30 மார்ச் 2025

சிறுகதை    தளம் - காலாண்டிதழ் - -ஜனவரி - மார்ச் 2025  

பிரசுரம்        “சான்று ”


ந்தம்மா தன் ரெண்டு குழந்தைகளையும் பாண்டிச்சேரில தன் தாயார்ட்ட விட்டுட்டு இங்க வேலை பார்க்கிறதாக்கும்…- அஞ்சனா பரிதாபப்பட்டதுபோல் கூறினாள்.

அடப்பாவமே…கேட்டியா நீ? ஒராளை விட மாட்டே போலிருக்கு…!

அந்தப் பொண்ணை எனக்குப் பிடிக்கும். குழந்தை மூஞ்சி…! அடிக்கடி தபால் கொடுக்க வருதே…ன்னு பேசிப் பார்த்தேன். குழந்தேளை அங்க விட்டுட்டு இங்க வேலை செய்றது பாவம்….!

அவுங்க வயசானவங்களா இருப்பாங்களே…எப்டி சமாளிப்பாங்க…? – புதிய செய்தி அளித்த சங்கடத்தோடு கேட்டார் மந்திரமூர்த்தி.

எப்டியாச்சும் சமாளிக்க வேண்டிதான். புருஷன்காரன் டிரைவராம். டாக்சி ஓட்டுறானாம். ஏதாவது வெளியூர் டிரிப்னு இருந்திட்டே இருக்குமாம்….அவனாலயும் பார்த்துக்க முடியாத நிலைமை….

அடக் கடவுளே…! அம்மா ஒரு பக்கம், அப்பா ஒரு பக்கம்…இவுங்க ரெண்டு பேருக்கும் நடுவுலே அந்த கிழவி பொறுப்புல ரெண்டு குழந்தைகளா?….அடடடடா…! படிக்குதாம்மா…?

ஆம்மா…ஒண்ணு மூணாம் கிளாசாம்…அடுத்தது இப்பத்தான் ஸ்கூல் சேர்த்திருக்காங்களாம்…-பாவமா இருக்கு அவுங்களப் பார்த்தா….எனக்கு அந்தப் பொண்ணைப் பார்த்தாலே இரக்கமா இருக்கும்…ஏதாச்சும் கொடுக்கணும் போல இருக்கும்….தண்ணி குடிக்கிறீங்களான்னு கேட்டாக் கூட வேண்டாம்னுடும்…

ஏதாவது கொடுக்க வேண்டிதானே…?

நீங்க ஏதாச்சும் சொல்வீங்களோன்னுதான்…!

இதென்ன வம்பாப் போச்சு…? நான் என்ன சொல்லப் போறேன்? என்னமோ எல்லாத்துக்கும் என்கிட்டே கேட்டுட்டுத்தான் செய்ற மாதிரி…?

அதுக்கில்லே….அடிக்கடி ரிஜிஸ்டர் தபால் கொடுக்க வருது…நீங்களோ சும்மா புஸ்தகம் வாங்கிட்டே இருக்கீங்க? இந்த தீபாவளிக்குக் கூட அதுக்கு ஒண்ணும் கொடுக்கல்லே…!

அது கேட்கலியே…? கேட்டாத்தானே கொடுக்க முடியும்?

கேட்காட்டா என்ன? நீங்களாக் கொடுக்கக் கூடாதா? வேண்டாம்னா சொல்லப் போறாங்க?

வலிய எப்டிறி கொடுக்கிறது. அது பொம்பளப்புள்ளயா வேறே இருக்குது…ஏதாச்சும் தப்பா நினைச்சிக்கிடுச்சின்னா….?

ஆம்மா…தப்பா நினைக்கும்…நீங்க ரொம்பச் சின்ன புள்ள பாரு…? அறுபத்தஞ்சு தாண்டியாச்சு… ….தப்பா நினைக்குமாம். உங்க பேத்தி மாதிரி அது….!

என்னடீ…அதப் பேத்தின்னு சொல்லி என்னை ஒரேயடியா தொண்டு கிழம் ஆக்குற? பொண்ணு மாதிரின்னாவது சொல்லு – மந்திரமூர்த்திக்கு நடுங்கித்தான் போனது. அஞ்சனா சொன்ன வேகத்தில் பத்து வயசு கூடிப் போனது போலிருந்தது.

ஆமா…நா சொல்றதுல என்ன தப்பு? எத்தனையோவாட்டி போஸ்ட் ஆபீசுக்கே போயி அந்தப் பொண்கிட்டே சொல்லி தபாலையும், பார்சலையும் வாங்கிட்டு வந்திருக்கீங்க…ரோட்டுல எங்கயோ வழி மறிச்சி, புக் பார்சலை வாங்கினேன்னீங்க…அது வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுக்கிறதுக்குள்ளே உங்களுக்கு பொறுமை இருக்கிறதில்லை….பாய்ஞ்சு பாய்ஞ்சு பறந்து போய் பணம் கட்டி வாங்குற புக்ஸை இப்படி அள்ளிட்டு வர்ற ஆசாமியை நான் வேறே எங்கயும் பார்த்ததில்லை…புஸ்தகமா வாங்கிக் குவிச்சாச்சு….சாகுறதுக்குள்ளே அத்தனையையும் படிச்சாகணும் தெரிஞ்சிக்குங்க…சும்மா அடுக்கி வச்சு பூஜை போட்டா…அப்புறம் என்னை எதுவும் கேட்கப்படாது…எம்மேல பழி சொல்லப்படாது…

என்னடீ இப்டி குண்டைத் தூக்கிப் போடுறே? சாகுறதுக்குள்ளேன்னா….அது என் கையிலயா இருக்கு? திடீர்னு வாயப் பொளந்துட்டேன்னா? இதெல்லாத்தையும் தூக்கி வேஸ்ட் பேப்பர்காரன்கிட்டே போட்டுடுவியா? நிறுவைக்குத்தாண்டி எடுப்பான் எல்லாத்தையும்….அஞ்சுக்கும் பத்துக்கும் போடுறதுக்கா இப்டி அருமையான புத்தகங்களா வாங்கி அடுக்கி வச்சிருக்கேன்…அத்தனையும் பொக்கிஷங்கள்டி…கொஞ்சம் கொஞ்சமாப் படிக்கத்தான் செய்வேன்….புஸ்தகங்கள் வாங்கினா அதை அட்டை டூ அட்டை படிச்சாகணும்ங்கிற அவசியமில்லை…அதை முதல்ல தெரிஞ்சிக்கோ….ரசனை அடிப்படைல படிக்கிறவன் அப்படிப் படிக்க மாட்டான்….வாசிக்கப் பழகிட்டவன் நல்லாவும் தேர்ந்தெடுப்பான்…

வேறே எப்படிப் படிப்பாங்களாம்? முழுசாப் படிக்காம அங்கங்கே மேய்ஞ்சிட்டுப் போவீங்களா? அதுக்கா ஒவ்வொரு புக்கையும் இருநூறு முந்நூறு கொடுத்து வாங்குறது?

சில புக்சு நம்ம மண்டைல உடனே ஏறாது. சிலது பத்துப் பக்கத்துலயே இதுல ஒண்ணுமில்லைன்னு தெரிஞ்சி போகும்…மண்டைல ஏறாத புக்ஸை எடுத்து வச்சிட்டுப் பிறகு எப்பவாச்சும்  திரும்பப் படிக்கிறதும், உதவாத புக்கை உடனே ஒதுக்கிறதும்தான் வாசிப்போட மகிமை. சிலது வேஸ்ட்தான்…மறுக்கலை….

உதவாத புக்குன்னு முதல்லயே தெரியாதா? காசு கொடுத்து, தண்டம் அழுது, அப்பறம்தான் தெரியுமா? நல்ல கதையா இருக்கு? கைல வாங்கி பிறகு தூக்கி எறியணுமா? இதென்ன சித்தாந்தம்? எப்டியோ போங்க…என்ன சொன்னாலும் கேட்கப் போறதில்லே…உங்க ரூம் பக்கம் வந்தாலே எனக்கு பயங்கர அலர்ஜியா இருக்கு….எரிச்சல் எரிச்சலா வருது….!  என்ன பைத்தியமோ…?

எதுக்கு அநாவசியமா அலட்டிக்கிறே? நானென்ன உன்னைப் படிக்கவா சொல்றேன்…? நீ உன் வழக்கப்படி  டி.வி.பாரு…சினிமா பாரு…உன்னை யாரு தடுத்தாங்க…? என்னை என் இஷ்டப்படி விட்ரு….

இஷ்டப்படி விடாம இப்பத் தூக்கி மடிலயா வச்சிட்டிருக்கேன்…? அதான் சுத்திவரப் புஸ்தகத் தூசிகளோட விழுந்து புரண்டிட்டிருக்கீங்களே?

எதையோ பேச வந்து…எங்கோ சென்று விட்டதை உணர்ந்தார் மந்திரமூர்த்தி. பெண்களுக்கு, அவர்களுக்குப் பிடிக்காதவைகளைச் செய்து விட்டால் அதை அவ்வப்போது சொல்லிக் காண்பித்துக் கொண்டேயிருக்க வேண்டும். நம்மைப் பிச்சுப் பிடுங்குவார்கள்தான். அதில் ஒரு குரூர திருப்தி.

ராத்திரிப் படுக்கைக்குப் போகும்வரை டி.வி. அலறிக் கொண்டிருக்கிறதுதான். நான் என்றுமே அதுபற்றி ஒரு வார்த்தை சொல்லியதில்லை. ஒரே ஒரு முறை மட்டும் ஒன்று சொல்லியிருந்தேன். பேசாம இதை உன் ரூமுக்கு ஷிப்ட் பண்ணிடேன்…என்பதுதான் அது. அவளோடு போகும் அந்தச் சத்தம். உறாலில் அலறிப் பிடுங்கி எதற்கு என்னையும் வந்து பதம் பார்க்க வேண்டும்?

கேட்டாளில்லை. வீட்டில் டி.வி. அதுவும் 42 இஞ்ச் டி.வி. இருக்கு என்பதே பெருமையாயிற்றே? கௌரவத்தின் அடையாளம்.  அதைக் கொண்டு போய் மூலையில் முடக்க முடியுமா? முடக்குவது போல்தான் அதில் எல்லாமும் வருகின்றன என்றாலும்,  டி.வி ஓடிக் கொண்டிருப்பது ஆட்கள் நிறைய இருப்பதுபோலான ஒரு கலகலப்பை ஏற்படுத்துகின்றனவே? அதுதான் அவள் நினைப்பது. பாமர ஜனங்களைக் கட்டிப் போட ஒரு பம்மாத்துக் கருவி.

ண்ணு செய்யி…நாளைக்கு அந்தம்மா வந்திச்சின்னா அதுகிட்டே லைஃப் சர்டிபிகேட் போடணும்னு அந்த மெஷினைக் கொண்டாரச் சொல்லு…வெளில போய்ப் போடுறதுக்கு பதிலா அந்தம்மாவுக்கு ஒரு சான்ஸ் கொடுப்போம்…செய்யுதா பார்ப்போம்….ஏதோ பைசா கொடுத்தாப்லயும் ஆச்சு..!

தாராளமாப் போடலாமே…! இ. மையத்துக்குப் போனா அங்கே கூட்டமா இருக்கும். காசும் கூடக் கேட்க வாய்ப்பிருக்கு. போஸ்ட் ஆபீஸ் மூலமும் போடலாம்னு சொல்லியிருக்காங்கல்ல….ஸ்டேட் கவர்ன்மென்ட், சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஓய்வூதியர்கள் எல்லாருக்கும் உண்டுதானே…வரச் சொல்லு…! இந்த முறை இவங்ககிட்டப் போட்டுத்தான் பார்ப்பமே..!.

நல்ல வேளை…இதையாவது சொன்னீங்களே…எங்கடா…நான் ஊருக்குப் போறேன்…அங்க போய் டிரஷரில நேரடியா மஸ்டர் போட்டாத்தான் எனக்கு திருப்தி ஆகும், உறுதியாகும்னு அடம் பிடிப்பீங்களே…இப்பச் சொன்னதுவே போதும்….-

என்னை ஊருக்கு அனுப்பாமல் இருத்தி வைப்பதில் அப்படி ஒரு திருப்தி அவளுக்கு. இந்தச் சென்னைக்கு வந்து இங்கயும் இருக்க மாட்டாமல் ஊரில் மதுரையிலும் தங்க விடாமல் பத்து வருஷமாய் அல்லாடிக் கொண்டிருக்கிறேன் நான். வாழ்க்கையில் பிடிப்பற்றுப் போன காலங்கள் இவை. அவனவனுக்கு அவனின் சொந்த ஊர்தான் உயிர். உடல்தான் சென்னையிலிருந்ததேயொழிய மனசு பூராவும் எனக்கு மதுரையில்தான். இப்போது இந்த லைவ் சர்டிபிகேட்டையும் இங்கேயே இருந்து போடத் தயாராகிவிட்டேனா…மீதிச் சந்தோஷமும் பறிபோனது. ஓய்வு பெற்ற பின்பான வாழ்க்கை அத்தனை திருப்தியில்லைதான்.

றுநாள் ….

அவுங்க வந்திருக்காங்க…லைவ் சர்டிபிகேட் போட…. – அஞ்சனாவின் சத்தம் கேட்டு அறையில் படுத்திருந்த நான் திடுக்கிட்டு எழுந்தேன். காலை பதினோரு மணி வாக்கில் ஒரு குட்டித் தூக்கம் உண்டு எனக்கு. கூடாது என்றாலும் அந்த வயசுக்கு அசத்தி விடுகிறதே…! ஏ கிழடு…போய்ப் படு என்று விரட்டுகிறதே…!

அதுக்குள்ளயுமா? என்றவாறே…அடிச்சிப் பிடிச்சு எழுந்தேன். என் பென்ஷன் புக்கையும், பாங்க் பாஸ் புக்கையும், ஆதார் கார்டையும் எடுத்துக் கொண்டு போய் நின்றேன்.  வீட்டினுள்ளே வந்திருந்தது அப்பெண். அது யார் கூட இன்னொன்று?

இவங்களுக்குத்தான் சார் போடத் தெரியும்.. அதான் கூட்டிட்டு வந்திட்டேன். 

இங்க வச்சுப் போடுங்க…நீண்ட டேபிளைக் காண்பித்தேன். விளக்கைப் போட்டேன். வசதியாய் அதில் வைத்து என் ஆதார் கார்டை வாங்கிப் பதிவு செய்து பெயரையும் அதிலுள்ளதுபோல் எழுதி, பென்ஷன் நம்பரையும் ஏற்றி…அருகில் சின்னக் குமிழ் போலிருந்த எலெக்ட்ரானிக் ஃபிங்கர் பிரின்ட் மெஷினில் என் கட்டை விரலை வைக்கச் சொல்லியது.  விரலைத் துடைத்துக் கொண்டு வைத்து அழுத்தினேன்.

வயசாச்சின்னா ரேகை கூட அழிஞ்சிடும், தேய்ஞ்சிடும்பாங்க…அது உண்மையாம்மா…? சில பேருக்கு விழறதில்லையே…? கண் விழி ஃபோக்கஸ்ல எடுக்கிறாங்க…? என்றேன்.

அப்டியெல்லாம் ஒண்ணுமில்ல சார்….ரேகையெல்லாம் அழியாது. நல்லா பதியுற மாதிரி வைங்க…என்றது. கட்டை விரல் நுனி முழுதும் பதிவதுபோல் பிடித்து அழுத்தியது. பதிவு விழுந்தது.  பச்சை லைட் எரிய , எடுத்திருங்க என்றது.

கொஞ்ச நேரத்தில் என் மொபைலுக்கு ஓ.டி.பி. வர…நான் எண்ணைச் சொல்ல…அடுத்த சில நிமிடங்களில் உங்கள் லைவ் சர்டிபிகேட் கம்ப்ளீடட்…  என்று மெஸேஜ் வந்தது.

 யப்பாடீ….நிமிஷமா முடிஞ்சி போச்சே…இதுக்கு எதுக்கு இங்கேயிருந்து எடுத்துப் பிடிச்சு, மதுரைக்குக் கிளம்பிப் போயிட்டு…அம்புட்டுக் காசு செலவு பண்ணி? .என்றேன் நான். 

உண்மையிலேயே மனது திருப்திப்பட்டுத்தான் போனது. என் மனையாளுக்கு நான்தான் இ.மையத்திற்கு அழைத்துக் கொண்டு போய் வருடா வருடம் லைஃப் சர்டிபிகேட் போட்டு வருகிறேன். ஆனால் எனக்குப் போடுவதற்கு ஊருக்குக் கம்பி நீட்டி விடுவேன். இந்தச் சாக்கிலாவது ஊர் போய் வரலாமே…என்கிற ஆசைதான்.

ஒரு வாரம் பத்து நாள் இருப்பேன். நானே சமைத்துக் கொள்வேன். நானே சாப்பிட்டுக் கொள்வேன் என்று சொல்லக் கூடாது. நான் சமைச்சதை நான்தானே சாப்பிடணும்…! ஓட்டல் ஒத்துக் கொள்வதில்லை. ஒரு மாமியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர்கள் சமையலும் பிடிக்காமல் போனது. எனக்குப் பிடிக்கிற ருசியில் அளவான உப்புக் காரங்களோடு, குறைந்த புளிப்போடு, பக்குவமாய்ச் சமைக்கக் கற்றிருந்தேன். காசும் மிச்சம். உடம்பும் பத்திரம். வேறென்ன வேலை வெட்டி முறிக்க? சில வங்கி வேலைகள் உண்டுதான். அதை நாளுக்கொன்றாக முடித்துக் கொள்ளலாமே? என்ன அவசரம்? எவன் கேட்க? வீடு சுத்தம் செய்வேன். அதுதான் பிரதான வேலை. சுத்தம் சுகம் தரும். சோறு போடும். பழகியாயிற்றே?

ஆனாலும் சுதந்திரமாய் இருப்பதைப் போலான ஒரு சந்தோஷம் எங்கும் கிடையாதுதான். ஒன்றே ஒன்று. ராத்திரியில் தன்னந் தனியே படுத்திருக்கும்போது கொஞ்சம் பயம் வரும்தான். கதவுத் தாழ்ப்பாளைத் திறந்து வைப்போமா என்று தோன்றும். அசந்து தூங்கி விட்டால்? எவனாவது உள்ளே வந்து கதையை முடித்து விட்டால்? என்றெல்லாம் தோன்றும். எல்லா லைட்டையும் அணைத்து விட்டு கண்ணைத் திறந்து கொண்டு படுத்திருப்பேன். சிறு சத்தம் கேட்டாலும் திடுக்கென்று உலுக்கும். யாரது? என்று வீராவேசமாய்க் கத்தியிருக்கிறேன். ஒருத்தனுமில்லைதான். இந்த ஓட்டாண்டியிடம் என்ன இருக்கப் போகிறது என்று தெரிந்திருக்கும் போல… ஆனாலும் அந்த ஒரு வாரம் தனியே சுதந்திரமாய், விச்ராந்தியாய் இருப்பதற்கு ஈடு இணையே கிடையாதுதான்.

வ்வளவும்மா…..? என்றேன் பர்சைத் திறந்து கொண்டே.

எழுபது ரூபா சார்…என்றது அந்தப் பெண்.

ரூபாய் முன்னூறு எடுத்து நீட்டினேன். கூடவே சொன்னேன். நான் ஒரு வாட்டி கூட உங்களுக்கு எதுவும் கொடுத்ததில்லை. எத்தனையோ தடவை நீங்க மணி ஆர்டர்,  புஸ்தகப் பார்சல் தந்துட்டுப் போயிட்டே இருக்கீங்க…நான் எதுவும் தந்ததில்ல…மனசுக்குக் கஷ்டமா இருக்கும்…இந்தத் தீபாவளிக்குக் கூட எதுவும் உங்களுக்குத் தரலை…இதை மறுக்காம வாங்கிக்கணும்….சந்தோஷமா வச்சிக்கணும்.

ஐயையோ…அதெல்லாம் வேண்டாம் சார்….லைன்ல தபால் டெலிவரியின்போது அப்டியே இந்த ஏரியாவுக்கு வர்றதுதானே…கூடல்லாம் காசு வேண்டாம்…கட்டணத் தொகை எழுபது மட்டும் கொடுங்க…போதும்….. – மறுத்தது அந்தப் பெண்.

இல்ல…பரவால்ல வச்சிக்குங்க…அப்பத்தான் எனக்குத் திருப்தியாகும். இல்லன்னா என் பொண்டாட்டி என்னைத் திட்டுவா…அவதான் உங்களைக் கூப்பிடச் சொன்னா…சும்மா வாங்கிக்குங்க…எங்க மனத் திருப்திக்காக…

நோ..நோ..நான் வாங்குறதில்ல சார்…இந்தம்மாவுக்கு வேணும்னா கொடுங்க…அவுங்க எனக்காகத்தான் இன்னிக்கு வந்தாங்க…

அதென்ன…நீ வாங்க மாட்டேன்னா நான் வாங்கிப்பேன்னு …?  எழுபது மட்டும் கொடுங்க சார் போதும்…. – சொல்லியவாறே நான் நீட்டியவற்றில் ஒரு நூறை மட்டும் உருவிக்கொண்டு, மீதி முப்பதை எடுத்து என்னிடம் பதிலுக்கு நீட்டியது அந்தக் கூட வந்திருந்த பெண்.

கொஞ்சம் தண்ணி மட்டும் கொடுங்க சார்…என்றது. அஞ்சனா கொண்டு வந்து நீட்டினாள்.

குடித்து ஆசுவாசப் படுத்திக் கொண்டு,  வெயில் ரொம்ப ஓவர் சார்…என்றது அந்தப் பெண்.

கொஞ்ச நேரத்துல உங்களுக்கு ஒரு மெஸேஜ் வரும் சார்…லைவ் சர்டிபிகேட்  சக்ஸஸ்ஃபுல்னு…அப்டி வரலேன்னா நாளைக்கு எங்களுக்கு ஃபோன் பண்ணுங்க…சரியா…? வா…போகலாம்….

நாங்க வர்றோம் சார்…. – அந்த இரண்டு பெண்களும் பொருத்தமான சீருடையில் அடுத்தடுத்த தங்களது பணிக்காக  திரும்பிப் பார்க்காமல் போய்க் கொண்டிருந்தார்கள். நான்தான் அவர்களைப் பார்த்தவாறே ஆச்சரியம் தாளாமல் நின்று கொண்டிருந்தேன்.

இன்னும் சிலர் இப்படி  இருக்கத்தான் செய்கிறார்கள்…!  மனதுக்கு திருப்தியாய் இருந்தது.

சீனியர் சிட்டிசன்சுக்கு எவ்வளவு சுலபமாக்கி விட்டார்கள் இந்த விஷயத்தை?. வீட்டை விட்டு வெளியேறாமல், இருந்த இடத்திலேயே, நின்ற இடத்தில் நின்று கொண்டு வாழ்வாதாரச் சான்று போட்ட திருப்தி என் மனதில். பொசுக்கென்று முடிந்து போனதே…!  

 வாழ்வாதாரம் என்பது வெறுமனே நாட்களை எட்டி உதைத்து பொழுதைக் கழித்துக் கொண்டிருப்பதிலா இருக்கிறது? அதன் ஆதாரம் காசிலா, மனதிலா? சீரான வாழ்க்கைக்கு சான்று அதன் நடத்தையிலா அல்லது பணத்தை வைத்தா? அந்தப் பணியாளர்களின் கடமையுணர்ச்சியும் நேர்மையும் என்னைச் சிந்திக்க வைத்திருந்தது.

                                                ----------------------------------

 

 


26 மார்ச் 2025

 

சிறுகதை               தினமணிகதிர் (23.03.2025) பிரசுரம்

“சில (அ)சந்தர்ப்பங்கள்”





ள மாத்துன்னு எத்தனையோவாட்டி சொல்லிட்டேன்…நீதான் கேட்க மாட்டேங்கிறே….!  - அலுத்துப் போய் சலித்துக் கொண்டார் கைலாசம். ஒரு விஷயத்திற்காக எத்தனை முறைதான் ஒருவரை உயிர்ப்பிப்பது?

இப்பப்பாரு…குடிக்கத் தண்ணி இல்லை…ரெண்டு நாளைக்கு முன்னாடிலர்ந்தே சொல்லிட்டிருக்கேன். சொல்றேன்…சொல்றேன்னு சொல்றியே தவிர, சொன்னபாட்டக் காணோம்….

நா என்ன பண்றது? ஃபோன் பண்ணினா அவன் எடுத்தாத்தானே? ரிங் போயிட்டே இருக்கு…இல்லன்னா கட் பண்றான்…என்ன அவசரமோ,டென்ஷனோ?

ஆமா…வேன்ல அங்கங்க பறந்திட்டிருப்பான்…அவன்தான் டிரைவர், அவன்தான் லோடு மேன். ஏத்துறது, இறக்குறது எல்லாமும் ஒருத்தனேன்னா அவனுக்கும் அலுத்து சலிச்சு வருமால்லியா? வண்டில போயிட்டிருக்கும்போது ஃபோன் வந்தா எவன்தான் எடுப்பான்? எடுத்துப் பேசிட்டு, எங்கயாவது மோதிட்டு நிக்கிறதுக்கா…?

பஸ் ஓட்டும்போது எந்த டிரைவரும் ஃபோன் பேசக் கூடாதுன்னு கவர்ன்மென்ட் சொல்லியிருக்கு தெரியுமா? கண்டுபிடிச்சா அபராதம் இல்லன்னா சஸ்பென்டாக்கும்…மக்கள் உயிர பணயம் வைக்க முடியுமா இவங்க அலட்சியத்தால…? அது போலதான் இவனும்…அவனுக்கு நிறைய ஆஃபர் இருக்கு….கேட்குற எடத்துக்கு தண்ணிக் கேன் கொடுத்து மாளல….நீ மூணு, அஞ்சுன்னு கேட்குற ஆளு…அவன் அம்பது போடுற எடத்தை நோங்குவானா இல்ல நம்ப வீட்டுக்கு அக்கறையா டெலிவரி பண்ணுவானா?கோடை காலம் வந்தாச்சு…இனி நாமதான் அலெர்ட்டா இருக்கணும்.  ஒரு கேன் ஸ்டாக் இருக்கிறபோதே அவன்ட்டச் சொல்லிடணும். அப்பத்தான் அதுவும் தீர்றதுக்குள்ளே கொண்டு இறக்குவான்…

அதான் நிறையக் கேன் போடுற எடத்துக்குத்தான் முதல் சலுகைன்னு சொல்றீங்களே? நீங்களே வேண்டாம்னு சொல்லிடுவீங்க போலிருக்கே…? எதையாவது அவன்ட்டப் பேசி, இப்பப் போட்டுட்டிருக்கிறதையும் கெடுத்திடாதீங்க…!-நளினி பயந்ததுபோல் சொன்னாள்.

நான் ஏன் அவன்ட்டப் பேசறேன்…தண்ணி…தண்ணின்னு அல்லாடுறியேன்னு சொல்ல வந்தேன். இந்தோ நாலு வீடு தள்ளி நாயுடு பையன் போடுறான்னு சொன்னேன். அவன்ட்ட வேண்டாம்னுட்டே. மாடிலர்ந்து ஒரு சத்தம் கொடுத்தாப் போதும்…அடுத்த கணம் கொண்டாந்து இறக்கிடுவான். அது வேண்டாம்ங்கிறே…!

உங்களுக்குத் தெரியாது அந்த ரகசியம்…அவன் வீட்டுப் பக்கத்துல இருக்கிற தொட்டிக் குழாய்ல கேன்ல பிடிச்சுப் பிடிச்சு அடுக்கிறான். அதைச் சுத்தப்படுத்தறானோ இல்லையோ…? சந்தேகமாயிருக்கு. பக்குவப்படுத்தித்தானே சீல் பண்ணனும்…அவன் வண்டில பறக்குற வேகத்தப் பார்த்தாலே தெரியும்…அது நல்ல தண்ணி இல்லன்னு… ….! அவன் கொடுக்கிறது மினரல் வாட்டர்னு நினைச்சு எல்லாரும் வாங்கிட்டிருக்காங்க…ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்…

எனக்குள் சிரிப்புத்தான் வந்தது. எந்தத் தண்ணியைத்தான் நம்புவது? இவள் சந்தேகப்பட்டு வேண்டாம் என்று ஒதுக்கும் நபருக்கும், நம்பி வாங்கும் நபருக்கும் அப்படியென்ன வித்தியாசம் இருக்கப் போகிறது? அவனும் என்ன செய்கிறான் என்பது யாருக்கும் தெரியாதே?  இவளென்ன பார்த்தாளா?  அவனை மட்டும் எப்படி நம்புகிறாள்? எத்தனையோ இடங்களிலே பர்மிஷன் வாங்காமல் பிளான்ட் போட்டிருக்கிறார்கள் என்று செய்தி வருகிறது. அங்கெல்லாம் போய் ஸ்பாட் இன்ஸ்பெக் ஷனா பண்ணுகிறார்கள்? கொடுத்ததுதான், வாங்கினதுதான்…ஊரில் தெருவுக்கு நாலு குழாய் இருந்ததும், பிடிக்க ஆளில்லாமல் தண்ணீர் வழிந்தோடியதும் நினைவுக்கு வந்தது. அது அந்தக் காலம்…!

கார்ப்பரேஷன் லாரியிலேயே ஒரு பொட்டணம் க்ளோரினைத் தூக்கி வீசுகிறார்கள். லாரியின் ஓட்டத்தில், வண்டி குலுங்கலில் அது கரைந்து கொள்ளுமாம். அது சுத்தப்படுத்திய தண்ணியாம்…! என்ன கதை பாருங்கள்? அந்த லாரி டாங்கைக் கழுவி மாமாங்கமிருக்கும்…! யார் கண்டது?

வீடு வீடாக வந்து நோட்டீஸ் கொடுத்து விட்டுப் போனான். நம்பிக்கையோடு ஃபோன் செய்து தண்ணீர் கேன் கொண்டு வரச் சொன்ன போது சொன்னாச் சொன்னபடி கரெக்டான நேரத்துக்குக் கொண்டு வந்து கேன்களை அடுக்கினான். தன் வார்த்தைகளுக்கு இத்தனை மதிப்பா? என்று நளினி பூரித்துப் போனாள். ஆனாலும் ரொம்ப சின்சியர் அவன்….என்றாள்.

கதவைத் திறந்தால் காத்துக் கிடக்கிறது பத்துக் கேன்.

ராத்திரி லேட் அவர்ஸ்ல வந்திருப்பான் போலிருக்கு. ஏன்னா கடைசியா பத்து மணிக்கு ஒரு ஃபோன் போட்டேன். இந்த நேரத்துல டிஸ்டர்ப் பண்ணுறமேன்னுதான் இருந்தது. இருந்தாலும் பொழுது விடிஞ்சா தண்ணி வேணுமே…? - ங்கிற ஆத்திரத்துல எதுக்கும் இருக்கட்டும்னு ஒரு ஃபோன் அடிச்சேன். எடுக்கலை…ஆனா பாருங்கோ…வாசல்ல கொண்டு வந்து வச்சிட்டுப் போயிருக்கான்…அஞ்சு கேன்தான் கேட்டேன். பத்து வச்சிருக்கான். அந்த நேரத்துல தூங்கிண்டிருக்கிற நம்மள எழுப்பக் கூடாதுங்கிற இங்கிதம் இருந்திருக்கு பாருங்க அவனுக்கு…!

பத்து என்னத்துக்கு? தினசரி ஒண்ணுன்னாக் கூட பத்து நாளைக்கு வருமே…நாள் கழியக் கழிய…தண்ணி பழசாத்தானே போகும்? அது நமக்குக் கெடுதல்தானே? கேன்ல இருந்து பழசானாப் பரவால்லியா?  அஞ்சே ஜாஸ்தி…வேறே வழியில்லே. அடிக்கடி அவன்ட்டச் சொல்லிட்டிருக்க முடியாது. தொலையுதுன்னு விட்டா…ஒரேயடியா பத்தைக் கொண்டு வந்து இறக்கினா?

நீங்க பேசாம இருங்க….போன் பண்ணிப் பண்ணி நானில்ல அவன்ட்ட ஞாபகப்படுத்த வேண்டிர்க்கு…நீங்களா செய்றீங்க…இருந்திட்டுப் போகட்டும்…! – ஒரே போடாய்ப் போட்டாள். என் வாய் அடைத்துப் போனது.

ரி…இப்ப என்ன செய்றது…அதச் சொல்லு…நடப்பப் பார்ப்போம்…பழசப் பேசி என்ன பண்ண? -என்றேன் நான்.

என்னத்த செய்றது….அடுத்த தெருவுல போய், கார்ப்பரேஷன் தொட்டில பிடிச்சிட்டு வாங்க….அதான் அவசரத்துக்கு வழி…!

என்னை என்ன சின்னப் பிள்ளைன்னு நினைச்சியா…கேனை உடனே தூக்கிட்டு ஓடுறதுக்கு? இருபத்தஞ்சு லிட்டர் கேன் அது…தூக்கிட்டு வர்றது எவ்வளவு சிரமம் தெரியுமா? கை மாத்தி கை மாத்தி நான் கொண்டு வர்றதுக்குள்ள தடுமாறுது எனக்கு…கால் பிறழுது…ஒரு நாளைக்கு ரெண்டு கேன் தண்ணியாவது அதுல வேணும்…ரெண்டு நடை போகணும்…சாதாரணமாச் சொல்லிப்புட்டே….?

அங்கு குடி வந்த புதிதில் இதைத்தான் செய்து கொண்டிருந்தேன். இப்பொழுதோ பத்து வருஷம் கடந்து போனது. இந்தக் கிழ வயசிலும் தண்ணியத் தூக்கிட்டு வா…என்றால்…? முதுகுப் பிடிப்பு, வாயுத் தொந்தரவு…கழுத்துச் சுளுக்கு…என்று சொல்லவொண்ணா சங்கடங்கள் உடம்பில் பரவிக் கிடந்தன.  கால்களுக்கு பலமில்லை. எந்த நோவையும் வாய்விட்டு யாரிடமும் நான் சொல்லிக் கொள்வதில்லை. அநுதாபம் தேடுவதில்லை. அமைதியாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். யாருக்குத் தெரிஞ்சு என்னவாகப் போகிறது?

இப்ப அவசரத்துக்கு ஒரு நடை மட்டும் கொண்டு வந்திடுங்க…சாயங்காலம் ஒரு நடை போங்க…உடனே வேண்டாம். ஏன்னா அதுக்குள்ளயும் அவன் வந்துட்டான்னா? நிச்சயம் அவன் கொண்டு வந்திடுவான். இதுவரை இப்படி லேட் ஆனதில்லே….என்ன கஷ்டமோ அவனுக்கு? – அவனிடம் இருக்கும் இரக்கம் கூட என் மேல் இல்லையோ? இப்படித்தான் தோன்றியது எனக்கு. கட் அன்ட் ரைட்டா எங்கிட்டதான் பேசுவே!

தண்ணீர் இல்லையென்றால் அவளும்தான் என்ன பண்ணுவாள்? சமைக்கல இன்னிக்கு…என்று உட்கார்ந்தால் கதை என்னாவது? வீடே உட்கார்ந்து போகுமே? சரி…இன்னிக்கு அடுப்படிக்கு லீவு….வா..வெளில போவோம்…கோயிலுக்குப் போயிட்டு அப்டியே வெளிலயே கொட்டிண்டு வீடு வந்து சேருவோம்….-சொல்ல மனசு வருகிறதா? என் வருமானமும் அந்த அளவில்தானே இருக்கிறது. எப்படி வாய் வரும் எனக்கு? நானே சொன்னாலும் அவள் சம்மதிக்க வேண்டுமே?

தண்டமா? ஓட்டல்ல போய் தின்னுண்டு…உடம்பக் கெடுத்துண்டு…அந்தக் காசு இருந்தா பத்துக் கிலோ அரிசி வாங்கலாம்….காசென்ன அம்புட்டு வள்ளிசாப் போச்சா…? என்பாள்.

பாவம்…அதிகபட்சம் அவள் என்னிடம் கேட்பது…கோயிலுக்குக் கூட்டிப் போங்க…என்பதுதான். ஒரு நாள் கூட சினிமா போவோம் என்று சொன்னதில்லை. அந்தப் பைத்தியம் எனக்கு மட்டும்தான்.

ஏன் இன்னிக்கு லேட்டு…? என்று அவள் கேட்டு நான் பொய் சொன்ன நாட்கள் அநேகம். ஆபீஸ் ஆடிட், இன்ஸ்பெக் ஷன்…நிதியாண்டு முடிவு…என்று விதம் விதமாய்ச் சொல்லியிருக்கிறேன். எல்லாம் பாழாய்ப் போன இந்தச் சினிமா ஆசைதான்… புரியுமோ, புரியாதோ…நம்பியிருக்கிறாள்.

ண்ணீர் கேனை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். மதுரையில் இருக்கும்போது இந்தக் கேனை டூ வீலரில் மாட்டிக் கொண்டு பாய்ந்து பாய்ந்து போய்த் தண்ணீர் கொண்டு வருவேன். அது வயசு. தெருக் குழாய்கள் இல்லாமல் போனதும், தண்ணீர் பஞ்சமென்பதும் எப்போதோ வந்து விட்ட ஒன்று. வீட்டுக்கு வீடு குழாய்கள் போட்டு தண்ணீர் வரி கட்டியதுதான் மிச்சம்.. நிறையச் செலவழித்து தண்ணீர் தொட்டி கட்டி அந்தப் பள்ளத்திற்குள் ரெண்டு படி இறங்கி, வாகாய்ப் பிடிப்பதுபோல் எல்லாம் பாந்தமாய்த்தான் செய்து வைத்தது. யார் செய்த புண்ணியமோ…ஆரம்பத்தில் சில நாட்கள்…ம்கூம்…சில மாதங்கள் என்றே சொல்லுவோம்…கொஞ்சம் தாராளமாய்த்தான் இருக்கட்டுமே…தண்ணீரும் வரத்தான் செய்தது.

பிறகோ எங்க வீட்ல வரல, உங்க வீட்ல வரல…என்று பிராது கிளம்பி எல்லா வீட்லயும் வரல என்றே ஆகிப் போனது. எல்லாா் வீட்லயும் வராததனால் மனமும் சமாதானமாகிப் போனது.

ஆனால் ஒன்று. தண்ணீர் காசு கொடுத்து வாங்க ஆரம்பித்தது இந்தச் சென்னைக்கு வந்த பின்னால்தான். கார்ப்பரேஷன் தண்ணீர்த் தொட்டிகள் அங்கங்கே  வீதிக்கு ரெண்டு என்று இருக்கத்தான் செய்தன. அதில் தண்ணீரைக் கொண்டு வந்து கொட்டினால்தானே?  திங்கள், வியாழன் என்பார்கள். கிழமைதான் வந்து போகும். அதையும் கழுவிச் சுத்தம் செய்து வெயிலில் காய விட்டுக் கண்ணால் கண்டதில்லை.

அப்படியே கொட்டினாலும் எங்கள் தெருத் தொட்டியில் அன்றே…அன்றே அல்ல…ஓரிரு மணி நேரத்தில்…பிடித்து விட வேண்டும். இல்லையென்றால் அதன் அருகேயுள்ள வீட்டுக்காரர் டியூப் போட்டு இழுத்து விடுகிறார். அதெப்படி என்றெல்லாம் கேட்கக் கூடாது. அது அப்படித்தான்.  அந்தத் தெருவிலேயே தண்ணீர்ப் பஞ்சம் என்பது அவருக்கு மட்டும் கிடையவே கிடையாது. அப்பப்போ ஒரு குடம்…ரெண்டு குடம் என்று பிடிக்கச் செல்பவர்கள் தண்ணீர் திருடப்படுவதைப் பார்க்கத்தான் செய்கிறார்கள். இதென்னங்க அநியாயமாயிருக்கு…? என்று அவரவர் மனசுக்குள் சொல்லிக் கொண்டதோடு சரி…யாரும் எதிர்த்துக் கேட்டதில்லை. ஆனாலும் எளிய மக்களின் சகிப்புத்தன்மையே அலாதி. இல்லையென்றால் இங்குள்ள அரசியல்வாதிகள் வண்டியோட்ட முடியுமா?

நானும் பிடிக்கப் போயிருக்கிறேன்தான். சார்…வாங்க…இப்டி வந்திருங்க…என்று டியூப்பை எடுத்து என் கேனுக்குள் விட்டு விடுவார். ஊரு மதுரையா? என்று சிநேகிதமானார். நம்ம ஊரு விருதுபட்டி என்று சொல்லிக் கொண்டார். புரிந்தது.

இன்னும் ஒரு நடை வருவீங்களா…? என்றும் கேட்டுக் கொள்வார். அதாவது அதுக்கு மேலே வந்திராதீங்க…என்று அர்த்தம்.

…இந்தச் சென்னைக்கு வந்து ரொம்ப வருஷம் ஆச்சு…இந்தப் பக்கமெல்லாம் காடாக் கிடந்த போது வாங்கிப் போட்ட எடம் இது. வந்த புதுசுலல்லாம் கொல பயம். பாம்பும் தேளும் நட்டுவாக்காலியும் அப்படி ஓடும். வீடுகள் வரவர ஒண்ணொண்ணாக் காணாமப் போயிடுச்சி.  சின்னதா ஒரு வீடு கட்டிக் குடி வந்தாச்சு…என்றார்.

உள்ளே தலை நீட்டிப் பார்வையைச் செலுத்தினேன். பத்துக்குப் பத்து அறையாய் நீளக்க கோமணத்துணி போலிருந்தது வீடு. கொல்லைப்புறம் வாட்டர் கேன்களாக அடுக்கப்பட்டிருந்தது இங்கிருந்து தெரிந்தது. சரசரவென்று மொபெட்டில் பறக்கிறாரே…அந்நியன்..…அது இவர் பையன்தானோ? நினைத்துக் கொண்டேன்…கேட்கவில்லை. அதே நீளத்திற்கு மேலே ஆஸ்பெஸ்டாஸ் போட்டு மாடியாக்கியிருந்தார். நிறையப் பேர் இருந்தார்கள் அவர் வீட்டில். நாலஞ்சு பெண்கள் தென்பட்டார்கள்.  மகள்களும், மருமகள்களுமாய் இருக்கலாம் என்று எண்ணினேன். வீடே சளசளவென்றிருந்தது. பெரிய குடும்பி…!

அவருக்காவது எனக்குத் தண்ணீர் கொடுக்க மனமிருந்தது. அவர் சம்சாரத்திற்கோ துளியும் மனசாகாது. இப்டி ஆளாளுக்கு நாலஞ்சு நடை எடுத்தீங்கன்னா அப்புறம் நாங்க என்ன பண்றதாம்? என்று சலித்துக் கொண்டது அந்தம்மாள். பொதுத் தொட்டிதானே அது…எப்படிச் சொந்தம் கொண்டாடுகிறார்கள் பாருங்கள். ரெண்டு நடைக்கு மேல் எவரும் போனதில்லைதான் நாலஞ்சு நடையாம்…. எல்லாம் காலக்கிரகம்…

எத்தன வாட்டிதான் இதுக்குக் குழாய் மாத்துறது?  சரியா மூடாம அவுக பாட்டுக்குத் தெறந்து போட்டுட்டுப் போயிடுறாக…ஒவ்வொருதடவையும் நாந்தான் ஓடி ஓடி வந்து அடைக்கிறேன். திருகித் திருகி…அந்த பிளாஸ்டிக் குழாய் எவ்வளவுதான் தாங்கும்…யாருக்காச்சும் தெரியுதா? தண்ணி பிடிக்க மட்டும் ஓடி ஓடி வந்திடுறாக…அப்பப்ப யாராச்சும் குழாய் வாங்கி மாட்டுங்க…

மற்றவர்கள் தண்ணீர் பிடிப்பதை எப்படியாவது குறைக்க வேண்டும் அல்லது படிப்படியாக நிறுத்த வேண்டும் என்கிற யுக்தி இந்த வழி பிரதாபப்பட்டது. அதிகம் பயனடைபவர்கள் அவர்கள்தான். அதுக்கு அந்தாள் துணை. அதாவது அங்கு அடிக்கடி தென்படும், வந்து உட்கார்ந்து டீ குடிக்கும் ஒருவன். மனிதர்களே சுய நலமிக்கவர்கள்தான். அவனவன் வசதி…அவனவனுக்கு…!

நீங்க ஒரு அப்ளிகேஷன் எழுதிக் கொடுங்க…இந்தத் தெரு முக்குல ஒரு தொட்டி வச்சிடுறோம்..எல்லார்ட்டயும் கையெழுத்து வாங்கிக் கொடுக்கணும்…அப்பத்தான் பரிசீலிப்பாங்க…- இது கார்ப்பரேஷன் ஆள். அவ்வப்போது அவர் தலை தெரியும் அந்த வீட்டில்.  பிறகு  செல்வாக்குக்குக் கேட்கணுமா? ஏதோ நாங்களா இருக்கக்கண்டு ஆளுக்கு  ரெண்டு கொடம் விடுறோம்…பார்த்துக்குங்க…!!

ண்ணீர் கேனை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். இருபத்தஞ்சு லிட்டர் கேன்.இருநூற்றம்பது ரூபாய். இத்தோடு நாலஞ்சு மாற்றியாயிற்று. எப்படித்தான் அதில் ஓட்டை விழுமோ?  தண்ணீரோடு கொஞ்சம் அழுத்தித் தரையில் வைத்தால் எங்காவது ஒரு ஓரத்தில் பிடுங்கிக்கொண்டு விடும். தண்ணீருக்கான செலவுகள் விதம் விதமாய் முளைத்தன.

அந்த நாயுடு வீட்டுத் தொட்டியில் இந்நேரம் தண்ணீர் இருக்காது என்று தோன்றவே பக்கத்து லிங்க் ரோடிக்குச் செல்வோம் என்று கிளம்பினேன். டூ வீலரை எடுத்து சைடு கொக்கியில் மாட்டிக் கொண்டு புறப்பட்டேன். வரும்போது தண்ணீர் வெயிட்டோடு ஓட்ட முடியாது. ஒரு பக்கம் தள்ளும். விழுந்து வைத்தால்?  தள்ளிக்கொண்டாவது வருவோம். தூக்குச் சுமை குறையுமே?

லிங்க் ரோட்டில் உள்ள தொட்டியில் தண்ணீர் தீர்ந்திருந்தது. பொடியாக நூல் இழுத்தது போல் விழுந்தது. அதில் வைத்து என்று நிறைந்து எப்பொழுது நான் வீடு  திரும்புவது? எவ்வளவு நேரம் நிற்பது?

அடுத்த தெருவுக்குப் புறப்பட்டேன். அங்கும் ஒரு தொட்டி உள்ளதுதான். ஆனால் பக்கத்து அபார்ட்மென்ட் லேடி ஒருவர் கேள்வி கேட்பார்…

உங்க தெருவுல தொட்டி இருக்கும்ல…என்ன வாடிக்கையா இங்க பிடிக்க வர்றீக…?

இன்னிக்குத்தாங்க வர்றேன்….நான் ரெகுலரா வர்ற ஆளில்ல….

இல்லயே…உங்கள அடிக்கடி பார்த்திருக்கனே….!  இன்னிக்குப் பிடிச்சிக்குங்க…சும்மாச் சும்மா வராதீங்க…எங்க ஆட்களுக்கு வேணாமா?

ஸோல் ப்ரொப்பரைட்டர் போல்ருக்கு…-என்ன அதிகாரமான பேச்சு?

அந்தத் தெருவிலும் தொட்டி காலி. என்ன செய்யலாம்?

வண்டியைக் கிளப்பினேன். கொக்கியில் கேன் நன்றாய் மாட்டியிருக்கிறதா பார்த்துக் கொண்டேன். சில சமயம் ஜம்ப் ஆகி கீழே விழுந்து விடும். அது தெரியாமல் நாம்பாட்டுக்குப் போய்க் கொண்டிருப்போம். ஊரில் இப்படி ஆகியிருக்கிறது.  எடுத்துக் கொடுக்கவா காத்துக் கொண்டிருப்பார்கள்? தண்ணி பிடிக்க ஆச்சு…என்று கிளம்பி விடும் அன்பர்கள்தான்….! மனிதனுக்கு எளிதாய்க் கிடைக்கும் லாபங்களில் எப்போதுமே ப்ரீதி அதிகம்…! விலையில்லாப் பொருட்கள் போல…!

மெயின் ரோட்டிற்கு சற்று முன்பாக ஒரு தொட்டி இருக்கும். கொஞ்ச நாள் முன்பாகத்தான் வைத்திருந்தார்கள். அங்கு செலவு அதிகமில்லை என்று தோன்றியது. போகிற வருகிற ஆட்கள் கால், கை கழுவுவதைப் பார்த்திருக்கிறேன். அதற்கா அந்தத் தண்ணீர்…அது நல்ல தண்ணியாச்சே…! சுட வச்சுக் குடிச்சா பஞ்சமில்லையே…! அதைப்போய்…..

அங்கு நோக்கி வண்டியை விட்டேன். ஆளைக் காணலியே என்று நளினி காத்துக் கொண்டிருப்பாள். இன்னிக்கு சமையல் லேட்டுதான்.

சற்று தூரத்தில் ஒரு சிறு கூட்டம். …என்னாச்சு…அதுவும் அந்தத் தொட்டி பக்கத்துல…? இருந்திருந்தும் நாம அபூர்வமாப் பிடிக்கப் போற நேரத்துலயா இந்த இடைஞ்சல்? என்னடா இது தொந்தரவு? – சலித்துக் கொண்டே நெருங்கினேன்.

என்னங்க இது…என்னாச்சு….?-வழக்கமாய்த் தண்ணீர்க் கேன் கொண்டு வரும் அந்த ஆள்…வேன் முன்னே நின்றிருந்தான். இடது பக்க டயர் நசுங்கிப் பள்ளத்தில் இறங்கியிருந்தது.  ஆட்கள் பின்னாலிருந்து தள்ளித் தள்ளி ஓய்ந்து கிடந்தார்கள். சதும்பப் பதிந்திருந்தது சகதியில்.

என்னாச்சு…பஞ்சராயிடுச்சா…? இப்படி எறங்கிக் கெடக்கு…?

என் பேச்சைக் காதில் வாங்காமல் யாருக்கோ ஃபோன் பண்ணுவதில் லயித்திருந்தான். அவன் பரபரப்பு எனக்குள் சங்கடத்தை ஏற்படுத்தியது.

என்னங்க…ஏதாச்சும் உதவி வேணுமா…? சொல்லுங்க…ரோட்டோரமாக் கூடக் கொண்டு ஒதுக்க முடியாது போல்ருக்கு….?

சற்றுத் தள்ளி அந்த வழி வரும் வாகனங்களைத் திருப்பி விட்டுக் கொண்டிருந்தான் ஒரு ஆள். கிளீனரோ? துணையாளோ?

சார்…கொஞ்சம் வண்டி தர முடியுமா? ஒர்க் ஷாப் வரைக்கும் போயி ஒரு டோ-டிரக்கைத் தள்ளிட்டு வந்திடுறேன்….ஃபோன் போக மாட்டேங்குது….சடனா வண்டியை ஒதுக்கியாகணும்….முக்கியமான ரூட்டு இது….-சொல்லிக் கொண்டே என் வண்டியிலிருந்த கேனை எடுத்து என்னிடம் நீட்டினான்  அவன். டூ வீலரை ஸ்டான்ட் எடுத்து எதிர்த் திசையில் திருப்பினான். கொஞ்ச நேரம் பார்த்துக்குங்க சார்…என்றவாறே வண்டியில் ஏறிப் பறந்தான்.

நான் செய்வதறியாது  நின்றேன். வீதியின் முனையில் ஒரு டிராஃபிக் போலீஸ் இந்த இடத்தை நோக்கி வருவது தெரிந்தது.

வேனுக்குள் ஐம்பதுக்கும் மேற்பட்ட  தண்ணீர் நிரப்பிய கேன்கள் பாரமாய் வண்டியை அழுத்தி துளி அசைத்தாலும் சாய்ந்து விடுமோ என்கிற அபாய நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தது.

 

                                                ---------------------------

 

 

 

             

07 மார்ச் 2025

 

 சிறுகதை                (திண்ணை இணைய இதழ் 05.03.2025 பிரசுரம்)                           

“கடமை “

           


சார்…தபால் திரும்பி வந்திருக்கு …..-ஒரு வணக்கம் போட்டு சொல்லிக் கொண்டு வந்த போஸ்ட்மேனை நிமிர்ந்து பார்த்தார் கனகமணி.

            நீட்டிய தாளில் கையொப்பமிட, பியூன் செல்லச்சாமி வந்து சீல் வைத்து திருப்பிக் கொடுத்தார். .

            தபாலை நிதானமாக சிசர் வைத்து நுனியில் கட் பண்ணினார். உள்ளே இருந்த  தாளை எடுத்தார். ஒரு மெல்லிய பதற்றம் அவரிடம் பரவியிருந்ததை உணர்ந்தார்.

            எழுத்தர் அவிநாசிக்கு  அனுப்பிய கடிதம்தான அதன் ஜெராக்ஸ்  இணைப்போடு திரும்பியிருந்தது. நாம அனுப்பிச்சதே திரும்பிடுச்சு? என்றவாறே அந்தக் கடிதத்தையும் இணைப்போடு ஓரத்தில் கிழித்த தபால் கவரையும் பின்னால் வைத்து ஸ்டாப்ளர் பின் அடித்தார்.

            தேர்தல் அலுவலர் - 3 க்கு அவரை நியமனம் செய்திருந்த ஆணை அது. அன்று புதன் கிழமை.  முதல் வாரம் வெள்ளிக்கிழமை அனுப்பியிருந்த கடிதம். சனிக்கிழமை கொடுத்திருக்கலாம். அல்லது திங்கட்கிழமை டெலிவரி செய்யப்பட்டிருக்கலாம். அப்படி டெலிவரி செய்யும்போது வாங்க மறுத்து திரும்ப அனுப்பப்பட்டிருக்கிறது. அதானே?

            ஆள் வரும்முன்னே அனுப்பிய கடிதம் திரும்ப வந்து விட்டது. தேர்தல் பணி ஏற்றே ஆக வேண்டும், மறுத்தல் கூடாது என்கிற நோக்கில் ஒப்புதல் அட்டையோடு பதிவஞ்சலில் அனுப்பப்பட்ட தபால் திரும்பியிருக்கிறது.

            பொதுவாக இம்மாதிரி தபாலில் அனுப்பும் நடைமுறை இல்லைதான். வெளியூரில் இருக்கும் ஆள் ஒருவேளை வராமலே போய்விட்டால்? இந்த முக்கியமான ஆணையைக் கண்டாவது ஆள் வந்தே ஆக வேண்டுமே? இப்பணியை மறுக்க முடியாதே…? அசல் தன்னிடம் இருப்பதை டிராயரைத் திறந்து பார்த்து உறுதி செய்து கொண்டார்.

            சொல்லப்போனால் இம்மாதிரித் தபால்களை நேரடியாக வழங்கி, கையொப்பம் பெற வேண்டும். அதுதான் முறை. நடைமுறையே அதுதான். ஆள் வெளியூரில் இருந்ததால் அவசரம் பார்த்து வந்து சேர வேண்டும் என்று  இப்படிச் செய்யப்பட்டது. ஃபோனில் பிடிக்க முடியவில்லையே? அப்படியும் தபால் திரும்பியிருக்கிறது. ஆளில்லையா? வாங்கவில்லையா? வெவ்வேறாக முயற்சித்தும் பலனில்லை.

            வந்த தபாலைத் திருப்பித் திருப்பிக் கவனமாய்ப் பார்த்தார் கனகமணி. இவங்களோட பெரிய்ய்ய்ய தொல்லையப்பா….என்ற எண்ணம் அவர் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.  …Door locked …என்று மூலையில் கிறுக்கப்பட்டிருந்தது.

            இன்று புதன் கிழமை ஆளும் பணிக்குத் திரும்பியிருக்க வேண்டும். நேற்றோடு விடுப்பு முடிந்தது. அவநாசி வரவில்லை. ஒரு வேளை தேர்தல் பணிக்குப் பயந்து கொண்டு விடுப்பை நீட்டிப்பாரோ? சந்தேகம் வந்தது.

            மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தேர்தல் பணி ஒதுக்கீட்டு ஆணைகளை எடுத்துக் கொண்டு டெலிவரி செய்ய வந்த பணியாளர் இன்று மீண்டும் வரக்கூடும். எல்லாத் தபால்களும் எல்லாருக்கும் வழங்கப்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்ய. என்ன பதில் சொல்வது?

            திரும்பி வந்த தபாலைத் திருப்பியளிக்க முடியுமா? ஆளில்லை என்று சொல்ல முடியுமா? தேர்தல் பணியை மறுப்பது கூடாது. மறுக்கும் பணியாளர் மீது நடவடிக்கை உண்டு.

            யோசித்தவாறே அமர்ந்திருந்தார் கனகமணி.   வேறு வேலை ஓடவில்லை. எதிரே இருந்த எழுத்தர்கள், தட்டச்சர்களின் இருக்கைகள் காலியாயிருந்தன. அனைத்துப் பேரும் தேர்தல் பயிற்சி வகுப்பிற்குச் சென்றிருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடம் போடப்பட்டிருந்தது. டவுனுக்குள்ளேயும், சற்று ஒதுக்குப் புறமாகவும்….வகுப்பு அரை நாளில் முடிந்து விடும்தான்.   மதியம் ஆபீஸ் வந்து விட வேண்டும். ஆனால் யாரும் வருவதில்லை்.  வீட்டிற்குப் போய் சாப்பிட்டு வருவதானாலும் இரண்டரை, மூன்றுக்குள் வந்துவிடலாம்தான். போனால் போனதுதான். குறைந்தது நான்கு வகுப்புகளாவது இருக்கும். போகும் இடத்தில் எப்போது வகுப்பு ஆரம்பிக்கும், எப்போது முடியும் என்றும் சொல்ல முடியாது. வகுப்பு எடுப்பவர் கொஞ்சம் முன்னே பின்னே வந்தால் நேரம் ஆகத்தானே செய்யும்? அதனால் பணியாளர் ஏன் மதியம் ஆபீஸ் வரவில்லை என்று யாரையும் கேட்கவும் முடியாது. கேட்டும் பயனில்லை. கொடுத்த ஆணைப்படி ஒழுங்காகத் தேர்தல் பணியைச் செய்து முடிக்கட்டும் அதுவே போதுமானது என்று தோன்றிவிடும். இல்லையென்றால் அலுவலருக்குக் கெட்ட பெயர். அவருக்குக் காரணங்கள் கேட்கப்படும்.

            எனவே மதியம் ஆபீஸ் வருவதைப்பற்றி பொதுவாய் யாரும் பொருட்படுத்துவதில்லை. அது அந்தந்த ஆபீஸ் சம்பந்தப்பட்ட, அங்குள்ள அலுவலகம் சம்பந்தப்பட்ட நடைமுறை விஷயங்கள்.

            கனகமணிக்கு மதியம் இரண்டு மணிக்கு மேல் தேர்தல் வகுப்பு. பகல் அரைநாள் ஆபீஸ் போய் இருக்கும் வேலைகளை முடித்து விடுவோம் என்று வந்திருந்தார் அவர். குறிப்பாய் அவர் மனதிலிருந்த விஷயம் இதுதான். அவிநாசி தபால் பெற்றாரா இல்லையா?

            சந்தேகப்பட்டதுபோலவே ஆகிப் போனது.

            எதற்காக தேர்தல் பணியை ஏற்க மறுக்கிறார்கள் அல்லது தயங்குகிறார்கள் அல்லது பயப்படுகிறார்கள்? அங்கென்ன அடிக்கிறார்களா, பிடிக்கிறார்கள்? அப்படியென்ன அறிவில் ஏறாத விஷயமா அது? எவ்வளவு எளிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்? ஒருவர் பெயர் படிக்க இன்னொருவர் பட்டியலில் அன்னாரின் பெயரும் படமும் இருப்பதை உறுதி செய்து கொண்டு கையொப்பம் பெற, மூன்றாவது நபர் இடது கை ஆள்காட்டி விரலை நீட்டச் சொல்லி நகத்திற்கும் சதைப் பகுதிக்கும் குறுக்கே சமமாய் விழுவது போல் மையைத் தடவி அனுப்ப வேண்டியதுதான்.  இதில் இந்த மை வைக்கும் வேலைக்குக் கூடப் பயந்தால் எப்படி?

            முதல் நாள் மாலையே எங்கு பணி செய்ய ஆணையிடப்பட்டிருக்கிறதோ அந்தப் பள்ளிக்கு அல்லது இடத்திற்குச் சென்று விட வேண்டும். ஒரு இரவு மட்டும்  அங்கேயே தங்கி உண்டு உறங்கி எழுந்து மறுநாள் காலை தயாராக வேண்டும். இதற்கென்ன சுணக்கம்? இதிலென்ன பயம்? புதுஇடத்தில் ஓர் இரவு படுத்திருந்தால்  தொலைந்து போவோமா? அப்படியே சரியான தூக்கம் இல்லையென்றாலும்தான் என்ன? நாட்டின் பணிக்காக ஓர் இரவு தூக்கம் முழிக்கக் கூடாதா?  குடி முழுகி விடுமா?

            வேண்டாம் சார்…ஏதாச்சும் தகராறு…அடிதடி வரும்…எதுக்குப் பிரச்னை? எனக்கு எலெக் ஷன் டியூட்டி வேண்டாம் சார்…. – கணக்குப் பிரிவு எழுத்தர் முனியம்மா இப்படிச் சொன்னது நினைவுக்கு வந்தது கனகமணிக்கு.

            அப்படியெல்லாம் நினைச்சு பயப்பட வேண்டியதில்ல…எதுவும் நடக்காது. எல்லாம் பக்காவா ஏற்பாடு பண்ணியிருப்பாங்க…பாதுகாப்புக்குப் போலீஸ் காவல் போட்டிருப்பாங்க தேர்தல் பணியை வேண்டாம்னு சொல்ல முடியாது…செய்தே ஆகணும். அது நம்மளோட கடமை…புரிஞ்சிக்குங்க…

            சரி சார்…நீங்க சொல்றீங்களேன்னுதான் சம்மதிக்கிறேன். எங்க வீட்டுக்காரரு வேண்டாம்னு சொல்றாரு…வாங்காதங்கிறாரு…..அப்புறம் நான் என்ன சார் பண்றது? நாளைக்கு ஏதாச்சும் பூத்ல கலாட்டா கிலாட்டா அடிதடின்னு நடந்திச்சின்னா…காயம் பட்டுப் போச்சின்னா…யார் சார் பொறுப்பாறது? நீங்களா வருவீங்க….?

            இது எனக்காக வர்றதில்லம்மா…நல்லாப் புரிஞ்சிக்குங்க…நான் சொல்றதுனால நீங்க ஏத்துக்க வேண்டாம். சொல்ல வேண்டியது என் கடமை…அதனால சொன்னேன். இது கலெக்டர் ஆர்டர்..இல்லன்னா உங்க பேர்ல ஆக் ஷன் எடுப்பாங்க…பரவால்லியா? மெமோ கொடுப்பாங்க…ஏன் தேர்தல் பணியை ஏத்துக்கலைன்னு காரணம் கேட்பாங்க….அலைய வேண்டியிருக்கும்… அதுக்கு கமுக்கமா ஏத்துக்கிட்டு செய்துட்டு வந்துடறதே பெட்டர். நான் உங்களுக்கு நல்லதத்தான் சொல்லுவேன்…நம்புங்க…நம்மள மாதிரி ஊழியர்களை நம்பித்தாம்மா எலெக் ஷனே நடக்குது…நாம செய்யாம வேறே யாரு செய்வாங்க…மகிழ்ச்சியா ஏத்துக்கிட்டுப் போயிட்டு வருவீங்களா? எதை எதையோ சொல்லிப் புலம்புறீங்களே? செய்த வேலைக்குப் பணமும் கொடுக்கிறாங்கல்ல…இந்தியா முழுக்க இது நடக்குது? உங்கள மாதிரி அங்கங்க இருக்கிறவங்க உனக்கு வேண்டாம்…எனக்கு வேண்டாம்னு சொன்னா அப்புறம் யாரை நம்பிம்மா தேர்தல நடத்தும் அரசாங்கம்…? கவர்ன்மென்ட் சர்வன்டா இருக்கோம்….தேர்தல் கமிஷன் அரசாங்க மெஷினரிய நம்பித் தேர்தலை நடத்துறாங்க…நம்பள நம்பித்தான் முறையாத் திட்டமிட்டு இந்த வேலைல இறங்குறாங்க…செய்து கொடுக்க வேண்டியது நம்ப கடமையில்லையா? அத விட வேறே வேலை என்ன நமக்கு? சந்தோஷமா ஏத்துக்கிட்டுப் போயிட்டு வர வேண்டாமா? இப்டியா சீக்குப் பிடிச்ச கோழி மாதிரிச் சுணங்குறது? தப்பும்மா….ரொம்பத் தப்பு….முதல்ல கையெழுத்துப் போட்டு எலெக் ஷன் டியூட்டி ஆர்டரைக் கும்பிட்டுக் கைல வாங்குங்க…

            கலெக்டர் ஆபீஸிலிருந்து வந்திருந்த அதிகாரி முன்னேயே இப்படி ஒரு நீண்ட லெக்சர் கொடுத்து அவரவர் ஆணைகளை வாங்கச் செய்தார் கனகமணி. தன்னால் கூட இப்படி விளக்கிச் சொல்ல முடியாது என்று அகமகிழ்ந்து தேர்தல் பணி ஆணைகளை வழங்கிவிட்டுப் போனார் அந்த அதிகாரி. போகும்போது மட்டும் ஒன்று சொன்னார்….

            மலைப் பகுதிக்கெல்லாம் தேர்தல் வேலைக்குப் போறாங்கம்மா…தெரியுமா? கழுதை முதுகுல, குதிரை மேலே…எல்லாச் சாமான்களையும் ஏத்திட்டு, மொத நா ராத்திரியே போய் கெதம் கெதம்னு கிடக்காங்க….அவுங்களும் நம்மள மாதிரி கவர்ன்மென்ட் சர்வன்ட்கள்தான்…மனுசங்கதான்….கொஞ்சம் எல்லாத்தையும் நினைச்சுப்பாருங்க….

            முனியம்மா பயந்தது என்னவோ ஓரளவு நியாயம்தான் என்றும் தோன்றியது கனகமணிக்கு. ஏனென்றால் அவருக்கே அப்படியான ஒரு அனுபவம் உண்டு. மானேஜர் ஆவதற்கு முன் இருபதாண்டு காலம் உதவியாளராகப் பணி புரிந்த காலங்களில் மூன்று நான்கு தேர்தல் பணிகளுக்குச் சென்றுள்ளார் கனகமணி. அப்படிச் சென்ற ஒரு இடத்தில் பெரிய கலாட்டாவே நடந்து போனது என்பதுதான் உண்மை. கும்பலாக வந்து தேர்தல் நடக்கும் பூத்தை நோக்கி கற்களை விட்டெறிந்து, உள்ளே புகுந்து இருந்த ஆட்களையெல்லாம் விரட்டி அடித்து மேஜை நாற்காலிகளை உடைத்து,  தேர்தல் ஆவணங்களைக் கிழித்துக் காற்றில் பறக்கவிட்டு, பிறகு மிலிட்டரி போலீஸ் வந்து அவர்களை விரட்டி விரட்டிப் பிடித்த கதையும் காட்சியும் இப்போதும் அவர் மனதில் அழியாது நிலைபெற்ற ஒன்றாக இருந்து கொண்டிருக்கிறதுதான்.

            எங்கோ என்றோ ஒன்றிரண்டு நடந்து விட்டது என்பதற்காக தேர்தல் பணிக்கே செல்ல மாட்டேன் என்று சொல்வது என்ன நியாயம்? அப்படி மறுப்பது மனசாட்சிப்படி நியாயமாகுமா? நாமெல்லாம் ஒன்று சேர்ந்துதானே தேர்தலை வெற்றிகரமாக நடத்திக் கொடுக்க வேண்டும்? அது நம் அத்யந்தக் கடமையில்லையா? ஓட்டுப்போடுவது எப்படி மக்களின் ஜனநாயகக் கடமையோ அதுபோல தேர்தல் பணிக்கும் சந்தோஷமாக ஒத்துக் கொண்டு மகிழ்ச்சியாய் உற்சாகமாய் அந்தக் கடமையை நிறைவேற்றுவது இந்த நாட்டின் பிரஜையாகிய நமது கடமையும் ஆகிறதுதானே?

            பெரும்பாலும் யாரும் வாங்க மாட்டாங்க சார்…அந்தந்த ஆபீஸ் சூப்பிரன்ட், மானேஜர்னுதான் நாங்க கொடுத்திடுவோம். அவரோட பொறுப்பு அதை அவரவருக்கு விநியோகிப்பதும், ஏற்றுக் கொள்ளச் செய்வதும்….இப்டி ஒவ்வொரு ஆபீசா நாங்களே உட்கார்ந்து கொடுத்துக் கையெழுத்து வாங்கிட்டிருந்தோம்னா எங்களுக்கு வேலை முடியாது சார்…ஒவ்வொரு ஆபீஸ்லயும் பாதிக்குப் பாதிதான் விரும்பி வாங்குறாங்களேயொழிய எல்லாரும் சந்தோஷமா ஏத்துக்கிறதில்ல சார்…பயப்படுறாங்க…அதான் ஏன்னு தெரில…? அப்படியென்ன கஜகர்ண வித்தையா இந்த வேலை? அதான் நாலஞ்சு வகுப்பு எடுக்கிறாங்களே…அதுலயே எல்லாமும் நல்லாத் தெரிஞ்சி போயிடுமே…? பிறகென்ன சார் தயக்கம்? நம்ம ஊழியர்களை மாத்தவே முடியாது சார்…இப்டி சோம்பின மனநிலைல இருக்கிற இவுங்களை உசுப்பிவிட்டு உசுப்பி விட்டுத்தான் ஆள் சேர்த்து இந்தத் தேர்தலை நடத்தி முடிச்சாக வேண்டியிருக்கு….இதாச்சும் பரவால்ல….தேர்தல் அன்னைக்கு வராம இருந்த ஆட்களும் உண்டு…அது தெரியுமா? ஒருத்தரே ரெண்டு பேர் வேலையைப் பார்க்க வேண்டிய நிலமையும் வந்திருக்கு. எல்லாத்தையும்தான் சார் சமாளிச்சிக்கிட்டிருக்கோம்…. – ஆணைகளை வழங்க வந்து போன அதிகாரி குறைபட்டுக் கொண்ட ஆதங்கம் இது.

            திரும்பி வந்த தபாலையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் கனகமணி. என்ன செய்யலாம் என்கிற யோசனை அவர் மனதில் தீவிரமாக ஓடிக் கொண்டிருந்தது.

            அவிநாசி வேலைக்கு வரவில்லை. விடுப்பு நீட்டித்து விண்ணப்பமும் வரவில்லை. கதவு பூட்டப்பட்டிருக்கிறது என்று எழுதி தபால் திரும்பி வந்திருக்கிறது. ஆளை எங்கே போய்த் தேடுவது? ஒரு வேளை தபால் இன்று அலுவலகத்திற்குத் திரும்பக் கிடைத்து விடும் என்று தெரிந்து…ஒரு நாள் விட்டுத் தாமதமாக அலுவலகம் செல்வோம் என்றிருப்பாரோ? நீட்டித்த ஒரு நாளைக்கு ஆபீஸ் போய் விடுப்பு எழுதிக் கொடுத்துக் கொள்வோம் என்று  முடிவு செய்து கள்ள மௌனம் சாதிக்கிறாரோ? ஏற்கனவே அடிக்கடி காரணமில்லாமல் பொய்க் காரணங்கள் சொல்லிச் சொல்லி விடுப்பு எடுக்கும் ஆசாமி. தாத்தா இறந்துட்டார்…பெரியப்பா போயிட்டார்….(எத்தனை முறை இறந்தார்களோ!)  என்று. வேறு ஏதேனும் வியாபாரம் செய்கிறாரோ என்றெல்லாம் கூடச் சந்தேகம் வந்தது இவருக்கு. வெளியூர் ஆசாமி. தினமும் வந்து செல்பவர். இதையெல்லாம் போய் உளவறிந்து கொண்டிருக்க முடியுமா? அதுவா வேலை? அவராய்ச் சொன்னால் கேட்டுக் கொள்ளலாம்.

            எதற்கு இத்தனை யோசனை? இப்போது இந்த உத்தரவை யாருக்காவது கொடுத்தாக வேண்டும். அதற்கு பெயர் மாற்றி எழுதி வாங்க வேண்டும். அதற்கு ஒரு பணியாளைப் பிடிக்க வேண்டும். யோசித்து யோசித்து மண்டைதான் குழம்பியது கனகமணிக்கு.

            திடீரென்று ஏதோ தோன்ற அவநாசிக்கான தேர்தல் பணி ஆணையினைத் திரும்பவும் எடுத்துப் புரட்டினார்.  அவருக்கும் தான் செல்லும்  பள்ளியில்தான் முதல் தேர்தல் வகுப்பு என்பது தெரிந்தது.  சரி என்று மனதில் ஒரு முடிவுக்கு வந்தார். மணியைப் பார்த்தார். பன்னிரெண்டு. கொண்டு வந்த டிபனை விலுக் விலுக்கென்று முழுங்கினார். அரை பாட்டில் தண்ணீரை உள்ளே செலுத்தினார். அலுவலரின் அறைக்குள் நுழைந்தார்.

            ஆச்சு…நீங்களும் கிளம்பிட்டீங்களா? என்றார் அதிகாரி.

            ஆமா சார்…இப்போ போய் பஸ் பிடிச்சாத்தான் டயத்துக்கு வகுப்புக்குப் போய்ச் சேர முடியும்….அந்தப் பகுதிக்கு அடிக்கடி பஸ் வேறே வராது. மேலூர் போற பஸ்ல த்ரூ டிக்கெட்தான் போடுவான்…இடைல நிக்க மாட்டான்…அந்த ஊர் வண்டி  அடிக்கடி வராது. காத்திருந்துதான் ஏறணும்….

            சரி…சரி…கிளம்புங்க…கேஷ் செஸ்ட்லாம் பூட்டிட்டீங்கல்ல…ஞாபகமா ஒரு தரம் இழுத்துப் பார்த்துட்டுப் போங்க…அப்போ இன்னைக்கு நாந்தான் இந்த ஆபீசுக்குக் காவல்…அப்படித்தானே…?

            பதில் சொல்லாமல் பார்த்துக் கொண்டு நின்றார் கனகமணி.

            பியூன் ரெண்டு பேர்ல யாராச்சும் ஒருத்தராவது இருக்காங்களா? என்றார். இல்ல சார்…அவுங்களுக்கும்தான் டியூட்டி….

            அவுங்களுக்குமா? என்னாது…மை வைக்கிற வேலயா…?

            ஆமா…சார்….பேரு படிச்சிக் கூட கையெழுத்து வாங்குவாங்க…நம்மள விட நல்லாவே செய்வாங்க…அதெல்லாம் டிரெயினிங் கொடுத்திடுவாங்கல்ல சார்….நாலு வகுப்பு எதுக்கு வைக்கிறாங்க…?

            ஓ.கே….வாட்ச்மேன் சரவணனை இங்க வந்து இருக்கச் சொல்லுங்க…பெல் அடிச்சா வர்றதுக்கு ஒரு ஆள் வேணும் எனக்கு…ஒரு டீ சாப்பிடணும்னாக் கூட ஆள் இல்லேன்னா எப்டி?

            வாசல்ல பிள்ளையார் கோயில்ல படுத்திருப்பான் சார்…சொல்லிட்டுப் போறேன்….! – சொல்லிக்கொண்டே வெளியேறினார் கனகமணி.

            அரசமரப் பிள்ளையார் கோயில். வெக்கயே தெரியாது. குளு குளுன்னு இருக்கும்….தூங்குறதுக்குக் கேட்கணுமா? ஆளப் பத்தி விடுங்க…என்றார்.

            அவிநாசிக்கு ஒதுக்கப்பட்ட தேர்தல் பணித் தபாலிலேயே அவரின் முழுக் கவனமும் குவிந்திருந்தது. எப்படியாவது தேர்தல் வகுப்பின்போது வந்திருக்கும் அதிகாரியிடம் விபரத்தைச் சொல்லி அந்தக் கூட்டத்தில் வேறு யாருக்கேனும் அவர்களது அலுவலகத்தில் விருப்பமுள்ளவர்களுக்கு அந்தப் பணியை வழங்கச் செய்ய வேண்டும். அங்கேயே அவநாசியின் பெயரை அடித்துவிட்டு புதிய பணியாளரின் பெயரை எழுதச் செய்து வழங்கியாக வேண்டும் என்று உறுதி செய்து கொண்டார். அதுபோல் முன்னம் நடந்தது அவர் மனதில் நிலைத்திருந்தது.  அத்தோடு கலெக்டர் அலுவலகம் சென்று அவிநாசியின் பணி வேறொருவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது என்கிற விபரத்தைச் சொல்லி மேற்கொண்டு அவருக்கு ஏதும் ஒழுங்கு முறை நடவடிக்கை வராமல் தடுக்கச் செய்ய வேண்டும். அதுவும் அவர் விருப்பமாய் இருந்தது.

            அதற்கு முதல் வேலையாக அவிநாசியை இன்னும் ஓரிரு நாட்கள் சேர்த்து விடுப்புக் கேட்டு மருத்துவச் சான்றிதழ் வாங்கி வரச் செய்ய வேண்டும்.

            வேறென்ன செய்வது? தன்  அலுவலகப் பணியாளரைத் தானே விட்டுக் கொடுக்க முடியுமா? சமய சந்தர்ப்பங்களில் சேர்த்து அணைத்துத்தானே கொண்டு போயாக வேண்டும்? அலுவலகத் தலைமைக்கு வேலை வாங்குவது மட்டும்தானா வேலை? அவர்களின் நலன்களில் அக்கறை கொள்வதும்தானே?

            முடிவு செய்து கொண்டு பஸ்ஸில் ஏறினார் கனகமணி. அவிநாசியின் தேர்தல் பணி ஆணையை இன்னொருவருக்கு எப்படியாவது ஒதுக்கீடு செய்து விட்டால்தான் தனக்கு நிம்மதி என்கிற தீவிர சிந்தனையே அவர் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.        

சார்….வந்திட்டீங்களா….? உங்கள எதிர்பார்த்திட்டுத்தான் காத்துக் கிடக்கேன்….-சொல்லிக் கொண்டே எதிரே தோன்றிய  அவிநாசியைக் கண்டதும் பிரமித்துப் போனார் கனகமணி.

என்னங்க இது…திடீர்னு கடவுள் மாதிரித் தோன்றி நிற்கிறீங்க…உடம்பு சௌகரியமாயிடுச்சா…? – என்று தனது சங்கடங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல்  கேட்டார் கனகமணி.

ஆயிடுச்சு சார்…இன்னைக்கு டேரக்டா நீங்க க்ளாசுக்கு  வருவீங்கன்னு செல்லச்சாமிதான் எல்லா விபரமும் சொன்னாரு….அவரும் திருமங்கலம்தான சார்…என் தபால் கொண்டு வந்திருக்கீங்கல்ல சார்….?

பின்னே?  உங்களுக்கு அனுப்பிச்சதுதான்  திரும்பிடுச்சே…? யாருக்காவது சர்வ் பண்ணி ஆகணுமே…அதுக்காகத்தான் எடுத்திட்டு வந்திருக்கேன்…இல்லன்னா எம்பொழப்பு நாறிப் போகுமேங்க…கலெக்டருக்கு யாரு பதில் சொல்றது? அது ரெண்டாவது….கலெக்டர் நம்ம பாஸைக் கேள்வி கேட்பாங்களே….? அதுக்கு எடம் வைக்கலாமா? நம்ம ஆபீசுக்குத்தானே கெட்ட பேரு…? ஏங்க வர்றேன்…வரல்ல…விடுப்பு நீடிக்கிறேன்…ன்னு ஏதாச்சும் ஒரு தகவலை அனுப்ப மாட்டீங்களா? இப்ப மட்டும் செல்லச்சாமி சொன்னார்ங்கிறீங்க…? மத்த நேரத்துல ஆள் கண்ணுல படலையாக்கும்?

ஸாரி சார்…மன்னிச்சிடுங்க….உங்க ரிஜிஸ்டர் தபால் வந்தன்னிக்கு மொத நாள் எங்க அப்புத்தா இறந்து போயிடுச்சி…அதுக்கு ஊருக்குப் போயிருந்தோம் எல்லாரும்…அதான் தபால் திரும்பியிருக்கு…எனக்குத் தேர்தல் வேலன்னா ரொம்பப் பிடிக்குமே சார்…விடுவனா….அதான் நேரா இங்க வந்திட்டேன். ஒரு எலெக் ஷன் ட்யூட்டி கூட மிஸ் பண்ணினதில்ல சார் நான்…!  கலெக்டர் ஆபீசுக்கு போய் எனக்குக் கொடுங்கன்னு கேட்டு வாங்கியிருக்கேன்…! என் ராங்குக்கு பிரிசைடிங் ஆபீசர்-1 தர மாட்டாங்க…தந்தாங்கன்னா அதையும் சக்ஸஸ்ஃபுல்லா செய்து முடிச்சிடுவேன். நான் ஆபீஸ் வர….நீங்க இங்க கிளம்பி வந்திருக்க…சந்திக்க முடியாமப் போச்சின்னா….சிக்கலாயிடுமே சார்…அதான் த்ரூ வண்டில அட்வான்சாக் கிளம்பி வந்திட்டன்….எங்கூர்லர்ந்து டேரக்ட் வண்டி மேலூருக்கு இருக்குல்ல சார்…அதப் பிடிச்சேன்….

அப்புத்தா இறந்ததாகச் சொல்கிறார். உண்மையோ பொய்யோ…நமக்கென்ன…ஆள் வந்தாச்சு. அந்தவரைக்கும் நிம்மதி.

அது சரிங்க…எதுக்கும்  ஒரு ஃபோன் அடிக்க மாட்டீங்களா? இப்டியா கிணத்துல போட்ட கல்லு மாதிரிக் கிடக்கிறது? நாங்க என்னன்னு நினைக்கிறது? இந்தத் தபால வச்சிட்டு அல்லாடிட்டேன் தெரியுமா? எலெக் ஷன் டியூட்டிங்கிறது எவ்வளவு சீரியஸ் தெரியுமா? யாருமே ரிஜெக்ட் பண்ண முடியாதாக்கும். டிஸிப்ளினரி ஆக் ஷன் எடுத்திருவாங்க…அனுபவப்பட்ட ஆள் நீங்களே இப்டி செய்தா என்ன அர்த்தம்?

வெரி வெரி ஸாரி ஸார்…தப்பா நினைக்காதீங்க…அப்புத்தா கடைசிக் காரியத்துக்குப் பணத்துக்கு அலைஞ்சிட்டிருந்தேன்…எங்கப்பாவால எதுவும் ஆகாது…நாந்தான் எல்லாம் பார்த்து செய்யணும்…அதுனால அதெத் தவிர வேறே எந்தச் சிந்தனையும் என் மனசுல இல்ல….மன்னிச்சிடுங்க….! டெத் வந்து முடக்கிடுச்சு…

சரி…விடுங்க…வந்திட்டீங்கல்ல…அது போதும்…! ஒருவகைக்கு நல்லதாப் போச்சு நீங்க நேரடியா இங்க வந்தது. இன்னைக்கு உங்களுக்கும் தேர்தல் வகுப்பு இங்கதான்….பாருங்க இந்த ஆர்டரை….-என்றவாறே அந்த ஆணையை நீட்டினார் கனகமணி.

ஆவலோடு வாங்கிக் கொண்டார் அவிநாசி.

வாங்க…முதல்ல எலெக் ஷன்  ஆபீசரப் பார்ப்போம்…உங்க ஆர்டரும் சர்வுடு…ஆளும் வந்தாச்சுங்கிறதைப் பதிவு பண்ணுவோம்…

சந்தோஷமாக இருவரும் உள்ளே நுழைந்தனர்.

மலை போலே வரும் சோதனை யாவும் பனிபோல் நீங்கி விடும்…-பழைய பாடலின் வரிகள் சட்டென்று கனகமணியின் மனதில் ஒலிக்க யப்பா…பெரிய இக்கட்டுலர்ந்து தப்பிச்சன்…..நரி முகத்துல முழிச்சேன் போல்ருக்கு இன்னைக்கு …சங்கடம் நீங்கிருச்சு….-சிரித்தவாறே அவிநாசியைப் பார்த்துக் கூறிக்கொண்டேஉற்சாகமாக  நடந்தார் கனகமணி.

அப்டியெல்லாம் உங்கள இக்கட்டுல விட்ருவனா சார்…அதான் கன் மாதிரி டயத்துக்கு வந்திட்டன்ல…என்ற அவிநாசி, மானேஜரின் மீதான மரியாதையில் ஒரு நிமிடம் நின்று அவர் கைகளை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டார்.

 

                                                ---------------------------------                                                                                                            

           

 

           

           

 

சிறுகதை              (தாய் வீடு மாத இதழ் - மார்ச் 2025 பிரசுரம்)  

“இடிச்ச புளி”





            ம்மணாம் மூஞ்சி… - அடுப்படியில் தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டே கோபத்தோடு இந்த வார்த்தைகளை உதிர்த்தாள்  யாமினி. உரிமையோடு எப்படி வேண்டுமானாலும் திட்டுவாள்.  வெளிப்படையாக அப்படித் திட்டுவதில் எனக்கும் ஒரு திருப்திதான். பரஸ்பர அந்நியோன்யத்தின் அடையாளம் அது!

            சற்று நேரத்திற்கு முன் நடந்த உரையாடலின் தொடர்ச்சியாக அவள் சிந்தனையை ஆக்கிரமித்திருந்த எண்ணங்களின் இறுதி வெளிப்பாடுதான் அந்த ஒற்றை வார்த்தை  என்று தோன்றியது மந்திரமூர்த்திக்கு. மனதுக்குள் இன்னும் என்னெல்லாம் முனகிக் கொள்கிறாளோ? அதுவும் தெரிந்தால் பரவாயில்லைதான். இதைப்போய்க் கேட்கவா முடியும்? திட்டினவரைக்கும் லாபம்!.

            காதில் விழாததுபோல் இருந்து விடலாம் என்றுதான் முதலில் தோன்றியது. அன்றாட நடவடிக்கைகளில் எத்தனை எத்தனையோ பேச்சுகள், கோபதாபங்கள், வார்த்தை விளையாட்டுகள்…இப்படி எல்லாவற்றையும் கரிசனையாகக் கட்டிக் கொள்ள முடியுமா என்ன? இதுவும் கடந்துபோகும் என்பதுபோல் பலவும்  வந்து வந்து போகின்றனதான். பொருட்படுத்தினால் வீடு ரணகளம்தான். பிறகு சந்தோஷம் என்பதையே மறந்துவிட வேண்டியதுதான்.  சதா கர்ர்….புர்ர்ர்….தான்.

            வெவ்வேறுவிதமான குண விசேடங்கள் கொண்ட மனிதர்களின் தொகுப்புதான் குடும்பம். கதம்ப மணிமாலை. தொடுக்கப்பட்ட மலர்கள் யாவும் ஒன்றுகூடி அதனதன்  சொந்த குணமான மணங்களைத் தவிர்த்து ஒரு பொது, புது மணத்தை நல்கும் நயம்.  அந்த மணம் சகிக்கக் கூடியதாயும்…சமயங்களில் இயலாததாயும்…!

            ஆனா அப்படியேவா கழிகிறது அன்றாடங்களின் பொழுதுகள்? ஒன்று ஆட்டுக்கு இழுக்கிறது ஒன்று மாட்டுக்கு இழுக்கிறது. எதுவும் ஒத்துவராது என்று எண்ணம் கொள்ளும்பொழுது ஒதுங்கிக் கிடக்கத்தான் வேண்டியிருக்கிறது. வயது அதைச் செய் என்கிறதே! அதுவே ஒதுக்கிக்கொண்டுபோய் உட்கார்த்தி விடுகிறதே!

            உங்களுக்கு யாரோடயும் ஒட்டாது. எதோடயும் மிங்கிள் ஆக மாட்டீங்க நீங்க…! எப்படித்தான் உங்களை உங்க வீட்டுல சமாளிச்சு வளர்த்தாங்களோ…நீங்களும் வளர்ந்து ஆளாகி இன்னிக்கு ஒரு குடும்பஸ்தனாவும் ஆயிட்டீங்க….உங்ககிட்டே வந்து வசம்மா மாட்டிட்டு முழி முழின்னு முழிக்கிறேன் நான்…இதுதான் இன்றைய யதார்த்தம்….! -சொல்லி முடித்து விட்டதுபோல் சூழல் இறுகிப்போய்க் கிடக்க, அந்த இறுக்கத்தைத் தளர்த்தினார் மந்திரம்.

            எந்தப் பேச்சு வந்தாலும், என்ன டிஸ்கஷன் ஆனாலும் அதுக்குக் கடைசிப்பலி நான்தானா? கட்டக் கடைசியா என் தலைல கொண்டு வந்து தேங்காயை உடைக்கிறே நீ..? இது சுத்த அபாண்டம்….நான் நான்பாட்டுக்கு இருக்கேன்…கிருஷ்ணா…ராமான்னு….என்னைப் பலிகிடா ஆக்காதே…!

            ஆமா…உங்களப் பலியாக்கி கோட்டை கட்டிக் கொழிக்கப் போறேன் …அதுக்குத்தான் இத்தனை பேச்சு…! – என்னவோ நினைச்சிட்டுப் போங்க… இன்னிக்கு நேத்திக்கா இப்டி? வருஷாந்திரமா இப்படித்தானே கழிஞ்சிட்டிருக்கு…நீங்க இருக்கிறபடி இருங்க…யாரு யாரை மாத்த முடியும்?

            மாத்த முடியுமோ இல்லியோ…மாத்திக்க முடியுமே…எதுக்கு என்னை உம்மணாம் மூஞ்சின்னு சொன்னே…? அதச் சொல்லு இப்போ…!

            பதில் பேசி ஒத்தைக்கு நின்றார் மந்திரமூர்த்தி. என் மூஞ்சியே எப்பயும் அப்படித்தானே…இதுல ஸ்பெஷலாச் சொல்ல என்னயிருக்கு?அதான் கேட்கிறேன்? -எப்போதும் தன்னைத் தாழ்த்திக் கொள்வதில் ஒரு  அபார திருப்தி.

            யம்மாடீ…நான் ஒண்ணும் சொல்லல சாமி…உங்க மலர்ந்த வதனத்த யாராச்சும் அப்படிச் சொல்வாங்களா? என்ன நானே சொல்லிட்டேன்…அதான்…

            பார்த்தியா…பார்த்தியா…மாத்துறியே…உன் மதி வதனத்தைத்தான் யாராலும் அப்படிப் பேர் வச்சுச் சொல்ல முடியாதே….ஒரு கோபத்துக்காகக் கூட ஒருத்தர் உன்னை அப்படி விளிக்க முடியாதாக்கும்….என்னைச் சொன்ன பார்…அது பொருத்தம்தான்….ஏன்னா…நான் சாதாரணமாவே அப்படித்தான் இருப்பேன்…திடீ ர்னு என்னைப் பார்க்கிறவங்களுக்கு ஒரு மாதிரித்தான் தோணும். இந்தாளோட என்ன பேச்சு? ன்னு விலகிப் போயிடுவாங்க….அதுதான் இயற்கை. என் மூஞ்சியே அவ்வளவுதான்…ஆனா ஒண்ணு இந்த மூஞ்சியை வச்சித்தான் முப்பத்து நாலு வருஷ சர்வீசை ஓட்டியிருக்கேன். இத வச்சுதான் சுத்தியிருக்கிற எல்லாரையும் பயமுறுத்தி வேலை வாங்கியிருக்கேன்.விரட்டி ராஜ்யம் பண்ணியிருக்கேன். இந்தக் கோபக் கனலை முன்னிறுத்தித்தான் எங்கிட்டே அநாவசியமா எவனும் வந்து நிக்காம என்னைக் காப்பாத்திட்டிருக்கேன்…மதிப்பு மிக்கதா ஆக்கி, எந்தச் சிக்கல்லையும் மாட்டாம சாமர்த்தியமா வெளில வந்திருக்கேன்…இன்னைவரைக்கும் அதுதான் என்னைக் காப்பாத்திட்டிருக்கு…அதுவே சத்தியம்.!என்னோட கிரடிட்டே அது ஒண்ணுதான்!
            மேற்கொண்டு பதில் சொல்ல விருப்பமில்லையோ என்னவோ? எதுக்கு பேச்சை வளர்த்திட்டு? வெட்டிக்கு….சொந்தப் பிராபல்யம் வெடிக்க ஆரம்பிச்சிடும்…! மடில கட்டி வச்சிருக்கிறதை அவிழ்த்து விட்டார்னா தாங்க முடியாது யாராலேயும்…!

            யப்பாஆஆஆ….போதும்ப்பா…கேட்டுக் கேட்டு அலுத்து சலிச்சுப்  போச்சு…காது அடைக்குது….!- கல்யாணத்திற்கு முன்பே பையன் எடுத்த ஓட்டம்.

            திடீரென்று வீடு அமைதியானது. என்னாச்சு? பேசலையா, பேச விருப்பம் இல்லையா? திடீர்னு சைலன்ட் ஆயிட்டா எப்டி?

            எனக்கு நிறைய வேலையிருக்கு…இன்னும் துவையலுக்கு அரைக்கணும். அப்புறம் மாவுக்குப் போடணும்…துணிமணி உலர்த்தணும்….வேலைக்காரி வந்திருவா…பற்றுப் பாத்திரம் ஒழிச்சிப் போடணும்…

            அதுக்கு அச்சாரம்தான் இந்த “உம்மணாம் மூஞ்சியா…”  ? விட்டு விலக விரும்பாதவர்போல் கேட்டார் மந்திரமூர்த்தி.

            ஆமாம்…எப்பப் பார்த்தாலும் ரூமே கதின்னு கிடக்கீங்க…உறாலுக்கு வந்து எல்லாரோடையும் நாலு வார்த்தை பேசினாத்தான் என்னவாம்? -இப்பொழுதுதான் விஷயத்திற்கு வருகிறாள் போலும்.  கலகலப்பே கிடையாது….

            நான் அப்படியிருப்பதில் இவளுக்கென்ன இடைஞ்சல்? வயசானவர்களை இளசுகளுக்குப் பார்க்கப் பிடிப்பதில்லை.  அப்பனானால் என்ன, ஆத்தாவானால் என்ன? கிழடு கிழடுதானே? ஒதுங்கிக் கிடந்துட்டுப் போறோம்…எதுக்கு வம்பு? என்ன பேசி என்னவாகப் போகுது? – நான் அலுத்துக் கொண்டேன்.

எனக்கு மனசு ஒதுங்கியேதான் கிடக்கிறது. நம் காலம் முடிந்தது என்கிற எண்ணம் எப்போதோ வந்துவிட்டது. துள்ளல் பேச்சு நின்று போனது. எள்ளல் பேச்சு அவ்வப்போது தலைகாட்டுகிறதுதான். அந்தச் சனியனையும் விட்டொழிக்க வேண்டும். ராம….ராம….ராம….

            எதாச்சும் பேசினாத்தானே அவுங்களுக்கும் ஒரு தெளிவு கிடைக்கும்? உங்க கிட்டே கேட்கணும்னு நினைக்கிறதையும் வேண்டாம்…அப்புறம் பார்த்துக்கலாம்னு விட்டுட்டு ஒதுங்குறாங்க…இப்படி மயான அமைதி காத்தா? உங்க ரூமுக்கு வர்றதுக்கே தயங்குறாங்க…பயப்படுறாங்களோன்னே ஒரு சந்தேகம் வருது…!-இவளாக எதற்குக் கண்டதையும் நினைத்து மருகுகிறாள்?

            நானென்ன புலியா, சிங்கமா? எதுக்கு ஒதுங்கணும். நான் இங்கதான குத்துக்கல் மாதிரி உட்கார்ந்திருக்கேன்…வந்து கேட்க வேண்டிதானே?  பெத்த அப்பன்ட்ட என்ன பேசத் தயக்கம்? அதெல்லாம் சும்மா….நீயா என்னவாவது நினைச்சிக்கிறே…!

            எப்பயும் பிஸியா இருக்கிற மாதிரியே படிச்சிட்டேயிருந்தா? எதாச்சும் எழுதிட்டேயிருந்தா?  எதுக்கு டிஸ்டர்ப் பண்ணிட்டுன்னு நினைக்க மாட்டாங்களா? இல்லன்னா கண்ணை மூடிட்டு சங்கீதத்துல மூழ்கிடுறீங்க…எதுவானும் யோசனை கேட்போம்னு நினைச்சாக் கூட உங்ககிட்டே வரமுடிலைன்னா…என்ன பண்ணுவாங்க…சின்னங்சிறுசுங்க…?

            அடேங்கப்பா…கரிசனத்தப் பார்யா? அதுக சின்னஞ்சிறிசுகளா…? என்னவோ நாம யோசனை சொன்னா அது பிரகாரம் செய்துடறாப்ல…? நீ ஒரு கிறுக்கு…அப்டி நம்பிக்கிட்டிருக்கே…நம்மளக் கேட்டுத்தான் செய்யணும்ங்கிற நிலைமைல அவுங்க இல்லை…ஏதாச்சும் தப்பா செஞ்சா அதையும் பொருட்படுத்த மாட்டாங்க. உன்னையும் என்னையும் மாதிரி உட்கார்ந்து அழமாட்டாங்க…போனாப் போகுதுன்னு விட்ருவாங்க….படட்டுமே…அனுபவப்பட்டு வெளில வரட்டுமே…அனுபவம் எய்தணும்னா கொஞ்சம் கொஞ்சம் நஷ்டம் ஏற்படத்தான் செய்யும்…உடல் நோவு, மன நோவு, செயல் நஷ்டம், பண நஷ்டம்…போயிட்டுப் போகுது…அப்புறம் எப்படி அனுபவம் சேகரமாகுறது? தனிச்சி இயங்கினாத்தான் அது சாத்தியம்…! படட்டும்…படட்டும்….ஒண்ணும் பங்கமில்லே….!

            சொல்லிவிட்டு உறாலிலிருந்து அறைக்குள் புகுந்து கொண்டார் மந்திரமூர்த்தி. தனக்கெல்லாம் யார் துணை இருந்தார்கள் என்று நினைத்துக் கொண்டார். கல்யாணம் ஆன கையோடு தனிக்குடித்தனம் வந்தாயிற்று. ஒரு ஆள் திரும்பிப் பார்க்கவில்லையே! எல்லாமும் ஓடி ஓடிச் செய்தது நான்தானே! எவன் தலையைப் காட்டினான்? யாரை எதிர்பார்த்தோம்? யார்ட்டப் போய் நின்னோம்?

            அவருக்கு எல்லாவிதமான நம்பிக்கையும் போயிற்று. வெகு நாளாயிற்று அப்படியாகி. என்னவோ இருக்கணும், சாப்பிடணும், தூங்கணும், எழுந்திரிக்கணும்…இவ்வளவுதான். கடவுள் கூப்பிடுறபோது போய்ச் சேரணும்…படுக்கைல மட்டும் விழுந்திடக் கூடாது…அதுக்குத்தான் வேண்டிக்கணும்…வாய் மூடி மௌனியாகிப்  பல நாள் ஆகிறது.

            பலரும் வெளியே வந்துவிடுகிறார்கள்தானே? பூங்கா ஏன் நிரம்பி வழிகிறது? சீனியர் சிட்டிசன்ஸ் தங்கள் வயதொத்தவர்களைப் பார்த்து, பேசி..மனச் சமாதானம் கொள்ளவா?

            அவருக்கு நான் பெட்டர்….

என்னை விட அவர் நல்லாயிருக்கார்…நான்தான் தளர்ந்து போயிட்டேன்…

பிள்ளையும், மருமகளும் தாங்குறாங்கப்பா…நடையைப் பாருங்க…என்னா வீச்சும் விறைப்புமா?

யோகாப் பண்றான்யா அந்தாளு…வயசு எழுபத்தஞ்சு…விட்டானா பார்…மகாத்மா யோகா மையமாம்…பனியன்ல தெரியுது பார்…பெருமைதான்….

வாசல்ல பார்.. அந்த வண்டிகிட்டக் கூட்டத்த? பருப்பு போளி, தேங்கா போளின்னு வாங்கி அமுக்கிறதப் பார்…நாக்க அடக்க முடிலயே எவனுக்கும்? அதென்னய்யா அப்படி ஒரு நப்பாசை? இவங்களுக்காகத்தான்யா அந்தாளு சாயங்காலம் ஏழுக்கே வண்டியக் கொண்டாந்து நிப்பாட்ர்றான். எட்டரைக்கு எல்லாம் காலி….அட…அதுக்காக தெனமுமா திங்கிறது…? என்னைக்கோ ஒரு நாளைக்கு ஆசைக்கு ஒண்ணு சாப்பிடலாம்…வச்சு வளைச்சு அடிச்சா? இந்த நாக்கு இருக்கே….

ஒரு வகைல பார்த்தா பாவம்தான்யா எல்லாரும்….வீடுகள்ல எதையும் வாய்விட்டுக் கேட்க முடியறதில்ல…கேட்டாலும் பொண்டாட்டி அடக்கிப்புடுறா…அதென்ன பக்கித்தனமா? வாய அடக்கிட்டு இருக்க முடியாதா? பெரிசுக்கு இன்னம் நாக்கு அடங்கல்லே…வீட்டுலல்லாம் ஒண்ணும் செய்ய முடியாது.வேணும்னா கடைல வாங்கிக் கொடுங்க…தின்னுட்டுக் கிடக்கட்டும்…

எப்டி எங்கப்பாவ மரியாதையில்லாம நீ பேசப் போச்சு? கேட்கலையே பாவி! காமம் கண்ணை மறைக்குதோ? வச்ச கண்ணை எடுக்காம அவளையே பார்த்திட்டிருக்கானே? மோகித்திருத்தல் என்பது சாட்சாத் இந்த சௌஜன்யம்தான். விலக்க ஏலாமல், ஒரே வீச்சாக, அமைதியாக, கதியாக நோக்கித் தன்னை இழத்தல்….!

எல்லாமும் பார்த்தும், கேட்டும் பொங்கி, அடங்கி, அமிழ்ந்து கிடக்கிறார் மந்திரமூர்த்தி. இப்படியும் தன் உயிர் ஜீவித்திருக்க வேண்டுமா என்ன?

            எது சொல்லி என்னவாகப் போகிறது? யாரை யார் சொல்லி எது திருந்தணும்? எல்லாமும் அது அது அனுபவப்பட்டுத்தான் திருந்தும். யார் சொல்லியும் எதுவும் இந்த உலகத்தில் மாறிவிடப் போவதில்லை. ஒருத்தர் சொல்வதால் எந்த மாற்றமும் வந்துவிடவும் போவதில்லை. எல்லாமும் அனுபவப்பட்டுத் திருந்தினால்தான் பக்குவமாகும்.  சொல்லிச் சொல்லிச் செய்து பக்குவமாகப் போவதில்லை. ஒரு முறை நஷ்டமடைந்தால்தான் மறுமுறை லாபம் ஆகும். நஷ்டமடையாமல் இந்த உலகத்தில் எந்த லாபமும் வந்துவிடப் போவதில்லை. எதுவும் கைகூடவும் போவதில்லை. ஆயிரம் புஸ்தகத்தைப் படித்தவனைவிட ஆயிரம் நிலத்தை உழுதவன்தான் அனுபவப்பட்டவன் என்பது முதுமொழி. அதுதான் பரி பக்குவம்.

            அதனால் யாருக்கும் எதுவும் சொல்லியும் பயனில்லை. புண்ணியமுமில்லை.  ஒதுங்கியே இருந்தார் மந்திரமூர்த்தி. எதையும் கண்ணிலும் போட்டுக்கொள்வதில்லை. காதிலும் கேட்டுக் கொள்வதில்லை. தீரவும் விசாரித்துக் கொள்வதுமில்லை. ஆர்வமிருந்தால்தானே?

            விசாரித்து என்ன செய்யப் போகிறோம் என்கிற வெறுப்பு அல்லது விரக்தி வந்து விட்டது அவருக்கு. விசாரித்தால் அதை அப்படிச் செய்ய வேண்டும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொல்லத் தோன்றும். தோன்றிவிட்டால் பிறகு சொல்லாமல் இருக்க முடியாது. மனசு கேட்காது. பிறகு அதன்படி அவர்கள் நடக்காவிட்டால் மனசு வருந்தும். எதுக்கு எங்கிட்டக் கேட்கணும். அப்புறம் எதுக்கு இஷ்டம்போல் செய்யணும்? என்று கோபம் வரும். இதென்ன புதுவிதமான அலட்சியம்? என்ன நடிப்பு? இந்தப் பொய் நடிப்பெல்லாம் யாருக்கு வேணும்?  இந்த வாதையெல்லாம் எதற்கு? என்னவோ பண்ணிக் கொள்ளட்டும். அவரவர் வாழ்வு. அவரவர் வழி…!

எதுவும் என்னிடம் சொல்லவும் வேண்டாம். நானும் எதுவும் கேட்கவும் வேண்டாம். ஒதுங்கியிருந்தார் மந்திரமூர்த்தி. என்ன தவறு? வெளியில் எட்டிப் பார்த்தார். யாமினி தலை தெரிகிறதா என்று. விடமாட்டாளே மனஸ்வினி!

வீட்டுல இருக்கிற பெரியவங்கள மதிச்சு நடந்தது அந்தக் காலம். அவங்க சொன்னதுக்கு மேலே ஒரு துரும்பு அசையாது. இப்போ அப்டியா இருக்கு? வேறே வழியில்லாமே பெரியவங்க…அதாவது பெற்றோர்ங்க கூட இருக்க வேண்டியிருக்கு. அதுவும் ஒருவகை தண்டனைதான் சொல்லப்போனா!  தனியாப் பொங்கித்தின்னுட்டு அக்கடான்னு கிடக்க முடில…மனசு வரல…எங்ககூட இருக்கலாமே…?ங்கிற கரிசனம்.  கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. குழந்தைகளப் பார்த்துக்கத் துப்பில்ல. ஆளைப் போட வேண்டிர்க்கு. அவுங்களால ஆபத்தும் இருக்கு…நம்பிக்கையா ஆளுக கிடைக்கிறதில்ல…சரியா வளரணுமேங்கிற பயம்…! என்னென்னமோ நடக்குது அங்கங்க…தினமும் பேப்பர்ல, டி.வி.ல…செய்தி பார்க்கத்தானே செய்றோம்? அதுக்காகவாச்சும் பெத்தவங்க வேண்டிர்க்கு…பொம்மைகள் மாதிரி…! அங்கங்க நகர்த்தி நகர்த்தி வச்சிக்கலாமே! வேண்டாம்னா மூலைல போட்ரலாமே?

வெறும் ஓட்டைக் கரிசனம். பொய்ம்முகம். எதுக்காக வீட்டுல மூத்தவங்க இருக்காங்க…வழிகாட்டத்தானே?வெறுமே காவல் காக்கவா?  பேசாமத் தின்னுட்டுக் கிடக்க வேண்டிதானேன்னா என்னத்துக்குக் கூட இருக்கணுமாம்? அடிமைங்களா? வெறும் சோற்றுக்கோ வந்ததிந்தப் பங்கம்?

நல்லது சொன்னாக் கேட்டுக்கத் தெரியணும். அதன்படி நடக்கத் தெரியணும். அப்பத்தான் எல்லாமும் வகை தொகையா அமையும்…நடக்கும்…அதுக்குத்தானே அனுபவப்பட்ட பெரியவங்க உடன் இருக்கிறது? வெறுமே ஆட்டுக்கல் மாதிரி நிறுத்தி வைக்கவா? அதனாலதான நான் உம்மணாம்மூஞ்சி…! சொன்னாச் சொல்லிக்கோ…! இனிமே எந்தத் திட்டு வாங்கி என்ன கேவலம் வரப்போறது எனக்கு…! என்னைக்காவது ஒரு நாள் உனக்குத்தான் மனசு சஞ்சலப்படப் போகுது…இந்த மனுஷன அநியாயமாப் பலமுறை திட்டியிருக்கமே..!எல்லாத்தையும் வாங்கிட்டுப் போய்ச் சேர்ந்துட்டானே…பாவி…! தோணும் பாரு…கடைசில உணராத மனுஷன், மனுஷி எவரும் இல்லை இந்த உலகத்துல…!!-சொல்லி முடித்தார் மந்திரமூர்த்தி.

அதுக்காக அந்தக் குழந்தை என்ன பாவம் பண்ணித்து? அதைக் கூடவா தூக்கிக் கொஞ்சக் கூடாது? கிட்டவே வர விடுறதில்லையே! – எட்டிப் பார்த்துத் தட்டி விட்டாள் வார்த்தைகளை யாமினி.

நானா வர வேண்டாம்னேன். அவங்க பிடிச்சி நிறுத்தினா? நா என்ன பண்றதாம்?போய்க் குழந்தையப் பிடுங்க முடியுமா?  கிட்ட வந்தா ஏதேனும் வியாதி ஒட்டிக்கும்னு நினைக்கிறாளோ என்னவோ? யாரு கண்டா? மனசுக்குத் தோணத்தானே செய்யுது?  …குழந்தையும் தெய்வமும் ஒண்ணு… கொஞ்சர்துலெல்லாம் ஒண்ணும் குறைச்சல் இல்லதான்…. பாசம் விட்டுப் போகுமா? வெளில கூட்டிட்டுப் போன்னுது… பயமாயிருக்கு…கையை உதறிட்டு ஓடிடுது…பிடிக்க முடியல்லை…எம்புட்டு வண்டிகள் வருது…நாய்கள் திரியுது…மாடுகள் வருது….குலை நடுங்குதே…-தாத்தா கூடப் பேரன் போறாம்பாருன்னு ஊருக்குக் காட்டவா? பாதுகாப்புதான் முக்கியம். நாம சின்னப் பிள்ளைகளா இருந்த காலத்தப் போல இப்ப எதுவும் இல்லயாக்கும்…!-அப்போ மூணாமத்தவன் கூட நீ இன்னார் பிள்ளைதானேன்னு வீட்ல கொண்டு வந்து விட்ருவான்…இப்போ எல்லாப் பயலுகளுமே களவாணியால்ல போயிட்டானுங்க..எவனை நம்பறதுன்னே தெரிலயே? காசுக்காக எதுவும் பண்ற உலகமால்ல போச்சு?  – இதையெல்லாம் உணர்ந்து எதுக்கு வம்புன்னு  ஒதுங்கினா நீ என்னை உம்மணாம் மூஞ்சிங்கிறே…! கல்லுளிமங்கன்கிறே…! உலகத்துல என்னெல்லாம் திட்டு இருக்குங்கிறதை உன் மூலமாத்தான் ரீவைன்ட் பண்ணிக்கணும் போல…!  நம்மால ஒரு சங்கடம் வந்துடக்கூடாதுன்னு மனசு பயப்படுது…பதறுது…அதனால ஒதுங்கி ஒடுங்கிக் கிடக்கேனாக்கும்…

நானாவது ஒரு வாட்டிதான் சொன்னேன். உங்க நாட்டுப்பொண்  தினமும் சொல்றா? எப்பப்பாரு கடுகடுன்னுட்டுங்கிறா…!

கடுவம்பூனைனன்னு சொல்லியிருப்பாளே…? – எதிர்க்கேள்வி போட்டார் மந்திரமூர்த்தி. அதுவும் ஒரு நாள் அவர் காதில் விழுந்திருந்ததுதான். கடுவம்பூனை எப்படி உறுமும் என்று அவரே தனியே செய்து பார்த்துக் கொண்டு சிரித்தார்.

இன்னும் அதுக்கு பேர் வேறே வச்சு சொல்லணுமா? கடுகடுன்னாப் போறாதா? அந்தக் குழந்தையைப் பராமரிக்கிறதுக்குத்தானே…அவுங்களுக்கு உதவியாத்தானே நாம இங்க இருக்கோம்…?சும்மா தின்னுட்டுத் தின்னுட்டுத் தூங்கறதுக்கா?

என்னாடீ…நீயே இப்டிச் சொல்றே? ஓசிச் சோத்துக்கா உட்கார்ந்திருக்கோம். நம்ம பென்சன் பணம் பூராவும் அவுங்களுக்குத்தானே? உபகாரம் இல்லாட்டாலும் உபத்திரவம் இருக்கக் கூடாதுடீ…! வயசானவங்க கூடியானவரைக்கும் தங்களை ஒதுக்கிக்கிறது உத்தமம்! என் பாலிசி அதுதான்….!

அதுக்காக? கூட வச்சுக் கொண்டாடணும்கிற அவசியமொண்ணுமில்லையே? – நாம இல்லாட்டா தாராளமா, இன்னும் கொண்டாட்டமாத்தானே இருப்பாங்க…?

நல்லா இருக்கட்டும்…யார் வேண்டாம்னாங்க…? அப்ப விட்டுடச் சொல்லு. ஆளப் போட்டுக்கட்டும், பார்த்துக்கட்டும், சந்தோஷமா விலகிக்குவோம்? இந்த வயசுல எதையும் நினைச்சு வருத்தப்படக் கூட உடம்பல தெம்பில்லையாக்கும்…எல்லாமும் ஒரு வயசுதான். அப்புறம் அவுங்கவுங்க ஃபேமிலியை அவுங்கவுங்கதான் பார்த்துக்கணும்…பறவைக்கு றெக்கை முளைச்சிடுச்சின்னா அதுகளாத்தானே இறை தேடிக்குது…தாய்ப்பறவையா கொண்டாந்து கொடுக்குது…? அது கூட்டுல இருக்கிறவரைக்கும்தான்…அதான் கைநிறையச் சம்பாதிக்கிறாங்கல்ல…எதையும் பணத்தைக்கொண்டு சாதிக்கலாம், விலை பேசலாம்ங்கிற திமிரு இருக்குல்ல? அப்போ இதையும் சேர்த்துச் செய்துக்கட்டும்…எதுக்கு ஒட்டிட்டுக் கிடக்கணும்…விலகியே இருப்போம்…! கண்ணால் கண்டு, காதால் கேட்டு, வாயால் பேசி…எதுவுமில்லை…பரப்பிரம்மம்…ஜெகந்நாதம்…!!

ஆனாலும் இப்படி விட்டுப் பேசி ஒருத்தரை நான் பார்த்ததில்லே…கொஞ்சம் கூடப் பாசமேயில்லையா உங்களுக்கு? ஈரமெல்லாம் வத்திப் போச்சா? வறண்டுடுத்தா?

ஆமாம்…அப்டித்தான் வச்சிக்கயேன்…என்று ஒரு போடு போட்டார் மந்திரமூர்த்தி. யாமினியின் வாய் அடைத்துப் போனது அத்தோடு. அவள் மனசு அநியாயத்துக்கு அலை பாய்ந்து கிடக்கிறது என்று உணர்ந்தார் இவர். தினமும் விழுந்து விழுந்து சாமி கும்பிடுகிறாள். மணிக்கணக்காக ஸ்லோகம் சொல்கிறாள். மனம் பக்குவப்படவில்லையா? சாமி கும்பிடக் கும்பிட பயம் அதிகமாகிறதோ?

ந்திரமூர்த்தி தன் அறையில் முடங்கிக் கிடந்தார். இருபத்திநாலு மணி நேரமும் அந்த ஃபேன் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது இவருக்காக. அதுவே இவருக்குப் பெருத்த உறுத்தலாயிருந்தது. கரன்ட் சார்ஜ் தன்னால்தான் அதிகமாகிறதோ? என்று.  பில் வந்ததும் முந்திக்கொண்டு இவரே மின் கட்டணம் கட்டிவிடுகிறார். மொபைலில் டான்ஜெட்கோ ஆப்…பை இதற்காகவே வைத்திருக்கிறார். டெபிட் கார்டு போட்டு இறக்கி விடுகிறார். ரசீதை அவனுக்கு வாட்சப் பண்ணி விடுகிறார். இன்றுவரை ஒரு தாங்க்ஸ் கூடச் சொல்லவில்லை படுபாவி!  அட…ஓ..கே.ப்பா….என்றாவது சொல்லலாமே? கெத்து…! அப்பன்ட்டத்தான் இதெல்லாம் காண்பிக்க முடியும்…வெளில செல்லுபடியாகாது!

எதற்கு வம்பு? ஏன் இவ்வளவு பில் வருது? என்று என்றேனும் ஒரு நாள் பையன் கேட்டால்? அட…அந்தப் பெண்தான் கேட்டு வைத்தால்? தன்னால்தான் என்று இவர் மனசு உறுத்தியது.

ராத்திரி பூராவும் ஏ.சி. ஓடுது…நானும் உங்கம்மாவும் அப்டியா போட்டுக்கிறோம்? ஒரு மணி நேரம் போட்டுட்டு அணைச்சிடுவோம். பிறகு ஃபேன்தான். முழு ராத்திரியும் தினமும் ஓடினா ஏன் இ.பி. பில் இவ்வளவு எகிறாது? பன்னெண்டாயிரம், பதினஞ்சாயிரம்னு வரத்தான் செய்யும்…இதுக்குன்னு ஒராள் தனியா வேலை பார்க்கணும் போல்ருக்கு...!

இப்போ ரெண்டாவது தடவையா கட்டணத்தை அதிகப்படுத்தியிருக்காங்க…அதனால வருது…. – பையனின் பதிலுக்கு எதிர்க்கேள்வி போட்டார் இவர்.

அப்டியானாலும் இவ்வளவு வராதே…ஏ.சி.தான் ஒரே காரணம் இதுக்கு. அதை சுருக்கமா பயன்படுத்தணும். உடம்புக்கும் கெடுதல்தானே? தாறுமாறாக் கரன்ட் இழுக்கத்தானே செய்யும்..? நாம என்ன ஏ.சிலயே பிறந்து வளர்ந்தவங்களா? ஃபேன் கூட இல்லாமத்தானே கெடந்தோம்….-சொன்னார் மந்திரமூர்த்தி.

அது அவர் வளர்ந்த விதம். பையன் அப்படியா வளர்ந்தான். வசதியாய்த்தானே வளர்த்தோம்.  வறுமையையும், சிக்கனத்தையும், காட்டி, சொல்லி வளர்த்திருக்க வேண்டும். செய்யலையே? பிறகு இப்போ வருத்தப்பட்டு என்ன புண்ணியம்? இருந்தாலும் அப்பனுக்கு இருக்கிற புத்தி கொஞ்சங் கூடவா பிள்ளைக்கு இருக்காது? இல்லையா அல்லது பொண்டாட்டிக்கு பயந்து சாகிறானா? எவன் கண்டது? இவங்கள்லாம் ஆம்பளைங்கதானா? ஒரு குடும்ப அளவுல கூட இதுதான் சரின்னு  நியாயங்களை நிலை நிறுத்த முடிலன்னா இவனுங்கள்லாம் என்ன ஆம்பிளைங்க?

வாயில்லை அவனுக்கு. பெண்டாட்டிதாசன். எப்படி வாய் திறக்கும்?முன்னயும் பின்னயும் பொத்திட்டுக் கிடக்கான் தடியன்…!  இனிமே நானே கட்டிக்கிறேன் என்கிற பேச்சு மட்டும் வரமாட்டேனென்கிறது? அந்த ரோஷம் வேண்டாமோ?மனசில்லயே…!  இதுல என்னைச் சொல்ல  வந்துட்டானுங்க…

வெளில பேரனக் கூட்டிட்டுப் போனா அதை வாங்கிக் குடு…இத வாங்கிக் குடுன்னுது…ஆசைக்கு வாங்கிக் கொடுத்து வயித்தால போச்சின்னா? எவன் பொறுப்பாறது? பாலு மகேந்திரா படத்துல ரோட்டுக்கடை வடையை வாங்கிக்கொடுத்து அந்தத் தாத்தா திட்டுவாங்குவாரே! அந்த நிலமைதான் எனக்கு…அப்புறம்…!இவிங்ஞகிட்ட வார்த்தை கேட்கணும்னு எனக்கென்ன தலவிதியா?

மாடில விளையாடக் கூட்டிட்டுப் போனா ஓட்டமான ஓட்டம். துள்ளிக் குதிக்கிறதுல பேரபெட் வாலைத் தாண்டி வெளில குதிச்சிடும்போல்ருக்கு. அடி வயிறு கலங்குது….பதிலுக்குத் துணையா கூடவேயா ஓட முடியுது…? அங்க போகாதே…எட்டிப்  பார்க்காதே…விழுந்துடுவன்னா கேட்கவா செய்துங்க…? பதறியடிக்குது மனசு…! கூட இருந்து குழி பறிக்கவா வந்திருக்கோம். சந்தோஷமா தனியா இருந்திட்டுப் போகட்டுமே…யார் வேண்டான்னுது?

என்னத்தவோ பண்ணிட்டுப் போகட்டும். எப்டியோ வாழட்டும். இதெல்லாம் நினைச்சு வருத்தப்பட்டிருக்க முடியுமா? அவுங்க வாழ்க்கை..அவுங்க வாழட்டும். நாம எதுக்குக் குறுக்க…?

பேரன் பேத்தி பாசத்தைக் கூடத் தள்ளி வைத்துவிட்டார் மந்திரமூர்த்தி.  கீழ மேல விழுந்து காயம் பட்டிச்சின்னாக் கூட நம்மளத்தான் சொல்வாங்க…-பயந்து போய்க் கொஞ்சுவதைக் கூட விட்டு விட்டார். தாத்தா…தாத்தா..என்று வந்து நின்றால் என்னடி தங்கம்…என்று அருகே நிறுத்தி அகமகிழ்வதோடு சரி…..இருக்கையைவிட்டு நகர்ந்தாரில்லை.

சொல்லிச் சொல்லிப் பார்த்துவிட்டாள் யாமினி.பலித்தபாடில்லை.

உனக்குத் தெரியாதுடி…அவுங்க எதுவும் சொன்னாலும் உனக்கு உறைக்காது. நான் என்ன உன்னை மாதிரி மொண்ணையா? அதான் இப்டி இறுகிப் போய்க் கிடக்கேன். அது உனக்கு உம்மணாமூஞ்சியாத் தெரியுது…அதுக்கு நான் என்ன பண்ணட்டும்…? எப்டி வேணாலும் நினைச்சிக்கோ…கவலையில்லை…என் மீதிக் காலம் இப்டித்தான். என் இருப்பு இதுதான்…இவ்வளவுதான்…இஷ்டம்னா சொல்லு…இல்லையா ஆளவிடு…ஊர்ல போய் நான் தனியா இருந்துக்கிறேன்…நான் என்னைக்குமே தனிக்காட்டு ராஜாதான்…நீதான் பிசினா அவனோட ஒட்டிண்டிருக்கியே? எனக்கு நீ கூட இல்லையேங்கிற கவலையும் இல்ல…என்பாடு எனக்கு…உன் பாடு உனக்கு…அவ்வளவுதான்….நீ முந்திண்டா நோக்கு…நா முந்திண்டா நேக்கு…!.. என் மனசு என்னிக்கோ விலகிப் போச்சு…! வாரணாசியோட மணிகர்ணிகாதான் அடிக்கடி நினைவுல வருது இப்போ…அதுக்கெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும்…நான் இப்போ லௌகீக வளையத்துலர்ந்து விலகி நிற்கிற சுத்த சந்நியாசி….

போதும்…போதும்…உங்க  திருவாயை மூடுங்க…அவுங்க வர்ற சத்தம் கேட்குது…சுத்த சந்நியாசி…பெத்த சந்நியாசின்னிட்டு…சரியான “இடிச்ச புளி“…அந்தப் பேர்தான் சாலப் பொருத்தம்..…சாபமிடுவதுபோல் சொல்லியவாறே வாசலை நோக்கி ஓடினாள் யாமினி. எதுக்கு இந்த ஓட்டம்? ஐயோ பாவம்…!  நினைத்துக் கொண்டே உறாலை விட்டு நகர்ந்தார் நம் நாயகர்.

இடிச்ச புளி…இடிச்ச புளி…!  நல்லாயிருக்கே…!! தனக்குத்தானே  அழுந்தச்  சொல்லி சிரித்துக் கொண்டார்.

நண்டு மீண்டும் வளைக்குள் புகுந்து கொண்டது.

                                                            -----------------------

 

 

           

 

 

சிறுகதை     தளம் - காலாண்டிதழ் - -ஜனவரி - மார்ச் 2025   பிரசுரம்        “சான்று ” அ ந்தம்மா தன் ரெண்டு குழந்தைகளையும் பாண்டிச்சேரில தன் தாய...