06 ஏப்ரல் 2024

 

விவேகம்   -   சிறுகதை - பிரசுரம் - உயிர் எழுத்து ஏப்ரல் 2024





                                                தையெல்லாம் சொல்ல வேண்டாம் என்று மனதில் போட்டு அமுக்கிக் கொண்டிருந்தாரோ அவைகளைத் தன்னை மீறிச் சொல்லி விடுவோமோ என்று பயந்தார் கனகவேல். கண்களால் காண்பவற்றிலெல்லாம் குறைகள்தான் தென்படுகின்றன. ஏனப்படி? தன் பார்வையே தவறோ?. நூல் பிடித்தாற்போல் இருந்து காலம் கடந்து வந்து விட்டவருக்கு இன்று அவர் கண் முன்னே நடப்பவையெல்லாம் தப்பாகவே தெரிகின்றன. மாற்றிக் கொண்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்? என்றும் எதிர்பார்க்கிறது மனம். ஏக்கப் பெருமூச்சைக் கிளர்த்துகின்றது சிந்தனைகள். கூடியானவரை அமைதி காக்கிறார். அதுதான் அவரது ஆயுதம்.

                                                கம்முன்னு இருந்தே கொல்றாரே…! என்றும் நினைத்து விடக் கூடாதே…அதற்காக அவ்வப்போது ரெண்டொரு வார்த்தைகள் பேசிக் கொள்கிறார். சுமுகமாய்த்தான் இருக்கிறேன் என்று  தெரிய வேண்டுமே!

                                                மனதில் தோன்றுவதையெல்லாம் பேசி விட முடியுமா? மாற்றிக் கொள்வதற்கு மனப் பக்குவம் தேவை. அதை இளையவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. நரை கூடிக் கிழப் பருவம் எய்தும் நிலையில்தான் நமக்கே ஓரளவு பக்குவம் ஏற்படுகிறது. அதுவும் சீரான நிலையில் நிற்பதில்லை. அடிக்கடி தடுமாற்றம் காண்கிறது. சுற்றிலும் பிடிக்காத விஷயங்கள் நிறைய நடக்கின்றன. தலைமுறை இடைவெளி. அப்படித்தான் இருக்கும் என்று சமாதானம் செய்து கொள்கிறார்.

                                                  இடத்தை விட்டு அகன்று விடுவதுதான். ஓரளவு மனப்பக்குவத்தைப் பராமரிப்பது என்பது அதில்தான் சாத்தியமாயிற்று.  அதற்காகத்தான் அகலுகிறோம் என்று யாரும் கண்டுபிடித்து விடக் கூடாது என்ற ஜாக்கிரதையுணர்வும் இருந்தது. யதார்த்தமாய் விலகுவது போல் விலகி மறைந்து நின்று விட வேண்டும். கண்ணால் கண்டால்தானே தப்பும் தவறும் மனதில் தோன்றிக் கொண்டேயிருக்கிறது? நம்மால் எதற்குப் பிரச்னை? மௌனம் எவ்வளவு வசதியானது? அது கேடானதும் கூட.

                        எதையுமே அப்பா கண்டுக்கிறதில்லை. எதுக்குமே  பதில் சொல்றதுமில்லை….!-இதுவும் அவராகவே  நினைத்துக் கொண்டதுதான். யாரும் சொன்னதில்லை. மன ஓட்டங்களே மனத் தடைகளுக்குக் காரணமாகிவிடுகின்றன. அதுவும் ஒரு நன்மைதான். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எல்லாவற்றையும் போட்டு உடைக்கும் மனப்பான்மையிலிருந்து தப்பிக்கலாமே!

                                                சண்டை, சச்சரவு இல்லாமல் இருந்தால் சரி. தான் ஏதேனும் சொல்லி வைக்கப் போக, அது குத்தமாய்ப்பட, அதற்கு சுரீர் என்று பதில் வர, அதனால், தான் டென்ஷனாக, எதற்கு இதெல்லாம்? தேவையா? நாடி நரம்பெல்லாம் தளர்ந்து போன இந்த வயதில் கமுக்கமாய் உட்கார்ந்திருப்பதுதானே சுகம்? தன் அமைதி வீட்டின் அமைதி. சண்டைக்காரன் தான் மட்டுமே…! எதற்கு அப்படிப் பெயர் வாங்க வேண்டும்?

                                            நான் சொல்றதச் சொல்லிட்டேன்…அப்புறம் உங்க இஷ்டம்…என்று வெட்டிக்கு வார்த்தைகளை உதிர்க்க இவர் மனம் இடம் தரவில்லை. எத்தனை முறைதான் இதைச் சொல்வது? நல்லதைச் சொன்னால் எடுத்துக் கொள்ளணும். ஓ.கே..அப்பா சொல்றதுதான் சரி…அப்டியே செய்திடுவோம்….என்று பின்பற்ற வேண்டும். நல்லவைகளாய் நியமங்கள் படிந்தால்தான் வாழ்க்கை ஒழுங்கு முறையாய்ப் பயணமாகும். ஏனோ தானோவென்றிருந்தால்  எதிலும் ஒரு திருப்தியோ, நிறைவோ இருக்காது.

                                                சும்மாவானும் தான் பேசப் போக, பிறகு ஏண்டா இதைச் சொன்னோம் என்று வருந்தணும். சொன்னபடி செய்யாவிட்டால் அது கௌரவக் குறைச்சலாயும் தோன்றும் வாய்ப்புண்டு. ஸாரிப்பா….இப்டித்தான் செய்ய முடிஞ்சிது…தப்பா எடுத்துக்காதே…என்று ஒரு சமாதான வார்த்தைகள் கூடச் சொல்ல மாட்டார்கள். நீ சொல்றதச் சொல்லிட்டே கிட…நாங்க செய்றதச் செய்திட்டே இருக்கோம்…

                                                வயசான இந்தக் கெழத்துக்கு இதுவேற சொல்லணுமா? என்று நினைப்பார்களோ? என்ன ஸாரி வேண்டிக்கிடக்கு? தான் சொன்னது நடக்கலேன்னா…பார்த்திட்டுப் பேசாம  கம்முனு இருக்க வேண்டிதான…ஒவ்வொண்ணுக்கும் இவர்ட்ட ஆலோசனை கேட்டுட்டு நிற்க முடியுமா? அல்லது ஒவ்வொண்ணையும் இவர் சொல்ற பிரகாரமே செய்திட்டுதான் இருக்க முடியுமா? அப்போ நமக்குன்னு விருப்பமே கிடையாதா? அவுங்க காலம் அவுங்க விருப்பம். அதுபோல இப்போ இது நம்ம காலம் நம்ம விருப்பம்… …!

                                                சொல்ல மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? சொல்லக் கேட்டு வேறு கேவலப்பட வேண்டுமா? அதற்கு முன்னால் நாமளே புரிந்து கொண்டு ஒதுங்கிக் கிடப்பதுதானே நன்று?   அனுபவம் என்பதன் விலைதான் என்ன? முதிர்ச்சி என்பதன் அடையாளம்தான் என்ன?

                                                இப்படியெல்லாம் தோன்றித் தோன்றித்தான் படிப்படியாக ஒவ்வொன்றிலிருந்தும் மெல்ல விலகி தனியனாகி விட்டார் கனகவேல்.

                                                பசங்களுக்கு ஏற்றாற்போல் தனக்குப் பேசத் தெரியவில்லை. அல்லது அவர்கள் பேசுவது  பிடிக்கவில்லை. ஏற்றாற்போல் பேசுவது என்பது அசடு வழிவது! அவர்கள் எது செய்தாலும் அது சரி என்று சொல்வது. அப்படியிருப்பது சரியா?  நல் வழி காட்டத்தானே நாம் இருக்கிறோம்? எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்றா  விட முடியும்? நினைத்துப் பார்ப்பதோடு சரி.

                                                எதுவும் சொல்லி எதுவும் ஆகிவிடப்போவதில்லை என்பதுதான் கிடைத்த விடை. யாரையும் யார் சொல்லியும் திருத்த முடியாது. அவரவர் அனுபவப்பட்டுத் திருந்தினால்தான் உண்டு என்பதே நிதர்சனம்.

                                                வீடு தன் பிடிக்குள் இல்லை என்று எப்போதோ தோன்றிவிட்டது. கண்களை மூடிக் கொண்டார். காதுகளைப் பொத்திக் கொண்டார். வாய்க்கும் பூட்டுப் போட்டார். எத்தனை வீடுகளில் என்னைப் போல் இருப்பார்கள் என்றும் பெருமையாய் நினைத்துக் கொண்டார்.

                                                ந்த தீபாவளிக்குப் புதுசுன்னு ஒண்ணு இருக்கட்டும்ப்பா…வேண்டாம்ங்காதே… ! வற்புறுத்தினான் சிவா.

                                                பசங்களுக்கு காசு செலவழிப்பதில்  தயக்கம் கிடையாது. ஆத்தோட போற தண்ணி…அய்யா குடி…அம்மா குடி…! எவனோ அள்ளித் தருகிறான். இவர்களும் அள்ளி விடுகிறார்கள். வந்தது தெரியும், போவது எங்கே…வாசல் நமக்கே தெரியாது…. என்ற வரிகள் இவர்களின் வரவு செலவுக்கு சாலப் பொருத்தம்.

                                                அதற்காக அள்ள அள்ளக் குறையாமல் போய் விடுமா? ஜாக்கிரதையுணர்வு வேண்டாமா?  பென்ஷனும் கிடையாது ஒரு புண்ணாக்கும் கிடையாது…இப்பவே சேமித்து வைத்துக் கொண்டால்தான் ஆச்சு. மாசா மாசம் இவ்வளவாவது சேமித்து விடுவது என்று எவனாவது யோசிக்கிறானா? வெறுமே வங்கி நடப்புக் கணக்கில் வைத்திருந்து என்ன பயன்? அதில் ஒரு தொகையை சேமிப்புக் கணக்கில் போட்டால்தானே வட்டி, கூடக் கிடைக்கும். அது எடுக்க முடியாமல் கொஞ்ச காலத்திற்கு சேமிப்பாய் நிற்கும்?

                                                சேரச் சேரத்தாண்டா மனசுக்கு ஆசை வரும். நீ சேர்த்துப் பாரு…அப்பத் தெரியும் அதன் வளர்ச்சி…என்று எவ்வளவோ சொல்லித்தான் பார்த்தார். சொன்னதற்குப் பஞ்சமில்லாமல் ஏதோ கொஞ்சம் போட்டான். பிறகு அதுவும் நின்று விட்டது. தார்க்குச்சி போட்டு இவர்களைக் குத்திக் கொண்டேயிருக்க வேண்டும். சண்டி மாடுகள். அப்பொழுதுதான் உருப்படுவார்கள்.  இளைய தலைமுறை இன்று அப்படித்தானே இருக்கிறது? செலவழிப்பதில் இருக்கும் இன்பம், இவர்களுக்கு ஏன் சேமிப்பில் வரமாட்டேனென்கிறது?

                                                அந்தக் காலத்தில் சீட்டுப் பிடிக்கிறேன் என்று பஸ்-ஸ்டான்டில் அலையும் அப்பணசாமியை நினைவுக்கு வந்தது இவருக்கு. சின்னச் சின்னக் கட்டம் போட்ட  தேதிவாரியான அட்டையில், அப்பப்போ  கொடுக்கும் பைசாவைக் கூட்டிக் கூட்டிப் பதிவு செய்வான் அவன். அவசரத்துக்கு சினிமா போகவென்றெல்லாம் அவனிடம் நாலணாக் காசு வாங்கிக் கொண்டு வீட்டுக்குத் தெரியாமல் சந்திரா டாக்கீஸில்  படம் பார்த்ததும் உண்டு. அப்பொழுதே நாலணா…நாலணாவாய்ச் சேர்த்து மொத்தக் கட்டமும் நிறைந்தவுடன் எதோ கொஞ்சம் பைசா கூடச் சேர்த்து அவன் தரும் பணத்தை வாங்கிக் கொண்டு போய் அம்மாவிடம் கொடுத்ததும்…எந்தங்கம்…கொள்ளச் சமத்து, கோட்டச் சமத்து…என்று அம்மா ஆரத் தழுவி முத்தா கொடுத்ததும்…!!

                                                . அந்தப் பழக்கம்லாம் சுட்டுப் போட்டாலும் இவனுங்களுக்கு வராது.  ஒரு உண்டியல் வாங்கி  சாமி முன்னாடி வைடா என்று ஆயிரம் தடவை சொல்லிவிட்டார். இன்னும் வாங்கி வைக்கிறான்…! மண் உண்டியல்லாம் வாங்க முடியாதுப்பா…இந்தக் கோயில் வாசல்ல வச்சு விப்பானே…அதத்தானே சொல்ற…ஊகும்…..

                                                போட்டா எடுக்க முடியாததுதான் உண்டியல். நிரம்பி வழிஞ்சதும், அதை உடைச்சுத்தான் பணத்த எடுக்கணும். மண் உண்டியலோட பெருமையே அதுதான். அந்தக் காசை ஏதாச்சும் கோயில் குளம் போகப் பயன்படுத்தணும். மீதியைக் கோயில்ல சேர்க்கணும்…அப்புறம் புதுசு ஒண்ணு வாங்கிப் போடணும். இதெல்லாம்  பெரியவங்க நம்ம கிட்டே சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தின எளிய வழிமுறை. வசதியில்லாதவங்க வேறே எப்படிச் செய்றது?வாழ்க்கையைப் புதுப்பிச்சிக்கிற வழிமுறைகள்.  நல்ல பழக்கங்கள் படிய சொல்லிக் கொடுத்த நடைமுறைகள்.   இப்ப நீங்க எங்க செய்யப் போறீங்க? என்றார் ஒரு நாள்.

                                                அது உண்டியல் என்கிற பெயரில் பூட்டுத் தொங்கும் ஒரு டப்பா வாங்கி வந்திருந்தான். மேல் மூடியில் ஒரு நீள் ஓட்டை. அது வழியாகக் காசு போட வேண்டுமாம். ரூபா நோட்டையும் மடிச்சுத் திணிக்கலாம்ப்பா…என்றான். உண்டியலுக்குப் பூட்டா? சாவி யார்ட்ட இருக்கும்?. சாமி படத்துப் பின்னால வச்சிடுவோம் என்றான். சரி வையி…அப்பப்போ பால் பாக்கெட், காய் வாங்கன்னு  பற்றாக்குறைக்குப் பயன்படட்டும். அவசரத்துக்கு உதவும்ல? என்னப்பா இப்படிச் சொல்றே? என்றான் சிவா. இந்த உண்டியலோட பெருமை அதுதான்…அவ்வளவுதான்…

                                                எது குடிக்க முடியாதோ அதுதான் சூடு. அதுபோல எது திறக்க முடியாதோ அதுதான் உண்டியல். சிறு சேமிப்புங்கிறது அந்த வழிமுறைலதான் இருக்கணும்…. நம்ம நடைமுறைக்கும் இவங்களுக்கும்தான் எவ்வளவு வித்தியாசம்?

                                                னக்கு எதுக்குப்பா அநாவசியத்துக்குப் புதுச்சட்டை? முன்னால் மேசையில் வைக்கப்பட்டிருந்த அதையே பார்த்துக் கொண்டிருந்தார். தொடவே பயமாய் இருந்தது.

                                                அதான் இன்னும் பார்சலே பிரிக்காத புத்தம் புது எட்டு முழ வேட்டி இருக்கு….வேண்டாம்…வேண்டாம்னு சொல்லியும் கேட்காம ஒரு குர்தா வேறே எடுத்துக் கொடுத்துட்டே….அதைப் போடணும்னு வச்சிருந்தே ஒரு வருஷம் ஓடிப் போச்சு…அது ரெண்டையும் இந்தத் தீபாவளிக்குப் போட்டுக்கிறேன்…போதாதா?  அதுக்குமேலே என்ன வேணும்.  நீங்க சின்னப் பிள்ளைக…போட வேண்டிதான் வித விதமா…!

                                                இந்த தீபாவளிக்கு நீங்க இதைப் போடுறீங்க… என்றான் சிவா. அன்புக் கட்டளை.

            புதுசு போடணும்ங்கிற ஆசையெல்லாம் என்னைக்குமே இருந்ததில்லப்பா…எத்தனையோ தீபாவளி அப்படிக் கழிஞ்சிருக்கு. ஆசைப்படவே தெரியாது. இருந்தாத்தானே  ஆசைப் படுறதுக்கு? வறுமைலயும், பட்டினிலயும், அவமானத்துலயும் கூனிக் குறுகி வாழ்ந்த, வளர்ந்த வாழ்க்கை….இப்ப நீங்கள்லாம் நல்லாயிருக்கீங்களே…அதுதான் சந்தோஷம்….

                                                இப்ப அப்படித்தான் சொல்லுவே…அப்புறம் குர்தா போடக் கூச்சமா இருக்குன்னு வச்சிடுவே….அதை ஷார்ட் குர்தாவா உயரம் சுருக்கித் தைச்சுத் தர்றேன்னு சொன்னேன். அதையும் வேணாம்னுட்டே…அதுக்காகத்தான் ஒரு புது ஷர்ட் எடுத்துக்கோன்னு சொல்றேன்….-விடாமல் பிடித்த பிடியாய் நின்ற மகனின் வற்புறுத்தலில் தளர்ந்துதான் போனார் கனகவேல்.

                        நாற்பதா இல்ல நாற்பத்திரண்டா….அளவு? என்று கேட்டுக் கொண்டிருந்தவன் ஒரு உத்தேசத்தில் நாற்பத்தியிரண்டு என்ற அளவினில் ஒரு சட்டையை அவனே வாங்கிக் கொண்டு வந்து நீட்டியபோது மகிழ்ச்சியும் கொஞ்சம் கோபமும் சேர்ந்தே வந்தது இவருக்கு.  அளவு என்னவோ கரெக்டாகத்தான் இருந்தது. விலையைச் சொன்னபோதுதான் பகீரென்றது. உடம்பு ஆடிப் போனது.

                                                என்னது, ரெண்டாயிரமா? இதென்னடா அநியாயமா இருக்கு? அப்படி என்னடா இருக்கு இந்தச் சட்டைல….? என்று கத்தினார். இவ்வளவு விலை கொடுத்தா வாங்குவாங்க…? காசென்ன மரத்துலயா காய்க்குது?

                                                ஏம்ப்பா இதுக்குப் போய்க் கத்துறீங்க? பிரான்டட்ப்பா…காலர்ல என்ன போட்டிருக்கு பாருங்க….? ஃபேமஸ் கம்பெனியாக்கும்…அவன்ட்ட எப்பவுமே விலை ஜாஸ்திதான். ஆனா சரக்கு நல்லாயிருக்கும்….ஸ்டான்டர்டா….! அங்க நிக்கிற கூட்டத்தப் பார்த்தேன்னா நீ இப்படிச் சொல்ல மாட்டே…! அவ்வளவு டிமான்ட்….!

                                                அப்போ விலை ஜாஸ்தின்னு தெரிஞ்சிதான் எடுத்திருக்கே… இல்லியா? இதுல நமக்கென்ன பெருமை? வெளில வந்து இப்படிச் சொல்லிக்கிறதுதானா?  வெட்டிப் பெருமை…! இவ்வளவு  காசு போட்டு எனக்கெதுக்குப்பா இந்த ஷர்ட்டு? சாதாரணமா ஐநூறு, அறுநூறுன்னு இருந்தாப் போறாதா? அதுவே என்னைப் பொறுத்தவரை அதிகம்தான்.

                                                ஐந்நூறுக்கு எடுத்து வந்தாலும் அதுவும் விலை ஜாஸ்தின்னுதான் சொல்வீங்க…நீங்க…!

                                                அந்தக் காலத்துல நாங்கள்லாம் இருநூறு முன்னூறுக்கு எடுத்த துணிகள்தான் இன்னைக்கு இந்த விலை விக்குது! என்ன பெரிய க்வாலிட்டி மாறியிருக்கு? அதே துணிதான்…. ஆறு மாசத்துல ஃபேடு ஆயிடுச்சின்னு ஈஸியாத் தூக்கிப் போட்டுடுறீங்க…நாலு ரூபா, அஞ்சு ரூபான்னு பாத்திரக்காரன் எடுத்துக்கிறான். வயித்தெறிச்சலா இருக்கு…! ஒரே சட்டையை அஞ்சாறு வருஷம் கிழியாம வச்சிருப்போம் நாங்கள்லாம்…லேசுல தூக்கியெறிய மாட்டோம். மனசாகாது. எங்கயாச்சும் லேசாக் கிழிஞ்சாலும், போய் தெச்சுட்டு வந்திடுவோம்.

                                                 இப்பத்தான் கிழிசல் தைக்கிற ஜோலியே இல்லியே..! அப்டி அப்டியே பழசு…பழசுன்னு ஒதுக்கித் தூக்கியெறிஞ்சிடுறீங்களே…கிழிசல் தைக்கிற தையக்காரன் எவன் இப்ப கண்ணுல படுறான். அங்கங்க கடை வாசல்ல அப்பல்லாம் உட்கார்ந்திருப்பாங்க…ரெடி ரெடியாத் தெச்சுக் குடுப்பாங்க…கொடுக்கிறத வாங்கிக்கிடுவாங்க…தெருத் தெருவா தையல் மிஷினைத் தோள்ல தூக்கிட்டு அலைவான்…அவுங்களையெல்லாம் இந்த சமுதாயம் எப்பவோ தூக்கியெறிஞ்சிடுச்சு. இதெவல்லாம் ஒரு பொழப்பான்னு உதறிட்டாங்க…சின்ன வேலையானாலும் அதையும் பொருட்படுத்தி செய்றதுக்கு ஆள் இருந்தது அப்போ….! இப்போ? எதையுமே பொருட்படுத்தாத வாழ்க்கை வாழ்றீங்க…யூஸ் அன்ட் த்ரோ…ன்னு ஒரு கலாச்சாரம். திருமண வாழ்க்கைலயும் இந்தக் கலாச்சாரம். புகுந்துட்டதா நீதி மன்றங்கள் வேதனைப்படுது.. நுகர்வுக் கலாச்சாரம். ஒரு பொருளைப் பயன்படுத்தின பிறகு தூக்கி எறியுறது!  இப்டியேதான் வயசான எங்களையும் நாளைக்கு நீங்க தூக்கி எறிஞ்சிடுவீங்க போல்ருக்கு?

                                                அவரின் நீண்ட பேச்சில் இந்தக் கடைசி வாக்கியம்தான் கனகவேலின் பஞ்ச். ஒரு “க்“ வைத்துதான் எந்தப் பேச்சையும் முடிப்பார். அதனால் மற்றவர்கள் மனசு சங்கடப்படுமே என்று நினைக்க மாட்டார். எழுபது வயசு எட்டப் போற எனக்கு இது கூடச் சொல்ல உரிமையில்லையா? இந்தச் சுதந்திரம் கூடக் கிடையாதா?  என்று நினைத்துக் கொள்வார். சமயங்களில் தன் அனுபவங்களை எப்படி வெளிப்படுத்துவது? அமுக்கியேவா வைப்பது என்று வெடித்து விடும்.

                                                வயசான ஆளு…அவர் அப்படித்தான்…இல்ல…அது அப்டித்தான்னு நினைச்சிட்டுப் போங்களேன்…என்று சற்று கர்வமாகவும் நினைத்துக் கொள்வார். வேகம் விவேகமாக மாறிவிட்டது இப்போது….!

                                                துக்கு இப்படி ரூம்லயே அடைஞ்சு கிடக்குறீங்க? உறால்ல வந்து உட்காருங்க…என்றாள் வேதவல்லி. மனசோடுதான் இதைச் சொல்கிறாளா என்றிருந்தது இவருக்கு. அவரால் வீட்டில் பப்ளிக்காக உட்கார முடியவில்லை. கலகலவென்று பேசினாலும் அதிகபட்சம் அஞ்சு நிமிஷத்திற்கு மேல் தாங்காது. அதிகம் சிரித்து விட்டால் கூட ரொம்ப சந்தோஷப்பட்டுட்டமோ? என்று மனசுக்குத் தோன்றும். இளம் பருவ வாழ்க்கை முழுவதுமாக சோகமாகவே கழிந்து விட்டதால் அதுவே நிலைத்துப் போனது.   பிடித்த ரசம்  சோக ரசம்தான்.

                                                அங்கு போய் உட்கார்ந்தால் பலதும் கண்ணில் படும். எதாவது சொல்ல வேண்டி வரும். சகஜமாய்ப் பேசுவதாக நினைத்துக் கொண்டு ஏதாச்சும் சொல்லப் போக அதுவே தப்பாகப் பட்டுவிட்டால்? தப்பாகத்தானே படுகிறது. சகஜமாக எடுத்துக் கொள்ள இளசுகளுக்குத் தெரியவில்லையே? முற்போக்கான சிந்தனையாம்! எதையும் கேள்வி கேட்கும் தன்மையாம்!  வாழ்க்கையில் அனுபவப்பட்டவர்கள் கேள்வி கேட்பதில் தவறில்லை. எந்த அனுபவமுமே இல்லாதவர்கள் கேள்வி கேட்பது என்ன லட்சணம்? அது கத்துக்குட்டித்தனமில்லையா? திண்டுக்கும் முண்டுக்கும் பேசுவது எப்படி புத்திசாலித்தனமாகும்? பேசுவதையெல்லாம் தப்பாகவே எடுத்துக்கொண்டு அதையே க்ளெவர்னெஸ் என்று அசட்டுத்தனமாய்ப் பெருமைப்பட்டுக் கொள்வது? என்ன கலாச்சாரமோ? கன்றாவியோ?

                                                விரித்த படுக்கைகளையே இவர்கள் மடக்குவதில்லை. மெத்தை என்றாலும் அழுந்தச் சுருட்டி வைத்தால் ஆகாதா? இதென்ன லாட்ஜா அல்லது வீடா? போட்டது போட்டமேனிக்குக் கிடக்க? அறையைக் கூட்டுவது என்பதே கிடையாது. பார்பர் ஷாப் மாதிரி மூலையெல்லாம் அடை அடையாய் தூசி, முடிக் கற்றைகள்…! அங்கு கூட இப்பல்லாம் சுத்தமாய்த்தான் வைத்துக் கொள்கிறார்கள். வீடுகள்தான் சீரழிகின்றன. விழுத்துப் போட்ட துணி குப்பலா மூலைல கெடக்கு. அங்கங்க தலை முடி கொத்துக் கொத்தாப் பறக்குது. பார்த்திட்டே தாண்டிப் போறாங்க.. அதை முடிஞ்சு குப்பைக் கூடைல வீசணும்ங்கிற சின்ன அறிவு கூட இல்ல. சொல்லிக் கொடுத்திருந்தாத்தானே வரும். உள்ளாடைகளெல்லாம் மறைவா உலர்த்தணும். காய்ஞ்சவுடனே மடிச்சு பீரோக்குள்ள தள்ளணும்னு கிடையாதா?  எதைச் சொல்றது, எதை விடுறது? எல்லாமே தப்பா இருக்கே? சகிக்க முடியாத அளவுக்கு? குளிக்காம காலை டிபன் சாப்பிடறது..மதியம் சோத்த அமுக்குறது…சாவகாசமா நாலு மணிக்கு மேலே போனாப் போகுதுன்னு ரெண்டு சொம்புத் தண்ணிய உடம்புல விட்டுக்குறது….இதெல்லாம் வியாதிக்கு வழி வகுக்காம என்ன செய்யும்? எதுக்கு நியமங்கள்னு வச்சிருக்காங்க…எல்லாம் என் இஷ்டம்தான்னு இருந்தா?

                                                எல்லாமே வெட்ட வெளிச்சமா இருக்கு. டிரெஸ் கோடும் மாறிப் போச்சு பெண்டுகளுக்கு. வீட்டுல இருக்கைல என்ன மாதிரி டிரஸ் போடணும், வெளில போகைல எந்த மாதிரி உடுத்தணும்னு யார்தான் கட்டுப்பாடா நினைக்கிறாங்க இன்னைக்கு…அப்புறம் அவன் தட்டினான், தடவினான்னா? எல்லாக் கண்றாவியும் வரத்தான செய்யும்! எத்தன பேர் கையை ஒடிக்கிறது? எத்தனை பேரப் போலீஸ்ல பிடிச்சிக் கொடுக்கிறது? தினம் ஈவ் டீஸிங் கேசப் பார்க்கவே நேரம் சரியாப் போகுதுன்னு புலம்புது போலீஸ். சமுதாயம் அந்தளவுக்குக் கெட்டுக் கிடக்கு. .ஊரே தத்தாரியாத்  திரியும்போது வீட்டுக்குள்ள மட்டும் எப்டி ஒளிவு மறைவு வரும்? காத்தாட இருக்காங்க போல்ருக்கு…! இன்னும் என்னெல்லாம் கண்றாவியக் காணனுமோ? இந்தக் கண்கள் செய்த பாக்கியம்…!

                                                இப்படிக் கண் பார்க்கும் பலதிலும் ஏதாவது சொல்லத் தோன்றும். கிண்டல் அங்கங்கே தெறிக்கத்தான் செய்யும். தாறுமாறாய்  வெடிக்கும். அதனால் அறையில் ஒதுங்கியே கிடந்தார்.  சுவற்றைப் பார்த்துத்தான் அமர்ந்திருப்பார். மற்றவர்களுக்கு  முதுகுதான் தெரியும். சீரியஸாய்ப் படித்துக் கொண்டிருக்கும்போது முகம் மாறுபடும். உணர்ச்சிகள் மாறுபடும். அவை இவரது பாவங்கள்…!

                                                உங்கப்பா என்ன எப்பப் பார்த்தாலும் முகத்தை உம்முன்னு வச்சிட்டிருக்காரு? என்று மருமகள் மாலா கேட்டால்? கேட்டாலென்ன ஒரு நாள் கேட்டுத்தான் விட்டது.

                                                அவர் முகம் எப்படியிருந்தா உனக்கென்ன? உன்ன ஏதாச்சும் சொன்னாரா? அவர்பாட்டுக்குத்தான இருக்காரு? விடு…என்று அடக்கி விட்டான் சிவா. அவனின் அந்த பதில் இவருக்குத் திருப்தி தந்தது.

                                                சும்மா சிவனே என்று இருந்ததற்கே இப்படியென்றால் உறாலில் போய் உட்கார்ந்து கொண்டு ஏதேனும் வாயைக் கொடுக்க…அது விபரீதம் ஆகி விட்டால்?  வெளியேதான் வம்பை விலை கொடுத்து வாங்குவார்கள். இப்பொழுதெல்லாம்தான் வீட்டிலேயே அது நடக்கிறதே?

                                                என்னை எதுக்கு உறாலுக்கு வரச்சொல்றே? எனக்குத் தனிமை வேணும், அமைதி வேணும்…நான் இங்கயே இருக்கேன்…என்றார் இவர்.

                                                நீங்க உறாலுக்கு வந்து அடிக்கடி உட்கார்ந்து சகஜமா அவுங்க கூடப் பேசினாத்தான் வீட்டுல ஒரு சுமுகம் இருக்கும்…அதுக்காகச் சொன்னேன். என்றாள் வேதவல்லி. என்னவோ கண்டுபிடித்துச் சொன்ன மாதிரியிருந்தது அவள் பேசியது. என்னால்தான் சகஜ நிலை கெடுகிறதா? இவ ரொம்பக் கலகலப்பா? இல்ல அந்தப் பொண்ணுதான் சிரிச்ச முகமா? எல்லாந்தான் ஏதோ கல்லைத் தலைல சுமந்திட்டிருக்கிறமாதிரி…அலையுது?

                                                என்னவோ நூறு நூத்தம்பது பவுனோட வந்து இறங்கின மாதிரி….தங்கத் தேர்லயா அவங்கப்பன் கொண்டு வந்து விட்டான்? இல்ல பேரழகியா கர்வப்படுறதுக்கு?? பெரிய திறமைசாலியா ஐ.டி.ஃபீல்டுல? நூறோட நூத்தி ஒண்ணு…அவ்வளவுதானே?சாதாரண நடுத்தரக் குடும்பம்தானே? அதுபோல சாதாரணமா இருந்திட்டுப் போக வேண்டிதானே? ஐ.டி.ல வேலை பார்த்தாலே அறிவாளின்னு நினைச்சுக்குவாங்க போல்ருக்கு? சம்பளத்த அள்ளிக் கொடுக்கிறான்ல…அந்த நெனப்பு வரத்தான செய்யும்? எல்லாம் காசு பண்ற வேல….என்னால தனிச்சு இயங்க முடியும்ங்கிற திமிரு. இருந்து பார்த்தாத் தெரியும் குடும்பமா இருக்கிறதோட அருமை!  அதனாலதான டைவர்ஸ் கேசுக தினமும் வரிச கட்டுது கோர்ட் வாசல்ல…? பெத்தவங்க குத்தமா…இல்ல வளர்த்தவங்க குத்தமா?  தலைய விரிச்சிப் போட்டுட்டு அலையுற கலாச்சாரம் எப்ப வந்திச்சோ…அன்னைக்கே எல்லாமும் கெட்டுப் போச்சுன்னுதான் சொல்லணும்….அந்தப் பொண்ணுதானே இந்த வீட்டுக்கு வந்தது. அதுதான் சகஜமா இருக்கணும். தன்னை மாத்திக்கணும்…இந்த வீட்டுக்குத் தகுந்தாப்ல….எனக்கொண்ணும் அவசியமில்ல…!! நான் இருக்கிறபடிதான் இருப்பேன்…!

                                                நீ சொல்றதெல்லாம் அந்தக் காலம்டீ…..! இப்போ தனித் தனியா இருக்கிறதுதான் ஃபேஷன்…நீ அடுப்படில…நான் இங்க…உறால்ல அவங்க ரெண்டு பேரும் தனிமையாப் பேசிக்கிறதை நாம ஏன் அநாவசியமாக் கெடுக்கணும்? அவங்க பிரைவசியைக் கெடுத்த மாதிரி ஆகி, அப்புறம் அதுக்கு ஒரு சண்டையா? போய் உன் சோலியப் பாரு…என்றார் இவர்.

                                                விவஸ்தையில்லாமல் அவள்தான் உறாலில் அமர்ந்து கொள்கிறாள்.

                                                வேலைய முடிச்சியா…பேசாம என் ரூமுக்கு வந்து கிட….பேப்பர் படி…ஸ்லோகம் சொல்லு….அநாவசியமா உறால்ல போய் ஏன் உட்கார்றே? என்றால் கேட்டால்தானே? நான்பாட்டுக்கு உட்கார்ந்திருக்கேன்…என் இஷ்டம்….என்கிறாள் கேட்டால். காலத்துக்கு ஏத்த மாதிரி இஷ்டங்களும் மாறும்ங்கிறது அவளுக்கு ஏன் தெரில?

                                                உறாலுக்கு எதிர் ரூமில் மருமகள் மாலா அமர்ந்து கொண்டு கணினியை நோண்டிக் கொண்டிருக்கிறது. அல்லது காதில் இயர்ஃபோனைச் செருகிக் கொண்டு கிளையன்ட்டுடன் பேசிக் கொண்டிருக்கிறது. Work from home…இவள் எதற்கு உறாலில் அந்தப் பெண்ணின் வேலையை, செயலை, இயக்கத்தை நோட்டம் இடுவது போல் போய் குத்துக்கல்லாட்டம் அமர வேண்டும்? இந்த இங்கிதம் வேண்டாமா அவளுக்கு?

                                                அது மறைவாய் ஒதுங்கி ஒதுங்கி சுவற்றோடு பல்லியாய் ஒட்ட, அதுவும் பலிக்காமல் அறைக் கதவைச் சாத்த….மூஞ்சில அடிச்சாற்போல….இது தேவையா?

                                                சாத்தினாச் சாத்திக்கட்டும்…எனக்கென்ன வந்தது? என்கிறாள் இவள். நீங்க நினைக்கிறீங்க…அது ஆபீஸ் வேலை பார்க்கிறதுன்னு…சினிமாவாக்கும் பார்த்திண்டிருக்கு…மொபைல்ல! அதுக்கு ஆபீசா…லீவான்னு யார் கண்டது? அவன்கிட்டயே அது சொல்றதில்லை…தெண்டம்…தெண்டம்….ஒரு துரும்ப நகர்த்தாது….உட்கார்ந்திருந்தே துருப்பிடிக்கப் போகுது….ஏதாச்சும் ஒரு சின்ன வேலை செய்தாக் கூட அப்பாடீ…அம்மாடீ…ன்னு மூச்சு வாங்குறதப் பார்த்தீங்கல்ல? கையையும் காலையும் அசைக்கிறதுக்கே காசு கேட்கும் போல்ருக்கு…!  இன்னொரு வீட்டுக்குப் போற பொண்ணை இப்படியா வளர்க்கிறது? வெட்கப்படணும் அவுங்க…! பெத்த வயித்துல பெரண்டையைத்தான் வச்சிக் கட்டிக்கணும்…! .எனக்கென்ன வந்தது? நான் என் பையனுக்காக என் பையன் கூட இருக்கேன்…அவனுக்குப் பிடிச்சதை சமைச்சுப் போட்டு திருப்திப் பட்டுக்கிறேன்…அதுலதான் எனக்கு  நிறைவு….அவன் நான் வேண்டாம்னு சொல்லட்டும். விட்டுடறேன் – கேட்டது கேட்காதது என்று எல்லாவற்றையம் சொல்லிப் புலம்பிக் கொண்டாள் வேதவல்லி.

                                                நல்லவேளை….என்னிடம்தான் புலம்புகிறாள் தனியாய். கொஞ்சம் சத்தத்தையும் குறைத்துக் கொள்கிறாளே,,,! பயம்தானே காரணம்? பயமா அல்லது எதுக்கு அநாவசியச் சண்டை என்கிற எண்ணமா? என்னிடம் புலம்பியவைகளை அவள் பையனிடம் சொல்ல வேண்டியதுதானே? அதுக்கு வாய் வராது. அவன் என்ன சொல்வானோ…யார் கண்டது? பிறகு பையனும் கையை விட்டுப் போய்விட்டால்? பெண்டாட்டிக்கு மசியாத பயல்கள்தான் யார்?

                                                பாவம் வேதவல்லி. என்னோடு வயசான காலத்தில் தனியாய் வந்து நிம்மதியாய் இருக்கலாம்தான். ஊரில் எந்தப் பரபரப்பும் இருக்காது. எந்த டென்ஷனும் கிடையாது. மனசில்லையே…! இங்கயே இருப்போம்….நம்ம பையன் நாம கூட இருக்கிறதைத்தான் விரும்பறான். தனிக் குடித்தனம்ங்கிற எண்ணமெல்லாம் அவன் மனசுல இல்ல…தங்கமான பையனாக்கும். புரிஞ்சிக்குங்க…பேசாம அடங்கிக் கிடங்க….!

                                                அடங்கித்தான் கிடக்கிறேன் நான். இன்னும் கொஞ்ச நாளில் எனக்கு  மொழி மறந்து போனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. நான் சொல்வது பேச்சு மொழி….புரிகிறதா?  மௌன மொழியில்தான் இப்போது என் பயணம்!! என்னைப் போல் உங்களில் பலரும் இருக்கிறீர்கள், இருப்பீர்கள் என்பதை என்னால் நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறதுதான்.  கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பதுதானே நிஜம்…!

                                                                                    -------------------------------------

                                               

 

           

 

கருத்துகள் இல்லை:

  சிறுகதை      “வேணாம்ப்பா…” தாய் வீடு இணைய இதழ் மே 2024 -----------------------------------------                                          ...