21 அக்டோபர் 2018

தினமணி கதிர் (21.10.2018) ல் என் சிறுகதை "என்ன பயன்?"

சிறுகதை                                                  “என்ன பயன்?”                                                                                                      
      வீடு நெருங்க நெருங்க பயமாயிருந்தது கைலாசத்திற்கு. திரும்பவும் வந்த வழியே இன்னும் கொஞ்ச தூரம் போய் வருவோமா என்று நினைத்தார். மேகங்கள் கருகருவென்று திரண்டு நின்று பயமுறுத்தின. எந்த நிமிடமும் மழை இறங்கி விடலாம். இருக்கும் நிலையைப் பார்த்தால் குறைந்தது ஒரு மணி நேரமாவது விட்டு அடித்துத்தான் ஓயும்போல் தெரிகிறது. ஒழுங்கா வீடு போய்ச் சேர்றியா…இல்ல ஆளைத் தூக்கட்டுமா…? என்று மிரட்டுவதுபோலிருந்தது. சிலுசிலுவென்ற காற்றுக்கு நடுவே மழைத் துளிகள் புள்ளிகளாய் உடம்பில் தெறித்தன. என்ன செய்வதென்று தெரியாமல் நிலை கொள்ளாமல் ஒரு நிமிடம் அப்படியே நின்றார் கைலாசம். சாலைக்கு ஓரமாயும் இல்லாமல், நடுவிலும் இல்லாமல் ரெண்டும் கெட்டானாய்த் தான் நிற்பது தெரிந்துதான் இருந்தது. ஓரிரு சைக்கிளும், பைக்குகளும், ஸ்கூட்டர்களும் அடுத்தடுத்து வந்து தடுமாற வைத்தன. கடந்து செல்பவர்கள் முறைத்தவண்ணம் விலகிப் போனார்கள். மழை இறங்குவதற்குள் வீட்டை அடைய வேண்டும் என்கிற பரபரப்பும் பதட்டமும் எல்லோருக்கும் இருப்பதாய்த் தெரிந்தது. காது கிழிய ஒலிக்கும் உறாரன் ஒலிகள் அதை உணர்த்தின.
      ஓரமா நில்லுய்யா…செத்துத் தொலையப்போறே….. – எவனோ இவரை நோக்கிக் கையை நீட்டிக் கோபமாய்ச் சொல்லிக் கொண்டே பைக்கில் கடந்து போனான். அதன் வேகச் சத்தம் இவரைப் பதறடித்தது.
      அவன் சொன்ன வார்த்தையில் இவருக்குக் கோபம் வரவில்லை. மாறாக இன்னும் யாரேனும் சிலர் தன்னை ஓங்கிக் குரலெடுத்துத் திட்ட மாட்டார்களா என்று இருந்தது. உடல் முழுக்க ஒரு பலஉறீனம் பரவியிருப்பதை நன்றாய் உணர்ந்தார். கால்கள்கூட லேசாய் அவரையறியாமல் ஆடின.  பூமியில் பாதம் பதித்து நிற்பதற்குரிய தெம்பு இல்லைதான். எதிரே தெரியும் மனிதர்கள் தெளிவான உருவமற்றவர்களாய்க் கடந்து செல்வதைப் பார்வை அறிய கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டார். அப்போதும் கலங்கிய நிலையே தொடர்வது மனதுக்குள் பயத்தை உண்டு பண்ணியது.
      ரெண்டு நாளாய்ச் சரியான தூக்கம்  இல்லாதது காரணமாய் இருக்கலாம் என்று மனதிற்குள் சமாதானம் செய்து கொள்ள முயன்றார். ரெண்டு மாசமான்னே சொல்லலாம்…மனசு எரிச்சல்பட்டது அப்போதும்.  போகிற போக்கில் இடக்கையால் ஒருவன் அவரை ஓரமாய்த் தள்ளிவிட்டுப் போக….அய்யோ….என்றவாறே பின்புறம் சாய்ந்து தேங்கியிருந்த தண்ணீர் குட்டைக்குள் கால்களைப் பதிக்க, பரவியிருந்த சகதி நளுக்கென்று இழுத்துவிட….தடுமாறி விழப்போனவரை ஓடி வந்து ஒருவர்  தாங்கிப் பிடித்தார். பார்த்து…பார்த்து….
      ஊர் உலகத்தில் இன்னும் நல்லவர்கள், இரக்க சிந்தை உள்ளவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். முகம் தெரியாதவனுக்கு உதவ அவர்கள் தயங்குவதில்லை. யாரும் யோசித்துச் செய்வதில்லை. தன்னை மீறிய அநிச்சைச் செயலாய்த்தான் சட்டென்று முனைந்து உதவுகிறார்கள்.  ஆனால் முகம் அறிந்த, உடலறிந்த, நாற்பது ஆண்டுகள் தன் கூட வாழ்ந்து கழித்த ஒரு ஜீவனைக் கடைசி காலத்தில், கடைசி நேரத்தில்  தான் துன்புறுத்தி விட்டோம். செய்ய வேண்டிய கடமையை சலித்துக் கொண்டே, கோபத்தின் உச்சியில் நின்று, எதற்காக இந்தக் கோபம் என்ற புரிதல் இன்றி, அல்லது புரிந்தும் எரிச்சல் பட்டு, படுக்கையில் கிடப்பவளை மேலும் மேலும் வார்த்தைகளால் துன்புறுத்தி, மனம் விடுபடத் தூண்டி….இன்னும் என்னவெல்லாம்தான் சொல்வது? எதற்காக இப்படிச் செய்தேன்? இப்போதுதான் மனம் வாட்டுகிறது. இத்தனை நாளாய் கோபம்தான் தளும்பி நின்றது. ஓங்கி உதைக்கக் கூட கால் போனது. போதுமான தெம்பில்லை. இல்லையானால் அதுவும் நடந்திருக்கும். பாவம் செய்ய மனசு அஞ்சுவதில்லையோ…! கோபம் கண்ணை மறைக்கும்தான். அறிவையும் அல்லவா சுத்தமாக மறைத்து விடுகிறது. இப்படிப் படுக்கையில் விழுந்து நம்மைப் பாடாய்ப் படுத்துகிறாளே பாவி….!
செத்துத் தொலையப்போறய்யா…… - கொஞ்ச நேரத்துக்கு முன் தன்னைப் பார்த்து ஒருவன் சொல்லிவிட்டுப் போன அந்த வார்த்தைகள்… !!
“செத்துத் தொலை….” – தானும்தானே சொன்னோம்….- சொல்லக் கூடாது என்று தெரிந்தும்தானே சொன்னோம்….கையை முகத்துக்கு நேரே நீட்டி…எரிச்சலுடன்….பல்லைக் கடித்து….சொல்லியிருக்க வேண்டாமோ? இப்போது நினைத்து என்ன பயன்? சிதறிய சொற்களை அள்ள முடியுமா?
போ…என்னை விட்டுப் போ…நானாவது நிம்மதியாயிருக்கேன்… - நிறையச் சொல்லியாயிற்று. வார்த்தைகளுக்குப் பஞ்சமேயில்லை. எதற்குப் பயன்படுத்துகிறோம், ஏன் பயன்படுத்துகிறோம் என்கிற விவஸ்தைதான் கிடையாது. முடியுமானால் எல்லாவற்றையும் பேசி விடுவதுதான் மனித இயல்போ…? இயல்பா அல்லது சிலருக்கான முத்திரையா?
உனக்கு எண்பது…எனக்கு…? எண்பத்தஞ்சு…ஞாபகமிருக்கட்டும்…நானும் கொஞ்சமேனும் தூங்க வேண்டாமா? ராத்திரிப் பூராவும் இப்படி அனத்திட்டேயிருந்தியானா…யாருக்குத் தெம்பு இருக்கு…எழுந்திரிச்சுப் பார்க்கிறதுக்கு? எனக்கென்ன சின்ன வயசா? உன் முன்னாடியே உட்கார்ந்து தவம் கெடக்கிறதுக்கு? இந்த மூத்திர நாத்தத்தோட எவன் இருப்பான்…? உனக்காக என்னெல்லாம்தான் படறது? வீடே கக்கூஸ் மாதிரி ஆகிப்போச்சு….எங்க பார்த்தாலும் பீ நாத்தம்….எவ்வளவு ஃபினாயில் அடிச்சாலும் போவேனாங்குது…கருமம்…கருமம்…எல்லாம் என் தலையெழுத்து…..சாப்பிட உட்கார்ந்தா வாமிட் வருது….சோறு இறங்கினாத்தானே…?
கண்களின் இருபுறமும் வழிந்தோடும் கண்ணீர்….! உணர்கிறாள். சொல்வது புரிகிறது. அல்லது திட்டுகிறோம் என்று தெரிகிறது. மனசு அழாவிட்டால் கண்ணீர் பெருகுமா?
அழு…நல்லா அழு….அதுக்காவது தெம்பிருக்கே….நான் சொல்றது புரியக்கண்டுதானே அழறே….அப்போ… காது நல்லாக் கேட்குது…அதானே அர்த்தம்…பேச மட்டும் முடிஞ்சா…என்ன பேச்சுப் பேசுவே….? பதிலுக்குப் பதில் சொல்லாமயிருப்பியா? அதான் ஆண்டவன் இப்டிப் படுக்கப் போட்டிருக்கான். கொடுத்தான் தண்டனை…எனக்கென்ன வந்தது? என்னையும் போட்டுப் படுத்தறானே…? நானும்தான் பலிகிடா…! விட்டுட்டா ஓட முடியும்? அதான் சீரழியறேன்…
என்னவெல்லாம் சொல்லி விட்டேன்? இத்தனை சீக்கிரம் போகும் என்று தெரிந்திருந்தால் பேசியிருக்க மாட்டேனோ…? ஒரு ரெண்டு மாதம் கழிவதற்குள் என்னவெல்லாம்  ஆர்ப்பாட்டம்? அடங்கியிருக்க முடியவில்லையே…! வயசானா கூர் கெட்டுப் போகும்ங்கிறது சரிதான்…ஆனாலும் நாப்பது வருஷம் வாழ்ந்தவளோட இப்டியிருக்கலாமா? பேசினது பேசினதுதானே..வார்த்தையைச் சிதற விட்டா திரும்பப் பொறுக்க முடியுமா? போயிட்டா…ஆளில்லை…ஆனா நான் சொன்ன வார்த்தைகள்? பேசின பேச்சுக்கள்…? கடவுளே…இப்பத்தான் என் அறிவு தெளிஞ்சிதா? இவ்வளவும் நடந்தாத்தான் ஞானம் பொறக்குமா? இப்பயும் ஞானம் பொறந்துடுத்தா? இல்ல இதுவும் பிரமையா? அவ்வளவு ஈஸியாவா ஞானம் வந்துடும்…ஒரு நிகழ்வுக்கே சந்நியாசியா…? எப்டி சாத்தியம்? சந்நியாசின்னா எல்லாத்தையும் விட்டவன்னு அர்த்தமாயிடுமா? எவன் சொன்னான்?
தேசம்…ஞானம்..கல்வி…..ஈசன் பூசையெல்லாம்…காசு முன் செல்லாதடீ….குதம்பாய் காசு முன் செல்லாதடி…..-அடச் சீ…எந்நேரமும் சினிமாப் பாட்டுத்தானா…? காதுல விழுந்து தொலைக்குதே…!
எந்தச் காசு? ஆள் போனாலும் அவ பென்ஷன் பணம் பாதிக்கு மேலே கிடைக்குமே? அந்தத் தெம்பா? அத வச்சிண்டு ஃப்ரியா தின்னுட்டுத் திரியலாமே…அந்தத் திமிரா? அதுவா கண்ணை மறைச்சிது? நாளைக்கு எனக்கு உடம்புக்கு வராதுன்னு என்ன உத்தரவாதம்? வந்தா பார்க்கிறதுக்கு ஆள் கிடைப்பாளா? இதோ நானிருக்கேன்னு யார் வந்து நிப்பா? பெத்தது இதோ இருக்கேன்னு ஒண்ணு கூடக் கிடையாதே….! அடக் கடவுளே…அம்புட்டு யோசனையும் இப்பத்தான் தோணணுமா? புத்தி கெட்டுப் போயி…சித்தம் தெளிஞ்சு என்ன பயன்? அவ இல்லையே…! படுக்கைலயாச்சும் படுத்திண்டிருக்கலாமோ? இப்டிப் போயிருக்க வேண்டாமோ? கிடந்த கோலத்துல அவ சொல்லச் சொல்ல வீட்டுக் காரியம் பார்த்திருக்கலாமோ? ஏன் அதுக்கான பொறுமை இல்லாமப் போச்சு? வயசு மட்டும்தான் ஆகியிருக்கா தனக்கு? எண்பத்தஞ்சுக்கான எந்த மெச்சூரிட்டியும் இல்லையோ? சராசரிக்கும் கீழால்ல இருக்கேன்….!
ழைத்துளி பலமாய் விழுவதை உணர்ந்தார். உடனடியாக எங்காவது ஒதுங்க வேண்டும். நடையைக் கவனமாய் எட்டிப்போட்டு மூடியிருந்த ஒரு கடை மறைப்பில் நின்று கொண்டார். நாலைந்துபேர் சட்டுச் சட்டென்று வந்து நெருக்க ஆரம்பித்தார்கள்.
ச்சே….ரோட்டுலதான் இடிபிடின்னா இங்கயுமா? மனுஷன் ஒதுங்கி நிக்கக் கூட உரிமையில்லயா? வந்து இடிக்கிறதப்பாரு….காட்டான் மாதிரி….
இங்க பார்றா….அய்யா சலிச்சிக்கிற்ராரு…ஏன்யா…நீ மட்டுந்தான் நனையாம நிக்கணுமா? ஒதுங்குய்யா…..ஆளும்…மண்டையும்….
நன்னா நில்லுங்கோ…யாரு வேண்டான்னா….நா அப்டிப் போய்க்கிறேன்….-சொல்லிவிட்டு அகன்று பக்கத்துக் கடை வாசலில் போய் ஒண்டிக் கொண்டார் கைலாசம். உடனே பேசிப்புடறாங்களே…! வாயுல வந்தபடி..…என்ன திமிர்…?
நீ பேசலியா…? நீ உன் பெண்டாட்டியப் பேசலியாங்கிறேன்…தான் வேலைக்குப் போயி உனக்கு ஆக்கிப் போட்டாளே…! அடங்கிக் கிடந்தியா நீ? என்ன துள்ளுத் துள்ளினே? என்னெல்லாம் நாக்கு மேல பல்லுப் போட்டுப் பேசினே? நாக்குல நரம்பு உண்டா உனக்கு? கட்டின பொண்டாட்டிய எவனாவது அப்டிப் பேசுவானா? கடவுளுக்கே அடுக்குமா? செத்துப் போ…செத்துப்போன்னு எத்தனை வாட்டி சொல்லி துன்புறுத்தியிருப்பே…? அந்த வார்த்தையோட உஷ்ணம் அறியுமா உன் உடம்பு? நாளைக்கு நீ படுக்கைல விழமாட்டேங்கிறது என்ன நிச்சயம்? அப்போ? சீந்துவாரில்லாமச் சீரழியப் போறே….ஞாபகமிருக்கட்டும்….
யப்பா…சாமி…என்னெல்லாம் மனசுல உதிக்குது? இப்பத்தான் அறிவே வேலை செய்யுதோ? கடவுளே…என்ன மட்டும் ஏன் வச்சிருக்கே…கூப்டுக்கோயேன்…நானும் அவளோடயே போய்ச் சேர்ந்திருப்பேனே…? இன்னும் என்னெல்லாம் சீரழிவு? தனியா…அநாதையாக் கிடந்து சாகணுமா? அதான் வீடுன்னாலே பயமாயிருக்கோ…?
போகாமல் இருப்பதற்கு மழை ஒரு சாக்கு. வீட்டில் என்னவோ பயமுறுத்துகிறது. பகலிலேயே அந்தத் தனிமை ஆகவில்லை. இரவை எப்படிக் கழிப்பது? அதிலும் அவள் படுத்திருந்த அந்த அறைப்பக்கம் அவர் செல்வதேயில்லை. இந்தப் பக்கம் உறாலில்தான் படுத்துக் கொள்கிறார். அறைக்கதவைச் சாத்தி விடுகிறார். அது என்ன இழவோ…! கதவு லேசாய் அடிக்கடி அடித்துக் கொள்கிறது. யாரோ தட்டுவது போல….மேல், நடு, கீழே என்று மூன்று தாழ்ப்பாள்களையும்தான் போட்டிருக்கிறார். ஆனாலும் கேட்கிறது. ஒரு வேளை மனப் பிராந்தியோ….? இத்தனை நாள் இந்தச் சத்தமில்லையே…! மடையா…மடையா…இத்தனை நாள் எங்க சாத்தினே கதவை…மூளை கெட்டவனே…!
த….ண்…ணீ…..தண்ணீ…..ம்….ம்….ம்…..!!! சொட்டு ஜலம் விடறேளா தொண்டைல….
எப்பப் பார்த்தாலும் என்ன தண்ணீ? கொண்டு வந்து  கொடுத்தாலும் நிறையக் குடிக்கிறியா? ஒரு வாய்….ஒரே ஒரு வாய்…அதுலயும் பாதி வழிஞ்சிடுது…முழுங்கக் கூடச் சக்தியில்ல….அப்றம் என்ன தண்ணி வேண்டிக்கிடக்கு….என் பிராணனை வாங்குறதே உனக்கு வேலயாப் போச்சு….ஒரு மணி நேரம் தொடர்ச்சியாத் தூங்க முடியுதா…? ராத்திரி…பகல் இப்டியே கழிஞ்சா…அப்புறம் நாந்தான் என்ன செய்ய முடியும்….? அநியாயம்…அநியாயம்…நல்லா மாட்டிண்டேன்…இருக்கவுமில்லாம, போகவும் ஏலாமே…
போய் விட்டாள். மூன்று நாளாயிற்று. தொலை…போய்த் தொலை…என்று சொல்லி கடைசியில் தொலைந்தே விட்டாள். உங்களுக்கு என்னால சிரமம் வேண்டாம்…நன்னா இருங்கோ…. – கண்ணீரால் கதை பேசி, காணாமலே போய்  விட்டாள்.
என்னைத் தனியனாக்கிட்டுப் போறதுல அம்புட்டு சந்தோஷம்…இல்ல….? கெடந்து திண்டாடட்டும்….அப்பத்தான் புத்தி வரும்….இதானே உன் நெனப்பு….? நான் வருத்தப்படுவேன்னு நினைச்சியோ? அதான் நடக்காது….பாரு….நாம்பாட்டுக்கு ஜாலியா இருப்பேன்…வீட்டுல சமைக்க மாட்டேன்…வெளிலதான் திம்பேன்….கோயில், சினிமான்னு போவேன்…..என் இஷ்டத்துக்குச் சுத்துவேன்…யாரும் என்னைக் கேட்க முடியாது…ஏன் இப்டித் தண்டச் செலவு பண்றேள்னு நீயும் கேட்க முடியாது….எல்லாம் என் இஷ்டம்…..உன்னோட கஷ்டப்பட்டேனோன்னோ…அதுக்குப் பலன்…பாரு…செய்றேனா .இல்லையா பாரு….ஒத்தையா இருந்து கழிச்சுக் காட்டுறேனா இல்லையா பாரு…என் உயிரை அத்தனை சீக்கிரத்துல எமன் கொண்டு போக மாட்டான்…ஏன்னா அவனுக்கு என்னைப் பிடிக்காதாக்கும்…..அதுனாலதான் விட்டு வச்சிருக்கான்…ஒத்த மரத்துக் கொரங்காட்டம் அலையப் போறேன்…மரத்துக்கு மரம் தாவிண்டு கெடப்பேன்…மேலேருந்து பாரு…பார்த்து ரசி….ரசிச்சுச் சிரி….அப்டியாச்சும் உன் ஆத்மா சாந்தியாகட்டும்….உன்னைப் படுத்தினதுக்கு எனக்கு இதுவும் வேணும்…இன்னமும் வேணும்….
எல்லாம் நினைத்துப் பார்த்தாயிற்று. சொல்லிக் கொண்டாயிற்று. புலம்பித் தள்ளியாயிற்று.  போன பின்னால்தான் தெரிகிறது அந்தத் தனிமை.   அதன் தாக்கம்….அரூப நிழலாய் வலம் வருகிறாள் வீட்டில்…எங்கு திரும்பினாலும் நோக்குகிறாள். என்ன என்று கேட்கிறாள். சாப்பிடறேளா…? என்று உபசரிக்கிறாள். தண்ணி வேணுமா என்கிறாள். கடைக்குப் போய்ட்டு வர்றேன் என்கிறாள். போய்த் திரும்ப வந்து கதவைத் தட்டுகிறாள். காலிங் பெல்லை அமுத்துகிறாள். பாத்ரூமில் குளிக்கும் ஓசை. துணி கசக்கும் சத்தம். ஈரப் புடவையோடு வெளித்தோன்றும் காட்சி. சாமி படத்தின் முன்னால் நின்று உச்சரிக்கும் ஸ்லோகம்…மணியடித்து சூடம் ஏற்றி தீபாராதனை செய்யும் நளினம். மாறாத அந்த வளையல் ஓசை….! வீடு முழுக்க நிறைந்திருக்கும் அந்த மங்கல ஒலி…. அடடா...எத்தனை மங்களகரமான நிகழ்வுகள்…! எத்தனை மறக்க முடியாத காட்சிகள்…‘! வீடே கோயில்…கோயிலுக்குள் அவள் தெய்வம்….!
ஐயோ…! அநியாயமாய் எல்லாமும் தவற விட்டேனே…? இப்போது நினைத்து என்ன பயன்? ஒருவர் உயிரோடு இருக்கையிலேயே அவரின் பெருமைகள் உணரப்பட வேண்டாமா? ஒருவர் ஜீவிக்கையிலேயே அவரை மதித்துப் போற்ற வேண்டாமா? இப்படியா போன பின்பு புலம்புவது? கிடந்து அழுவது?  இப்படியா இழந்ததை நினைத்து ஏங்குவது? மனிதர்களின் பெருமைகள் அவர்கள் வாழும் காலத்திலேயே உணரப்படுவதில்லையா? உணர்ந்து போற்றப் படுவதுதானே நியாயம்?
எல்லா மனிதர்களும் இப்படித்தான்…ஏன் உலகமே இந்த ரீதியில்தான் இயங்குகிறது என்று கொள்ளலாமா? அதில் நானும் ஒரு அங்கமா? என்னை சமாதானப் படுத்திக் கொள்ள உலகை இழுக்கிறேனா? உலகம் என்ன செய்யும்? உன் புத்தி எங்கே போயிற்று?
கடவுளே…என்ன இப்படி நடந்து கொண்டு விட்டேன்….என் அறிவு ஏனிப்படி மழுங்கியது? புத்தி ஏனிப்படிப் பிசகியது? எனக்கு மன்னிப்பு உண்டா? என் பாவத்துக்கு நானும் வேண்டியதை அனுபவித்துத்தான் கரை சேர வேண்டுமா? கரை சேருவேனா? அதுவாவது கிடைக்குமா எனக்கு?
ஜானகீ….ஜானகி…..வந்து சீக்கிரம் கதவைத் திற…..மழை கொட்டறது.. சொட்டச் சொட்ட நனைஞ்சிண்டு வந்திருக்கேம் பாரு…குளிரு நடுக்கிறது…சீக்கிரம் வா… – தட…தட..வென்று தன்னை மறந்து தட்டித் தீர்த்தபோதுதான்….அவள் இல்லை என்ற பிரக்ஞை வந்தது கைலாசத்திற்கு. எதிர் வீட்டில் ஆளில்லை என்பதை உணர்ந்தபோது…நல்லவேளை…என்று மனசு சமாதானப்பட….என்னவோ ஒரு பயத்தோடேயே கதவைச் சத்தமின்றித் திறந்து, கணத்தில்  வீட்டிற்குள் புகுந்தபோது யாரோ கையைப் பிடித்து உள்ளே இழுத்துப் போட்டது போலிருந்தது.  பயத்தில் வெளிறிப் போய் சட்டென்று வாயிற்கதவைச் சாத்திப்  பூட்டித் தன்னையும் அந்தக் குடிலுக்குள்  அடைத்துக் கொண்டார் கைலாசம்.
                        -------------------------------------------------
                        உஷாதீபன்,                                                                               எஸ்.2 – இரண்டாவது தளம், (ப்ளாட் எண்.171, 172)                                        மேத்தா’ஸ் அக்சயம் (மெஜஸ்டிக் Nஉறாம்ஸ்),                                           ராம் நகர் (தெற்கு)12-வது தெரு,                                                        ஸ்ருஷ்டி ப்ளே ஸ்கூல் அருகில்,‘ மடிப்பாக்கம்                                     சென்னை – 600 091. (செல்-94426 84188)









கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...