02 டிசம்பர் 2014

தி.ஜானகிராமனின் “அமிர்தம்”- நாவல்

படித்ததில் பிடித்தது -

----------------------------------------

 

 

2014-11-30 19.55.08 thija-logo2 timthumb

படித்தது - “கிராம ஊழியன்” என்ற இதழில் தொடராக வந்து பேசப்பட்ட தி.ஜா.ரா.வின் “அமிர்தம்“ என்ற முதல் நாவல்தான் நான் இன்று படித்து முடித்தது. அவரது முதல் நாவல் என்றே என்னால் இதை எண்ண முடியவில்லை. அத்தனை அனுபவச் செழுமையோடு கூடிய எழுத்து. தாசி குலப் பெண்ணான அமிர்தம் சேற்றிலே மலர்ந்த செந்தாமரையாக காதல், அன்பு இவற்றின் பொக்கிஷமாகத் திகழ்கிறாள். பல நாவல்கள் படித்துக் கொண்டிருக்கும்போதே...சரி..கடைசில என்னவாகுது பார்ப்போம் என்று கடக்க வைத்து விடும். அல்லது எதற்கு நேரத்தை வீண் பண்ணிக் கொண்டு என்று மூடி வைக்க உதவும். இது அப்படியில்லாமல் கடைசிவரை நம்மைக் கை கோர்த்து அழைத்துச் செல்கிறது. அழகிய சொற்பிரயோகங்கள் மிகுந்த கலையழகோடு ஆழ்ந்து நம்மை ரசிக்க வைக்கின்றன. நாவலுக்கு ஒரு அற்புதமான முடிவைக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர். உள்ளார்ந்த மனசாட்சியின் வெளிப்பாடு அது. கடைசிப் பக்கங்களை எட்டும்போது இந்த நாவல் இப்படித்தான் முடியும் என்று யாரேனும் அவரிஷ்டத்திற்கு எதிர்பார்த்தார்களென்றால் நிச்சயமாக அது அப்படி இருக்காது. அப்படியான சற்றும் கணிக்க முடியாத , மகுடம் சூட்டினாற்போன்ற முடிவாக அமைவது பெரும் சிறப்பு. அது தி.ஜா.ரா.வின் பெருமை.

கருத்தைக் குலைக்கும் அமிர்தத்தின் சௌந்தர்யம். அவிழ்ந்து புரண்ட அந்தக் கேசபாரம், அங்க புஷ்டி. இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்கும் கொடியுடல். கலங்கிய கண்கள். நனைத்து விட்டாற்போல் மின்னிய இமை மயிர்கள். நகரத்தில் எங்கு சென்றாலும் காட்சியளிக்கும் உன்னத கோபுரம்போல், அமிர்தத்தின் அலட்சியத்தைப் பற்றிய நினைவுகளுக்கு நடுவே, அவளுடைய சௌந்தர்யம் அவர் நெஞ்சில் ஆடிக் கொண்டிருந்தது. பரீட்சை முடிவை எதிர்பார்ப்பவன் போல தோல்வியை நினைக்கக் கூசித் தன்னையே நம்பிக்கையுடன் தேற்றிக் கொண்டார். காரணம் அவர் பரம்பரையில் இதுவரை ஒருவரும் குடும்ப பாசத்திற்கு வெளியே வேறு பிரேம பாசங்களில் கட்டுண்டதில்லை....
இப்படி வரிக்குவரி சொல்லிக் கொண்டே போகலாம் இந்த நாவலின் தேனாய் இனிக்கும் எழுத்து வன்மையின் ஸ்வாரஸ்யத்தை அனுபவித்து மகிழுங்கள். ஒரு அற்புதமான நாவலைப் படித்த திருப்தி, நிறைவு எனக்கு.

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...