30 செப்டம்பர் 2018

இமையத்தின் “செல்லாத பணம்” நாவல் விமர்சனம்-கணையாழி-ஆகஸ்ட் 2018

கணையாழி 2018 ஆகஸ்ட் இதழில் எனது கட்டுரை.
இமையம் எழுதிய "செல்லாத பணம்" நாவல் விமர்சனம் (க்ரியா வெளியீடு)
  

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------  
ரு நாவலைப் படித்து மனசு பொறுக்காமல் நான் அழுதது இதுவே முதல் தடவை. எனது வாசிப்பு அனுபவத்தின் இத்தனை ஆண்டுகளில் இதுவே முதல் நிகழ்வு.  ஆழ்ந்து அனுபவித்து உள்ளேயே அமிழ்ந்து போன அவலம். அந்தந்தக் கதாபாத்திரங்களின் தத்ரூபமான சித்தரிப்பினைக் கண்டு வியப்பது, நாவல் நிகழ்கின்ற கால கட்டத்தின் சமூக நடைமுறைகள், பேச்சு வழக்குகள், இயற்கை நிகழ்வுகள், சித்தரிக்கப்பட்டிருக்கின்ற கதாபாத்திரங்களின் வாழ்க்கை முறைகள், கதை நிகழ்கின்ற சூழல் இப்படிப் பலவும் ஒரு தேர்ந்த வாசகனை அவனது தீவிர வாசிப்பில் கட்டிப் போட்டு விடுகின்றன. அதனிலும் முழுக்க முழுக்க யதார்த்த உலகில் ஒரு நாவல் பயணிக்கிறதென்றால், அந்த உலகம் வாசகனுக்குப் பெரிதும் பரிச்சயமானதாய் அமைந்து போய்விட்டால், ஊடே தானும் நடைபயில்வது  என்பது எளிதான விஷயமாகி விடுகிறது. நாம் ஒன்று இப்படி எழுத முனையவில்லையே என்று நினைத்து ஏங்கும் அளவுக்கு கடைசிவரை கொண்டு நிறுத்திவிட்டுத்தான் ஓய்கிறது.
     இந்த நாவலுக்கான இரண்டு வரிக் கதையை இருநூறு பக்கங்களுக்குக் கொண்டு செலுத்த முடியுமா என்று நிச்சயம் எழுத ஆரம்பித்த அந்தக் கணத்தில் படைப்பாளிக்குத் தோன்றியிருக்கலாம். ஆனால் இந்த சமூகத்திலுள்ள அன்றாட நிகழ்வுகள், அவலங்கள், நெறி கொண்டோரும், நெறி தவறியவர்களும் கலந்துதான் வாழ்ந்தாக வேண்டும் என்கின்ற நடைமுறை யதார்த்தங்கள்,  ஒழுக்கக் கேடுகள், அதனால் ஏற்படும் விளைவுகள், அதில் பாதிக்கப்படுவோரின் தீராத சோகங்கள், நிர்வாக நடைமுறைகளில் இருக்கும் சீர்கேடுகள், அதற்குஈடு கொடுக்க முடியாமல் சீரழியும், பலியாகும் எளிய மக்களின் பாடுகள்… இப்படிப் பலவற்றையும் ஒவ்வொன்றாக, பகுதி பகுதியாக நினைத்துப் பார்க்க முற்படுகையில் இதனை இப்படிச் சொன்னால்தான் அழுத்தம் பெறும், உறைக்கும், வாசக மனதில் தாக்கங்களை ஏற்படுத்தும், சமூகத்துக்கான எச்சரிக்கையாக அமையும், சமூக நீதிகளில் மாற்றங்களை ஏற்படுத்த உந்துதலாகி உதவும் என்பதாகப் பலவும் ஆசிரியரின் எண்ணச் சிடுக்குகளில் வலம் வந்து தெளிவு பெற்றிருக்கலாம்.
பண மதிப்பு ஒழிப்பு நடவடிக்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட நாட்களில் மதிப்பிழந்த காகிதங்கள், மறைத்து வைக்கப்பட்டிருந்த நோட்டுக்கள் கிழித்து எறியப்பட்டுக் கேட்பாரற்று வீதியோரங்களில் குப்பையாய்க் கிடந்த நாட்களில் மக்களில் பலர் பார்த்து வயிறெறிந்தும், சிரித்துக் கொண்டும் சென்ற காட்சிகள் எதுவுமே கூட வரப்போவதில்லை என்கின்ற இந்த அநித்தியமான வாழ்க்கையின் உண்மையைப் பரைசாற்றுவனவாக அமைந்தன. அதே சமயத்தில் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக அது திகழ்வதைத் தவிர்க்க முடியாத வகையில் பயன்பட வேண்டிய நேரத்தில் வேண்டியவர் கையில் இல்லாமல் போவதும், தேவையில்லாதோர் கைகளில் அநாவசியமாய்த் தேங்கி நிற்பதும், தேவையுள்ளோர் கையில் மதிப்பின்றித் திகழ்வதும்,  கொடுக்கும் மனசிருந்தோர் ஆயினும், கேட்காமல் என்ன கொடுப்பது என்ற கௌரவத்தின்பாற்பட்ட விஷயமாய் நின்று புழக்கமின்றி அடைந்து போவதும், இந்தப் பணம் என்னென்னமாதிரியான மனநிலைகளையெல்லாம் ஏற்படுத்துகிறது, மனிதர்களை எப்படியெல்லாம் நல்லதற்கும் கெட்டதற்கும் ஆட்டி வைக்கிறது என்கின்ற சிந்தனைகளையெல்லாம் தூண்டி விட்டு  நம்மை நிலை கொள்ளாமல் அடிப்பதில் முக்கியப் பங்கு வகித்து நிற்கிறது என்கின்ற நிகழ் யதார்த்தம் நம்மால் புறந் தள்ள முடியாத உண்மையாய் நிலைக்கிறது.
பணம் எப்படி வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவையாய் இருக்கிறதோ அதுபோல் அது இருந்தும் பயனில்லை என்பதான ஒரு சந்தர்ப்பத்தையும் அது அடைந்து நிற்கையில் மனித மனங்கள் சஞ்சலமின்றி விதியின் விளையாட்டை மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.  அல்லது இதெல்லாம் விதி என்று எளிய மனம் அதற்கு விடை தேடி ஆறுதல் கொள்கிறது. விதியை மதியால் வெல்லலாம் என்று விதித்த விதி பற்றி அறியாமலேயே மனிதன் செயலில் முனையும் பொழுது, அத்தனை பாடுகளையும் வாங்கிக்கொண்டு அவனைச் சீரழித்து கடைசியில் அதுதான் வெல்கிறது. தன் செயல்களுக்கான முரண்கள் அத்தனையையும் ஒதுக்கி விட்டு கடைசியில் முடியாது தணிந்தகாலையில் விதியின் மீது பழியைப் போட்டுவிட்டு ஆறுதல் அடைகிறான் மனிதன்.
இந்த உலகில் நிச்சலனமாய் ஓடிக் கொண்டிருக்கும் அமைதியான வாழ்க்கையை அநாவசியமாய்க் கெடுத்துக் கொண்டு சீரழியும் மனிதர்கள் பலர். காரணம் அறியாமல் அல்லது அறிந்து அதற்கு ஒரு காரணத்தைச் சொல்லி அல்லது வெறுப்பில்தன்னைத்தானே நொந்து கொண்டு எதிர்மறையாய்ப் பேசி, எதிர்மறையாய் நடந்து மேலும் மேலும் தவறிழைத்து. தன்னைத் தானே தன் இழி செயல்களின் மூலம் வருத்திக்கொள்வது மட்டுமல்லாமல் சார்ந்தவர்களையும் கஷ்டப்படுத்தி அவர்களின் நிம்மதியையும் குலைக்கிறான். தவறு செய்து விட்டோம் என்கின்ற மனசாட்சியின் உந்துதலில் எரிச்சல் பட்டு அதற்கான காரணங்களை எதிராளிகளின் மீது சுமத்தி அவர்களையும் நிம்மதியின்றி அடித்து, மேலும் மேலும் தவறுகளைச் செய்து கொண்டே தொடர்கிறான்.  தொடர்ந்த தவறுகள், இழி செயல்கள் ஒன்று அவனை அல்லது அவனைச் சார்ந்தவர்களில் ஒருவரை அல்லது சிலரைப்  பலி வாங்கும்போது அவனது தாகம் அடங்குகிறது. அல்லது வேறொரு முடிவிற்குக் கொண்டு நிறுத்துகிறது.
இந்த நாவலில் நிகழும் ஒரேயொரு சம்பவம் அதன் அத்தனை கதாபாத்திரங்களையும் உலுக்கி விடுகிறது. அந்த சம்பவமும் அதன் தொடர்ச்சியான தொடர்புடைய நிகழ்வுகளும்தான் நாவலை படிப்படியாக இழுத்துக் கொண்டு செல்கிறது. சம்பவத்துக்கு ஆதரவான அல்லது ஆதரவில்லைபோல் சொல்லிக் கொள்கின்ற மற்றும் அதற்கு எதிரான மனிதர்களோடு நாமும் கூடவே கடைசி வரை பயணிக்கிறோம்.
குடும்பத்தினர் விரும்பாத ஒருவனைப் படித்த மகள் சிற்சில கட்டாயத்தின்பேரில் ஏற்றுக் கொள்ள, தவிர்க்க இயலாத நிலையில் பெற்றோர் அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து விட்டு விலகிக் கொள்கிறார்கள். நீயே கதி, நீயின்றி எனக்கு வாழ்க்கையில்லை என்று ஒருவகையான வன்முறையை அவள் மீது  விடாது அவன் திணித்திடும்போது அந்த வன்முறை தந்த மனச் சிக்கல்களில் உழன்று இப்படி ஒருவன் தன்னை நாடி வாழ்க்கையைச் சீர் குலைத்துக் கொள்கிறானே என்கிற பெண்ணுக்கேயுரிய இரக்க சுபாவத்தில் மனம் நெகிழ்ந்து அவள் அவனை ஏற்றுக் கொள்கிறாள். எந்தவகையிலும் ஒரு பெண்ணுக்குத் தகுதியானவன் அல்ல அவன் என்று பகிரங்கமாய் உணர்ந்திருந்தும், தன் மீது அவன் கொண்டிருந்த வெறித்தனமான பிரியமும், காதலும் கண்டு கசிந்து உருகி, தன் வாழ்க்கையின் தியாகமாய் அது இருந்தாலும் போகட்டும் என்று அவனை அவள் அடைந்து விட, பிறகும் வெவ்வேறு ரூபங்களில்  அவனின் ஆட்டங்கள் தொடர்கின்றன. அவளின் தவறான முடிவு  விபரீதத்தில் கொண்டு விட்டு விடுகிறது.
தான் மோசமானவன்தான் என்றாலும், தன்னை தன்னுடைய குற்றங் குறைகளோடு ஏற்றுக் கொள்ளாதவர்களை அவன் வெறுக்கிறான். தன்னைச் சார்ந்தவர்களே அதைச் சுட்டிக் காட்டும்பொழுது மனிதத் தன்மையற்றவனாய், மிருகத் தனமாய் மாறி விடுகிறான். தவறு செய்கிறோம் என்று உணர்ந்திருந்தும், அதிலிருந்து வெளிவர முடியாதவனாய் அந்தத் தவறுகளின்மேல் எரிச்சல்பட்டு, தன்னைத் தானே வெறுத்தவனாய் அதிலிருந்து மீள முடியாமல், அதனை நியாயப்படுத்தி, அதற்கு பிறர் மேல் குற்றம் சுமத்தி, தன் மனதுக்கு ஒவ்வாத சமாதானம் தேடி, அதிலும் நிம்மதி அடைய முடியாதவனாய் மீண்டும் மீண்டும் தவறிழைக்கும் சாதாரணனாய்க் கிடந்து சீரழிகிறான்.
பெற்றோர்களின் பேச்சைக் கேட்காமல் தீவிரமாய் அவனால் தன் மீது திணிக்கப்பட்ட வன்முறையைத் தவிர்க்க முடியாமல் ஏற்றுக் கொண்டு, அவனையும் தன் அன்பினால் நல்வழிப்படுத்த முடியாமல், சந்தோஷமான வாழ்க்கையையும் வாழ ஏலாமல், நாளும் பொழுதும் அடுத்தவரை நாடி நிற்கும் நிலைக்கு மானம் கெட்டு, மதி கெட்டுத் தள்ளப்பட்டு கேவலப்படுகையில் இப்படி ஒரு அவலத்தைத் தேடிக் கொண்டதற்கு முழுப் பொறுப்பு தானே என்கின்ற முடிவினில் தன்னைத் தானே எரித்துக் கொள்ளும் அவளின் நியாயம் அவனை அப்பொழுதேனும் புரட்டிப் போடுகிறதா என்றால் அதற்கும் பலனில்லாமல்தான் போய்விடுகிறது.
நா செய்யல….நா கொளுத்தல…. இந்த ரெண்டு வார்த்தைகளைத்தான் கடைசிவரை சொல்கிறான். அவள் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டாளா அல்லது அவன் தீ வைத்ததை மறைக்கிறாளா என்பது கடைசிவரை தெளிவு படுத்தாவிடினும் தெரிந்து போய்விடுகிறது. ஆனாலும் இந்த நிகழ்வு அப்படித்தான்  போகும் என்பதில் ஆசிரியர் உறுதியாக நிற்பது நம்மையும் திருப்திப்படுத்துகிறது. பெற்றோர்களின் நல்ல வார்த்தைகளைப் புறக்கணித்து தான் வலியத் தேடிக் கொண்ட அவலத்தை உணர்ந்து, நொந்து இனியும் தன்னால் அவர்களுக்கு எந்தக் கேடும் வந்து விடக் கூடாது என்று கடைசியில் அவள் தன் வாக்குமூலத்தை வெகு சாமர்த்தியமாய் வழங்குகிறாள்.
மதியம் மூன்று மணிக்கு சமைத்துக் கொண்டிருந்தேன். அடுப்பில் குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது. உப்பு பாட்டிலை எடுக்கத் திரும்பினேன். மேடையிலிருந்த மண்ணெண்ணெய் கேன் சாய்ந்து குழம்பிலும் அடுப்பிலும் கொட்டியதும் தீ பிடித்துக் கொண்டது. நான் கத்தினேன். டி.வி. பார்த்துக் கொண்டிருந்த என் கணவர் ஓடிவந்து என் மீது தண்ணீரை ஊற்றித் தீயை அணைத்தார்.  சாக்கை என் மீது போர்த்தி மருத்துவமனைக்கு ஆட்டோவில் கூட்டிச் சென்றார். தீ விபத்து எதிர்பாராதவிதமாய் நடந்தது. நான் கொளுத்திக் கொள்ளவில்லை. என் கணவரும் என்னைக் கொளுத்தவில்லை….இதற்கு யாரும் காரணம் இல்லை.
கையில் பத்து லட்சம் பணத்தை வைத்துக் கொண்டு வழக்கு நடத்த அலையும் தந்தை நொந்து போகிறார். இந்த நெலமைலயும் என்னைத் தலை குனிய வச்சிட்டா…சாவட்டும்…அவ சீக்கிரம் சாவறதுதான் நல்லது. புருசன் ஆச போவலை அவளுக்கு. ரோட்டுப் பொறுக்கிக்கே இம்மாம் விசுவாசம்…. என்று பொது இடத்தில் கதறுகிறாள் தாய்.
அந்தப் பொண்ணு தப்புப் பண்ணல. சரியாத்தான் செஞ்சிருக்கு…அவனுக்கு விடுதலயக் கொடுக்கல…சாகுற மட்டும் தண்டனையைக் கொடுத்திருக்கு…இனி ஒவ்வொரு நிமிஷமும் அவன் சாவான். ஒங்க பொண்ணு நல்ல பொண்ணு …கொலகாரனயே காப்பாத்தி விட்டிருக்கு….நல்லவங்களுக்குத்தான் அந்த மாதிரி மனசு வரும். ஒரு உசுரக் கொன்னுட்டான் அவன்…ரெண்டு உசுர அநாதையாக்கிட்டான்.எந்தத் தாயும் பெத்த புள்ளைங்களை விட்டிட்டு சாவ மாட்டா…மீறி சாகுறான்னா அவ மனசு எப்பிடி வெந்திருக்கும்? எனக்குத் தெரியும்…நான் பட்டிருக்கேன்….- கான்ஸ்டபிள் ஆனந்தகுமாரின் இந்த வார்த்தைகள் விளக்கமாய் முன் வைக்கப்படும்போது  ரேவதியின் தாய் தந்தையரோடு சேர்ந்து நாமும் அழுகிறோம்.
இந்த நாவலிலேயே இரண்டு உச்ச கட்டமான, மிக முக்கியமான  இடங்கள் நம் கவனத்தை அதி தீவிரமாய் ஈர்ப்பவை.  ஒன்று…ரேவதியின் கணவன் ரவி தன் சார்பாய் எடுத்து வைக்கும் நியாயம்… இன்னொன்று கடைசியாய் தாய் அமராவதி தன் பெண்ணின் வெந்த சடலத்தைப் பார்த்துக் கதறும் காட்சி.
இவ்வளவு புத்திசாலித்தனமாப் பேசுறானே…வெறும் ஆட்டோ ஓட்டுற இவன், இப்டிப் பேச எங்க கத்துக்கிட்டான்….இந்த புத்திசாலித்தனத்த நல்ல நடப்புக்கு மாத்தியிருந்தான்னா எல்லாரும் சந்தோஷமா இருந்திருக்கலாமே என்று மருமகள் அருண்மொழி நினைத்து வருந்துகிறாள்.
அத்தியாயம் 12 முழுக்க அவளுக்கும், ரவிக்கும் இடையே நடக்கும் சம்பாஷனைகள் வெகு அற்புதம். அதை வெறும் எழுத்துத் திறன் என்று கொள்வதற்கில்லை. உண்மையிலேயே அந்த மாதிரி நடப்பியல் கொண்ட ஒருவன் எப்படியெல்லாம் பேசுவான் என்பதை அப்படியே வரிக்கு வரி வடித்தெடுத்திருக்கிறார் எழுத்தாளர் இமையம்.
ஐயப்பன் சாமி மேல சத்தியம்…நான் செய்யல…..
அப்டீன்னா அவ தீயே குளிக்கலேன்றியா…?
மண்ணெண்ணெய் ஊத்தியிருந்தா இவ்வளவு வெந்திருக்காது. ஆட்டோவுக்கு ஊத்துற டீசல ஊத்திக்கிட்டா…. என்று ஆரம்பிக்கிறது அவனின் வாய்மொழி…..நீ இப்டி ஆட்டோ ட்யூ கட்ட வச்சிருக்கிற பணத்தை எடுத்து செலவழிச்சா அப்புறம் நா செத்துடுவேன் என்கிற அவளிடம் சரி…செத்துப்போ…என்று விடுகிறான். ஒரு பேச்சுக்குத்தான் சொன்னேன்…வெளையாட்டுக்கு என்று விட்டுக் குலுங்கி அழுகிறான். பொறுக்கியா இருக்க எனக்கு மட்டும் என்ன ஆசையா? என்று கேட்கிறான். நான் பொறுக்கிதான்…ஆட்டோ ஓட்டுறவன்தான். தண்ணி அடிக்கிறவன்தான். அடிக்கடி சண்ட பிடிச்சி போலீஸ் போறவன்தான்…சோத்துக்கு இல்லாத நாயிதான்…இத்தன வருஷத்துல  ஒங்க யார்ட்டயாவது எதிர்ல நின்னு பேசியிருக்கனா…நீங்க எல்லாரும் பெரிய படிப்புப் படிச்சவங்க…பெரிய வேல…பணம் உள்ளவங்க…எல்லாம் இருக்கு உங்ககிட்ட. ஆனா பெரிய மனசு மட்டும் இல்ல…
தன்  கேள்விகளால் அருண்மொழியை அடித்து நொறுக்குகிறான் ரவி. நான் சல்லிப் பயதான். சல்லிப்பய சல்லிப் பயலாத்தான் இருப்பான்…ஆனா பெரிய மனுசன் பெரிய மனுசனா இருக்கணுமா இல்லியா? – அவனின் கேள்விகள் ஒவ்வொன்றும் நம்மையே உலுக்கி எடுத்து விடுகிறது. நான் தெனம் அவ ஒடம்புலதான் அடிச்சேன். நீங்க மனசுல அடிச்சுட்டீங்க….எங்கிட்ட பணம் இல்ல…ஒங்ககிட்டே இருந்திச்சி…அதனால நீங்க எம்மாம் அசிங்கப்படுத்தினாலும் அவ ஒங்ககிட்டே வந்திட்டிருந்தா… பணத்தாலதான் அவ அசிங்கப்பட்டா…இனிமே அந்த அசிங்கம் இல்லே…
அவள வேலைக்கும் அனுப்ப மாட்ட…நீயும் சம்பாரிக்க மாட்ட…சம்பாரிக்கிறதக் குடிச்சிப்புட்டும் வருவ…கடசில சட்டமும் பேசுவ… ஒனக்கு மூள பூராவும் கிரிமினலா இருக்கு….போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயிப் போயி நல்லா கிரிமினலாப் பேசக் கத்துக்கிட்டே….- அருண்மொழி ஆத்திரம் தீர வார்த்தைகளை வீசுகிறாள்.
ஆட்டோகாரன ஏன் கட்டினேன்னு கேட்டு தெனம் தெனம் அசிங்கப்படுத்தினீங்க…அந்த அவமானம்தான் அவள எரிச்சிது….அத அவளுக்கு உண்டாக்கனது யாரு…. என்கிறான் அவன்.  ஒருத்தன் நொண்டியாப் பொறக்குறான்…ஒருத்தனுக்குக் கண்ணு தெரில…ஒருத்தன் கருப்பா இருக்கான்…ஒருத்தன் செவப்பா இருக்கான்…ஒருத்தன் நல்லாப் படிப்பான்…ஒருத்தனுக்கு படிப்பு ஏறாது…என்னா செய்ய முடியும்? அது மாதிரி எனக்கு வாய் அதிகம்…கோபம் அதிகம்…அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? என்று கேட்கும் பொழுது அருண்மொழி சொல்கிறாள்.
திருடனுக்குத்தான் சட்டம் நல்லாத் தெரியும்….ஒவ்வொரு திருடனுக்கும் ஒரு நியாயம்…. என்ற மனதிலிருந்த கசப்பையெல்லாம் வார்த்தையாக்குகிறாள். ஒரு வக்கீல் போல் அடுக்கடுக்காக தங்கு தடையில்லாமல் எப்படி இவனால் இப்படிப் பேச முடிகிறது? ரேவதி தீக்குளித்தது பற்றி யாராவது கேள்வி கேட்டால், கேட்பவரின் வாயை அடைப்பதுபோல் தயாராய் பதில் வைத்திருக்கிறானே? என்று வியக்கிறாள்.
மூணு நாள் ரேவதியோட அப்பா பத்து லட்சத்தக் கைல வச்சிட்டு அலையுறாரு. இத முன்னாடி கொடுத்திருந்தா பத்து ஆட்டோ வாங்கியிருப்பன்…நானும் ஓனர் ஆகியிருப்பன்…ட்யூ கட்ட முடியாம தவிச்சிருக்க மாட்டன். சண்ட வந்திருக்காது…பணக் கஷ்டம் வந்திருக்காது….எங்கிட்ட இல்லாத மாதிரி ஒங்க கிட்டயும் பணம் இல்லாம இருந்திருந்தா…அவ தீக்குளிச்சிருக்க மாட்டா….என்று விட்டு என்னப் பெத்த அம்மா சாவப் போறாக்கா….என்று கதறுகிறான்.   படிக்கும் நாமும் கண் கலங்கி விடுகிறோம்…
இது நான் வெகு சுருக்கமாக இங்கு அளித்திருக்கும் விளக்கம். இமையம் விரித்திருக்கும் அழகைப் பார்த்தால் மனசு உருகி உருகி ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்து விடுகிறது. இதுபோல் கடைசியில் ரேவதியின் எரிந்த பிரேதத்தைப் பார்த்து விட்டு அவள் தாய் அமராவதி கதறும் காட்சியும் நம்மால் மறக்க முடியாதது.
தூங்கிட்டியா அம்மா? தூங்கு…இனி ஒனக்கு எந்தத் தொந்தரவும் இல்ல…தப்பு செஞ்சிட்டோமேன்னு இனி நீ அழுவ மாட்ட…எந்த நாயும் இனி ஒன்ன அடிக்க முடியாது. அம்மாவுக்குத் தெரிஞ்சிருமோன்னு இனி நீ எதையும் மனசுல போட்டு மறைக்க வேண்டியதில்ல….எங்கம்மாகிட்ட சொல்லிடாதீங்கன்னு யார்ட்டயும் கெஞ்ச வேண்டிதில்ல…இனி எந்த நாயும் ஒம் மூ!ஞ்சில காறித் துப்பாது…எந்தப் பொறுக்கி பேசுற கெட்ட வார்த்தையும் ஒங் காதுல விழாது….இனிமே எம் பொண்ணுக்குத் தூக்கந்தான்…இனி அவ வாய் பேசாது. ஒடம்பு அசயாது. அவ நிழலு மண்ணுல விழாது. ஒன் உசுரு அடங்குனா நல்லதுன்னு என் வாயலேயே சொல்ல வச்சுட்டியே…நீ சாவலடி…என் தங்கமே…உன் அம்மா செத்தாத்தான் நீ சாவே…என் உசுரு இருக்கு மட்டும் நீ என் நெஞ்சல இருப்பம்மா….எம் பொண்ணே நல்லாத் தூங்கு…என்று  இடைவெளியில்லாமல் அந்தத்தாய் புலம்பும் புலம்பல் நம்மையெல்லாம் உலுக்கி எடுத்து விடுகிறது.
இதைத்தான் ஆரம்பத்தில் நான் சொன்னேன். எந்த நாவலும் படித்து  இப்படி அழுததில்லை என்று. இந்த நாவலின் பலமே இந்த நாவலுக்கான அவலம்தான். அது நிகழும் இந்தச் சமுதாயச் சீர் கேடுதான். இதற்கு சமுதாயம் என்ன செய்யும்? என்று கேட்கலாம். அப்படி ஒரு தத்தாரியான பொறுக்கியை வளர்த்தெடுத்ததும், இப்படியொரு குடும்பப் பெண்ணைச் சீரழித்ததும், நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கௌரவமான குடும்பத்தின் அமைதியைக் கெடுத்துச் சீர் குலைத்ததும்…..இன்றைய சமுதாய நடைமுறைகளின் சீரழிவு அல்லாமல் வேறு என்ன? அங்கங்கே ஒவ்வொரு குடும்பங்கள் இம்மாதிரியான ஒழுக்கக் கேடான நிகழ்வுகளால் சீர் குலைந்து கொண்டுதானே இருக்கின்றன? நம்மால் மறுக்க முடியுமா?
இமையத்தின் இந்த நாவல் அவர் எழுத்தில் ஒரு இமயம்….!
                     ------------------------------------------------------------

     

கருத்துகள் இல்லை:

  நெஞ்சறுப்பு - நாவல் - இமையம் - எழுத்தாளர் சுகுமாரன் விமர்சனம் - மற்றும் கருத்து. இதில் ஏற்க முடியாதது...சுகுமாரன் சொல்லிய கருத்தில்...எந்த...