03 மே 2015

'“நீ பாதி, நான் பாதி” – செல்லமே மார்ச் 2015 மாதஇதழ் சிறுகதை

10435745_10202631595229670_836205512445110885_n
ல்லா உள்ளே தள்ளி உட்காருன்னு எத்தன தடவை சொல்றது? மண்டைல ஏறாதா? –நெருப்புக் கங்குகள் தெறிக்கும்போதே இருக்கையில் நகர்ந்து பதிய உட்கார்ந்தாள் தேவகி.
என்ன ஒரு பேச்சு? என்னைச் சரி செய்யும் இவன், தன்னை என்று சரி செய்து கொள்ளப் போகிறான்? அம்புகளாய் வந்து தைத்து வேதனைப்படுத்தும் அனல் வார்த்தைகள்.
எத்தனை வருஷமா வண்டில வந்திட்டிருக்கே, டெய்லி சொல்லணுமா? மர மண்டையா நீ?
அப்ப்ப்ப்ப்பா.! தாங்கலடா சாமி….அதான் உட்கார்ந்தாச்சே… …ரோட்டைப் பார்த்து ஓட்டுங்க…
எனக்குச் சொல்லு…….நீ சரியா உட்கார்ந்தாத்தான் ஒளெட்டாம ஸ்டெடியா நா வண்டி ஓட்ட முடியும்….சரியான கழுத்தறுப்பு…!
மூஞ்சி போகும் போக்கையும், திட்டுதலையும் அவ்வளவு போக்குவரத்திற்கிடையிலும் கவனித்தார்கள் சிலர்.. அவனுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டில்லை. கண்மண் தெரியாத பேச்சுதான். ஒரு ஆபீசில் வேலை பார்ப்பவன் இப்படியா தாறுமாறாய்?.
யாருக்குப் பேச உரிமை? எவன் பொறுப்புகளை எடுத்துச் செய்கிறானோ அவனுக்கே உரிமைகள். . திட்டுவதும் கூட!. துரும்பையும் நகர்த்தாத இவனுக்கு?
விடிகாலை ஐந்தரைக்குள் எழுந்து வாசல் தெளிப்பதுமுதல், சதீஷை எழுப்பிப் படிக்க வைத்து, குளிப்பாட்டிப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, கடைசியாய் அவனுக்கும் தனக்கும் மதிய டிபன் எடுத்து வைத்து, வீட்டைப் பூட்டிக் கிளம்புவது வரை அத்தனையும் அவள்தான். கயிற்றினின்று விடுபட்ட பம்பரமாய்ச் சுழலுவாள். தினசரியில் அவன்பாட்டுக்கு மூழ்கியிருப்பான். தேவையில்லாமல் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். என்ன மனசு அது? எப்படியான வளர்ப்பு? இரும்பு மனிதனா?
“உருக்க வேண்டிய பொருள்…அதனிடம் இரக்கம் காட்டிப் பேசுவது தவறுதான்…”
இப்படியுமா வளர்த்திருப்பார்கள்? மாதம் முடிந்தால் சுளையாய்க் கொண்டு வருகிறாளே….ஆபீசிலும் …வீட்டிலும் புயலாய்ச் சுழன்றடிக்கிறாளே…! கொஞ்சமேனும் உதவி செய்வோம் என்று கிஞ்சித்தும் இரக்கம் தோன்றாதா? மனைவி என்றால் கடமைப்பட்டவள், வீட்டு வேலை முழுக்க அவள்தான் …என்று எவன் சொல்லி வைத்தான்?
சாவியக் கொடுத்தியா? நீபாட்டுக்குப் போயிட்டிருக்க? -
இறங்கி நடந்தவள் நின்றாள். ஸாரி…அவசரத்துல மறந்துட்டேன்…
சின்சியராக் கொண்டு விடறேன்ல… சாயந்தரம் வீட்டுக்குப் போயி…ரோட்டுலயா நிக்கிறது? பையனே எதுத்த வீட்ல காத்துக்கிடப்பான்.. அவனையும் வச்சிட்டு அல்லாடணுமா நீ வர்றவரைக்கும்?
ஒன்றுக்கு ஒன்பது வார்த்தைகள். வெறுப்பு மண்டிக் கிடக்கும். இதில்தான் ஆண்மை என்று நினைக்கிறானா?
தியம் டிபனுக்கு அமர்ந்த மாலினி ஆசையாய் அவள் பாக்சைத் திறந்தாள். யேய்…! இன்னைக்கு எங்க மிஸ்டர்தான் சமையல். இந்தா..பாகற்காய் வற்றல் ….மோர் சாதத்துக்கு படுடேஸ்டா இருக்கும்…..அவர்தான் வறுத்தெடுத்தாரு…..
புருஷன வீட்ல வறுத்தெடுக்கிறேன்னு சொல்லு….– தேவகி சொல்ல, எல்லோரும் சிரித்தார்கள்.
அப்புறம் என்னடீ பண்றது? ரெண்டு பேர் வேலை பார்க்கிற வீடுகள்ல அவுங்களும் சிலதை செய்துதான் ஆகணும்…சும்மா பேப்பர் படிச்சிட்டு ஓட்ட முடியுமா?…அட்லீஸ்ட் காய்கறியாச்சும் நறுக்கிக் கொடுத்தாகணும்..அப்பத்தான் கதையாகும்…நாமளே லொங்கு…லொங்குன்னு லோல்பட முடியாது. என்னால ஆகாது சாமி…. இந்தாங்க பிடிங்கன்னு…நான் தூக்கி வச்சிடுவேன். மொண மொணம்பாரு…அதப்பார்த்தா நடக்காது… இல்லன்னா டயத்துக்கு ஆபீஸ் வர முடியாது எங்க கிடக்கு வீடு? நடந்து, பஸ் ஸ்டாப் வந்து ஏறி, திரும்ப இறங்கி, கொஞ்ச தூரம் நடந்தாத்தானே ஆபீஸ்…இந்தப் பக்கம் அவர் ஆபீஸ் இருந்ததுன்னு வச்சிக்கோ…நிச்சயம் விடமாட்டேனாக்கும்.. கொண்டு இறக்கிட்டுப் போங்கன்னு ஒத்தக்கால்ல நின்னுடுவேன்….. – மாலினி அவள்பாட்டுக்கு சபதமிட்டுக் கொண்டிருந்தாள். எல்லோரும் கப்சிப். நிறையப் பெண்கள் பாவம்தானே…!
அந்த தைரியம் ஏன் தனக்கு வரமாட்டேனென்கிறது? மரியாதையா? எதுவும் செய்ய வேண்டுமென்று அவனுக்குத் தோன்றவேயில்லையா? ஏன்? கௌரவக் குறைச்சலாக நினைக்கிறானோ? ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்து இத்தனை ஆண்டுகள் ஆன பொழுதில் கூட அவனைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லையே? துணிமணிகளைக்கூட, வாஷிங் மெஷினில் போட்டு எடுக்கத் தயங்கினால்?
உன் டிரஸ்ஸெல்லாம் என்னால தொட முடியாது.,…நீதான் செய்துக்கணும்….என் பேன்ட், சட்டை எதையும் அதுகூடப்போட்டுடாதே…எனக்குப் பிடிக்காது நான் தனியாப்போட்டுக்கிறேன்..…- சொன்னானேயொழிய செய்ததில்லையே…!
சேர்ந்து இருக்கிறோமா, வாழ்கிறோமா? சேர்ந்து இருப்பவர்களெல்லாம் சேர்ந்து வாழ்வதாய் அர்த்தமாகுமா?. ஒட்டியும் ஒட்டாமலும் ஒரு வாழ்க்கையா?
வயசான காலத்தில் இவனை எப்படி நம்புவது? அப்பொழுதாவது முதிர்ச்சி வந்திருக்குமா? தொட்டபின் பாம்பு என்றும்…சுட்டபின் நெருப்பு என்றும்…பட்டபின்னாவது அறிவானா?
இந்தபார்…நீ சம்பாரிச்சா அது உன்னோட…உன் காசுல நான் சாப்பிடல… எனக்கு பென்ஷன் வரும்…ரிடையர்டமென்ட் பெனிஃபிட்ஸ் வரும்…உன் கையை எதிர்பார்த்திருக்கலை…புரியுதா?
எதுக்காக இதைச் சொல்றீங்க….? என் சம்பளத்தை, வீட்டுக்குன்னு இருக்கிற பாங்க் கணக்குலதான போட்டு வைக்கிறேன்….நீங்கதான தனியா போட்டுக்கிறீங்க….?
அப்டீன்னா? நான் வீட்டுக்குன்னு எதுவும் செய்யலன்னு சொல்றியா? வீட்டுச் செலவுகளுக்குன்னு அந்தப் பைசாவ என்னைக்காச்சும் தொட்டிருக்கனா? எல்லாத்தையும் என் பணத்துலர்ந்துதான செய்றேன்…. பொதுக் கணக்குல கொண்டுவந்து போடணும்னு சொல்லாமச் சொல்றியாக்கும்? உன் வரவு செலவுகளப் பத்தி என்னைக்காச்சும் ஒரு வார்த்தை கேட்டிருக்கனா? ஏன் பேசமாட்ட? சம்பாதிக்கிறோம்ங்கிற திமிருடி உனக்கு….
போச்சு…வாயெடுத்தா இத ஒண்ணு சொல்லிடுவீங்க…என்ன திமிருன்னு எனக்கே புரியல….!
புரியாம ஆடுறதுதான திமிரு…அதுனாலதான் உன்னையெல்லாம் வைக்க வேண்டிய எடத்துல வச்சிருக்கேன்…இருபது முப்பது பேர்களை ஆபீஸ்ல மேய்க்கிற எனக்கு, இது கூடவா தெரியாது? நீயெல்லாம் தூசுடி…..
ஐயோ ராமா? யானைக்கு அர்றம்னா…குதிரைக்கு குர்றமா? எதற்கு எதைச் சம்பந்தப்படுத்திப் பேசுவான் என்று உணரவே முடியவில்லை. வக்ரபுத்தி. நரக வாழ்க்கை. காசு நிம்மதியைக் கொடுக்காது, அது வெறும் காரணி என்பது எப்படி நிரூபணமாகிறது?
எல்லோரும் சாப்பிட்டு முடித்துச் சென்றிருந்தார்கள். டிபன் பாக்ஸ் காலியானதே தெரியாமல் கைஉலர அமர்ந்திருந்தவள் எழுந்தாள். மனதுக்குள் இனம் புரிந்த துக்கம்.
வீட்டிற்குள் நுழைந்த போது அடுப்படியில் விளக்கு எரிவது தெரிந்தது. டிகாக் ஷன் இறங்கும் மணம். பாடம் எழுதிக் கொண்டிருந்தான் சதீஷ்.
வந்திட்டியா…இந்தக் காபியை ஒரு மடக்கு சூடா ஊத்து முதல்ல…- கொண்டுவந்து கொடுப்பதில் கூட ஒரு அலட்டல், அதற்குள்தான் இவன் அன்பும் பொதிந்திருக்கிறதோ?
முட்டாப் பசங்க…..!
என்னவோ முனகிக் கொள்கிறானே..! இன்னைக்கு என்னாச்சோ கடவுளே…?
சூடா சாப்பிடு….எது குடிக்க முடியாததோ அதுதான் சூடு…ஆவிபறக்கக் குடிச்சாத்தான் டேஸ்ட்டு….
என்னடாது இன்னைக்கு அதிசயம்…?. இது நம்ம வீடுதானா? ஈஸ்வரா…..!
…பால்ல பொட்டுத் தண்ணி கலக்கல….கள்ளிச்சொட்டா….காபின்னா இப்டித்தான் இருக்கணும்….எதுலயும் ஒரு ரசனை வேணும்ல…செய்து காண்பிக்கிறேன் பார்….
மலங்க மலங்க விழித்தாள் தேவகி. என்ன உளறுகிறான்? சினிமாவில் ஒரே பாட்டில் ஏழை நாயகன் பணக்காரன் ஆகிவிடுவதைப்போல…
ச்சே…! பெரிய துயரம் தேவி….வர்ற வழிக்கு நம்ப கணேசன் இருக்கார்ல…அவரோட நண்பர் வீட்டுக்குப் போயிருந்தேன்…. மனசு அப்டியே விட்டுப் போச்சு, தெரிமா?-லேசாக வார்த்தைகள் தடுமாறின.
கல்லுக்குள் ஈரமோ?
எங்க ஆபீஸ் பசங்க இருக்கானுங்களே…..அத்தனையும் ஓட்டவாயி… பந்தாக் கேசுங்க…இன்னைக்கு நான் கண்கொண்டு பார்த்தன்பாரு அதுதான் சத்தியமான நிஜம்…
என்னன்னுதான் சொல்லுங்களேன்… - சற்றே உற்சாகம் பிறந்தது இவளுக்கு.
ரொம்பத்தான் அலட்டுறாங்கடீ ஆபீஸ்ல..….சூடேத்துறானுங்க…? பயங்கர டிஸ்கஷன்…
“…………!”
பெண்டாட்டிக்குச் செய்றது கடமை? அதுக்குப் பேரு உதவியா? அவனவன் வீட்டுக்கு அவன் செய்யாம, ரோட்டுல போறவனா வருவான்? பொம்பளைங்க அவுங்க .உடல் நோவை என்னைக்காச்சும் பொருட்படுத்தியிருக்காங்களா? எப்பவும் தன் வீடு, தன் புருஷன், தன் பிள்ளை….இதுதானே நெனப்பு…! இந்த அடிப்படையை எவனும் புரிஞ்சிக்கலைடி..
கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் தேவகி. சூடுபட்ட பூனையாய்த் துடிக்கிறானே?
சடன்னா இன்னைக்கு ஒரு சேஞ்ச்…பொறி தட்டின மாதிரி…இனி எல்லா வேலையையும் நான்தான் செய்யப் போறேன்….அவ்வளவுதான்…என்ன பார்க்கிறே? …இது .செருப்படியினால வந்த மாற்றம்…!
செருப்படியா? என்ன சொல்கிறான்?
புரியலேல்ல….எல்லாப் பயல்களும் மனசுக்குப் போலியாத் திரியறானுங்கடீ…துரோகம் பண்றானுங்க… அதான் விஷயம். ஆனா எங்கயோ ஒரு நிஜம் தழைச்சு நிக்குது… !!
தேவகிக்கு இன்னொரு டம்ளர் காபி வேண்டும் போலிருந்தது. ஐயோ கடவுளே…என்னன்னுதான் சொல்லித் தொலைங்களேன்…இப்டி ஆர்ட் ஃபிலிம் கணக்காப் பேசினா எப்டீ?
என்னுடைய ஒரிஜினாலிட்டியை எப்டி இழந்தேன்னு தெரில….வெரி பேட் டைம்…எங்கம்மா, தங்கச்சிகளுக்கு, அப்டி உதவியா இருந்தவன் நான்… வெட்டி அதிகாரத்தோட, மூடனாட்டம், எம்புட்டு அபத்தமா கழிச்சிருக்கேன்? குனிந்தவாறே பேசிக்கொண்டிருந்தவன் அவளைக் கூர்ந்து பார்த்துச் சொன்னான்….
கணேசன் கூட்டிட்டுப் போன வீட்டுல ஒரு ஊனமுற்றவர்..மனசு திக்குன்னு ஆயிப்போச்சு! அவர்தான் வீட்டு வேலை அத்தனையுமாம்…சக்கர நாற்காலில உட்கார்ந்திட்டு பம்பரமாச் சுத்தறார்… …அந்தம்மா வேலைக்கு போகுது… நாங்க உள்ளே நுழையறோம்… மேடம் டிபன் சாப்டிட்டு இருக்காங்க…அவர் உலர்ந்த துணிகளை மடிச்சிட்டிருக்காரு….தோசை வார்த்து, புதினாச் சட்னி செய்திருக்காரு…எப்டிப் பார்த்தியா? .நம்மைச் சுற்றி உலகம்ங்கிறது எத்தனை சத்தியமான உண்மை? அதை இனிமையாக்கிக்கிறது நம்ம கைலதானே இருக்கு?
என்னவோ புரிந்தது போலிருந்தது இவளுக்கு.
வெளியே சோவென்று மழை கொட்டிக் கொண்டிருந்தது.. மலைபோலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கி விடும்….நம்மை வாழ வி்டாதவர் வந்து நம் வாசலில்….– பக்கத்து வீட்டில் பாட்டு அலறுவது அர்த்தம் பொதிந்ததாயிருந்தது.
தியாகராஜன் தியாகத்திற்குத் தயாராகிவிட்டானா? இப்படியெல்லாமும் அதிசயம் நிகழுமா? நம் வீடுதானா? சிரிக்கவா, அழவா? பரமண்டலத்திலிருக்கும் பிதாவே…! மனசுக்குள் மெல்லிய ராகம் இழைந்தது தேவகிக்கு.. வியப்பு விலகாமல் கேட்டாள்.
நாம இன்னைக்கே அவங்களைப் போய் பார்க்கலாமா….!.?
----------------------------------------

























































கருத்துகள் இல்லை:

  'பிரகிருதி”  - சிறுகதை - வாசகசாலை 16.03.2024 இதழ்  பிரசுரம் எ ன் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் ச்  உசரித்தால் கூட சட்டெ...