11 டிசம்பர் 2019

இதயா ஏசுராஜின் “பயணிகள் உலவும் காகிதக்காடு”-நாவல் வாசிப்பனுபவம்


இதயா ஏசுராஜின் “பயணிகள் உலவும் காகிதக்காடு”-நாவல் வாசிப்பனுபவம்        
 இன்ன கருவைத்தான் எடுத்துக் கொண்டு கதை எழுத வேண்டும் என்று ஏதேனும் வரையறை இருக்கிறதா என்ன? காணும் அனுபவங்களில் மனதில் பதிந்த எதையும் எழுத முனையலாம். கதையாடல் என்பது சீராக அமைய வேண்டும். அப்படி அமையாமல் போன சிலவும்  இங்கே தொடர்கதைகளாகவும், நாவலாகவும் விரிவடைந்திருக்கின்றன.               

 இந்தப் பொருளைப் பற்றிச் சொல்வோம் என்று மனதில் வரித்துக் கொண்டால் அப்பொழுதே அதை எந்த அளவுக்குச் சொல்ல முடியும், எதுவரை ஸ்வாரஸ்யப்படுத்த முடியும், எதுவரை சொன்னால் அது தரம் குன்றாமல் இருக்கும் என்கிற தீர்மானம் படைப்பாளிக்கு வேண்டும். கதையையும், பாத்திரங்களையும், சம்பவங்களையும் மனதில் காட்சிப்படுத்திக் கொண்டு எழுத உட்கார்ந்தால் கதை தானாகவே ஓடி அடையும்.                                 ஒரு காலத்தில் பத்திரிகைகளில் தொடர்கதை எழுதுபவர்கள், அந்தந்த வாரத்திற்கான கதைக்கு வாசகர்களிடமிருந்து (ரசிகர்களிடமிருந்து என்று சொல்வதே பொருந்தும்) வரக் கூடிய கடிதங்களுக்கு ஏற்றமாதிரி கதைகளை நகர்த்தியும், கதாபாத்திரங்களைக் கொண்டு செல்லக் கூடியவர்களாகவும், சம்பவங்களைக் கோர்ப்பவர்களாகவும், அதன் மூலமாய் மேலும் சில வாரங்களுக்கு அவை நீட்டிக்கப்படுவதாயும் அமைந்த நிகழ்வுகளெல்லாம் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறோம்தான்.      இது பத்திரிகைகளில் தொடர்கள் இல்லாத காலம். ஏன் சிறுகதைகளே அருகிப் போன காலம். ஆனால் இது நாவல் காலம். எழுபது, எண்பது தொண்ணூறுகளில் எப்படி சிறுகதைகள் கொடி கட்டிப் பறந்ததோ அது போல இப்போது நாவல்கள் கொடி கட்டிப் பறக்கின்றன. எழுத வரும்போதே நாவலோடுதான் வருகிறார்கள். ஒவ்வொரு ஊர் புத்தகக் கண்காட்சிக்கும் புதிய புதிய நாவல்கள் கொண்டு வரப்படுகின்றன. ஊருக்கு ஊர் நிறைய எழுத்தாளர்கள் தோன்றியிருக்கிறார்கள். ஏதோவொரு விதத்தில் எழுதும் உற்சாகம் ஊக்கம் பெற்றுக் கொண்டேயிருக்கிறது. அத்தோடு மட்டுமல்லாமல் அவைகளை விழா எடுத்து வெளியிடும் பழக்கமும் கூடி வந்திருக்கிறது. வெளியிட்ட பதிப்பகத்தின் உதவியோடு அல்லது தனது சொந்தச் செலவிலேயே என்று எழுதிய நாவலை வெளியிடும், நாலு பேர் அறியச் செய்யும் விளம்பர யுக்தி கையாளப்படுகிறது.                                     எது எப்படியாயினும் ஒரு புத்தகம் கொண்டு வர வேண்டுமாயின் அந்தப் படைப்பாளி குறைந்தது நூறு புத்தகங்களாவது படித்திருக்க வேண்டும் என்பதுதான் உண்மை. ஒருவர் தொடர்ந்து சிறுகதைகளையும், கட்டுரைகளையும் அடுத்தாற்போல்   நாவலையும் ஒரு கை பார்ப்போம் என்று முனைகிறார் என்றால் அவர் வாசிப்பு உலகில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார் என்று பொருள். அவரை மனமுவந்து வாழ்த்துவது நமது பொறுப்பு. உற்சாகப்படுத்துவது நம் கடமை. அதே சமயம் அவரது எழுத்தை வெறும் புகழ்ச்சி வார்த்தைகளால் நிரப்பி விட முடியாது. அது தன்னைத்தானே நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். அந்தத் தகுதி இதயா ஏசுராஜின் “பயணிகள் உலவும் காகிதக்காடு” என்கிற இந்தச் சிறிய நாவலுக்கு இருக்கிறது என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.                            வருகைக்கான ஆயத்தங்கள் என்று ஒரு அருமையான, தரமான சிறுகதைத் தொகுப்பைக் கொடுத்தவர் இதயா ஏசுராஜ். மாய யதார்த்தம் என்கிற யுக்தியை அங்கங்கே சில கதைகளில் புகுத்தி சிறப்பாய் அந்தத் தொகுதியைத் தந்திருந்தார். அத் தொகுதி சிறந்த வாசிப்பனுபவத்தை நமக்குத் தந்தது.                                                                         இது நாவல் காலமாய் இருப்பதை உணர்ந்து, அதன் வேகத்தை அறிந்து, நாமும் ஒன்றை எழுதிவிட வேண்டும் என்கிற ஆவலில் உந்துதலில் அவர் இந்த நாவலை இத்தனை விரைவாய்க் கொண்டு வந்திருக்கிறார் என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது.         நான் மேலே சொல்லியிருப்பதுபோல் நாவல் எதுவரை பயணம் செய்ய வேண்டுமோ அதுவரை தடங்கலின்றிப் பயணித்து எந்த இடத்தில் தன்னை நிறுத்திக் கொள்ள வேண்டுமோ அந்த இடத்தில் கச்சிதமாய் நின்று தன்னை முடித்துக் கொள்கிறது.                           ஜோதிட வழி முறையில் சுவடி பார்ப்பது என்கிற ஒரு நடைமுறையைப் பின்பற்றி நம்பிக்கையோடு தேடிப் போய் தங்களின் எதிர்காலம் பற்றி அறிய முனைபவர்கள் உண்டு. அதில் ஒருவரின் சாவுபற்றிக் கூட இன்ன தேதியில், இந்த நேரத்தில், இப்படியாக நிகழும் என்பதாகவும் குறிப்புகள் இருப்பதாகவும், அவை உண்மையாக நடக்கின்றன என்றும் கேள்விப்பட்டிருக்கிறோம், படித்திருக்கிறோம்.                                                      இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களுக்கு அவர்கள் தேடும் புத்தகங்களில், கேள்விப்பட்டு வாங்க முனையும் புத்தகங்களில், அவர்களே எதிர்பாரா வண்ணம் சில வரிகள் இருப்பதுவும், அது அவர்களின் அப்போதைய, மனசஞ்சலமான துன்பங்களுக்கான தீர்வாக அமையும் வண்ணம்  நிகழ்வதுவும், அது அவர்களை வியப்பிலாழ்த்துவதாயும், பயம் கொள்ளச் செய்வதாயும் அமையும் சம்பவங்கள் அங்கங்கே பொருத்தமாக, அழகாகக் கோர்க்கப்பட்டிருக்கின்றன.                                                       வாழ்க்கையில் நாம் விரும்புவது ஒன்று நமக்கு நடப்பது ஒன்றாக இருக்கும். நான் விரும்பினபடியே, மனதில் நினைத்தபடியே அந்தக் குறிப்பிட்ட இலக்கை எட்டினேன் என்று சொல்பவர்கள், வெற்றியடைந்தவர்கள் மிகச் சிலரே. அதுபோல இந்த நாவலின் நாயகனுக்கும் அவன் விரும்பாத சற்றும் அனுபவமில்லாத தொழிலோடு கூடிய வாழ்க்கைதான் அமைகிறது. அதுவும் நண்பனின் பொறுப்பான யோசனையின்பேரில் அவன் அதில் இறங்குகிறான். போகப் போக அவன் அதில் தன்னைப் படிப்படியாக இணைத்துக் கொள்கிறான். அதன் மூலம் அவன் பெறும் பல்வேறு விதமான அனுபவங்கள்தான் நாவலாக விரிகிறது. எந்தவொரு செயலையும் அனுபவமின்றிக் கையிலெடுத்தாலும், அதில் மிகுந்த ஈடுபாட்டோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும், கடுமையான உழைப்பைச் செலுத்தி செயல்படுவோமானால் அதில் வெற்றியடையலாம் என்கிற உண்மையை இந்த நாவல் நமக்கு எடுத்துரைக்கிறது.      சுருக்கமாய்க் கொஞ்சம் சொல்லி நாவலின் மையப்புள்ளியைத் தொட்டால் அதற்குமேல் என்ன என்கிற ஆர்வத்தை வாங்கிப் படிக்க நினைக்கும் வாசகர்களுக்கு ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.                                                                          செல்வவிநாயகம் ஒரு புத்தகப் பிரியர். வீடு நிறைய புத்தகங்கள் வாங்கி அடுக்கியிருக்கிறார். சிறந்த வாசிப்பாளர். அதுவே அவர் உயிர் மூச்சு. ஆனால் வீ்ட்டில் வேறு யாரையும் அவரால் அந்த நல்ல பழக்கத்திற்கு உட்படுத்த முடியவில்லை. மனைவி, மகன், மருமகள், பேரன் உட்பட. வகை வகையாகத்தான் வாங்கி வைத்திருக்கிறார். சிறார் நூல், தமிழின் பழம் பெரும் எழுத்தாளர்களின் படைப்புக்கள், மொழி பெயர்ப்பு நூல்களில் ரஷ்ய எழுத்தாளர்கள் என்று எ ல்லாமும்தான் உள்ளன. பலன்? யாரும் தொடுவதில்லையே...! வேலை நிமித்தமாக ஊர் விட்டு ஊர் செல்கையில் லாரியில் கொண்டு போகும் அளவு புத்தகங்களை சேகரித்திருக்கிறார்.                                                                      தன் வழக்கமான, பழக்கமான புத்தக வாசிப்பில் மூழ்கியிருக்கையில் அப்படியே மயங்கி விழுகிறார். சற்றுப் பொறுத்து மயக்கம் தெளிகையில் புத்தகங்கள் நிறைந்திருக்கும் மாடியறைக்குத் தன்னைக் கொண்டு செல்ல வேண்டுகிறார். அங்கு அவர் உயிர் பிரிகிறது. பேரன் கொடுத்த சில புத்தகங்களை அவர் சிதையில் அடுக்கி எரியூட்ட அவர் கதை முடிகிறது.    எந்த வேலையிலும் நிலைக்காத மாதவன் தொடர்ந்து ஜீவனத்திற்கு என்ன செய்வது என்று யோசிக்கிறான். அப்பா வாங்கிச் சேர்த்திருந்த ஒரே சொத்தான அந்தப் பெரிய வீட்டை விற்றால் நல்ல விலை போகும். அந்தப் பணத்தைச் சேமித்து, அதில் கஷ்டமின்றிப் பாடு கழியும் என்று யோசிக்கையில் நண்பன் அசோகன் அவனுக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்வதாகக் கூறுகிறான். ஒரு காம்ப்ளெக்ஸ் போன்ற பகுதியில் ஒரு சிறு இடத்தைப் பிடிக்கிறார்கள். புத்தகக் கடை திறக்கிறார்கள்.       புத்தகங்கள் காலியானால் வீட்டு மாடி காலியாகும். அதை வாடகைக்கு விட்டு வருமானம் பார்க்கலாம் என்று யோசிக்கிறாள் அம்மா.     கடையைப் பாங்காகத் திறந்து கொடுத்துவிட்டு தன் மீன் கடையைப் பார்க்கப் போகிறான் நண்பன் அசோகன். நான்கு அத்தியாயங்கள் வரை மாதவன் கதை. 5-லிருந்து வேறு.                 எழுத்தாளர் நீலமேகம் மகள் சந்திரவதனா. மனைவி பவித்ரா. தான் அடையாளம் காணப்படவில்லை என்கிற ஆதங்கம். அந்த வருட அரசுப் பரிசு வேறொருவருக்குப் போய்விட, புத்தகங்களை நடுவீட்டில் போட்டு எரித்து விடுகிறார். பிறகு வீட்டில் புத்தகங்களைக் கண்டால் எரிந்து விழுகிறார். இனிப் புத்தகங்களையே கண்ணால் பார்க்கக் கூடாது என்று கொதித்து எழுகையில் மாரடைப்பில் மாண்டு போகிறார். அம்மா புடவையில் முகுந்தன் என்று கையெழுத்திட்ட கடிதம். அவளை யோசிக்க வைக்கிறது.  புத்தகக் கண்காட்சிக்கு எதிரே கடை போட்டிருந்த மாதவனிடமிருந்து 3 புத்தகங்களை வாங்கி வருகிறாள்.கஞ்சிரா மூர்த்தி என்ற எழுத்தாளர் எழுதிய பூமிக்கும் வானத்திற்கும் நடுவே என்ற நாவல் அவளை ஈர்க்கிறது. கடைசிப்பக்கத்தில் அறிய முயற்சிக்காதே என்ற வரிகள் கோடிடப்பட்டிருக்கின்றன. அது அவளை ஈர்க்கிறது.      உன் அம்மாவின் அந்தரங்கத்தை அறிய முயற்சிக்காதே. அது பாவம்...சந்திரா...என்றே உள்ளது.                                                          பிரமோத் வேலையற்ற இளைஞன். அவனுக்கு வேலை கிடைக்கிறது. சந்திரவதனா அலுவலகத்திலேயே. இருவருக்கும் ஒரு புத்தகம்தான் வழிகாட்டுகிறது. அங்கிருந்தும் தொடர்கிறது  மாய யதார்த்தம். உங்கள் காதலுக்கு பெரும் ஆபத்து வரப்போகிறது. அதிலிருந்து தப்பிக்க “கருணையின் காலடியில்” புத்தகத்தைப் பார்க்கவும். இப்படிக்கு உங்கள் நலம் விரும்பி செல்வ விநாயகம். என்று தொடர்கிறது.                                                    இப்படி அங்கங்கே ஆச்சரியங்களைக் கோர்த்துக் கொண்டே நாவலை ஸ்வாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறார் ஆசிரியர்.  .   புத்தக ஆர்வலர்கள் தேடிபோய்க் கண்டெடுக்கும் புத்தகங்களில் அவர்கள் வாழ்வி்ன் தொடர்புடைய சம்பவங்கள் படிப்பவர்களை அதிசயத்திற்குள்ளாக்கி, அதனை நம்ப வைத்துத் தேட வைத்து விடுகி்ன்றன. தேடிக் கொண்டு அலையும்  வெவ்வேறு கதாபாத்திரங்களாக பிரமோத், சந்திரவதனா, ராஜசேகரன் ஆகியோர் குழப்பத்திற்குள்ளாகி் தீர்வினையும் கண்டடைகிறார்கள். ராஜசேகரன் வாங்கவிருந்த ஒரு புத்தகம் இவர்கள் வெகுநாளாய்த் தேடிய ஒன்றாய் உள்ளது. வாங்கிப் பார்க்கையில் “நீங்கள் ரெண்டு பேரும் உடனே காசிக்குப் போங்கள். அங்கே ஒரு துறவி உங்களைத் தேடி வருவார். அவரைக் கூட்டிக் கொண்டு உங்கள் வீட்டுக்குப் போங்கள். அம்மா மனது சாந்தியடையும். உங்கள் கல்யாணமும் நடக்கும் என்றிருக்கிறது. உடனே இருவரும் வாரணாசிக்குப் பயணிக்கிறார்கள்.                                                                               என்னதான் ஆகிறது பார்ப்போம் என்று நாமும் கடைசி வரை நகர்ந்து விடுகிறோம். சந்திரவதனா, பிரமோத், ராஜசேகரன், அசோகன் ஆகியோர் கூடும் இடம் அசோகனின் புத்தகக் கடையாகவே இருக்கிறது. அங்குதான் அவர்கள் தேடும் புத்தகங்கள் மூலம் இந்த அதிசயங்கள் நிகழ்கின்றன.  அப்படியான ஒரு புனைவை இந்த நாவல் மூலம் சித்தரித்திருக்கிறார் இதயா ஏசுராஜ். கதைச் சுருக்கம் மொத்தத்தையும் சொல்வது ஒரு விதத்தில் ஆபத்தாகவும் முடியும். இந்த மாய யதார்த்த நிகழ்வுகள் அந்தந்தப் புத்தகக் குறிப்புகள் மூலம் எவ்வாறு நிகழ்கின்றன, அவரவர் பிரச்னைகளுக்கு எப்படியெப்படி தீர்வு கிடைக்கிறது என்பதுதான் நாவலின் நடை பயணம். நடந்து கொண்டிருக்கும் இந்த அதிசயங்களைமனதுக்குள் அசைபோட்டு, அதையே கடைசியில் ஒரு நாவலாக எழுத முனைகிறாள் சந்திரவதனா. புத்தகங்களுக்கு நடுவே நாகம் வருகிறது. அது அருகிலுள்ள ஒரு மரத்தடிக்கு மாதவனை அழைத்துச் செல்கிறது. அங்கே ஒரு அதிசயத்தைக் காண்கிறான் அவன். இறந்து போன அப்பா தன்னோடு பேசியதாக உணர்கிறான். திருலோக சீதாராம் இக்கதையில் திருலோக ராம் சுந்தராக நடமாடுகிறார். இப்படியான அதிசயங்கள் விரவிக்கிடக்கின்றன இந்நாவலில். நீலமேகத்தின் மனைவி பவித்ராவின் காதலன் முகுந்தன் மீண்டு வருகிறான் நாவலின் கடைசி அத்தியாயத்தில். அவளின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு பசுமையான பழைய நினைவுகளில் ஒன்றிப் போய் அந்த ஊரிலுள்ள ஒரு பழைய புத்தகக் கடையில் சென்று மொழி பெயர்ப்பு நூல் ஒன்று வாங்கும்போது அதிலுள்ள சில பக்கங்கள் அவனை அதிசயத்துக்குள்ளாக்குகின்ற என்பதோடு இந்நாவல் நிறைவு பெறுகிறது.    நூற்றுச் சொச்சம்  பக்கங்களில் நிறைய அதிசயங்களை  உள்ளடக்கி பிரமிக்க வைக்க வேண்டும் என்கிற முனைப்பில் விறுவிறுப்பாக இதயா ஏசுராஜ் எழுதியுள்ள இந்நாவல் புதிதாக நாவல் எழுத யத்தனிக்கும் இளம் படைப்பாளிகள் அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய ஒரு முக்கிய நாவல்  என்று உறுதியாய்ச் சொல்லலாம்.      அடுத்தடுத்த நாவல்களில் இன்னும் பிரமிக்கத்தக்க அதிசயங்களை அவர் நிகழ்த்த வேண்டும் என்று நாமும் அவரை வாழ்த்துவோம்.                            ----------------------------------------------                                    


                                                                 
     


கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...