14 ஜனவரி 2014

“பழுத்த அனுபவம்” – நடிகர் வி.கே.ராமசாமி பற்றிய கட்டுரை-காட்சிப்பிழை டிசம்பர் 2013 ல் வெளிவந்தது

----2013-10-27 08.19.01 ------------------2013-10-27 08.25.49 --------------------2013-10-27 08.55.28 ---------------------------------

ல்லோருக்கும் பிடித்தமான, யாராலும் வெறுக்க முடியாத ஒரு நடிகர் இருக்க முடியும் என்றால் அவர் திரு வி.கே.ராமசாமி. இதில் வெறுப்பதற்கு இருக்கிறது? என்று கேள்வி விழலாம். எப்படிப் பலரையும் விழுந்து ரசித்தார்களோ, அப்படியே சிலரை ஒதுக்கவும் செய்தார்கள் முந்தைய தமிழ் சினிமா ரசிகர்கள்.

வந்துட்டான்யா...பெரிய்ய்ய போரு....என்று சொல்லிக் கொண்டே வெளியே கொரிக்கப் போய் விடுவார்கள். அக்கடா என்று காற்று வாங்க வந்து நிற்பார்கள். அல்லது இதுதான் சமயம் என்று கழிவறை நோக்கிச் செல்வார்கள். அப்படி ஒரு சிலர் இருந்தார்கள். அல்லது அவர்கள் நடித்த காட்சி அப்படி இருந்தது. ஆனால் யாராலும் அம்மாதிரி ஒதுக்கப்படாத, ஒதுக்க முடியாத, விரும்பத்தக்க, கலகலப்பான, சீரியஸான நடிகர் வி.கே.ஆர்.

இத்தனைக்கும் ஏற்றுக் கொண்டிருக்கும் வேஷத்திற்குத் தகுந்தமாதிரிக் குரலை மாற்றிப் பேசுவதோ, நடையை, உடல் மொழியை நெளித்துக் கொள்வதோ, வசனங்களை வழக்கமான போக்குக்கு மாறாக வலியக் கோணல்படுத்தி உச்சரிப்பதோ என்கிற சில்மிஷங்களெல்லாம் கிடையாது. அம்மாதிரியான முயற்சிகள் எல்லோருக்கும் படம் முழுக்கக் கூட வந்து ஒத்துழைத்ததில்லை. நடிகர் திலகம் போன்று ஓரிருவரைத் தவிர. உதாரணம் பலே பாண்டியாவில் வரும் மூன்றில் ஒன்றான விஞ்ஞானி கதாபாத்திரம்.அதில் அவர் மாறுபட்ட குரல் நடையில் பேசும் முறை. நடிகர்திலகத்திற்கு அது சில்மிஷமெல்லாம் இல்லை. கல்மிஷம் இல்லாமல் உடலோடு, மனதோடு, ஒன்றியிருந்த திறமை.

என்ன இவன் சொல்ல வருகிறான் என்று உங்களுக்குத் தோன்றக் கூடும். வில்லனாகவே நடித்து, பின்னால் நகைச்சுவை என்று தன்னை ஸ்தாபித்துக் கொள்ள முயன்ற அசோகனின் நடிப்பையும், உடல் கோணல் மொழியையும், வசனம் பேசிய தன்மைகளையும், ஓNஉறா இந்தப் படத்துல அவர் காமெடில்ல பண்றாரு என்று பார்ப்பவர் புரிந்தும் புரியாமலும் சிரிப்பதா, அழுவதா என்று தடுமாறியதையும், வி.கே.ஆரோடு பொருத்திப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் சொன்னது நன்றாகப் புரியும்.

ஏற்காத வேஷமில்லை. பேசாத வசனமில்லை. முதலாளி, தொழிலாளி, அப்பா, தாத்தா, அண்ணன், தம்பி, கணக்கப்பிள்ளை, வேலைக்காரன், கூலிக்காரன், கடத்தல்காரன், காவல்காரன், போலீஸ், இன்ஸ்பெக்டர், அதிகாரி, தொழிலதிபர், டாக்டர், வக்கீல், குமாஸ்தா, ராஜா, மந்திரி, புலவன், சேவகன், தூதுவன், அடப்பக்காரன், நாயகனுக்கு நண்பன், விதூஷகன், நல்லவன், கெட்டவன், பைத்தியம், கோமாளி, இன்னும் என்னென்ன உங்களுக்குத் தோன்றுகிறதோ அத்தனையையும் சேர்த்துக் கொள்ளுங்கள் அப்படி எல்லா விதமான வேஷங்களையும் செய்து முடித்து விட்டவர் இவர். ஆனாலும் ஒரு ரசிகனுக்கும் இவர் அலுக்கவில்லை. வி.கே.ஆரா...? என்று அவர் வந்தால் நெருக்கமாகத்தான் உணர்ந்தார்கள்.

ஏற்றுக் கொண்டிருக்கும் எந்தக் கதாபாத்திரத்திற்குள்ளும், வேஷத்திற்குள்ளும் சென்று “பச்“சென்று பசை ஒட்டிய மாதிரி உட்கார்ந்து கொள்ளும் திறமை இவருக்கு உண்டு. இத்தனைக்கும் நாம் அடிக்கடி கேட்டுக் கேட்டு மகி்ழ்ந்த அதே வெண்கலக் கணீர்க் குரல்தான் எல்லாப் படத்திலும் ஒலிக்கும். ஆனால் பேசும் வசனங்கள் பளீரென்று ஸ்ருதி சுத்தமாக டிஜிட்டலைஸ் பண்ணியது போல் கேட்கும். ஏற்ற இறக்கத்தோடு காதுக்கு வந்து சேர்ந்து அதன் பொருளை, அந்தக் கதாபாத்திரத்தின் குணாதிசயத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தி நிற்கும். முதல் அறிமுகக் காட்சியிலேயே, கதைக்கு ஏற்றாற்போல், அந்தப் பாத்திரமாகவே ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவர் வருவதுபோல்தான் இருக்கும் அவர் அவரும் முதல் காட்சி. வில்லன் பாத்திரம் ஏற்றிருந்தார் என்றால், அவர் மேல் நமக்குக் கோபம் வரும். எரிச்சல் வரும்.. இவன் ஒழிய மாட்டானா என்று இருக்கும். ஏன் வி.கே.ஆர் இதெல்லாம் செய்றாரு? என்று தோன்றும். நகைச்சுவைப் பாத்திரமென்றால் அவரோடு சேர்ந்து நாமும் நம்மை மறந்து சிரித்துக் கும்மாளமிட வேண்டியிருக்கும். அல்லது அவர் சொல்லி முடித்தபிறகு, நினைத்து நினைத்துச் சிரிக்க வேண்டியிருக்கும்.

எதற்கும் சிரித்து வைப்போம் என்பதுபோல்தான் இன்று காட்சிகள் வருகின்றன. அல்லது நம்மை உம்மணா மூஞ்சியாக்கி வெளியேற்றுகின்றன. யப்ப்பாஆஆஆஆஆஆஆஆஆ...கொல்றாங்ஞளே......! என்று. நகைச்சுவை என்பது அத்தனை கடினமான ஒன்றாகத்தான் என்றும் இருந்து வந்திருக்கிறது. கதாநாயகன் நாயகிகள் கதையின் ஓட்டத்திற்கு உதவி, கொடுத்த பாத்திரத்திற்கு ஏற்றாற்போல் செய்து கொண்டே படத்தை நகர்த்திக் கொண்டு போய் விடுவார்கள். ஆனால் நகைச்சுவை என்பது கதையோடு ஒட்டியதாக இருந்தால், பொருத்தமான வசனங்களைக் கொண்டு, அல்லது அந்தக் கதைக்கு ஏற்றாற்போல் அமைந்த நகைச்சுவைப் பாத்திரத்தைக் கொண்டு படம் நகர்ந்தால்தான் நகைச்சுவைப் பாத்திரம் எடுபடும். கதைக்கு இந்தக் கதாபாத்திரமும் தேவைதான் என்பது உறுதிப்படும். நகைச்சுவைப் பாத்திரம் ஏற்கப் பயப்பட்ட நடிகர்கள் உண்டு. அதுதான் அதன் தனித் திறமை.

இது ஒருவகை உத்தி என்றால், கதைக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் தனி டிராக்காக நகைச்சுவைப் பாத்திரம் என்பது ஒரு குறுங்கதையை மையமாகக் கொண்டு, காட்சிகளை நகைச்சுவை ததும்ப அமைத்து, அதற்கேற்றாற்போல் உப பாத்திரங்களை உலவவிட்டு, அந்தக் காட்சிகள் எப்போது வரும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, படத்தின் வேகமான நகர்வுக்கும், அந்த நடிகரின் வருகைக்கான எதிர்பார்ப்பையும் ஆர்வத்தோடு ஏற்படுத்தி, வெற்றி காணும் உத்தி இன்னொரு வகை. இந்த இரண்டு வகையான உத்திகளிலும், நிறையப் பாத்திரங்களை ஏற்று, தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் வி.கே.ராமசாமி அவர்கள்.

சோகக் காட்சிகளில் முகத்தைச் சற்றே இருட்டாக்கி, நாலுநாள் தாடியோடு, தலையைச் சற்றே கலைத்து விட்டு, வறுமைக்கு அடையாளமாய் சட்டையை அங்கங்கே ஒட்டுப் போட வைத்து, அல்லது ரெண்டு கிழிசல்களைக் காண்பித்து, கழுத்தில் ஒரு கருப்புக் கயிறைத் தொங்கவிட்டு, அல்லது வெற்று மார்பை முதல் பட்டன் போடாமல் திறந்து விட்டு, காலில் செருப்பில்லாமல், அல்லது தேய்ந்து போன ரப்பர் செருப்போடு நடக்கவிட்டு, நடிகரைத் தயார்படுத்திவிட முடியும்தான். ஆனால் பேசும் வசனங்களின் மூலமாயும், முகத்தின் பாவங்களின் வாயிலாகவும் அந்தப் பாத்திரம் வெளிப்பட வேண்டுமே...? அப்பொழுதுதானே கதையோடு பொருந்தியதாகும், காட்சியோடு ஒன்றியதாகும்? இதைக் கனகச்சிதமாகச் செய்யும் திறமை, வரம், அல்லது கிடைத்த நாடக அனுபவ முதிர்ச்சி வி.கே.ஆர். அவர்களுக்கு சாலப் பொருத்தமாக அமைந்தது.

வி.கே.ராமசாமி தனது 18 வது வயதிலேயே அறுபது வயது முதியவர் வேடத்தை ஏற்று நடித்தவர். எத்தகைய ஒரு திறமை உண்டு என்று உணர்ந்திருந்தால் அவர் மேல் இந்த வயதைத் திணித்திருப்பார்கள்? கிழவனாய் ஆக்கியிருப்பார்கள்? எல்லாம் நாடக அனுபவம் என்று சாதாரணமாகச் சொல்லிவிடலாம்தான். அந்த நாடக அனுபவம் அவர்களுக்குத் தந்த கடுமையான பயிற்சியும், அதைப் பயிற்றுவித்தவர்களும், அந்தப் பயிற்சிகளுக்காக அன்றாடம் அங்கே கடைப் பிடிக்கப்பட்ட ஒழுங்கும், கட்டுப்பாடும் இவர்களின் திரைப்பட வெளிப்பாட்டின் மூலமாய் பின்னோக்கி நினைத்துப் பார்த்து பிரமிக்க வைக்கிறதல்லவா?

எதுக்குய்யா யார் யாரையோ யோசிச்சிக்கிட்டு? நம்ப வி.கே.ஆர் அண்ணன்தான் இருக்காருல்ல...பேசாம அவரைப் போட்டுட்டுப் போங்க...சரியா வரும்...என்று தடையின்றி நம்பிக்கை அளிக்கக் கூடிய நட்சத்திரமாய் நின்று ஒளிர்ந்தவர் வி.கே.ஆர்.

அவரின் திறமைக்கு இரண்டே இரண்டு காட்சிகள். ஒன்று நகைச் சுவை இன்னொன்று சோகம்.

நகைச்சுவையில் வசனங்கள் மூலமாக, சட்டென்று புரியாமல், நினைத்துப் பார்த்துப் புரிந்து கொள்ள வைத்து சிரிக்க வைப்பது ஒரு வகை. என்றால் அப்படியான வசனத்தை அதன் குணாம்சத்திற்கேற்றாற்போல் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு நடிகர் வெளிப்படுத்த வேண்டுமே...அப்படியான ஒரு காட்சிதான் இது.

த்னம், அய்யா சாப்டாரா...? – எஜமானியம்மாளின் கேள்வி. அது சௌகாரின் கம்பீரம், மிடுக்கு.

எஜமான் சாப்டலம்மா...பசியில்லேன்னு சாப்பாட்டையே திருப்பி அனுப்பிச்சிட்டாரு... – பட்லர் ரத்னமாக யூனிஃபார்மில் பணிவாய் நிற்கும் வி.கே.ஆரின் பதில்.

சாப்பிடலியா..?.இப்போ எங்கிட்டே சாப்டேன்னு ஃபோன்ல சொன்னாரே...?

அப்போ, வேறே யார்ட்டயாச்சும் இன்னொரு சாப்பாடு கொடுத்து விட்டீங்களா...? – அப்பாவித்தனமாகக் கேட்கும் பட்லரின் கேள்வி.

ஷட்அப்.....

-இந்தக் காட்சியை நினைவிருக்கிறதா? நீங்கள் அபாரமான, ஆழமான, தரமான, ரசிகராக இருந்தால் இந்தக் காட்சி கண்டிப்பாக உங்களுக்கு நினைவு இருக்க வேண்டும். படம் உயர்ந்த மனிதன். படமா அது? காவியம்! இந்தப்படத்தில் நடிகர் திலகம் ஏற்றதுபோலான ஒரு காரெக்டரை வேறு எந்தக் கொம்பனாலும் ஆயுசுக்கும் செய்ய முடியாது. தமிழ்த்திரைப்பட வரலாற்றைப் பேசும்போது இந்தத் திரைப்படத்தின் நடிகர் திலகத்தின் தொழிலதிபர் ராஜூ காரெக்டரை, அத்தனை அழகியலாக, கம்பீரமாக வெளிப்படுத்தி ஸ்தாபித்த நடிப்பின் உயிரோட்டத்தைப் பேசாமல் விட்டால் அது அவருக்கு நஷ்டமில்லை. அந்த விழுமியம் ஆயுளுக்கும் திரை உலகிற்குத்தான் நஷ்டமாக அமையும்.

மேலே நான் சொன்ன அந்தக் காட்சியைக் கண்ணுறுங்கள். தனக்குச் சம்பளம் தரும் ஒரு எஜமானியிடம், எத்தனை பணிவாகவும், பயத்தோடும் அளவோடும் பேச வேண்டும்? அதை விட்டு விட்டு, ஏதேனும் தப்பாய்ச் சற்றுக் கூடுதலாய்ப் பேசப் போக, வேலை போய்விட்டால் சோற்றுக்குத் தாளம் போட வேண்டுமே என்கிற நிலையில், இப்படி அறியாக் குசும்பு போல் கேட்கலாமா? அத்தனை கண்டிப்பு மிக்க எஜமானியிடம் நினைத்ததை, மனதில் தோன்றியதைப் பேசிவிட முடியுமா? மனதில் தோன்றினாலும் வாயில் வரலாமா? பணிவு, பயம் அத்தனையையும் பவ்யமாக வெளிப்படுத்திக் கொண்டு, படித்த, நிர்வாகத் திறனுள்ள புத்திசாலியான ஒரு எஜமானியம்மாளிடம், ”வேறே யார்ட்டயாவது இன்னொரு சாப்பாடு கொடுத்து விட்டீங்களா?” என்று அறியாத்தனம் போல் ஊமைக்குசும்பாய்க் கேட்டால் என்னாவது? முதலில் கேட்கலாமா இப்படி?

அந்த அளவுக்குக் கூடவா ஒரு எஜமானிக்கு புத்தி இருக்காது,? அதுவும் யாரைப் பொறுப்பாய் நினைத்து, அக்கறையாய் சாப்பாடு கொடுத்து விட்டோரோ அவனிடமே, எஜமான் சாப்டாரா? என்று கேட்கும்போது, எப்படி வேறு ஒருத்தரிடம் இன்னொரு சாப்பாட்டைக் கொடுத்து விட்டிருக்க முடியும்? யாராவது அப்படிச் செய்வார்களா? எத்தனை பெரிய கேலியான கேள்வி இது? இந்தக் கேள்வியை படு அப்பாவித்தனமாக, குசும்பையும், கேலியையும் உள்ளே பொதிந்து கொண்டு, ஒன்றுமே அறியாத பாவம் போல், அடக்க ஒடுக்கமான பணியாளனைப் போல், வி.கே.ஆர். சற்றே குனிந்து நின்று பவ்யமாய்க் கேட்கும் போது, தியேட்டரிலே பொத்திக் கொண்டு சிரித்தவர்கள் அநேகம் ஏன் பொத்திக் கொண்டு சிரித்தார்கள்?. தாங்கள் அப்படிக் கமுக்கமாய்ச் சிரிப்பதுகூட எஜமானி சௌகார்ஜானகி அவர்களுக்குக் கேட்டுவிடக் கூடாதே என்றுபயந்துதான். அப்படிக் காட்சியோடு ஒன்றியவர்கள் நம் ரசிகர்கள். என்ன ஒரு அபாரமான நகைச்சுவை? இந்த நகைச்சுவை முதல் முறை பார்க்கும்போது சட்டென்று உடனே புரியாமல், இதை அதன் சரியான விகிதத்தில் புரிந்து கொள்ளவும், சிரித்து சிரித்து மாளவும், இந்த மொத்தத் திரைக் காவியத்தையும் திரும்பத் திரும்பப் பார்த்தவர்கள் ஏராளமானோர். குண்டு மூஞ்சி, குண்டு மூஞ்சி என்று தன்னை அன்பாய்க் கொஞ்சும் ராணி மனோரமா பின்னாலேயே சுற்றுவார் இப்படத்தில்.

ஷட்அப்...என்கிற சௌகாரின் ஒரு சத்தத்தில் நடுங்குவார் பாருங்கள்.....அங்கே நாமும் ஒடுங்கிப் போவோம். ஜானகியம்மாளின் குரலுக்கும், அந்த மிடுக்குக்கும் அத்தனை மவுசு. அவரை மாதிரி ஒரு பழுத்த அனுபவமிக்க முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகையைப் பார்க்க முடியுமா இன்று? எத்தனை படங்களில் சிவாஜிக்குப் பொருத்தமான ஜோடியாய் வாழ்ந்தார்.

இத்தனை நாள் ரசிக்காமல் இருந்தீர்கள் என்றால், நான் சொன்னபிறகு இப்போது உயர்ந்த மனிதன் படத்தைத் திரும்பப் போட்டுப் பாருங்கள். இந்த நகைச்சுவைக் காட்சிக்கு உங்களுக்குச் சிரிப்பே வரவில்லையென்றால் உங்களுக்கு உடல், மனக் கோளாறு இருக்கிறது என்று பொருள்.

நகைச்சுவைக்கு இந்த ஒன்று என்றால், சோகத்தையும், அதைத் தன்னோடு சேர்ந்து அனுபவிக்க வைத்த அந்த இன்னொரு காரெக்டரை ஏற்ற வி.கே.ஆரின் பிறவி நடிப்பையும் இந்த இன்னொரு உருக்கமான காட்சியில் காணுங்கள்.

இதை திரையில் வந்த அளவுக்கு, காட்சிப்படுத்திய அளவுக்கு அத்தனை துல்லியமாக என்னால் எழுத்தில் வெளிப்படுத்த முடியுமா தெரியவில்லை. இந்த இடத்தில் இந்தக் காட்சிக்கு யு.ட்யூப் போட்டுக் காட்டுவதுதான் பொருத்தமாக இருக்கும். அது ஓட ஓடக் காட்சியின் வீர்யத்தை விளக்க வேண்டும். அப்படி ஓடி, காட்சியின் வீர்யத் தன்மையில் நானே ஒரு வேளை திரும்பவும் லயித்து விட்டேனென்றால்? எங்கே விளக்குவது? பார்வையாளர்களும் தங்களை நிச்சயம் மறந்து போகக் கூடும். அப்படி நம்மை மறந்து, நம் அருகே இருப்பவரை மறந்து, லயித்து ஒன்றி, உருகிப் போகும் காட்சி இது.

அது, பார் மகளே பார் திரைப்படம். உங்களுக்குத் தெரியாததல்ல. பட்டு என்பவர் எழுதிய பெற்றால்தான் பிள்ளையா என்கிற நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம். திரைக்கதை வலம்புரி சோமநாதன். வசனம் வழக்கம்போல் ஆரூர்தாஸ். பீம்சிங்கின் எத்தனையோ திரைக்காவியங்களில் அதுவும் ஒன்று. நடிகர்திலகத்தை வைத்து, அவர் திறமையை மதித்து, அவருக்குப் பொருத்தமாகக் கதையமைத்து, காட்சிகளைச் செதுக்கி வெற்றி கண்டார்கள் பலர். அவர்களில் டைரக்டர் ஏ.பீம்சிங் மிக முக்கியமானவர். அந்தப் படத்தில் தொழிலதிபர் சிவலிங்கம் பாத்திரம் நடிகர்திலகத்திற்கு. அவரது கம்பீரம் போலவே படத்தையும் தன் நடிப்பால் தூக்கி நிறுத்தியிருப்பார். அவரது ஆப்த நண்பராக ராமசாமிப் பிள்ளை (ராமு) என்கிற கதாபாத்திரம் திரு. வி.கே.ஆர் அவர்களுக்கு.

தன் தொழிலில் மிகவும் நொடித்துப் போய் ஏழ்மை நிலையில் இருப்பார் ராமு. இந்நிலையில் தொழிலதிபர் சிவாவின் இரண்டு பெண்களான சந்திரா, காந்தா இருவரில், சந்திராவுக்குத் திருமண நிச்சயதார்த்த விழா வரும். அதற்கு, தன் பால்ய நண்பன்தானே என்ற ஆசையில், நெருக்கத்தில், அழைப்பில்லாமல் மனைவியோடு வந்து விடுவார் ராமசாமிப்பிள்ளை. அய்யா, வாங்க....எஜமான், அய்யா, என்று ஆவலோடு சிவாஜியை நோக்கிக் கூவிக் கொண்டே வேலைக்காரர் ஏ.கருணாநிதி, வி.கே.ஆர்.ஐயும் அவரது மனைவியையும், சிவாஜியிடம் அழைத்து வருவார்.

சிவா...சிவா... – கூறிக்கொண்டே தன் ஆப்த நண்பனை நோக்கி ஆவலோடு நெருங்கி, இரு கைகளையும் பற்றுவார் ராமு.

தன் இருப்பில் மிகவும் கௌரவம் பார்க்கும் தொழிலதிபர் சிவா, வாழ்க்கையில் நொடித்துப் போன ராமு இப்படி வறுமைக் கோலத்தோடு வந்து எல்லோர் முன்னிலையிலும் தன்னை நெருக்கமாகத் தொட்டு வாய்விட்டுச் சத்தமாக அழைப்பது பொறுக்காது, அவரி்டமிருந்து சட்டென்று விலகி, ஆவ்...ஏன் இங்க நிக்கிறீங்க...எல்லாரும் உள்ளே போய் உட்காருங்க...உட்காருங்க.. .என்று சுற்றியிருப்பவர்களைப் பார்த்துக் கூறி, கூட்டத்தை அங்கிருந்து விலக்குவார். மானேஜர் எல்லாரையும் உட்கார வைங்க.என்று தொடர்ந்து கூறிக் கொண்டே .உறலோ டாக்டர்...வாங்க...வாங்க....என்று ஒருவரோடு அவ்விடத்தை விட்டுச் சட்டென்ற அகன்று விடுவார்.

தன்னை வரவேற்காது, கண்டு கொள்ளாது சிவா சட்டென்று அவ்விடம் விட்டு அகன்றது ராமுவின் மனத்தைக் காயப்படுத்தும். அலட்சியப் படுத்துவது புரியும். இதற்குள் சௌகார் அங்கே வந்து இவர்களைப் பார்த்து அண்ணா...வாங்க...வாங்க...பார்வதி..!!.என்று பாசத்தோடும், ஆவலோடும் வரவேற்க, லட்சுமி, எங்களையெல்லாம் மறந்திட்டியா? என்று ராமுவின் மனைவி கேட்டுக்கொண்டே நெருங்குவார். அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம், முதல்ல உள்ள வாங்க..வாங்கண்ணா என்று சௌகார் கூப்பிட, மனவருத்தத்தை வெளிக் காண்பிக்காமல், பரவால்லம்மா, நாங்க இங்கயே இருக்கோம் என்பார் ராமு. என்னண்ணா இது, உள்ளே வந்து சந்திராவை ஆசீர்வாதம் பண்ணுங்கண்ணா... பாருங்க...அங்கே நிக்கிறாரே அவர்தான் மாப்பிள்ளை...ரொம்பப் படிச்சவரு.. என்று கூறும்பொழுது, சிவா அங்கு வேகமாய் வந்து தன் மனைவியைக் கண்டிப்பார். லட்சுமி, என்ன இங்க வந்து பினாத்திக்கிட்டிருக்கே...போய் வேலையைப் பார்...என்று கோபப்படுவார். இது மிகவும் அவமானமாகப் படும் ராமுவுக்கு. சிவாவைப் பார்த்துச் சொல்வார்.

சிவா, உனக்கு விருப்பம் இல்லைன்னா என்னை வெளில போன்னு சொல்லிடு...இப்படி ஒரேயடியா உதாசீனமா நடந்துக்காதே...அழைப்பில்லாம வந்தது தப்புத்தான். அதுக்காக, உன் பழைய சிநேகிதன்ங்கிற முறைல தயவுசெஞ்சு என்னை மன்னிச்சிரு...என்பார்.

இப்படி சத்தமாய் என்னென்னவோ பேசி, மானத்தை வாங்கப் பார்க்கிறானே, என்று பல்லைக் கடித்துக் கொண்டே, யாருக்கும் கேட்காமல் மெதுவாக, டேய், நில்றா...என்று தடுப்பார் சிவா. நான் இப்போ என்ன சொல்லிட்டேன்...ஏன் இப்படியெல்லாம் பேசறே...என்பார். ராமு வேதனையோடு பதிலுரைப்பார்.

எல்லாம் எனக்கும் புரியும்ப்பா...நான் ஒண்ணும் முட்டாளல்ல. இந்த பார் சிவா, ஓடம் வண்டில ஏறும், ஒரு நாளைக்கு வண்டியும் ஓடத்துல ஏறும்.

எல்லாரும் இப்படிப் பார்க்குறாங்களே...இப்படி வழிய மறிச்சுப் பேசிக்கிட்டிருக்கியே...என் கௌரவம் என்னடா ஆகுறது....

அப்டீன்னா நீ எங்கிட்டப் பேசறதே, உனக்குக் கௌரவக் குறைச்சல்னு சொல்றியா?

என்னடா ஃபூல் மாதிரிப் பேசறே...பேசாம உட்காரு....எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்...மானம் போகுது.... – இந்தப் பதிலைக் கேட்டு, தன் கட்டுப்பாட்டை இழந்து விடுவார் ராமு.

டேய், நிறுத்துறா...என்னடா பெரிய மானத்தை கண்டவன் நீ...?

ராமூஊஊஊஊஊ.....!!!

பேசாதே...!!..நன்றி கெட்டவனே...உன் குடும்பத்துக்கு நான் எவ்வளவு நன்மைகளைச் செய்திருக்கேன்....அதையெல்லாம் மறந்திட்டு, என்னை எவ்வளவு கேவலமா நினைச்சிட்டே...எவ்வளவு கௌரவக் குறைச்சலாப் பேசறே...கௌரவமாம் கௌரவம்...டேய்...உன் குடும்ப கௌரவம் எந்த லட்சணத்துல இருக்குன்னு உனக்குத் தெரியாதுடா...எனக்குத்தான் தெரியும்...அதோ பார்..!!. என்று மாடிப் படியில் நின்று கொண்டிருக்கும் சந்திரா (விஜயகுமாரி) காந்தா (புஷ்பலதா) இவர்களைக் காண்பித்துத் தொடருவார்.

உணர்ச்சி மயமான இந்தக் கட்டத்தில் தியேட்டரே கப்சிப் என்று கிடக்கும். பார்வையாளர்களே பதறுவர். மனம் கிடந்து அப்படி அடித்துக்கொள்ளும். ஆனால் ஒன்று. இந்தக் காட்சியிலே எல்லோரும் ராமுவின் (வி.கே.ஆா்) பக்கம்தான். ஒவ்வொரு காரெக்டர்களை வடித்ததுவும், அதற்கேற்றாற்போன்று காட்சிகளை அமைத்ததுவும், அதற்கொப்ப உணர்ச்சிகரமாக வசனங்களைத் தீட்டியதுவும், அந்தந்தப் பாத்திரங்களாகவே எல்லோரும் வாழ்ந்ததுவும், இதென்ன படமா? வாழ்க்கையா? உண்மையிலேயே நடந்ததுவோ? என்று எண்ண வைத்து விடும். தொடரும் உணர்ச்சிப் பிழம்பான காட்சியைப் பாருங்கள்....

ந்த ரெண்டு பொண்ல உன் சொந்த மகள் யாருன்னு உனக்குத் தெரியுமா...? தெரியாது...உனக்கென்ன, உன் மனைவிக்குக் கூடத் தெரியாது....உன் மனைவிக்கென்னடா இந்த உலகத்துக்கே தெரியாது...

.ராமு என்ன பேசறே..?.கேர்ஃபுல்.... ஷூட் பண்ணிடுவேன்.... லட்சுமீஈஈஈஈ....!!!

அங்க என்னடா கேட்கறே...நான் சொல்றேன்...உனக்குப் பிறந்தது ஒரே ஒரு பெண் குழந்தைதான்...நர்சிங்உறாம்ல நாட்டியக்காரி சுலோச்சனாவுக்குப் பிறந்த பெண் குழந்தையும், உன் பெண் குழந்தையும் ஒண்ணாச் சேர்ந்து, அடையாளம் தெரியாமப் போச்சு...அதோ பார், அதோ நிக்கிறானே நட்டுவன் நடராஜன், இவனோட தங்கைதான் சுலோச்சனா, இவன் மருமகதான் இந்த ரெண்டு பேர்ல ஒண்ணு....

பொய்ய்ய்ய்ய்...உற..உற.உறஉறஉறாாா...பொய் சொல்றான்...உங்க எல்லாருக்கும் முன்னாலயும் என்னை அவமானப்படுத்தறதுக்காக இவன் பொய் சொல்றான்...எனக்குத் தெரியும் எப்பவுமே இப்படித்தான் பொய் சொல்லுவான்....யாரும் நம்பாதீங்க...யாரும் நம்பாதீங்க...

நான் சொல்றதுல உனக்கு நம்பிக்கை இல்லேன்னா, உன் மனைவிக்குப் பிரசவம் பார்த்த டாக்டரம்மாவையே கேட்டுப் பார்....

டாக்டர்...டாக்டர்...இவன் சொல்றதெல்லாம் உண்மைதானா டாக்டர்....டாக்டர்...சொல்லுங்க டாக்டர்....அவன் சொல்றது உண்மைதானா...?

டாக்டர் பதில் சொல்லாமல் தலை குனிந்தவாறே படி இறங்கிப் போய்க்கொண்டேயிருப்பார். டாக்டர்.....!!!

எங்கே சொல்லச் சொல்லு...உண்மையை மறைக்கச் சொல்லு பார்ப்போம்... – தன்னை மீறிக் கத்துவார் ராமு.

இப்படிப்பட்ட ஒரு மர்மத்தை என் மனைவிக்குக் கூடத் தெரியாம இத்தனை வருஷ காலமா மறைச்சு வச்சிருந்தனே, எதுக்காக? உன் குடும்பக் கௌரவத்தைக் காப்பாத்தறதுக்காக....இப்போ நீ சொல்றே..நான் இங்க வந்ததுனால உன் கௌரவம் கெட்டுப் போச்சுன்னு டேய் சிவா...சாது மிரண்டா காடு கொள்ளாதுறா...

அண்ணா...இப்டிச் செஞ்சிட்டீங்களே அண்ணா...சௌகார் கதறுவார்.

லட்சுமி...என்னை மன்னிச்சிடும்மா...எனக்கிருந்த ஒரே ஒரு கட்டுப்பாட்டையும் மீறி இதனால விளையப்போற விபரீதங்களைப்பத்திக் கூடக் கவலைப்படாம எதுக்காக இந்த உண்மையைச் சொன்னேன். உன் பொண்ணை என் பையனுக்குக் கொடுக்கலைங்கிறதுக்காக அல்ல...உன் புருஷனைப் பிடிச்சு ஆட்டுதே அந்தஸ்துங்கிற பேய்...அது அவனவிட்டு ஒழியணும்ங்கிறதுக்காகத்தான்...டேய் சிவா...இனிமேலாவது திருந்து...பார்வதி...வா...போகலாம்.....

அம்மா...சேகர்....! – கிளம்பிவிட்ட மாப்பிள்ளை முத்துராமனை நோக்கித் தடுப்பார் சிவா. வீட்டுக்குப் போய் பேசிக்கலாம் வா....- அவர் அம்மா இழுத்துக் கொண்டு போய்விடுவார்.

இந்தக் காட்சியை நான் சொன்ன பிறகு பார் மகளே பார் படத்தைப் போட்டுப் பாருங்கள் தயவுசெய்து. நீங்கள் வி.கே.ஆர். பக்கம் நின்று அழவில்லையென்றால், அந்த அவமானம் உங்களுக்கே நிகழ்ந்ததாகக் கருதவில்லையென்றால், நெஞ்சம் பதறவில்லையென்றால், ரெண்டு சொட்டுக் கண்ணீரேனும் சிந்தவிட்லையென்றால் நீங்கள் மனிதரேயில்லை. உணர்ச்சிகளற்ற ஜடம் என்று பொருள்.

போதுமா வி.கே.ஆர். புராணம். அவர் பிறந்தது, வளர்ந்தது, நாடகங்களில் பயின்றது, சினிமாவுக்குள் நுழைந்தது, பட்டங்கள் வாங்கியது அதெல்லாம் இங்கே எதற்கு? அது அறியத்தான் கணினி இருக்கிறதே...யார் வேண்டுமானாலும் பார்க்கலாம், எளிமையாகச் சொல்லி விடலாம். ஆனால் நல்ல நடிகர்கள் என்பவர்கள் எதற்காக நடித்தார்கள்? அவர்கள் பிழைப்பிற்காக மட்டுமா? அல்லவே? ஆத்மசாந்திக்காகவும், பின்னால் சிலராவது இப்படி நினைவு கூர்ந்து பேச மாட்டார்களா, நினைக்க மாட்டார்களா? என்ற ஆத்ம திருப்திக்காகவும்தானே? திரு வி.கே.ராமசாமி அவர்களை, அவரது அர்ப்பணிப்பான நடிப்பை, நேசித்த நடிப்பிற்காகவே வாழ்ந்து கழித்ததை, அந்த நடிப்பில் ஏற்படுத்திய முத்திரைகளுக்காக இன்னும் நம் மனதிலெல்லாம் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருப்பதை, இப்படிச் சொல்லாமல் வேறு எப்படிச் சொல்ல முடியும்?

-------------------------------------------------

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...