08 ஜூலை 2021

கலிஃபோர்னியா திராட்சை"-வாதூலன் = சிறுகதைத் தொகுப்பு = வாசிப்பனுபவம்



 

கலிஃபோர்னியா திராட்சை"-வாதூலன் = சிறுகதைத் தொகுப்பு = வாசிப்பனுபவம்

--------------------------------------------------------------------

வெளியீடு :- விபோ புக்ஸ் (அல்லயன்ஸ்) மயிலாப்பூர்,சென்னை-4.

---------------------------------------------------------------------

"கலிஃபோர்னியா திராட்சை..."-எழுத்தாளர் வாதூலன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு. ஒரு தொகுப்பில் சில கதைகள் படித்தவுடன் மனசு நின்று போகும். ஏதோவோர் குற்றவுணராச்சி நம்மை ஆட்கொண்டு விடும். கதையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள விஷயத்தால் நாம் பாதிக்கப்படுவோம். நாமும் இந்தத் தவறைச் செய்திருக்கிறோமே என்று வருந்துவோம். ஆனால் மனிதனுடைய எல்லாச் செயல்களிலும் அவனிருக்கும் சூழலின் பாதிப்பு கட்டாயம் இருக்கும். அதன் ஒத்துழைப்பின்றி ஒருவன் தனித்து இயங்க முடியாது. ஒரு குறிப்பிட்ட செயலுக்காக, என்றும் கூடவே வந்து கொண்டிருக்கும் ஒன்றை ஒதுக்க முடியாது. அதைத் தவிர்த்து விட்டும் இயங்க முடியாது. அப்படி உணர்த்தும் அல்லது உறுத்தும் ஒரு கதைதான் "அப்பாவுக்காக..."

 

.தெளிந்த எளிமையான நடையில் கதை சொன்ன விதம் ஈர்த்தது. சம்பாஷனைகள் சரளம். போகிறபோக்கில் மறைந்திருக்கிற உண்மையை வாசகன் எளிதாய்ப் புரிந்து கொள்ளும் வண்ணம் இதை சொல்ல முதலில் நல்ல அனுபவம் வேண்டும்.அது வாழ்க்கை அனுபவமாய் இருப்பின் முதிர்ச்சியாய் வெளிப்படும். அங்கே ஆத்மார்த்தம் பலப்படும். வாதூலன் அவர்களின் கதையில் அவரது வாழ்க்கை அனுபவங்களும் முதிர்ச்சியும் பரிணமிக்கிறது.

 

பலரும் கூட இன்றும் சில தர்ப்பணங்களையும், சில சிரார்த்தங்களையும் ஹிரண்ய சிரார்த்தமாகவும் செய்து விடும் சூழல்தான் நிலவுகிறது...யாரும் யாருக்காகவும் சிரமப்படத் தயாரில்லை இன்று...இதுவே நிலைமை...குடும்பத்தில் சண்டையில்லாமல் கழிந்தால் சரி என்கிற நிலைதான்.

 

திருஷ்டிக் கயிறு..வண்டி ஒட்ட நிதானம் வந்த விதம் சிறப்பு...தன்னை நம்புவதே...தன்னம்பிக்கை...நிறைவான கதை.

மனதுக்கு மிகவும் கஷ்டமாயிருக்கிறது நிரஞ்சனின் இறப்பு. மரம் தானே உதிர்க்கும் எவ்வெவ் இலைகளை...

ஞானம்...

நான் மரம்...நீ இலை...அற்புதமான கதை.

 

இப்படி இன்னும் 15 கதைகள் உள்ளன இத் தொகுப்பில்...எல்லாம் குறைந்த அளவிலான பக்கக் கதைகள்.வாசிக்கக் கஷ்டமில்லாதவை. கீதைக்குப் பதினெட்டு அத்தியாயம்போல் இத்தொகுப்பிற்கும் 18. வாழ்க்கை அனுபவங்களை, அறத்தை, நன்னெறியைச் சுட்டிக் காட்டும் இக்கதைகளும் கற்றுணரும் தகுதியுடையவைதான். மனிதன் மிகச் சிறந்த விவேகியாக மாறுவதும், முதிர்ச்சியடைவதும், தன் சொந்த அனுபவத்தினால் மட்டும் அல்லவே...? அந்தப் பணியை நல்லிலக்கியங்களும் செய்கின்றனவே...வாசிப்பு மனிதனை மேம்படுத்துவது திண்ணம். அது தேர்வு செய்யும் புத்தகங்களிலிருக்கிறது....

 

இது இவருடைய முதல் சிறுகதைத் தொகுதியாம்.நம்பத்தான் முடியவில்லை. தனி மரம், புழுதி மண், ஸ்வஸ்திக் சாமியார் என்ற மூன்று பரிசு பெற்ற சிறுகதைகள் இத்தொகுதியை அலங்கரிக்கின்றன. வாதூலனின் தினமணிக் கட்டுரைகள் அவரது முதிர்ந்த சிந்தனைக்கு அடையாளம். அதற்கு முன்னோடி இக்கதைகள்...

                                                            ---------------------------

 

 

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...