13 ஜூலை 2019

பிராமணீயம்

பிராமணீயம்

அடுத்து பிராமணர்கள் வேறு எந்த ஜாதியரையும் அடக்கி விட்டார்களாம், அதற்கு ஆன்மீகம் என்பது ஆயுதம், சூழ்ச்சி என்பார்கள்.

பிராமணர்கள் மற்ற வர்ணத்தினர் தந்த ஞான செல்வத்தினை ஜாதி வர்ண பேதமின்றி எப்படி பயன்படுத்தினார்கள் என்பதை காண்போமா?

பிராமணர்களை பெரும்பாலும் அடையாளம் காட்டுவது பூணல். க்ஷத்ரியர்கள், வைசியர்கள் பூணல் அணிவதை பெரும்பாலும் கைவிட்டு ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்ட காலத்தில் பூணல் பிராமணர்களின் தனி அடையாளம் என்கிற ரீதியில் வெறுப்பாளர்கள், எதிர்பாளர்களால் அடையாளப் படுத்தப்படுகிறது.

பூணலில் முக்கியமானது தந்தை மகனுக்கு உபதேசிக்கும் “காயத்ரீ” என்னும் மந்திர உபதேசம். இந்த காயத்ரீயை கண்டு வெளிப்படுத்தியவர் (திருஷ்டா) விஸ்வாமித்ரர். இவர் க்ஷத்ரியர். பிறப்பால் பிராமணர் அல்ல. பிராமணர்களின் முக்கிய சடங்கான பூணலில் உபதேசிக்கப்படும் மந்திரம் பிராமணர் கண்ட மந்திரமல்ல.

பிராமணன் காயத்ரீ ஜபத்தினாலேயே மோக்ஷத்தினையடைகிறான். இதில் சந்தேகமில்லை. மனு இரண்டாம் அத்தியாயம் 87 வது ஸ்லோகம்

பிராமணர் பெரிதும் போற்றும் ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாமம் மகாபாரதத்தில் உள்ளது. இன்றும் ஜோதிடர்கள் பிராயாச்சித்தம் என பிராமணர்களுக்குக்கூட கூறுவதில் முக்கியமானது ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம்.
இந்த ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாமம் க்ஷத்திரியரான ஸ்ரீ பீஷ்மரால் சொல்லப்பட்ட ஸ்துதி. இதையும் பிராமணர்கள் உருவாக்கவில்லை மாறாக வர்ண பேதமின்றி ஸ்துதித்து வணங்குகின்றனர்.

அடுத்து பிராமணர்கள் போற்றும் இதிகாசம் இரண்டு அதில் முதல் ஸ்ரீ ராமாயணம் அதை எழுதியது பிராமணரா? என்றால் இல்லை. ஸ்ரீ வால்மீகி என்னும் ரிஷி அவர் வேடுவகுல ஜாதி, அடுத்த காவியமாம் உயர்ந்த தத்துவ நூலாம் கீதையைக் கொண்ட ஸ்ரீ மஹாபாரதம் அதை எழுதியவரான ஸ்ரீ வியாசர் அவரது தாயோ ஒரு மீனவ பெண்மணி.

கீதையை சொன்ன ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்ததோ இடையர்குலம். பிராமணனாகிய ராவணனை வதம் செய்ய ஸ்ரீ ராமன் அவதரித்ததோ க்ஷத்ரியர் குலம்.

பிராமணர் அல்லாத குலத்தில் பிறந்தார்கள் என்பதற்காக ஸ்ரீ ராம , ஸ்ரீ கிருஷ்ண நாமங்களை பிராமணர்கள் ஜபிக்காமல் இல்லை. சொல்லப் போனால் அதை உச்சரித்துக்கொண்டே காலம் கழிப்பது மோட்சத்திற்க்கு வழி என பலர் வாழ்கின்றனர்.

தசாவதாரங்களில் இரண்டு அவதாரங்கள் மட்டுமே பிராமண அவதாரம் அவை வாமன மற்றும் பரசுராம அவதாரங்கள் அவை இரண்டுக்கும் பாரத தேசமெங்கும் கோவில் இல்லை என்பது தானே உண்மை. பிராமணீயத்தினை உயர்த்திட எண்ணியிருந்தால் இந்த இரண்டு அவதாரங்களுக்குக்தானே கோவில்கள் கட்டியிருக்கவேண்டும்.

தொட்டதற்கெல்லாம் பிராமண சூழ்ச்சி என உணர்ச்சிவசப்படும் “பகுத்தறியாதவர்கள்” இந்த வழிபாட்டு முறையினை சிந்திக்கவேண்டும்.
மஹாபாரதம் சாந்தி பர்வம் 85வது அத்தியாயம் ராஜ தர்மத்தினை பற்றி பீஷ்மர் தர்மருக்கு உபதேசிக்கிறார் அதில் அமைச்சர்களினை தேர்வு செய்வது குறித்து கூறும்போது....

பீஷ்மர், பிரும்மச்சர்யத்தினை முடித்த, கற்ற பரிசுத்தமுள்ள பிராமணர்கள் நால்வரையும், பலசாலியான ஆயுதமுள்ள 18 க்ஷத்திரியர்கள், நிறைந்த பொருளுள்ள 21 வைசியர்களையும், மூன்று சூத்திரர்களையும் அமைச்சர்களாக்க வேண்டும் என கூறியுள்ளார்.

முற்றிலுமாக நான்காம் வர்ண ஜாதியினரை அடிமையாக்கிவிட்டது உங்கள் மதம் என்னும் வாதம் இங்கு அடிபடுகிறது.

பெருமாள் கோவில்களில் எல்லோரது தலையிலும் வைக்கப்படும் “சடாரி” என்பது நம்மாழ்வார் எனப்படும் பிராமணரல்லாத அதுவும் வர்ணத்தின்படி நான்காம் வர்ணத்தினர் காலடிகள் / திருவடிகள்.

எந்த பிராமணரின் காலடிகளும் திருவடிகளாக சடாரியாக கோவில்களில் இல்லை என்பதையும், ஜாதி வர்ணம் என்பதை விலக்கி ஞானத்தினை முன்னிறுத்தியதே நமது தேசத்தின் பண்பாடு, ஆன்மீகம், மதம், கலாசாரம் மற்றும் உயர்ந்த மரபு வழியாகும்.

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...