01 நவம்பர் 2023

 

சிறுகதை                         கணையாழி நவம்பர் 2023 இதழ் பிரசுரம்

“விண்ணுக்குள் பிரிவேது…?”





               நீ உன் பையனை மதிக்கிறேல்ல…? – எடுத்த எடுப்பில் கேள்வியை நேரடியாகத் தூக்கிப் போட்டார் சற்குணம்.

            அடுப்பில் குழம்பு தளதளவென்று கொதித்துக் கொண்டிருந்தது.

            அதை சிம்-முல வைக்க வேண்டிதானே? என்றார் தொடர்ந்து. தன்  கேள்வி வேறு அவளைச் சூடாக்குமே? என்கிற கவனம்தான்.

            தெரியும் எனக்கு….-என்றவாறே அடுப்பைக் குறைத்தாள் சியாமளா. குழம்பு கொதி அடங்கியது. அவள் மனது அடங்கியதா தெரியவில்லை. சிறு பிள்ளையைப் போல் சிணுங்கிக் கொள்ளும் குணம். அந்தந்த நேரத்துக்கு வெளிப்படும். பிறகு காணாமல் போய்விடும்.

முகத்தில் அந்தக் கடுகடுப்பு இப்போது மாறவேயில்லை.  அவள் முகமே அப்படித்தான். சிலபேர் சாதாரணமாய் இருந்தாலும் உம்முன்னு இருப்பது போல் தோன்றும். முக அமைப்பு அப்படி. பழகியவர்கள், தெரிந்தவர்கள் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்வார்கள். புதிதாய்ப் பேசுபவர்கள் தப்பாய்த்தான் நினைப்பார்கள்.

            எதற்குக் காலங்கார்த்தால இத்தனை கோபமா இருக்கே…? இப்ப என்ன நடந்து போச்சு? நீ உன் பையனை நம்புறதானா, மதிக்கிறதானா…உன் திருவாயை மூடிட்டிரு….அவ்வளவுதான் சொல்வேன். ஏன்னா வாயைத் திறந்தேன்னா…முத்தா உதிருது….அதனாலதான் சொல்றேன்….-இது அவள் கோபமாய்த்தான் இருக்கிறாள் என்பதை அறிந்து அவர் சொன்னது.

            ஒண்ணுமே தெரியாத மாதிரி நீங்களா ஒன்றை நினைச்சிட்டுக்  கேளுங்க…எதுலயும் உங்களுக்கு ஒரு விவஸ்தைங்கிறதே கிடையாது…நான் ஒண்ணு சொன்னா, நீங்க வேறொண்ணைச் சொல்றது…பேச்சை திசை திருப்புறது…இதானே உங்க வேலை….எப்போதும்….-

ஆரம்பிச்சாச்சு சண்டை என்று முனகிக் கொண்டார் சற்குணம். துடிப்பாய் இருப்பதற்கு இதுதான் வழி என்று நினைக்கிறாளோ?

            நான்தான் விவஸ்தை கெட்டவனாச்சே…உனக்குத் தெரிஞ்சிருக்கே…அதான் எதையும் இப்டித் திசை திருப்பிப் பேசுறேன்…என்ன விவஸ்தை கெட்டுப் போயி நிக்கிறேனாம் இப்ப? அதத்தான் சொல்லேன்…. – அவரது பொறுமை அவளை மேலும் கோபப்படுத்தியது.

காலையிலேயே அன்று சொற்போர் தொடங்கிவிட்டது அவரைப் பெரிதும் சங்கடப்படுத்தியது. பொறுமை…பொறுமை…என்று மனசு எச்சரித்தது.  சுண்டு விரலைத் தன் முகத்தை நோக்கி நீட்டி தன்னைத்தானே நொந்து கொண்டார். உனக்கு வேணும்…வேணும்…நல்லா வேணும்….ஏண்டா பேச்சுக்குப் போறே? கம்முனு உட்கார வேண்டிதானே? -தன்னைத்தானே திட்டிக் கொண்டார்.

            என்னவோ நீங்கதான் ரொம்பவும் பக்குவமானவர் போலப் பேசுறது? அதான் உங்ககிட்டே பேசவே  எனக்குப் பிடிக்கல்லே….

            இந்தப் பிடிக்கலே என்பதை தினமும்தான் சொல்லிக் கொண்டிருக்கிறாள். அந்த வார்த்தைக்கு அவளைப் பொறுத்தவரை நிரந்தர அர்த்தம் என்று இருப்பதாக இவருக்குத் தோன்றவேயில்லை. பிடிக்காதவர்கள் மூஞ்சியைக் கூடப் பலருக்குப் பார்க்கப் பிடிக்காது. ஆனால் சியாமளா வெறும் வார்த்தையோடு சரி். அதற்கு விலையில்லை அவளிடம்.

            இது ஒண்ணுதான் உனக்குப் பிடிக்கலையா? எத்தனையோ எங்கிட்ட உனக்குப் பிடிக்கலைதான். அதையெல்லாம் நினைச்சுப் பார்த்து வருத்தப் பட்டுண்டிருந்தா மனுஷன் இயங்கவே முடியாது….உனக்கு வெளிப் பழக்கம்ங்கிறதே இல்லை…அதுக்கு நான் என்ன பண்றது? என்னை மாதிரி ஆபீஸ்…வேலைன்னாவது போயிருந்தேன்னா…நிறையப் பேர் கூடப் பழகுற சந்தர்ப்பம்   கிடைச்சிருக்கும். இதெல்லாம் பெரிசாத் தெரியாது…அன்றாடம் கடந்து போகிற விஷயம்னு சகஜமாகியிருக்கும்…அப்டியில்லாததுனால, குண்டுச் சட்டிக்குள்ள குதிரை ஓட்டின மாதிரி….எப்பயாவது ஒண்ணு நடக்குற போது….அது உனக்குப் பிடிக்க மாட்டேங்குது…மனசு ஏத்துக்க மறுக்குது…..அர்த்தமில்லாமக் கோபப்படுது….

            ஃப்ரெண்டுன்னு ஒருத்தனை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திருக்கானே…..அவனுக்கு ஒரு லட்சணம் வேணாம்? யார் யார்கூடப் பழகுறதுங்கிறது தெரியாதா அவனுக்கு? கன்னங் கரேல்னு…கரிக்கட்டையா?.அவன் யாரோ…எவரோ…? காலிப்பய மாதிரி…இருக்கான். இருந்திருந்தும் பிடிச்சிருக்கான் பாருங்க ஃப்ரெண்டுன்னு…தேடியெடுத்தேனே திருவாழி மோதிரத்தன்னு….! பார்க்க லட்சணமா, புத்திசாலியா ஒருத்தன் கிடைக்கலியா இவனுக்கு?

            இந்தப் பழமொழிய பொம்பளைக்கில்ல சொல்வாங்க…இத நீ ஆம்பளைக்கு அப்ளை பண்ற? – என்னைக் கோபப்படுத்தவே முடியாது என்பதாய் இருந்தது அவரது கேள்வி. கூடவே அவள் சொன்ன இரண்டு வார்த்தைகள் அவரைச் சங்கடப்படுத்தின. எதற்கு இப்படியெல்லாம் பேசுகிறாள்? அவள் வயசுக்கு இது ஆகுமா?  இந்த வார்த்தைகளையெல்லாம் உபயோகப்படுத்தலாமா? அறிவு முதிர்ச்சி, மன முதிர்ச்சி இவற்றின் அடையாளங்களா அவைகள்? என்று தோன்றி வருத்தியது.

            அப்போ பார்க்க லட்சணம்னு நீ எதைச் சொல்றே? சிவப்பா இருக்கிறதையா? சிவப்பா இருந்தா அவன் புத்திசாலியாவும் இருப்பான்னு சொல்றாப்ல இருக்கே…? அப்படித்தான்னு நீ நம்புறயா? இதுதான் உன்னோட புரிதலா? நல்லாயிருக்கு…! – கொஞ்சம் ஏளனம் தொனித்தது அவரது குரலில்.

            உங்களுக்கு எல்லாமே விளையாட்டுத்தான். அதனாலதான் சொன்னேன் எதுலயும் ஒரு விவஸ்தை கிடையாதுன்னு….பேசறது எல்லாத்துக்கும் கை, கால், மூக்கு, வாய்ன்னு வச்சு பெரிசு பண்றது…ஒரு பேச்சுக்குன்னு உங்ககிட்டே எதுவுமே வாய்விட்றக் கூடாது…..ஆக்டோபஸ் மாதிரி ஆக்கிடுவீங்க….

            வாசலில் காய்கறி கூவி விற்றுப் போகும் சத்தம். அந்தம்மா நின்று உள்ளே நோக்குவது தெரிந்தது. இப்பொழுது இவள் இருக்கும் நிலையில் எங்கே காய் வாங்கப் போகிறாள்? நாளைக்கு…நாளைக்கு…என்பது போல் வாசலை நோக்கி சைகை காண்பித்தேன். சட்டென்று புரிந்து கொண்டு அம்மணி நகர்ந்தாயிற்று.

 இந்நேரம் அவளை அழைத்து வாசலில் உட்கார வைத்தால் கேட்கவே வேண்டாம். ஏன்டா கூடையை இறக்கினோம் என்று நொந்து போகும் அந்தம்மாள். பேரம் பேசுவதற்கும் ஒரு அளவில்லையா என்று தோன்றும். தோள் கடுக்கச் சுமந்து வந்து வீதியில் விற்கும் அவள் எவ்வளவு விலையைக் கூட்டி வைத்து என்ன பெரிதாகச்  சம்பாதித்து விடப் போகிறாள்? அன்றாடங் காய்ச்சி…அந்த உழைப்பே பெருமைக்குரியதாயிற்றே…?

            செம்புல கொஞ்சம் தண்ணி குடுங்க தாயி….ஒரே தாகமா இருக்கு…என்று கேட்கும்போது நெஞ்சம் உருகிப் போகும். இன்னும் வெயில் ஏறாத அந்த இளம் குளிர்ப் பொழுதில் தண்ணீர் தவிக்கிறதென்றால், அந்தச் சுமைதான் அவளுக்கு அந்த தாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 இவளைப் போல இன்னும் எத்தனையோ பேர் என்னென்னவோவெல்லாம் விற்று வருகிறார்கள் இந்த வீதியில். இந்தப் பகுதியில். உலகில் இப்படிக் கஷ்டப்பட்டு உழைத்து மானத்தோடு  உண்பவர்கள்தான் அதிகம் என்பதை உணரும்போது மனசு எவ்வளவு பெருமைப்படுகிறது? இம்மாதிரி நல்ல ஜனங்கள்  ஆயிரம் ஆயிரமாய், லட்ச லட்சமாய் இருப்பதால்தான் இன்னும் மழை பெய்து கொண்டிருக்கிறது என்று உருக்கமாய்த் தோன்றும் எனக்கு.

            மீன் விற்கிறவளுக்கெல்லாம் நாம அன்றாடம் புழங்குற  பாத்திரத்துல பிடிச்சுத் தண்ணி கொடுப்பீங்களா? இல்லன்னு ஒரே வார்த்தைல சொல்லி அனுப்ப வேண்டிதானே? கையால அளைஞ்சு அளைஞ்சு மீனத் தராசுல நிறுக்கிறா அவ. கத்தியால வெட்டி வழிச்சிப் போடுறா…தெருவே நாறுது… அந்தக் காட்சியைக் கண்கொண்டு பார்க்கவே சகிக்கலை. அந்தக் கைய உடனுக்குடனே கழுவவா போறா? அவ தொழிலே அதுதானே…அப்டியேதான போவா…அதே கையோட வந்துதானே தண்ணி வாங்கிக் குடிக்கிறா? இது தெரிய வேணாம் உங்களுக்கு? சுத்தம் சோறு போடும்னு படிச்சா மட்டும் போதுமா?

            அடிப்பாவி…! தண்ணி கேட்டா அது  தப்பா? தவிச்ச வாய்க்குத் தண்ணி குடுத்தது பாவமா? நல்லா அலம்பி வச்சாப் போச்சு…ஏண்டீ உன் மனசு இப்டியிருக்கு? இதுதான் உங்க அப்பா அம்மா வளர்ப்பா? நீயென்ன பெரிய டாட்டா பிர்லா பரம்பரைங்கிற நெனப்பா உனக்கு? உன் பேச்சுல ஒரு மெச்சூரிட்டியே இல்லையே?

             மீன் வாங்குற வீடுகள்ல வாங்கிக் குடிக்க வேண்டிதானேங்கிறேன்.  அதென்ன இங்க வந்து கேட்குறது? கிரமமா அப்புறம் வர ஆரம்பிச்சிடுவா.  அவ வந்து இந்த வாசல்ல வழக்கம்போல  நின்னா…நாமளும் மீன் வாங்கி சாப்பிடுறமோன்னு சந்தேகப்படமாட்டாங்களா? ஒரு கௌரவம் வேண்டாம்? இன்னும் அந்தக் கேவலம் வேறே வேணுமா?

            வந்து நின்னாலே உன் கௌரவம் போயிடுதா? நல்ல கதையா இருக்கு…! அப்போ காய்கறி சாப்பிடுறதுதான் கௌரவம்…மத்ததெல்லாம் கேவலம்ங்கிறே? அப்டித்தானே? புது சித்தாந்தமா இருக்கு நீ சொல்றது….

யாரோ என்னமோ பண்ணிட்டுப் போறாங்க…நம்மளுக்கு என்ன வந்தது? முன்னெல்லாம் காய்கறியத் தவிர வேறெதுவும் வீதில வராது. இப்பத்தான் எல்லாத்தையும் கொண்டு வர ஆரம்பிச்சிட்டாங்களே? காத்துல அதான் கம கமன்னு வீசுதே…! ஒரே நாராசம்….தாங்க முடியல….!  விதியேன்னுதானே இருந்தாக வேண்டிர்க்கு…பக்கத்து வீட்ல நான்-வெஜ் சமைக்கிறாங்கன்னா பட்டுப் பட்டுன்னு ஜன்னல சாத்தியாக வேண்டிர்க்கு. நாறித் தொலையுது….எங்க வீட்டுக்கு நாத்தம் வருதுன்னு சண்டைக்கா போக முடியும்? இல்ல…நான்-வெஜ்லாம் சமைக்காதீங்க…சுத்திவர ஆளுக குடியிருக்க முடிலன்னு சொல்ல முடியுமா? நிறுத்திறீங்களா இல்லையான்னு   குஸ்திக்கு நிக்க முடியுமா? எல்லா அநாச்சாரங்களும்தான் உள்ளே நுழைஞ்சாச்சே…! –

அடேங்கப்பா…என்னா பேச்சு…என்னா பேச்சு…தூள்  பறக்குது…அடங்காத நாக்கு…! எடுத்தெறிந்த பேச்சு…! உலகத்தோடு ஒட்டாத பேச்சு. என்ன படிச்சு என்ன பண்ண? – நொந்து கொண்டேன்.

            இதோ இருக்கிற உழவர் சந்தைல போனா அம்புட்டு விலை கம்மி…நீங்க என்ன யான வெல, குதிர வெல சொல்றீங்க? சுமந்திட்டு வந்து வீட்டு வாசல்ல விக்கிறீங்க…இல்லன்னு சொல்லலை…அதுக்காக விலை சொல்றதுக்கு ஒரு நியாயம் வேண்டாமா?.வரம்பில்லையா? ..என்று ஆரம்பித்து விடுவாள். அவள் என்னென்ன பேசுவாள் என்று எனக்கு அத்துபடி.

            இவள் என்னதான் தன் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறாள்? இவளைத் தவிர மற்றதெல்லாம், மற்றவர்களெல்லாம்  மட்டம், கேவலம் என்கிற குருட்டு எண்ணத்தில் இருக்கிறாளோ?  பக்குவமேயில்லையே? இந்த லட்சணத்தில் என்னை விவஸ்தை கெட்டவன் என்கிறாள். இவளை என்னென்று சொல்வது? பதிலுக்கு பதில் நானும் மல்லுக்கு நின்றேன் என்றால் வீடே எப்போதும் நரகமாகி விடுமே?

            எனக்கு வயசு அறுபத்தஞ்சு…இனிமே எதுல விவஸ்தை வேணும்ங்கிறே…ரிடையர்ட் ஆனப்புறம் என்னோட சர்க்கிளே ரொம்பக் குறைஞ்சு போச்சு….மீதிக் காலத்தை எந்த வம்பு தும்பும் இல்லாம சந்தோஷமா நிம்மதியா ஓட்டிட்டுப் போனாப் போதும்னு நான் இருக்கேன். எதுக்கு அநாவசிய டென்ஷன்?

            அதுக்கில்லீங்க…அவன் நல்ல ஆட்களோட பழகறானா இல்லையா…அவன் ஃப்ரென்ட்ஸெல்லாம் எந்த டைப்ல இருக்காங்க….அவனோட போக்குவரத்து எப்டியிருக்குன்னு கண்காணிக்க வேண்டாமா? அது நம்ம கடமையில்லையா? நீங்கபாட்டுக்கு எனக்கென்னன்னு இருந்தீங்கன்னா? அதான் கேட்டேன்…..அதுக்குத்தான் இம்பட்டுப் பேச்சு…வேணுங்கிறது…வேண்டாததுன்னு….நீங்கதான் என் வாயைக் கிளறி விட்டுர்றீங்களே….?

            பயப்படாதே…பையன் போக்குவரத்து எல்லாம் சரியாத்தான் இருக்கும்….தப்பால்லாம் எதுவும் நடக்காது…நம்பு…….அநாவசியமாப் பயப்படாதே…நம்ம பையன் மேலே நாமளே நம்பிக்கை வைக்கலேன்னா எப்படி? .முதல்ல எனக்கு ஒரு அரை டம்ளர் டீயப் போடு….பிறகு பார்ப்போம் மத்ததையெல்லாம்…..-அலட்டிக்கொள்ளாமல்  சொல்லி கையில் தினசரியோடு அமர்ந்தார் சற்குணம்.

            கரிக்கட்டை…காலிப்பயல்….என்று அவள் சொன்னது இவரைத் துன்புறுத்திக் கொண்டிருந்தது.  மாடியில் இருக்கும் அவர்கள் காதில் விழுந்தால்? ரித்விக் காதில் கேட்டாலே கொதித்து விடுவானே? இவள்பாட்டுக்குச் சத்தமாய்க் கத்துகிறாள்? வந்திருக்கும் அந்தப் பையன் காதில் விழுந்தால் அவன் மனசு எவ்வளவு  சங்கடப்படும்? மகனுடைய  நண்பன் என்று வந்திருப்பவனை, ரெண்டே ரெண்டு நாள் இருந்து விட்டுப் போகக் கூடியவனை எதற்கு இவள் இப்படிப் பார்க்கிறாள்? மனது வக்கிரப்பட்டுப் போய்க் கிடக்கிறதா? வளர்ந்த விதம் அப்படி…வேறென்ன சொல்ல…..வறுமையின் கோரப்படியில், பசியின் அவலத்தை உணர்ந்திருந்தால், இளம் பிராயத்தில் கஷ்ட நஷ்டங்களைப் பார்த்திருந்தால், அனுபவித்திருந்தால் இப்படியெல்லாம் மனதிற்குத் தோன்றுமா? தோன்றினாலும் வெறுப்பதுபோல் பேச வாய் வருமா? சின்ன வயசிலிருந்து எளிய மக்களோடு பழகியிருந்தால் இந்த வெறுப்பு தலையெடுக்குமா? நல்ல வேளை…இந்த வீட்டில் மாடி என்று ஒன்று கட்டினேன். விருந்தினர்கள் என்று வந்தால் வசதியாய்த் தங்க வைக்க…அவரவர் சுதந்திரம் பராமரிக்க….!

            ஒருவனின் நிறம் அவன் பொறுப்பா? ஒருவனின் உருவ அமைப்பு அவனாக வரித்துக் கொண்டதா? அது தாய் தந்தையர் மூலம் கிடைத்ததல்லவா? அப்படியே இருந்தாலும் அதைக் கண்டு ஏளனம் கொள்ளலாமா? மனது வெறுக்கலாமா? உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்று இவள் படித்ததில்லையா? ஒருவனின் அழகுதான் அவனது மதிப்பா?  மனிதர்களுக்குக் குணம்தானே முக்கியம்? பண்பாடும் நன்னடத்தையும் அவன் அடையாளங்களாய் இருக்கின்றனவா என்றுதானே  பார்க்க வேண்டும்?

நேற்றிரவு வந்திருந்த அவர்களிடம் இன்னும் ரெண்டு வார்த்தை கூட நேருக்கு நேர் அமர வைத்துப் பேசியாகவில்லை…அதற்குள்ளுமா இப்படியெல்லாம் நினைப்பது? என்ன நினைக்கிறாள் இவள்? செக்கச் செவேல் என்று, படியத் தலைவாரி, நெற்றியில் விபூதியிட்டு,  வந்து நின்று வணங்கினால்தான் நல்லபிள்ளை, நமக்கேற்ற பிள்ளை, தன் பிள்ளையின் நண்பன் என்று நினைக்கிறாளா?  மத்தவனெல்லாம் வேஸ்ட் என்று கருதிவிட்டாளா? என்ன பார்வை இது? என்ன கண்ணோட்டம் இது? சியாமளாவை நினைக்கச் சங்கடமாய்த்தான் இருந்தது. ஆச்சாரங்கள், அனுஷ்டானங்கள் இவைதான் நியமங்கள் என்றால் இந்த வக்கிரங்கள் எங்கிருந்து முளைத்தன? இவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளி நிச்சலனமாய் நோக்கும் பரந்த பார்வை என்பது யாருக்கும் கைகூடுவதில்லையா? தனி மனிதச் சிந்தனைகள் என்பது அவரவர் வளர்ப்பு சார்ந்ததா? அதனைச் சீர்ர்தூக்கிப் பார்த்து, வேண்டியதை வைத்துக் கொண்டு, வேண்டாததை ஒதுக்கி விடும் பக்குவத்தை நியமங்கள் ஏற்படுத்துவதில்லையா? தனி மனித ஒழுக்கம் என்பது மனிதப் பக்குவத்தையும் அடையாளப்படுத்துவதுதானே?

            பையன் பிறந்தபொழுது அவனுக்குப் பெயர் வைப்பதில் ஒரு போராட்டம் நடந்தது இவர் நினைவுக்கு வந்தது. அவளிஷ்டத்துக்குத்தான் வைத்தாள். இவரொன்றும் குறுக்கே நிற்கவில்லைதான். ஆனாலும் யோசனை சொல்ல வேண்டியது தன் கடமையாயிற்றே என்று சிலவற்றை முன் வைத்தார்.

            ரித்விக் என்று பெயர் வைக்கும்போதே சொன்னேன். இதெல்லாம் ரொம்ப ஓவர்னு….என்ன பேருன்னு இதை செலக்ட் பண்றே…? ஒரு மிடில் கிளாஸ் பேரு, நார்மலா இருக்கிறமாதிரி  உனக்குக் கிடைக்கலியா?    முன்னோர்கள் பெயரை வைப்பாங்கன்னு கண்டிருக்கு….! அவங்களை நினைவு கூர்ற மாதிரி வச்சா….ஆசீர்வாதம் கிடைக்கும்னு…மாதவா, கோவிந்தா, விஷ்ணு,  மதுசூதனா, திருவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மநாபா, தாமோதரா….ன்னு தாத்தா பெயரான கிருஷ்ணனை நினைக்கிற மாதிரி எது வேணாலும் வைன்னு சொன்னேன்….காதுலயே வாங்க மாட்டேன்னுட்டே….அவங்கவுங்க வீட்டு முன்னோர்கள் பெயரை வைக்கிறதும், அதை நினைவுபடுத்திறமாதிரியான பெயர்களைத் தேர்வு செய்யுறதும்தானே முறை…வழக்கம். ரித்விக், ஸ்புட்னிக், கட்டக் புட்டக்னு  நாக்கு சுளுக்கிக்கிற மாதிரி பெயர்களை ரொம்ப நாகரீகமா நினைச்சு வைக்கிறீங்க. கூகுள்ல தேட வேண்டியது….அதுக்கு என்ன அர்த்தம்னே தெரியாம நாமகரணம் சூட்ட வேண்டியது…அப்புறம் அதுக்கு நாமளே ஒரு அர்த்தம் கற்பிச்சிக்க வேண்டியது…இதானே நடக்குது இப்போல்லாம்….நாம நம்ம பையனுக்குப் பேர் வச்சே வருஷம் இருபதுக்கு மேலே ஆகப் போவுது….அப்பயே நீ ரொம்ப ஃபார்வர்டு…அதானே பெருமை….ஒரு பேர் வச்சா…அதுல அவுங்க ஃபேமிலி, பரம்பரை  அடையாளம் தெரியணும்…அப்டித்தான் பேர் செலக்ட் பண்ணனும்…அந்த வழக்கமெல்லாம் போச்சு…  இப்ப எங்க இருக்கு இதெல்லாம்?…எல்லாருக்கும் எல்லாப் பேரையும்தான் வைக்கிறாங்க….

            ரித்விக்ங்கிறது நல்ல பேர்தான்….நாகரீகமான பெயர்…தன்னைச் சுத்தியுள்ளவங்களுக்கெல்லாம் உண்மையா இருக்கிறவன்னு போட்டிருக்கு…அப்போ அது நல்ல பேர் இல்லையா?

            கூகுள்ங்கிறது அதுவா உதிச்சதில்ல….எவனோ ஃபீட் பண்ணி வச்சிருக்கான். அதைக் காண்பிக்கிறது அது. அவ்வளவுதான். அப்போ அப்டிப் பேர் உள்ளவன் மட்டும்தான் உண்மையா இருப்பானா? பேருக்கேத்தமாதிரி உண்மையா இருப்பான்கிறதுக்கு என்ன கியாரண்டி? சங்கிலின்னு பேரு வச்சிருந்தா அவன் திருடனா இருப்பான்னு சொல்லுவே போலிருக்கே…? எல்லாச் சாமி பேரும் எல்லாருக்கும்தான் இருக்கு…சாமி பேரு உள்ளவன்லாம் யோக்கியனா? அமாவாசைன்னு பேர் இருந்தா அவன் அமாவாசையன்னிக்குப் பிறந்தவன்னு அர்த்தமா?  இருட்டுப் போல அவன் கன்னங்கரேல்னுதான்  இருக்கணும்னு சொல்லுவ போல்ருக்கு? எப்டியோ…நம்மளோட நல்ல பழக்கங்களெல்லாம் நாகரீகம்ங்கிற பேர்ல கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சிட்டே வருது…இதுதான் சத்தியமான உண்மை…!

            இதைச் சொன்னபோது அவள் வாயடைத்துப் போனது. இந்தாள்ட்டப் பேசி முடியாதுன்னு நினைச்சிருக்கலாம். கிறுக்குன்னு கூட நினைச்சிருக்கலாம். சிரிப்புதான் எனக்கு.

            காலை டிபன் ரெடியாகி விட்டது. பூரியும் மசாலாவும். ரித்வீக்க்க்க்…..டிபன் ரெடி…வரலாம்….என்று இங்கிருந்து மாடியை நோக்கிக் கத்தினாள்.

            பதிலே இல்லை அங்கிருந்து. விடுவிடுவென்று மாடிக்குப் போன சற்குணம் போன வேகத்தில் கீழே இறங்கி வந்தார்.

            இப்பத்தான் பள்ளியெழுச்சியே ஆகியிருக்கு….என்றார் இவளைப் பார்த்து.

            மணி பத்தாச்சு…இன்னுமா எழுந்திரிக்கல….என்னடா காபி குடிக்க வரல்லியே…ன்னு பார்த்தேன். சரி டிபனோட சாப்பிடட்டும்னு விட்டா…இந்தக் கதையா? பார்த்திட்டு வந்திட்டீங்களா? எழுப்ப மாட்டீங்களா? நீங்களும் போய் அவங்களோட படுத்துக்குங்க…போங்க…!

            யம்மா…யம்மா…எழுந்திரிச்சாச்சு…கத்தாதே…கத்தாதே…பல் தேய்ச்சிட்டு குளிச்சிட்டு ஒரேயடியா கீழே வந்திடறோம்…தயவுசெய்து கொஞ்சம் பொறுத்துக்கோ…ஸாரி…ஸாரி…ஸாரி….

            ஆயிரம் ஸாரி சொல்லிக் கொண்டு மாடியிலிருந்து குரல் அலறியது.

            சிரித்துக் கொண்டே உள்ளே போனாள். தான் சொல்லிக் கேட்கும் ஒரே ஜீவன் என்று நினைத்திருப்பாள். என் மீதுதான் நம்பிக்கை கிடையாதே…எல்லாத்துக்கும் கொடுத்து வைக்கணும்….!!

            ம்மா…நாங்க ரெண்டு பேரும் கொஞ்சம் வெளில போயிட்டு வந்திடறோம்….-மத்தியானம் அவன் அவுங்க ஊருக்குக் கிளம்பறான்…போற வழிக்குத்தான் இங்க வந்திருக்கான்…புரியுதா…-டிபனை அபக் அபக்கென்று அள்ளிப் போட்டுக்கொண்டு அவர்கள் இருவரும் கிளம்பியது பார்க்கவே வேடிக்கையாய் இருந்தது. ஆசை ஆசையாய்ச் செய்து வைத்ததை ரசித்துச் சாப்பிடாமல் இப்படி காலில் வெந்நீரைக் கொட்டிக் கொண்டது போல் பறக்கிறார்களே என்று அமைதியாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள் சியாமளா. நல்லவேளை முகத்தைச் சுளிக்கவில்லை…எதையும் கோளாறாய்ப் பேசவில்லை.

எல்லா வீச்சும் விறைப்பும் நம்மகிட்டதான் போல்ருக்கு…பையன்ட்டப் பொட்டிப் பாம்பா  அடங்கிக் கிடக்காளே…அவன் எது செஞ்சாலும் சரிதான் போல்ருக்கு…! தாய்க்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு…!

அந்தப் பையன் இன்னொரு பூரி போடுங்க ஆன்ட்டி….என்று கேட்டு வாங்கிக் கொண்டது இவளை மகிழ்ச்சிப்படுத்தியது. உனக்காச்சும் பிடிச்சிருக்கே…ன்னு ஒண்ணுக்கு ரெண்டாகக் கொண்டு வந்து அவன் தாலத்தில் வைத்தாள் சியாமளா…! பெருமையோடு இவரைப் பார்த்துப் புன்னகை செய்து கொண்டாள்.

அவர்கள் கிளம்பிப் போன பிறகு கேட்டார் இவர். இன்னிக்கு நீ சுட்ட பூரி இந்த ஏழைக்கும் உண்டா இல்லையா? எதையாச்சும் பசங்க மிச்சம் வச்சிருக்கானுங்களா…இல்ல காலி பண்ணிட்டாங்களா? அவுக்கு அவுக்குன்னு உள்ள தள்ளினதுல….போன வேகமே தெரில…இதுல எத்தனைன்னு எப்டி கணக்குப் பண்ண முடியும்…? எண்ண முடிலயே….எண்ணி முடிலயா..என்ன முடில? என்று வசனம் பேசினார். உள்ளுக்குள்ளே சியாமளாவின் உபசரிப்பு கண்டு அவருக்குள் மகிழ்ச்சி கிளர்ந்திருந்தது.

எங்கயாச்சும் குழந்தைங்க சாப்பிடுறத எண்ணுவாங்களா? திருஷ்டி பட்டுடப் போகுதுவயசுப் பசங்கநன்னா சாப்டாத்தான திடகாத்திரமா இருக்க முடியும்நீங்கதான் சொல்வீங்களேஅந்தக் காலத்துல பன்னெண்டு தோசை சாப்பிடுவேன்னுஅத மாதிரித்தானே நம்ம பிள்ளைங்களும்….இந்த வயசுக்குச் சாப்பிடலேன்னா பிறகு எப்பவாம்? – பெருமை பிடிபடவில்லை அவளுக்கு. சரசரவென்று பூரி தட்டில் இறங்கிக்கொண்டிருந்ததும், இதோ வந்தாச்சு….எண்ணெய்லபோட்டிருக்கேன்பொறிஞ்சிண்டிருக்குபொறுபொறு….என்று ஓடி ஓடி வந்து பறிமாறியதும், மசால் பாத்திரத்தை அப்படியே அவர்கள் முன்னால் கொண்டு வைத்து, வேணுங்கிறதைப் போட்டுக்குங்க…என்று சொன்னதும்….- விருந்துகளை இப்படித்தான் விழுந்து விழுந்து உபசரிக்க வேண்டும் என்று மற்றவர்களுக்குச் சொல்லும் விந்தையாய் இருந்தது எனக்கு.

பொழுது விடிந்த வேளையில் அவள் பேசிய பேச்சுத்தான் என்ன…இப்போது இப்படிப் பம்பரமாய்ச் சுழலுவதுதான்  என்ன…என்று பெரு வியப்போடு  பார்த்துக் கொண்டிருந்தார் சற்குணம்.

பூரி காலி….மசாலா மட்டும் கொஞ்சம் மிச்சம். இன்னொரு நாளைக்குப் பண்ணிப் போடறேன் உங்களுக்கு….என்றாள்.

அதான பார்த்தேன். நம்ம ராசி அப்டித்தானே….உப்பில்லாப் பண்டம் குப்பையிலே….உவப்பான பண்டம் கற்பனையிலே….!

யப்பா…இந்த வாய் இருக்கே…ஆனாலும் ரொம்ப அதிகம்…சபிக்காதீங்கோ….நாளைக்கே பண்ணிப் போட்டுடறேன்…

சிரித்துக் கொண்டே மாடியை நோக்கிப் போனார் சற்குணம். அங்க என்ன களேபரம் பண்ணி வச்சிருக்கானுங்களோ இந்தப் பசங்க…போய்க் கொஞ்சம் சுத்தம் பண்ணுவோம்….என்று நினைத்துக் கொண்டே படிகளில் ஏறினார். மணி பன்னிரெண்டு நெருங்கிக் கொண்டிருந்தது.

மத்தியானம் சாப்டுட்டுக் கிளம்பறானா…இல்ல அப்டியேவா…? – சந்தேகம் தோன்ற படிகளில் நின்றவாறே கேட்டார் சியாமளாவை நோக்கி.

நார்மலாத்தான் சமைக்கப் போறேன். சாப்பிடுறதானா சாப்பிட்டுப் போகட்டும்…இல்ல இப்பயே வந்துட்டாங்கன்னா கிளம்பட்டும்…வேறென்ன பண்றது….? என்று காய்களை நறுக்க ஆரம்பித்திருந்தாள்.

 வாசலில் வண்டிச் சத்தம். இருவரும் உள்ளே நுழைவது கேட்டது.

விடுவிடுவென்று மாடி ஏறியவர்கள்….அப்பா…அப்பா…இப்பச் சுத்தம் பண்ணாாதே…நாங்க கிளம்பிடுறோம்….அப்புறம் பண்ணிக்கோ…ஒரேயடியா…! இப்ப பண்ணினேன்னா…திரும்பவும் குப்பை விழும்….

சரிப்பா….என்று இறங்கினார் சற்குணம்.

ஏய்…அந்தப் பையன் கிளம்பறான் போல்ருக்கு….நீபாட்டுக்கு அது இதுன்னு பண்ணிட்டிருக்காதே…இங்க சாப்பிடுறதுக்கு யாருக்கும் வயிறு இல்லே….-எச்சரித்தார் .

சரி…சரி…என்று நிதானித்தாள் சியாமளா.   

அள்ளிப் போட்டுக் கொண்டு இறங்கியாயிற்று. முதுகில் ஒண்ணு, கையில் ஒண்ணு என்று  பைகள். சக்கரம் சுற்றி இழுக்க வாகாக சூட்கேஸ். பார்க்கவே அழகாக இருந்தது.

பசங்க போடுற டிரஸ்ஸூம், ஷூவும், விலையுயர்ந்த வாட்சும், அந்த ஸ்டைலான கலைஞ்ச தலையும், , இளமைக்கு மெருகூட்டுவதாகத் தோன்ற மகிழ்ச்சியோடு நோக்கினார் சற்குணம்.

ஆன்ட்டி….நா போயிட்டு வர்றேன்…எங்க ஊருக்குத்தான் போறேன். அம்மா அப்பாவப் பார்த்து நாளாச்சு….கிளம்பறேன்….இந்தாங்க ஆன்ட்டி…நீங்க மறுக்காம வாங்கிக்கணும்…. – என்றவாறே அந்தக் கவரிட்டு சுற்றிய பார்சல் போலிருந்த ஒன்றை அவளிடம் நீட்டினான் அந்தப் பையன்.

இதெல்லாம் எதுக்குப்பா…? என்றவாறே உன் பேர் என்னன்னே கேட்டுக்கலை…தோணவேயில்லை…சொல்லேன்…..என்றாள் சியாமளா. முகத்தில் கொள்ளை மகிழ்ச்சி…அது ஒரு சாமி படமாக இருந்தது அவளைச் சிலிர்க்க வைத்தது. இது பூஜை அறைல இல்லியேன்னு நினைச்சேன். கரெக்டா வாங்கிண்டு வந்திருக்கே…நினைச்ச மாதிரியே ரவிவர்மா வரைஞ்ச படம்…ஸ்ரீராமர் பட்டாபிஷேகம்…உனக்குக் கோடிப் புண்ணியம்….                                                     

வணங்குறேன் ஆன்ட்டி…ஆசிர்வாதம் பண்ணுங்க…அங்கிள் நீங்களும் வந்து நில்லுங்க….என்றான் அவன்.

பேர் சொல்லலியே…! நன்னா இருக்கணும்….படிச்சு முடிச்சி நல்ல வேலைக்குப் போயி…அழகா கல்யாணம் பண்ணின்டு, குழந்தை குட்டிகளோட சௌக்கியமா, தீர்க்காயுசா இருக்கணும்….போயிட்டு வா…இன்னும் கொஞ்ச நேரம் இருந்தீ்ன்னா சமைச்சி முடிச்சிடுவேன்….அதுக்குள்ளேயும் கிளம்பறேள்…இருக்கட்டும் பரவால்லே….சௌக்கியமா சந்தோஷமாப் போயிட்டு வா….

சொல்லிக் கொண்டேயிருந்தாள் சியாமளா. அவள் வாயிலிருந்து வாழ்த்துக்கள் பொழிந்து கொண்டேயிருந்தன. சிலையாய் நின்று எதுவும் சொல்லத் தோன்றாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார் சற்குணம்.

திடீரென்று இவருக்கு  ஞாபகம் வர….உன்னோட பேர் கேட்டாங்களே…சொல்லாமயே போறியே….என்று நினைவு படுத்தினார்.

திருவேட்டை….அங்கிள்…..எங்க ஊர் குலதெய்வம் சாமி பேரு…திருவேட்டை அய்யனார்…! அந்த வருடாந்திரத் திருவிழா வழிபாட்டுக்குத்தான் இப்பப் போயிட்டிருக்கேன்….. என்றவாறே பை அங்கிள்…பை ஆன்ட்டி….என்றவாறே மகிழ்ச்சியாய்க்  கையசைத்துக் கிளம்பிய அவனைப் பின் தொடர்ந்தான் ரித்விக்.

பஸ் ஏற்றிவிட்டுட்டு வந்துடறேன்…..-என்றவாறே அவனின் பைச்சுமையை முதுகில் ஏற்றிக் கொண்டான் ரித்விக்.

அவர்கள் நெருக்கமாய் கலகலப்பாய்ச்  செல்வதையே மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தனர் இருவரும்.

திருவேட்டை…திருவேட்டை – என்ற அதுநாள் வரை கேள்விப்படாத அந்தப் பெயரையே சியாமளாவின் வாய் திரும்பத் திரும்ப முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

                                                                       ------------------------------------

 

           

கருத்துகள் இல்லை:

 விட்டல்ராவ் அவர்களின் “சில உலகத் திரைப்படங்களும் கலைஞர்களும் ------------------------------------------------------------------------------...