருக்கிறதுதான் சொர்க்கம்னு ஓடியாந்துட்டாளே…இந்தக் கிழவி….இந்தக் கூட்டைப் பிரிக்க இருந்தமே…!!
வேலு என்னவோ சொல்ல ….கிழவியும் மருமகளும் குபீரென்று சிரிக்க…சந்தோஷம் பொங்கி வழிகிறது அந்தக் குடிசை வீட்டில். மீன் குழம்பின் ருசி அந்த வீட்டின் மகிழ்ச்சிக்கு ஆதாரமாய் நிற்கிறது. உப்போ…உறைப்போ…எல்லாமும் அந்த எளிய குடிசைகளில் எப்போதும் சற்றுத் தூக்கலாய்த்தான் இருக்கின்றன…உணர்ந்த இவர்கள்…பகையை மறந்து அண்ணன் வீட்டிற்குச் செல்லவும், அத்தையை இங்கு அழைத்து வரவும் முடிவு செய்து கொள்கிறார்கள். வறுமை இருக்கும் இடத்தில்தான் பாசமும், நேசமும்,  விஞ்சி நிற்கும் என்கின்ற யதார்த்தத்தை அழுத்தமாய் உணர்த்தும் அற்புதப் படைப்பு இந்த மீன் குழம்பு.
இராஜ இராஜ சோழன் கல்லறை இருக்கும் இடம் தேடி இரு நண்பர்கள் புறப்படுகிறார்கள். கும்பகோணம் போய் உடையாளூரில் இறங்கி விசாரித்துக் கொண்டே நடக்க ஒரு  நடுத்தர வயதுக்காரர் அந்த இடத்தைக் காண்பிக்கிறார். ஒரு ஓலைக் குடிசை. உள்ளே சிவலிங்கம் ஒன்று பாதி புதைந்த நிலையில் கழி ஒன்று நடப்பட்டு அதில் போர்டு ஒன்று தொங்குகிறது. அதில் இராஜ இராஜ சோழனின் உருவம் பெயின்டால் வரையப்பட்டு கல்லறை என்று எழுதப்பட்டிருக்கிறது. கீழே விளக்கேற்ற ஒரு மாடம். இவர்களுக்கு நம்பவே முடியவில்லை என்றும் மூத்த அரசியல் தலைவர் ஒருவர் எழுப்பியுள்ள சந்தேகம் பற்றியும் பேச, இது பற்றி ஆராய்ச்சி பண்ற விஷயத்தை தயவுசெய்து விட்ருங்க…என்று கூறும் அந்தப் பெரியவர் அதற்கு ஒரு கதை சொல்கிறார். இராஜ இராஜன் சபையில் ராஜகுருவாயிருந்த கருவூர்த்தேவர் இட்ட சாபம்தான் அது என்றும், பெரியகோயிலுக்கு வந்த இரண்டு அரசியல்தலைவர்கள் இறந்து போன தகவலையும் அவர் சொல்ல…இதை ஆராய்ச்சி பண்ண வர்றவங்க அல்பாயுசுல போயிடுறாங்க…என்று எச்சரிக்கிறார். ஆனாலும் உடையாளூரில் கண்டது பள்ளிப்படைக் கோயில் அல்ல என்றே நினைக்கிறார்கள்.
நண்பர்களுக்கிடையேயான இந்த உரையாடல் அடுத்தடுத்து நடக்கும் ஓரிரு சம்பவங்களில் அவர்களுக்கு மேலும் பயமேற்படுத்துகிறது. ஆனாலும் அவர்களுக்கிடையே வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இருவரில் ஒருவன் இராஜ இராஜ சோழனின் ஆட்சிக் காலம் பொற்காலம் என்று சும்மாவா சொல்கிறார்கள் என்க, உழைப்பாளிகளின் உழைப்பைச் சுரண்டி வாழ்ந்த ஒருத்தனுடைய ஆட்சிக் காலத்தைப் பொற்காலம் என்று எப்படிச் சொல்லலாம் என்று முற்போக்குச் சிந்தனையுள்ள இன்னொரு நண்பன் சொல்ல, வாதம் தொடர்ந்து அவர்களுக்கிடையே சண்டையாய்ப் புரண்டு போகிறது. கண்ணை மூடிக்கிட்டுத் தூக்கிப் பிடிக்கிறது சரியில்லை, எது நியாயம் அநியாயம்னு தீர்மானிக்கிறது மனசாட்சி இல்லையே…சாதிதானே…என்று தொடர்கிறது வாதம். நீயும்தான் உழைக்கும் வர்க்கத்துக்காகப் பேசல…அதுக்குள்ள அடங்கியிருக்கும் உன் சாதிக்காகப் பேசறே..என்று இன்னொருவன் வாதிட….ஆயிரம் வருஷங்களுக்கு முன்னால் வாழ்ந்த அரசனால் கூட இன்றைய நம்மிடையே சாதிய உணர்வுகளை, கலவரங்களைத் தூண்ட முடிகிறதே என்பதுதான் இன்றைய நம் கவலை….என்ற கருத்தோடு முடிகிறது இக்கதை.  இக்கதையும், மேலே சொல்லப்பட்ட அறிவியல் புனைகதை ஆகிய இரண்டு திண்ணை.காம் இணைய இதழ்களில் வந்த முக்கியமான படைப்புக்களாகும்.

உறவுப்படிகளுக்குள் என்றும் விரிசல்கள் கூடாது என்பதை வலியுறுத்தும் கதை இது. உன் தங்கைக்குக்  கொடுத்துவிடு என்று வாய்வழி சொல்லிவிட்டு இறந்து போன தந்தையின் வாக்கைக் காப்பாற்ற மறுக்கிறான் அண்ணன் குமார். எழுபது சென்ட் நிலம் போச்சே என்று  தங்கை கஸ்தூரிக்கும் அவனுக்குமிடையில் பிரிவு வந்து விடுகிறது. முருகனின் அத்தை இறந்து போக அந்த சாவுக்குக் கிளம்புகிறார்கள். போன இடத்தில் அண்ணன் குமார் வீட்டின் நேர் எதிர்புறம் வண்டியை நிறுத்துகிறான் முருகன். எதுக்கு இங்க நிறுத்தித் தொலையுற, அவுக மூஞ்சில கூட முழிக்க விரும்பல என்று கஸ்தூரி சொல்ல, இதுதாண்டி கரெக்ட்….சாவுக்கு வந்து அண்ணன்காரன் வீட்டண்ட வண்டியை நிறுத்தி இறங்கி, திரும்பிக் கூடப் பார்க்காம போயிட்டாகளே  என்று அப்பத்தான் ஊர் பேசும் என்று சொல்ல, சாவுச் சோலியை முடித்துவிட்டு மாலை வீடு திரும்புகையில் வந்து வண்டியைக் கிளப்புகிறான் முருகன். வண்டி ஸ்டார்ட் ஆக மாட்டேன் என்கிறது.  இங்க இப்டிப் பேச்சில்லாத ஆள் வீட்டு முன்னாடி நிப்பாட்டிட்டு மானத்தை வாங்குறானே என் புருஷன் என்று நான் தெருக்கோடியில் நிற்கிறேன் நீ வந்து சேரு என்று கிளம்புகிறாள் கஸ்தூரி. அந்நேரம் ஒரு கை முருகனை வந்து பற்றுகிறது. அண்ணன்காரன் குமாரு, தன் செய்கைக்காக மன்னிப்புக் கோருகிறான் இருவரிடமும். எழுபது சென்ட் நிலத்தை எழுதித் தந்துவிடுவதாக வாக்களிக்கிறான். இதற்குள் சாவு வீட்டில் குளிக்கையில் பையை விட்டு வந்து விட்டதாக எடுக்க ஓடுகிறாள் கஸ்தூரி. பங்காளிகள் இருக்கிற திமிர்ல உன்னை அடிச்சதுக்கு மன்னித்துக் கொள் என்று குமார் மன்னிப்புக் கோரி, ஸ்பார்க் பிளக்கைப் பிடுங்கி விட்டு, வண்டி ஸ்டார்ட் ஆகலன்னு நீ தங்கச்சிய நம்ப வச்சி லேட் பண்ணினியே…அத நான் கவனிச்சிட்டேன் மச்சான்…உன் நல்ல மனசு எனக்கு இப்பத்தான் புரியுதுன்னு தன் தவறுக்கு வருந்துகிறான் குமார்.

உறவுகளில் தொடர்ந்து பகையை மனதில் கொள்ளாமல் யாரேனும் ஒரு படி விட்டுக் கொடுத்தால், எதிராளி இரண்டு படிகள் இறங்கி வர வாய்ப்பு ஏற்படும்…அதனால் உறவுகள் மீண்டும் துளிர்க்கும், பலப்படும் என்கிற கருத்தை வலியுறுத்தும் ஜனரஞ்சகமான படைப்பான இச்சிறுகதை ஸ்வாரஸ்யமான வாசிப்பு அனுபவத்தைத் தந்து உயர்ந்து நிற்கிறது.
      இத்தொகுப்பின் கடைசிக் கதை “ஊரு ஒப்பு”.  ஊரோடு ஒக்க…நாட்டோடு நடுவே… என்று பெரியவர்களால் சொல்லி வைக்கப்பட்டிருக்கிறது. கிராம சபை நடைமுறைகளை எல்லாம் கட்டைப் பஞ்சாயத்துகள், மனித சுதந்திரங்கள் பறி போகின்றன என்று முத்திரை குத்தி ஒதுக்கி வைத்து விட்டோம். ஆனாலும் இன்னும் நியாயத்துக்குக் கட்டுப்பட்டு, இம்மியும் வழுவாமல் நீதியோடு நடத்தப்பெறும் கிராம சபைகள் நம் கிராமங்களில் சில இருக்கத்தான் செய்கின்றன என்கின்ற விழுமியங்கள் அடங்கிய நியாயத்தை வலியுறுத்தும் இச்சிறுகதை பாராட்டத்தக்கது. இப்டி ஆளாளுக்குச் சட்டத்தைக் கையில் எடுத்துக்கிறதுன்னா அப்புறம் கோர்ட், போலீஸ்லாம் எதுக்கு என்கிற கேள்வி கேட்கப்படும்போது ஊழல் பண்ணிப் பொழைக்கிறதுக்குத்தான்  என்ற சாட்டையடியோடு இக்கதை முடிவுகிறது.
      இத்தொகுதியில் உள்ள அனைத்துக் கதைகளுமே சமூகப் பார்வையோடு, காத்திரமான படைப்புக்களாகத் தலை சிறந்து விளங்குகின்றன. துணிச்சல் மிக்க சமூகப் போராளி, காலடியில் நிகழ்கிற சமகாலக் கொடுமைகளை எதிர்த்துப் போராடுதல் என்கிற சத்திய  ஆவேசத்தோடு இப்படைப்புக்கள் இத்தொகுதி முழுவதும் உயிர்ப்புடன் சுடர் விடுகின்றன என்ற அமரர் மேலாண்மை பொன்னுச்சாமியின் உண்மையான கருத்துக்கள் சாலப் பொருத்தமாகி, இவையே பல பரிசுகளுக்குரிய புத்தகமாக இச்சிறுகதைத் தொகுதியை உச்சத்தில் கொண்டு நிறுத்துகிறது என்று மனப்பூர்வமாக வாழ்த்தி மகிழ்கிறேன்.


28 ஜனவரி 2017

“கை கொடுக்கும் கை…!”

 

27.11.2016 y தினமணி கதிரில் வெளிவந்த சிறுகதை

 

15170883_10205913015063115_3425716333671627912_n

நாயுடு காம்பவுன்டைக்“ கடக்கையில் தற்செயலாய்ப் பார்வை போனது. மனுஷன் இருந்தால் பிடித்துக் கொள்வார். நிச்சயம் தப்பிக்க முடியாது.

ஏய்….! நாகு….அம்பி வந்திர்க்கு பாரு….என்று உள் நோக்கிக் குரல் கொடுப்பார். கையில் டீயோடு ஓடிவரும் அந்தம்மா. அந்த அளவிலான மதிப்பிற்கு, தான் என்ன பண்ணினோம் என்று தோன்றி இவனைக் கூச வைக்கும். இதைத் தவிர்ப்பதற்காகவே அந்த வழியைத் தவிர்ப்பான்.

ரெண்டு மூணு மாதங்கள்தான் இருக்கும் இப்படி ஆரம்பித்து. உட்காரும்போதெல்லாம் டீ கொடுத்து உபசரித்து….அது தனக்காக இல்லையோ…அம்மாவுக்காக…அப்பாவுக்காக…சாமி அண்ணாவுக்காக என்று கூடச் சொல்லலாம்….தான் சின்னப் பையன் என்பதாகத்தான் நாயுடு நினைப்பு இருக்கும். அம்பி…அம்பி….என்று அவர் வாய்விட்டு அழைப்பதில்தான் பிரியம் சொட்டும்….

அம்மா நல்லாயிருக்காகளா…!...அய்யா? சாமி வந்திருச்சா……? கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகும் நாயுடம்மா. பிறர் மீது அன்பு செலுத்துவதற்கு கொள்ளை கொள்ளையாய் மூட்டை கட்டி வைத்திருப்பார்களோ என்று தோன்றும்.

மில் மேம்பாலத்தில் ஏதோ விபத்து என்று இரு பக்கமும் நெடுந்தொலைவிற்கு வாகனங்கள் நின்று போயிருந்தன. அதுதான் அவனது வழக்கமான வழி. இரண்டாவது கேட்டின் எதிர்ப்புறச் சாலையில் நுழைந்து, சற்று தூரத்திலான இடது சந்தில் வளைந்தால் தங்கும் விடுதி.

ஆரம்பத்தில், சந்தில் திரிந்த ரெண்டு மூன்று நாய்கள் கூடி நின்று குலைக்க ஆரம்பித்தன. கொஞ்ச நாளைக்குப் பெரிய தலைவலியாய்த்தான் இருந்தது. தினமும் உள்ளுக்கும் வெளிக்குமாகப் போய் வந்தும் கூட இன்னுமா தன்னை அடையாளம் தெரியவில்லை. என்று இவைகளிடமிருந்து மீள்வது? கடித்து வைத்தால்?

தாங்க முடியாமல்தான் வார்டனிடம் சொன்னான். அப்டியா? என்று கேட்டுவிட்டு இவன் கிளம்பும்போது கூடவே வந்தார். வழக்கம்போல் அவை குரைக்க ஆரம்பிக்க…யேய்…யேய்….போ…போ…என்றவாறே ஆளுக்கொன்றாக பிஸ்கட் துண்டுகளை ஒடித்து ஒடித்து வீசியெறிந்தார். அன்றிலிருந்து இவனும் அதை வழக்கமாய்க் கொண்டான். சில நாட்கள் போடுவதில்லையாயினும் வாலை வாலைக் குழைத்துக் கொண்டு என்னமாய் பம்முகின்றன? பிஸ்கட் போடாமல் இருக்க மனசு வருகிறதா? என்ன ஒரு தீர்க்கமான பார்வை, மனுஷாள் பார்ப்பதுபோல்? உலகமே அன்பு வலையினால் பின்னப்பட்டிருக்கிறது என்பது எத்தனை உண்மை?

பொன்னகரம் மெயின்ரோட்டில் புகுந்து கிராஸ் ரோடு தாண்டி படித்துறைப் பக்கமாய் வந்து வளைந்தான். வளைந்த பின்னால்தான் மனதுக்குள் சுருக்கென்றது. போச்சுறா…மாட்டிக்கிட்டமா?

ஏய்…அம்பி…! எங்கப்பா ஓடுற….? – குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தால் ஆளைக் காணோம். அடுத்த நிமிடம் வாசலில் எட்டிப் பார்ப்பது தெரிந்தது. வீட்டுக்குள்ளிருந்து கொடுத்த சப்தம் வீதியில் கலகலக்கிறது. அத்தனை கனமான சாரீரம்…சரீரமும் அப்படித்தான். பாட்டுக் கேட்கும் பரம ரசிகன். அதிலும் பழைய பாடல்கள் என்றால் தித்திக்கும் தேன்.

பொன்னே புது மலரே….பொங்கி வரும் காவிரியே….

மின்னும் தாமைரையே…வெண்மதியே….!

ரசனையாய் வரிகளை முனகிக் கொண்டு கைகளை நீட்டிச் செய்யும் ஆக் ஷன், பழம் பெரும் நடிகர்களை நினைவு படுத்தும் நமக்கு. ஐம்பதில் வெளிவந்த நல்லதங்காள் படத்தின் பாட்டு அது என்று இவனுக்குச் சொன்னார். பலருக்கும் நினைவில் இல்லாத, யாராலும் ஞாபகத்தில் நிறுத்த முடியாத வரிகளை மறக்காது வைத்திருந்து பாடுவது அதிசயமாய்த் தோன்றும்….

நல்ல கருத்த உருட்டுக் கல்போல் பரந்த தேகம். அதற்கேற்ற விரிந்த மனசு. அந்த அம்மாளுக்கும்தான். எப்படித்தான் ஒன்று சேர்ந்தார்கள் இத்தனை ஒற்றுமையாய்? இல்லையென்றால் அங்கு வாடகைக்கு வீடு கிடைக்குமா?

அம்மா சொன்ன கதையைக் கேட்டுக் கண்ணீர் சிந்தி அன்று மாலையே சட்டி பானையை எடுத்துக் கொண்டு இங்கு வந்து சேருங்கள் என்று சொல்லும் மனசுதான் வருமா? ஆனாலும் அம்மாவின் உருக்கம், மற்றவரையும் கரையத்தான் செய்து விடுகிறது. சொல்லும்போதே கண்களில் நீர் முட்டும் அம்மாவுக்கு. அதிலேயே எதிராளி பாதி விழுந்து விடுவான். மீதிக்குக் கேட்க வேண்டுமா? அந்தக் கணமே காரியம் பலிதம் என்று எண்ணிக் கொள்ள வேண்டியதுதான்.

நீங்க ஏன் கவலைப்படுறீங்க மாமி…? நாங்கள்லாம் எதுக்கு இருக்கோம்… பார்த்துக்கிட மாட்டமா? அப்டி என்ன பெரிஸ்ஸா ஆர்ப்பாட்டம் பண்ணிடப் போறாரு…? நான் பேசுறேம் பாருங்க அவர்ட்ட….அப்புறம் கேளுங்க….சொன்ன பேச்சுக் கேட்டு அடங்கியிருக்காரா இல்லையான்னு…பிறகு சொல்வீங்க….? – எந்த மூன்றாமவர்கள் இப்படி தைரியம் கொடுப்பார்கள்? சுற்றமும், நட்பும் என்கிறோமே…அது மட்டும் ஒருவனுக்கு வசமாய் அமைந்து விட்டால் பிறகு வாழ்க்கையில் அவன்தான் ராஜா….அம்மாவின் கருணை பொங்கும் மனசும், இதமான பேச்சும், பணிவும் அன்பும் மிளிரும் நடப்பியல்புகளும் யாரைத்தான் ஒதுக்கும்?

கேசுத் தம்பி…..நல்லாயிருக்கீகளா…? – கேட்டவாறே மாணிக்கமும் வந்து நிற்க…நீ போய் வேலையைப் பார்றா….காலைலயே வண்டி என்னாச்சுன்னு வந்து கேட்குது ஆளுக….பேச்சுக்கு நிக்காத….என்று சொல்லிக் கொண்டே நாயுடு வர, வர்றன் தம்பி…என்றவாறே அப்பாவை முறைக்காத குறையாய் அகன்றான் மாணிக்கம்.

வாங்க…உக்கார்ந்து பேசுவோம்….என்ன ஆளையே பார்க்க முடில….? அப்டியே வந்து அப்டியே போயிடுறீங்களாக்கும்…என்று மில் ரோடுப் பக்கம் கையைக் காண்பித்தார்.

இல்ல நாயுடு….ஆபீஸ்ல வேல ஜாஸ்தி….அந்த வழி கொஞ்சம் சுருக்கு…அதான்….

இருக்கட்டும்…எங்களயும் கொஞ்சம் ஞாபகத்துல வச்சிக்கிடுங்க…என்றவாறே அருகிலுள்ள இரும்பு முக்காலியை இழுத்துப் போட்டார்.

அமர்ந்தமேனிக்கே அந்தப் பகுதியை அப்படியே கொஞ்சம் நோட்டம் விட்டான் கேசவன். சற்றுத் தள்ளியிருக்கும் மாரியம்மன் கோயிலில் வருடந்தோறும் நடக்கும் திருவிழாவிற்கு அந்தத் தெருவே அல்லோல கல்லோலப் படும். அங்கிருந்து நூறடி தள்ளித்தான் திரை கட்டுவார்கள். பொழுது இருட்டும் ஆறரை மணி போல் ஆரம்பித்தால் விடிகாலை நாலரை, அஞ்சுக்குத்தான் முடியும். குறைந்தது மூன்று சினிமாக்கள்….…காம்பவுன்டுக்கு வெளியே நாற்காலியை எடுத்துப் போட்டுக் கொண்டு விடிய விடியப் படம் பார்ப்பது அத்தனை ஷோக்கு. கடைசியாகக் கர்ணன் படமும், படகோட்டியும் போன வருஷம் பார்த்தது. மூன்றாவது சினிமாவுக்கு நேரமில்லாமல் போயிற்று. போதும்…இதுவே…என்ற திருப்தியோடு சனம் எழுந்து கலைந்தது. மறுநாள் தெருவே வெறிச்சோடிக் கிடந்தது. வீட்டுக்குள் சுருண்டு விழுந்த ஆட்கள் ஒன்றுகூட எழுந்திரிக்கவில்லை. சாயந்தரம் போல்தான் அங்கங்கே தலைகள் தெரிந்தன.

இந்த வருடம் அந்தச் சந்தோசம் இல்லாமல் போகும் என்று இவன் கனவிலும் நினைக்கவில்லை.

எதுக்கு அம்பி…உங்கள விட்டிட்டு மெட்ராசுக்குப் போறாக….? உங்க அண்ணாச்சி அப்பப்ப வந்திட்டுப் போக வேண்டிதான…? ரெண்டு தங்கச்சிகளும் இங்கதான வேல பார்க்குது…அந்த வருமானமும் இல்லாமப் போகும்தான…? சின்ன வேலையானாலும் அங்க மெட்ராசுக்குப் போயி…வேலை தேடி…..செரமம்தான…? ஏன் நீங்க சொல்லலியா…?

சொன்னேன் நாயுடு…..அவுக என்னவோ பெரியவன்ட்டத்தான் இருக்கணும்ங்கிற ஒரே எண்ணத்துல இருக்காங்க….மூத்த பிள்ளைட்டத்தானே பெத்தவங்களுக்கு நோங்குது… இவனத் தனியா விட்டிட்டுப் போறமேன்னு நினைக்கல….என்னை என்ன பண்ணச் சொல்றீங்க…? மூத்ததுன்னா ஒரு கரிசனதான்….

அதுக்கில்லய்யா…நீங்க என்னவோ அடிக்கடி கோபப்படுறதாவும், சண்டை போடுறதாவும் சொல்லிச்சு அம்மா…..நாகுட்டச் சொல்லி மாமிதான் அழுதிட்டிருந்தாங்க… அப்டி என்னா சொன்னீக….? தாயார அழ வைக்கலாமா சாமீ….?

எங்கம்மா தொட்டதுக்கெல்லாம் அழத்தான் செய்வாங்க…நாயுடு….நானும் கோபப்பட்டிருப்பேன்தான். இல்லைன்னு மறுக்கல….அதுக்காக அவுகளப் பிடிக்காமப் போயிருச்சின்னு நெனச்சாங்கன்னா…..எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணுமாம்…அதுக்காகத்தான் மறைமுகமா நா இப்டியெல்லாம் கத்துறேனாம்…சண்டை பிடிக்கிறேனாம்…வெறுத்துப் பேசுறேனாம்…

அப்டீன்னா அதத்தான செய்யணும்…ஊரை விட்டுப் போனா….?

அது ஏன்னு நீங்க அவுங்ககிட்டத்தான் கேட்கணும்….அப்பாவை எதிர்த்து என்னால எதுவும் கேட்க முடியாது…நாங்க சின்னப்புள்ளைலேர்ந்து அவுங்க நேரா நின்னு பேசினதே கிடையாது…தங்கச்சிகளுக்குக் கல்யாணம் முடிச்சித்தான் நான் பண்ணுவேன்னு எத்தினியோ வாட்டி சொல்லியிருக்கேன்…அப்டியும் இப்டி நினைச்சாங்கன்னா…? போகட்டும்னு விட்டிட்டேன்…

வீட்டுச் சாமான்கள் அத்தனையையும் பேக் பண்ணி லாரியில் ஏற்றி சென்னைக்குக் கொண்டு சேர்த்தது இவன்தான். சின்னக் குழந்தைபோல் நானும் வர்றேன் அம்பி என்று கிளம்பி விட்டார் நாயுடு.

பத்துப் பன்னெண்டு மணி நேரம் ஆகும்..நாயுடு…தாங்குவீங்களா? உட்கார்ந்தே வரணுமே….வயசான காலத்துல எதுக்கு ரிஸ்க்கு? லாரிப் பயணம் தேவையா?

என்னா நீங்க நம்மள அப்டி நெனச்சுப்புட்டீங்க…அதல்லாம் வருவேன்…அங்க உங்க அண்ணாச்சி எப்டி வீடு பார்த்திருக்காரு…உங்க அப்பாம்மாவுக்கு சவுரியமா இருக்குதான்னு நான் பார்க்க வேணாமா? வாடகைக்கு இருந்தவுகதானன்னு விட்டிட முடியுமா? நாம அப்டியா இத்தன நாள் இருந்தோம்? – கேட்டுவிட்டு லாரியில் தொற்றிக் கொண்டதும் அங்கு வந்து…சாமீ…நானும் வந்திட்டேன்….என்று ஒங்கிக் குரல் கொடுத்தவாறே வீட்டுக்குள் நுழைந்ததும், அவரும் அப்பாவும் அருகருகில் ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடியதும் மறக்கக் கூடிய காட்சிகளா?

ராத்திரி வந்ததும்….நான் அப்டிப் படுக்கையப் போடுறேன்…என்று நாயுடு திண்ணைக்கு ஓட…அப்பா அதிர்ந்து போய், என்ன நீங்க? நீங்க நம்ப குடும்பத்துல ஒருத்தராக்கும்னு நான் நெனச்சிண்டிருக்கேன்…வாசல்ல படுக்கறேன்ங்கிறீங்.க…அதெல்லாம் முடியாது…இங்க எங்க கூடத்தான் படுக்கணும்…என்று சொல்லி அருகருகே படுத்துக் கொள்ள…அன்று நாயுடு விட்ட ஜெட் வேகக் குறட்டைச் சத்தத்தில் கூடத்தில் படுத்த ஒருவரும் தூங்கவில்லை என்பது தனிக்கதை. அவர் ஊர் போன பிறகு தங்கைமார்கள் சொல்லிச் சொல்லிச் சிரிக்க…அப்பாவும்..பொறுக்க மாட்டாமல்… …அன்னைக்கு ராத்திரி நானும் பொட்டுக் கூடத் தூங்கலதான்….என்றார்.

கிளம்பும்போதுதான் நாயுடு அப்பா கையைப் பிடித்துக் கொண்டு கேட்டார்.

சாமி வந்திடுவாருல்ல…….? – எத்தனை முக்கியமான கேள்வி.

அப்பாவின் கண்கள் கலங்கி வார்த்தைகள் வர மறுத்தன. “உங்கள மாதிரிப் பிரியம் உள்ளவா இருக்கச்சே…அவன் எங்க போயிடப் போறான்…வந்துருவான்…” என்றார்.

வரட்டும் சாமி…அங்க வந்தாலும் நா வச்சுப் பார்த்திட்டுப் போறேன்…எம் பிள்ளமாதிரி இருந்துட்டுப் போறாரு….உங்களுக்காச்சும் கொஞ்சம் பாரம் குறையுமில்ல…. – அவரின் கைகளை ஏந்தி முகத்தில் பொத்திக் கொண்டார் அப்பா. ஆத்மார்த்தமான அன்பு இதுதானோ என்று தோன்றியது.

காம்பவுன்ட் நுழையும் இடத்தின் இடது புறமிருந்த ஒர்க் ஷாப் திறந்து கிடந்தது. நாயுடு பையன் மாணிக்கம் ஆளைக் காணோம். மூன்று வண்டிகள் வேலைக்காய்க் கழற்றிப் போடப்பட்டிருந்தன. அங்கங்கே நட்டுக்களும், ஸ்குரூகளும், செயின்களும், ஸ்பேனர்களும் இரைந்து கிடந்தன. அழுக்குத் துணிகள் பிசிர் பிசிராய்க் சிதறிக் கிடந்தன. எண்ணெய்க் கசடு விசிறி ஊற்றப்பட்ட பிசு பிசுப்பு அங்கங்கே…!

இப்டிப் போட்டுட்டுப் போனான்னா என்ன பண்றது இவனை….ஒரே சமயத்துல ரெண்டு மூணு வண்டியப் பார்க்கிறேன்னு கிளம்பிடுறான். ஒண்ணு முடிச்சவுடனே இன்னொண்ணைத் தொடுடான்னு ஆயிரம் வாட்டி சொல்லிட்டேன்…கேட்டாத்தானே…! எதுக்கு எத முடிச்சோம்னு தெரியாமப் போயிடும்டா…வேலைக்கு ஆளா வச்சிருக்கே…ஒவ்வொருத்தனை ஒண்ணொண்ணைச் செய்யச் சொல்றதுக்குன்னு சொல்லிப் பார்த்துட்டேன்…அவன் மண்டைல ஏற மாட்டேங்குது….இவனப் பார்க்கைல நம்ம சாமி எம்புட்டோ பரவால்ல போலிருக்கு….சொன்னாக் கேட்டுக்கிடுவாரு…இவன எவனும் அசைச்சிக்க முடியாது…எல்லாம் அவன் இஷ்டந்தான்….

எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாச் சரியாயிடும் நாயுடு…புலம்பாதீங்க….என்றான் இவன்.

சாமி அண்ணா ஊர் உலகமெல்லாம் சுற்றி விட்டு ராத்திரி ஒன்றுக்கும் ரெண்டு மணிக்கும் என்று வருகையில் உறங்கிக் கொண்டிருக்கும் அம்மாவையோ, அப்பாவையோ எழுப்பாமல் தன் மனைவியை எழுப்பி அவருக்குச் சாப்பாடு போட்டிருக்கிறார் நாயுடு….படுக்கை கொடுத்துப் படுக்கச் செய்திருக்கிறார்.

புத்தி சரியில்லாத இந்தப் பிள்ளையை வச்சிக்கிட்டு எவ்வளவு வேதனை உங்களுக்கு….அதுல ஒரு பொண்ணை வேறே கல்யாணம் பண்ணி, அதுக்குப் பிறகு இவருக்கு இப்படி ஆகி, அந்தப் பொண்ணு வாழ்க்கையும் போயி….என்னா கொடுமை….? உங்க சங்கடத்துல துளியாச்சும் பங்கெடுத்துக்கிருவோமேன்னுதான்….

சாமி அண்ணா நடு ராத்திரிக்கு மேல் வீடு வந்த விபரத்தை நாயுடு அம்மாவிடம் இப்படிச் சொன்ன போது….உங்களுக்கு ரொம்பக் கடமைப் பட்டிருக்கோம் நாங்க…..தெய்வம் மாதிரி….இத்தனை பேர் குடியிருக்கிற, மேலுக்கும் கீழுக்கும் பத்துப் பன்னெண்டு வீடு இருக்கிற இந்தக் காம்பவுன்ட்ல யாராச்சும் இப்டி ஒருத்தனை வச்சிருக்கிற எங்கள மாதிரி மனுஷாளுக்கு எடம் விடுவாங்களா…குழந்தேள் பயந்துக்கும்…யாரும் சம்மதிக்க மாட்டாங்கன்னு மழுப்பி அனுப்பிடுவாங்கதான்….உங்க மனசு யாருக்கும் வராது…. – அம்மா கண்கலங்கி நின்ற காட்சி மறக்க முடியாதது.

ஏன் அம்பி…எங்க போயிருப்பாரு சாமி….? – பழையபடி அடியப்பிடிறா என்று அவர் ஆரம்பிப்பதாய்த் தோன்றியது கேசவனுக்கு.

என்னன்னு சொல்வீங்க நாயுடு…இருந்திருந்தாப்ல இப்டித்தான் கிளம்பிப் போயிடுவாரு….நாங்க தேடப் போவோம்…ஆரம்பத்துல இப்டித்தான் தொட்டதுக்கெல்லாம் ஓடிட்டிருந்தோம்…அப்புறம் எங்களுக்கும் பழகிடுச்சி…போன மாதிரித் தானே வருவாருன்னு விட்டிட்டோம்…

எப்டி அவருக்கு இப்டி ஆச்சு…அதச் சொல்லுங்களேன்….? ரொம்ப நாளாக் கேட்கணும்னு ஆசை….மாமிட்ட…உங்கப்பாருட்டக் கேட்கத் தயக்கம்…தெரிஞ்சிக்காமயே அவுகளும் ஊரக் காலி பண்ணிட்டுப் போயிட்டாக…இப்ப இருக்கிறது நீங்கதான்…சொல்லுங்களேன்….

நாயுடுக்கு மொத்தப் புராணமும் சொல்லி விடுவது என்று ஆரம்பித்தான் இவன். கேட்கக் கேட்க…சிலையாய் அசையாது இவனையே உறுத்துப் பார்த்தவாறு அவர் அமர்ந்திருந்தது இவனை ஆச்சரியப்படுத்தியது. இந்தக் கதையெல்லாம் எங்களுக்கெதுக்கு என்று ஒதுங்கிப் போனவர்கள்தான் அதிகம். சுற்றமும் நட்பும் கூட அப்படித்தான் விலகியிருந்தன. பால்யகால சிநேகிதம்…கட்டினால் என் பெண்ணை உன் பிள்ளை சாமிநாதனுக்குத்தான் தருவேன் என்று ஒற்றைக் காலில் நின்ற அண்ணியின் தந்தை….மனதுக்குப் பிடிக்காமலேயே நடந்த கல்யாணம் என்பதற்கடையாளமாய் மணக்கோலத்தில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்த அண்ணி…இப்டிப் பாழுங்கிணற்றில் பிடித்துத் தள்ளுகிறீர்களே என்று கலங்கி நின்ற எதிர்த்தரப்பு உறவுகள்….எது எப்படியானால் என்ன…எனக்கு அழகான மனைவி என்று அகமகிழ்ந்திருந்த சாமிநாதன்….கல்யாணம் பண்ணி ஒரே மாதத்தில் நான் தனிக்குடித்தனம் போகிறேன் என்று கிளம்பி நின்ற வேகம்….போன வேகத்திலேயே திரும்பி வந்த கதையாய்…வாடகைக்குப் பிடித்த வீட்டில் நாண்டு கொண்டு செத்திருந்த பெண்ணின் ஆவி அடித்துவிட்டதென்று புத்தி கலங்கிப் போன அண்ணா….சாமி நாதன் வெறுமையான சாமியாகிப் போன அந்த அவல நாட்கள்….மனைவியும் பிரிந்தால்? .யாருக்குத்தான் மறக்கும்? எப்படி அந்த வேதனையைப் புறந்தள்ள முடியும்?

சரி அம்பி…அவருக்கு எங்கெல்லாம் வைத்தியம் பார்த்தீங்க…? அதக் கொஞ்சம் சொல்லுங்க….என்ற நாயுடுவை பரிதாபத்தோடு நோக்கினான் கேசவன்.

எங்கெல்லாம் பார்க்கலன்னு கேளுங்க நாயுடு…..ஒரு மலையாள வைத்தியரக் கூட்டிட்டு வந்து…மாசக் கணக்குல உக்காத்தி வச்சு….பூஜை புனஸ்காரமெல்லாம் பண்ணி, என்னென்னவோ யாகமெல்லாம் நடத்தி….எதுவுமே எடுபடல நாயுடு….எங்க வீட்டுல இருந்த பண்ட பாத்திரமெல்லாம் அத்தனையும் ஒண்ணொண்ணா வெளில போயி நாங்க ஓட்டாண்டியா நின்னதுதான் மிச்சம்….பார்க்காத வைத்தியம்னு எதுவுமில்லே…இத்தன வயசுக்கு மேலே அவர் இப்படித்தான் இருப்பாருன்னு ஜாதகத்துல இருக்குன்னு கடைசியாச் சொல்றாரு அவுரு…அம்புட்டுச் செலவையும் பண்ணிப்புட்டு…வாழ்க்கைல கஷ்டம்ங்கிறது எல்லாருக்கும் இருக்கும்தான்…ஆனா அதுவே வாழ்க்கையாரதுங்கிறது எங்க வீட்டுலதான்….அத்தனை வறுமை….அவ்வளவு துயரம்…..என் தங்கச்சிக…நானுன்னு ஆளுக்கு ஒரு சின்னச் சின்ன வேலைன்னு வெளில கிளம்பி…ஏதோ கொஞ்சம் மூச்சு விட்டிட்டிருந்தோம்….இப்பத்தான் பெரியண்ணனுக்கு வேலை கிடைச்சு…கொஞ்சம் நிமிர்ந்திருக்கோம்…ஆனாலும் பார்த்து அனுபவிக்க ஒரு கொடுமை கண் முன்னாடி ஆடிட்டிருக்கே…அந்த வினையை என்னன்னு சொல்றது….? நியாயமாப் பார்த்தா இந்த வேதனைலயே எங்கம்மா என்னைக்கோ செத்திருக்கணும்…என்னவோ கடவுள் புண்ணியம்…ஓடிட்டிருக்கு……!

மேல் துண்டை எடுத்து முகத்தோடு பொத்திக் கொண்டிருந்தார் நாயுடு. உள்ளுக்குள் அழுகிறாரோ? விசும்புகிறாரோ? – கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தான் கேசவன்.

அடுத்து அவர் ஏதாவது சொன்னால்தான்…இல்லையென்றால் பேசுவதில்லை என்பது அவன் எண்ணமாயிருந்தது.

சரி…அம்பி….நீங்க புறப்படுங்க….உங்கள ரொம்பக் காக்க வச்சிட்டேன்… என்றவாறே எழுந்தார். முகம் உப்பிப் போனது போலிருந்தது. சொந்த வாழ்க்கையில் அதுபோல் நிறையத் துயரங்களைச் சந்தித்திருப்பாரோ, இல்லையென்றால் ஒரு மனிதனுக்கு இத்தனை பொறுமையிருக்குமா என்று தோன்றியது.

எல்லாத்துக்கும் கடவுள் இருக்கார் அம்பி….ரொம்பக் கஷ்டப்பட்டோம்னா…அப்புறம் சொகப்படணும்னும் இருக்கும்ல….சக்கரம் சுத்திக்கிட்டேதான இருக்கும்….ஒரே எடத்துல நின்னுடப் போறதில்லையே…? நீங்க கௌம்புங்க….பெறவு சந்திப்போம்…..என்று எழுந்து விடையளித்தார்….

கலங்கிச் சிவந்திருந்த அவரது விழிகளைப் பார்த்துக் கொண்டே வெளியே வந்தான் இவன்.

வண்டியைக் கிளப்பிய போது…அது எழுப்பிய சத்தத்தைக் கண்டு….ரொம்ப எரைச்சலா இருக்குதே….மாணிக்கத்துக்கிட்டே சர்வீசுக்கு விட்டு வாங்கிக்குங்க….என்றவாறே விடை கொடுத்தார் நாயுடு. தனித்து விடப்பட்டோமோ என்று நினைத்திருந்தவனுக்கு சற்றே ஆறுதல் பிறந்தது.

அவர் சொன்ன பிறகு அந்தச் சத்தம் தாங்க முடியாததாய் உணர, அந்த வீதியே அலறுவது போல் தான் செல்வதை எண்ணியவாறே கடந்து சந்துக்குள் திரும்பி, விடுதியை நெருங்கியபோது….பின்னாலேயே ஓடி வந்தன நாய்கள். மாடிப்படிக்குக் கீழே வண்டியை நிறுத்தி விட்டுப் பூட்டித் திரும்பி, பாக்கெட்டில் தயாராய் வைத்திருந்த பிஸ்கட்டுகளைப் பிரித்து ஒவ்வொன்றாய் வீசினான். பாய்ந்து பாய்ந்து அவை கவ்விக் கொண்டதும், நின்று நிதானமாய் சவைத்ததும்….பார்ப்பதற்கு அனுசரணையாய்த் தோன்றியது கேசவனுக்கு. மனம் சற்று நிதானப்பட்டது.

போ..போ…ஓடு…ஓடு..இனிமே நாளைக்குத்தான்….என்றவாறே மாடிப்படிகளைத் தாவி ஏறியபோது…..கேசு….யாரோ உன் ரூம் வாசல்ல வந்து படுத்திருக்காகய்யா …பதிலே பேசல…யாருன்னு பாருங்க ……என்றவாறே ஆபீஸ் அறைக்குள்ளிருந்து வெளிப்போந்த வார்டனைப் பார்த்தவாறே பதட்டமாய் ஏறினான் இவன்.

கட்டியிருந்த வேட்டியைத் தலையோடு சேர்த்து இழுத்துப் போர்த்தியவாறு ஒரு மூட்டை போல் அறை வாசலில் எலும்புக் கூடாய்ச் சுருண்டு கிடந்தார் சாமிநாதன் என்கிற சாமி…அண்ணா…!!

-------------------------------------------------------

27 ஜனவரி 2017

திருநீர்சாமி–இமையம்–சிறுகதை-உயிர்மை-ஜனவரி2017

இமையத்தின் எந்தவொரு கதையும் சோடை போனதில்லை. அவரின் இந்தத் திருநீர்சாமி...ஜனவரி 2017 மாதத்தில் நான் படித்த பல கதைகளில் மிகச் சிறந்த கதை என்று சொல்வேன். குலசாமியைக் கும்பிடுதல், கொண்டாடுதல் என்கிற பழக்கம் நம் கிராமத்து மக்களின் காலம் காலமான ஒழுக்க நடைமுறை. அந்த நம்பிக்கையை யாராலும் குலைக்க இயலாது. கிராமத்து மக்களின் என்று மட்டுமில்லை. நம் குடும்ப அமைப்பில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குலதெய்வம் என்று ஒன்று உண்டு. அந்த தெய்வத்திற்கு வருடாந்திர வழிபாடும், குலம் தழைக்கவென்று குடும்பத்தில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் அவர்களின் குலதெய்வத்தை முன்னிறுத்தலும், வழிபடுதலும், அதன் மூலம்தான் சந்ததி செழித்தோங்கும் என்கிற ஆழ்ந்த நம்பிக்கையின்பாற்பட்ட செயல்பாடும் வழி வழியாக வந்த பெரியோர் வகுத்த வழிமுறை. அதில் ஆழமாய் ஊன்றிப்போன அண்ணாமலை தன் குழந்தைகளுக்கு முடி எடுக்கவும், காது குத்தவும் என்று சென்றுதான் ஆக வேண்டும் என்று மனைவியோடு பொருதுவதும், இதுக்காக டெல்லியிலிருந்து தமிழ்நாட்டுக்குப் போகணுமா என்று அவள் வாதிப்பதும்...அதனால் சண்டை மூளுவதும்....ஒவ்வொரு வாக்கியமும்...ஆழமாகவும்...அழுத்தமாகவும் சொல்லப்பட்டு படிக்கும் வாசகனை முழுமையாக உள்ளே இழுத்துக் கொள்கிறது. தமிழ்நாட்டிலேயே பெண் எடுத்து....குலதெய்வ வழிபாட்டிற்குச் சென்றாக வேண்டும் என்று சொல்லி...அதற்கு அவள் மறுத்து...என்று கதை சொல்லப்பட்டிருந்தால் இந்த அளவுக்கு வீரியம் இருந்திருக்காது...இருக்காது என்றுதான் இன்னொரு மாநிலப் பெண்ணைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டதாய்ச் சொல்லி...அதன் மூலம் கிராமத்து நம்பிக்கைகளை அழுத்தமாய் நிலை நிறுத்தியிருக்கிறார் இமையம். தமிழ்நாட்டுப் பெண்ணே அப்படி மறுதலிக்க வாய்ப்பில்லை என்பதும், இதற்காக வெகுதூரம் அலைதல் என்ற கருத்து பொருந்தி வராது என்பதும் உணர்ந்து, டெல்லிப் பெண்ணாய் வகுத்து, அந்த மனைவி மறுதலிப்பதாய்க் கதை சொல்லியிருப்பது அவரது புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. மனைவியும், அவளின் தாயாரும் ஒத்த கருத்தினராய் நிற்பதும், மனைவியைத் தன் முன்னேயே கைநீட்டியதில் கோபம் கொண்டவளாய் தாயார் மருமகனை இழித்துரைப்பதும், மனைவியி்ன் அண்ணன், அண்ணாமலையிடம் பொறுமையாக விஷயங்களைக் கேட்டு குலசாமியின் மகிமைகளை உணர்ந்து கொள்வதும்.....அவர்களுக்கு எடுத்துச் சொல்ல முயல்வதும், அப்படியும் கடைசிவரை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பதும்...எப்படியானாலும் என் குழந்தைகளுக்கு முடி இறக்குறதும், காது குத்துறதும் என் குல சாமி முன்னாடிதான் நடக்கும் என்று அண்ணாமலை இறுதிவரை உறுதியாக நிற்பதோடு கதை முடிந்து போகிறது. கதை வெறுமே முடிவதில்லை. படிக்கும் வாசகர்களின் மனதிலும் அவரவர்களின் குலதெய்வ நம்பிக்கைகளை மேலும் உறுதிப்படுத்திவிட்டு நகர்கிறது. தான் சொல்ல நினைத்ததை மனதுக்குள்ளேயே இத்தனை அழுத்தமாய் வடித்துக் கொள்ளவில்லையென்றால் அதை எழுத்தில் கொண்டு வருவது மெத்தக் கடினம். எழுதிக் கொண்டே போவோம்...அது தானாய் ஒரு முடிவைத் தேடிக் கொள்ளட்டும், விதி போல இருக்கு.... என்பது போன்றதான வெறும் வாசிப்பு ரசனைக்கான படைப்பல்ல இது.அழுத்தம்...அழுத்தம்...அப்படியொரு அழுத்தம்...திருத்தம்....ஒவ்வொரு வரியும் கடைந்தெடுத்து எழுதியது போன்று. காலத்தால் நிற்பது. அழுந்தி, ஊன்றி, நிமிர்ந்து, தன்னை நிலை நிறுத்திக் கொள்வது. இமையத்தின் இந்தத் திருநீர்சாமி அப்படித்தான் தன்னை ஆழப் பதிய வைத்து விடுகிறது. உயிர்மை ஜனவரி 2017 இதழில் வாசித்த இந்தக் கதை 'the best" for Jan.2017.

Image may contain: 1 person, selfie and closeup

Image may contain: 1 person, closeup

LikeShow more reactions

CommentShare

8Pena Manoharan, எழுத்தாளர் கே ஜி ஜவஹர் and 6 others

2 shares

Comments

Saran Gopi

Saran Gopi Wo