25 ஜூலை 2020

மனோலயங்களின் தாலாட்டு கட்டுரை உஷாதீபன்-கட்டுரை பல நேரங்களில் பல மனிதர்கள் -பாரதிமணி


மனோலயங்களின் தாலாட்டு       கட்டுரை                                                                      பல நேரங்களில் பல மனிதர்கள் -
பாரதிமணி                                                        
     எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிட வேண்டும் என்றால் இப்படித்தான் சொல்லியாக வேண்டும்.
                சமீபத்தில் இவ்வளவு விஷயங்களை உள்ளடக்கிய ஒரு கனமான புத்தகத்தைப் படித்ததில்லை.”    
     கனமென்றால் தடிமன் அல்ல. விஷய கனமய்யா விஷய கனம். இந்த வாழ்க்கையில் கிடைக்கும் அநாயாசமான, அற்புதமான அனுபவங்களினால்தான் இந்த விஷய கனம் ஒருவனுக்கு உகந்ததாகிறது என்பது உண்மையானால் அது இந்த ஆசிரியருக்கு சாலப் பொருந்தும்.
     மனதில் சுமையுமில்லாமல், எந்தவித கர்வமுமில்லாமல், நீங்கள்லாம் என்னய்யா ஆளு என்று மற்றவனை நினையாமல், நான்பாட்டுக்குச் சொல்லிக் கொண்டு போகிறேன், நன்றாய் இருக்கிறதா என்பதை மட்டும் பாருங்கள் என்று ஒரு மனிதன் தன் அத்யந்த அனுபவங்களை எடுத்து வைக்கப் போக, அடேயப்பா, இந்தக் குறுகிய வாழ்க்கையில் இந்த மனுஷனுக்குத்தான் எத்தனைவிதமான அனுபவங்கள், எவ்வளவு மனிதர்கள்? நமக்கெல்லாம் இப்படி எதுவுமே கிட்டவில்லையே என்ன வாழ்க்கை வாழ்ந்தோம் போங்கள் என்று இதுவரையிலான வாழ்க்கையும் வீணாய் விட்டதோ என்கிற மாதிரியான ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகிகறது இந்த அரிய புத்தகம். திரு பாரதி மணி அவர்களுக்கு எடுத்த எடுப்பிலேயே நம் சிரம் தாழ்ந்த வணக்கங்களை அந்த வகையில் சொல்லிவிட்டுத்தான் இந்தக் கட்டுரையை இங்கே ஆரம்பித்தாக வேண்டும். அதுதான் உகந்த நியாயம்.         
     வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள், விதம் விதமான புத்தகங்களாகத்தான் தேடுகிறார்கள். வெறும் கதை, கவிதை என்று அடங்கிவிட மாட்டார்கள். கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள்         , ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆய்வுகள், வரலாறுகள் என்று போய்த்தான் ஆக வேண்டும். ஒரு நவீனத் தமிழிலக்கிய வாசகன், தன்னைத் தேர்ந்த வாசகனாக அவனுக்கு அவனே ஒரு குறிப்பிட்ட தகுதியோடு நிலை நிறுத்திக் கொள்ள வேண்டுமாயின் அவன் தன் வாசிப்புத் தளத்தைப் பலபடிகளில் விரித்துத்தான் ஆக வேண்டும்.
     புத்தகங்கள் ஏராளமாக வந்த வண்ணம் இருக்கின்றன. அவைகள் வெளிவரும் வேகத்திற்குப் படிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. வெளிவரும் புத்தகங்களையெல்லாம் வாங்கிக் குவிக்கவும் முடியாது. அவைகள் எல்லாவற்றையும் படித்துத் தீர்க்கவும் இயலாது. வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களையே படித்துத் தீர்க்க வேண்டுமே, ஆண்டவா, எனக்கு நீண்ட ஆயுளையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும் கொடு என்று மனம் அவாவுகிறது.
     அப்படியாக வெளிவருபவையெல்லாம் வாசிப்புக்கு உகந்தவையாக இருந்து விடுகின்றனவா? என்று ஒரு கேள்வி விழுகிறது இங்கே! வாசிப்புக்குத் தகுதியுடையவையாக எல்லாமுமா அமைந்து விடுகின்றன? விறு விறுவென்று புரட்டுதலுக்கும், இது இவ்வளவுதான் என்று சட்டென்று ஒரு முடிவுக்கு வந்து, நேரத்தை வீணாக்காமல் அடுத்ததைக் கையில் எடுப்பதற்கும் என்றுதான் ஒரு நல்ல வாசகனால், ஒரு தீவிர வாசகனால் தன்னை நகர்த்திக் கொண்டு போக முடியும்.
     முதலில் வார்த்தை வார்த்தையாகப் படித்து, பிறகு இரண்டு மூன்று வார்த்தைகளைச் சேர்த்துச் சேர்த்துப் படித்து, பின்பு வாக்கியங்களாகப் படிக்க ஆரம்பித்து, பிறகு பத்தி பத்தியாக நகர்ந்து, தனது வாசிப்புப் பழக்கத்தின் வேகத்தைக் கூட்டினால்தான் ஒருவன் அதிகமான புத்தகங்களைப் படித்துத் தீர்க்க முடியும்.
     நிறையப் படிக்க வேண்டும் என்கிற ஆசை எப்பொழுது ஏற்படுகிறது. பிறவியிலேயா வந்து விடுகிறது? படிக்கப் படிக்க, படிக்கப் படிக்க அந்த ஆவலும் வேகமும் தானே கூடுகிறது.
     ஜனரஞ்சகமான இதழ்கள், அதிலுள்ள கதைகள், கவிதைகள், என்று ஆரம்பித்தவன் நாளடைவில்  அவன் வாசிப்பில் ஏற்படும் தீவிரத்தன்மையை உணர்ந்து, சிற்றிதழ்கள் பக்கம் வந்து மெல்ல மெல்ல அமிழ்ந்து பிறகு விஷய ஞானம் தேடி, விதவிதமான புத்தகங்களை நாடி, ஐயோ இத்தனை காலம் இவையெல்லாம் கண்ணுக்கும், கருத்துக்கும் படாமல் வீணடித்து விட்டோமே என்று மனம் புழுங்கி இனி அவ்வாறு விடுவதற்கில்லை என்கிற முடிவுடனே அதி தீவிரத் தன்மையை தன் வாசிப்புப் பழக்கத்திற்குக் கொண்டு வந்து, பரந்து பட்ட விஷய ஞானம் உள்ளவனாக, விவாதக் களஞ்சியமாக             தன்னை உருமாற்றிக் கொள்ளத் தொடர்ந்து முயன்று கொண்டேயிருக்கிறான். இப்படியான ஒரு தீவிரத் தன்மையுள்ள ஒரு வாசகன் நாளடைவில் முதிர்ச்சியடைந்து, படைப்புத் தொழிலுக்குள் புகுந்து விடுவதற்கும் வாய்ப்புள்ளதே!
     எந்தவொரு வாசகனும் தன் வாசிப்பனுபவத்தில் ஏற்பட்ட உந்துதலில் தன்னாலும் முடியுமே என்பதாக மளமளவென்று ஒரு பத்திருபது சிறுகதைகளையோ, கவிதைகளையோ எழுதிவிட முடியும்தான். பிறகுதான் அவனுக்குள் ஒரு தேக்கம் ஏற்படும்.
     சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறோமோ என்றோ, என்ன புதிதாகச் சொன்னோம் என்றோ வேறுவகையில் சொல்லியிருக்கலாமோ என்றும் கேள்விகள் அவனுக்குள் பலபடியாய் விழும்போது அவன் எழுத்து தடைப்பட ஆரம்பிக்கிறது.
     இந்தக் கட்டத்தில் வெறும் வாசிப்போடு நிறுத்திக் கொண்டவர் பலர். தொடர்ந்து முயன்றவர் சிலர்.
     என்னதான் முயன்றாலும், முக்குளித்தாலும், எந்த எழுத்தில் உண்மையிருக்கிறதோ வெளிச்சமிருக்கிறதோ அது, தானே நிற்கும் என்பதுதான் இன்றுவரையிலான சத்தியமான உண்மை. மற்றவையெல்லாம் நாஞ்சில் நாடன் சொல்வதுபோல் இருபது முப்பது வருடங்களுக்குப் பிறகு காற்றில் கரைந்து காணாமல் போவதுதான். மகாத்மாவின் சத்தியசோதனையே இதற்கு சான்று. எத்தனை முறை படித்தாலும் உங்களை மேலும் மேலும் உயர்த்திக் கொண்டே செல்லும் சக்தி அந்த நூலுக்கு உண்டு.
     ஏராளமான உண்மைகளோடும், புனைவுகளோடும், அற்புதமான நிகழ்வுகளையும், சகிக்க முடியாத கசடுகளையும் உள்ளடக்கி ஆயிரக்கணக்கான பக்கங்களோடு புத்தகங்கள் நாளுக்கு நாள் வந்து குவிந்தவண்ணம்தான் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் எந்த அளவுக்கு மனதுக்கு நிறைவு தருகின்றன என்பதாக ஒரு கேள்வி; இருந்து கொண்டுதான் இருக்கிறது.
அதெல்லாம் எதுக்கு? பிரத்யட்சமான நிகழ்வுகள் இந்தோ இருக்கு. இந்தா வாங்கிக்கோ... என்று பளிச்சென்று வெள்ளிடைமலையாய் (பழைய வார்த்தை) ஒரு புத்தகம் வந்திருக்கிறதென்றால் அது இதுதான் என்று உரத்துச் சொல்லலாம். அது:
     திரு பாரதி மணி அவர்கள் எழுதியபல நேரங்களில் பல மனிதர்கள்
     இந்தப் புத்தகத்தில் காணும் வாழ்வனுபவங்களை விரிவான டைரிக் குறிப்பாக வரிசையிட்டு, ஒரு மனிதனின் தேர்ந்த முதிர்ச்சியான சமூக ஆவணமாக உருமாற்றி அற்புதமான ஒரு நாவலாக இதை உருவாக்கியிருக்கலாமே என்றுதான் தோன்றியது எனக்கு.
     ஒரு மனிதனுக்கு சொத்து அவன் சேர்த்து வைத்திருக்கும் பணமா? அவன் வாங்கிப் போட்டிருக்கும் இடங்களா? அவன் கட்டி நிறுத்தியிறுக்கும் வீடுகளா? பங்களாக்களா? அவன் வைத்திருக்கும் வாகனக் கூட்டமா? அவனிடமிருக்கும் தங்கப் பொக்கிஷமா? வித விதமான உடை வகைகளா? தேடித் தேடித் தின்னும் உணவு வகைகளா? எது?
     எண்ணிலடங்காத சுற்றமும் நட்பும்தானய்யா ஒருவனின் அத்யந்த சொத்து. மனிதர்களைச் சேர்த்து வைத்திருக்கிறான் பார்! அதுதானய்யா மிகப் பெரிய சொத்து! அதைவிட ஒரு பெரிய சொத்து உண்டா என்ன?
     வாழ்க்கையின் அர்த்தம் எங்கே பரிபூரணத்துவம் அடைகிறது? சுற்றமும் சூழலும் வைத்துத்தானே?
     அடேயப்பா! இந்த மனிதனின் வாழ்க்கையில்தான் எத்தனைகள் நிகழ்வுகள்? எவ்வளவு அனுபவங்கள்? எல்லாவற்றையும் சொல்லக் கூடிய வேகம். எதையும் மறைக்காத உண்மை. இப்படி வெளிப்படும்போது எத்தனை பரிமளிக்கிறது?
     கண்ணதாசனின் வனவாசத்திலும், மனவாசத்திலும் கிடைத்த நெருக்கம் இந்தப் புத்தகத்திலும் கிடைக்கிறதே!
     வேகமான மொழிநடை. அதற்கென்று பிரயத்தனப்படாத தன்மை. எளிமையான வார்த்தைகள், வெளிப்படையான அனுபவப் பகிர்வுக்கிடையே குதித்தோடும் நகைச்சுவை. எப்படி இவருக்கு இப்படி ஒரு எழுத்து சாத்தியமானது?
     அது வருமய்யா. வெள்ளை மனதோடு எதையும் அணுகினால் தானே வரும்.மடியில் கனமிருநதால்தானே வழியில் பயம்.  எனக்கு யாருக்காகவும், எதையும் மறைக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. விரிந்த அனுபவங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதை அப்படியே உங்களுக்குத் தருகிறேன். வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள். வேண்டாததை விட்டு விடுங்கள்.
     விருட்டென்று பாயை விரிப்பதுபோல் விரித்துப்; போட்டு விட்டார் பாரதி மணி. படிக்கும் வாசகன் பிரமிக்கிறான்.
     இவரின் முதல் புத்தகமா இது?
     மாங்கு மாங்கென்று ஐநூறு ஆயிரம் பக்கங்கள் நாவலும், சிறுகதைகளுமாய் எழுதித் தள்ளுவதற்கு இம்மாதிரியான தகவல் களஞ்சியங்கள் அடங்கிய கட்டுரைகள் எத்தனை அர்த்தமுள்ளவை? – நாஞ்சிலார் அவர்களின் ஆதங்கம் இது.
     ஏதோவோர் படத்தில் நாகேஷ் சொல்லுவார்:
                என்னதிது, எண்ண முடிலயா? எண்ணி முடிலயா? என்ன முடில? எனக்கு எதுவுமே முடில...என்று.
     இங்கே எனக்குச் சொல்லி முடில...அவ்வளவுதான்.
     சில நேரங்களில் சில மனிதர்களைத்தான் நாம் நம் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறோம்.. ஏனெனில் பலருடைய வாழ்க்கையின் எல்கை மிகக் குறைவு. எனவே அவர்களின் அனுபவங்களும் குறைவு.
     ஆனால் தலைப்புக்குப் பொருத்தமாய் பாரதிமணி அவர்களின் அனுபவ எல்கை எல்கையற்றது. ரொம்பவும் விரிவானது. பலருக்கும் கிட்டாதது. பலரையும் ஏங்க வைப்பது.
     எவ்வளவு உற்சாகத்தோடும், ஊக்கத்தோடும், இந்த மனிதர் செயல்பட்டிருக்கிறார் என்று நாம் பிரமிக்கத்தான் வேண்டியிருக்கிறது.
     குறைந்தது ஐம்பது ஆண்டுகளிலான அவரது டில்லி அனுபவங்கள் மிகவும் சுவையாகவும், கவனமாகவும், கருத்தோடும் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. நம் மனதிற்கும், செயலிற்கும், உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கவல்லவை அவை.
     ராஜிவ்காந்தியைச் சந்தித்ததும், Nஉஷக் முஜிபுர் ரஉற்மானுனடான அனுபவங்களும், அவரது மகள் Nஉஷக் உறசீனாவுடனான சந்திப்புகளும், சுப்புடுவுடனான பழக்கங்களும், தேசாய் அவர்களின் மகன் காந்திதேசாய்யுடனான விபரீத சந்திப்புகளும், சுஜாதா, பூர்ணம் விஸ்வநாதன் இவர்களுடனான நினைவுகளும் மறக்க முடியாதவையாய் புத்தகம் நெடுகிலும் நம்மைக் கைகோர்த்து அழைத்துச் செல்கின்றன.
     ஒவ்வொரு கட்டுரையாய்ச் சொன்னால்தான் மனசு ஆறும். பிறகு புத்தகத்தை இதுலேயே படித்து முடித்து விட்டதாகத் தோன்றி விட்டால்?
     எனவே அனுபவப் பகிர்வை உடனிருந்து உள்ளே புகுந்து மூழ்கி முக்குளித்து வெளியே வாருங்கள். மனசுக்கு உண்மையான, சத்தியமான ஒரு நிறைவை அடைவீர்கள்.
     முதலும் கடைசியமான ஒரு புத்தகம் என்று ஓரிடத்தில் சொல்கிறார் ஆசிரியர். இந்த எழுத்து அனுபவத்தைப் பார்க்கும்போது இது முதல் புத்தகமுமல்ல, இனி வரப் போகும் புத்தகங்களும் இதற்கு ஈடாக அமையப் போவதுமல்ல என்று அனுபவச் செழுமையை நெருக்கமாகச் சொல்லத் தோன்றுகிறது.
     டில்லியின் நிகம்போத் சுடுகாடுபற்றி இவர் கூறுகையில் மனது கனத்துப் போகிறது. எல்லாக் கட்டுரைகளையும் படித்து விட்டு கடைசியாக அதை வைத்துக் கொள்வோம் என்று நானே வகுத்துக் கொண்டு படித்து முடித்த போது உள்ளே ஒரு வெற்றிடம் தானே விழுந்து போனது.
     எழுத்தை அடையாளம் காண்பது பதிப்பகங்களின் தலையாய பணி. உயிர்மை அதைச் செவ்வனே நிறைவேற்றியிருக்கிறது. தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டுமிருக்கிறது. பதிப்பகங்களை அடையாளம் காண்பது ஒரு தேர்ந்த வாசகனின் பணி. புத்தக விரும்பிகள்  அனைவரின் கைகளிலும் இருக்க வேண்டிய ஒரு அருமையான அற்புதமான நூல் இது!
                                                                ----------------------------------------

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...